வெள்ளி, 28 ஜனவரி, 2011

சமுதாய மாற்றம் – ஏன், எப்படி?



பதிவர்கள் சிலர் நாம் பதிவு எழுதி என்ன சாதித்தோம்? வெட்டியாக பொழுது போக்குக்காக எழுதுவதுதான் நமது நோக்கமா? சமுதாயப் பொறுப்பு வேண்டாமா? என்று பல சமயங்களில் கேட்கிறார்கள். எனக்கும் அவ்வப்போது இந்த எண்ணங்கள் வருகின்றன. நிஜ உலகில் தனி நபர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் பதிவுலகிலும் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் சாத்தியமானது. இதற்கு மேல் ஏதாவது செய்ய முடியுமா என்று என் சிறிய மூளையை உபயோகித்து சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன்.

முதலில் சமுதாய மாற்றம் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம். நிச்சயமாக அரசும் அரசாங்கக் கொள்கைகளும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன. அரசாங்கம் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்படுத்துகின்றன. அவைகளை பயன்படுத்தி தனி நபர்கள் பல்வேறு தொழில்களோ வியாபாரமோ செய்து முன்னேறுகிறார்கள். ஆனால் எல்லோராலும் இவ்வாறு முன்னேற முடிவதில்லை. இதற்குண்டான காரண காரியங்களைப் பின்பு ஆராய்வோம்

இவ்வாறு முன்னேறியவர்கள் தங்கள் முன்னேற்றத்தை நிரந்தரமாகத்  தக்கவைத்துக் கொள்ள தங்களாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். இது மனித இயற்கை. அப்போது அவர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிக்காத அரசாங்கம் இருந்தால் அவர்களுக்கு நல்லதுதானே. ஆகவே அவர்கள் (பணக்காரர்கள் என்று ஒரு அடையாளச்சொல் வைத்துக் கொள்வோமே) அந்த மாதிரி அரசாங்கம் தொடர்ந்து இருக்க தங்களால் முடிந்த உதவி செய்வார்கள். என்ன உதவிபண உதவிதான். இன்றைய கால கட்டத்தில் பணம்தான் கண்கண்ட தெய்வம். அதனால் செய்ய முடியாதது உலகில் எதுவுமில்லை என்றாகிவிட்டது.

இவ்வாறு பணக்காரர்களின் (பண) உதவியால் அமைக்கப்பட்ட அரசு என்ன செய்யும்? பணக்காரர்களுக்கு வேண்டிய சலுகைகளை ஏற்படுத்தும். அப்படி உதவி பெற்ற பணக்காரர்கள் அரசுக்கு மீண்டும் உதவி செய்வார்கள். இப்படி தொடர்ந்து ஒரு வட்டம் அதாவது = உதவி-சலுகை-உதவி = இந்த வட்டம் இந்தியாவில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது

சில சொற்களை உணர்ந்தே தவிர்த்து இருக்கிறேன். இப்பொழுதே கொஞ்சம் ரத்தவாடை அடிக்கிறது. இந்த வாடைக்கு சிங்கம், புலிகள் வரக்கூடும். ஆகவே இந்த சமுதாய விழிப்புணர்வை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உட்கொள்ள வேண்டும். மீதி நேயர் விருப்பம்போல்.