வெள்ளி, 18 மார்ச், 2011

சோர்வும் சலிப்பும்


இந்த இரண்டு வார்த்தைகளையும் உடல், மனம் ஆகியவை சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் பொதுவாகவே உபயோகிப்பதுண்டு. இருந்தாலும் நான் ஒரு வித்தியாசத்தைப் புகுத்தி இருக்கிறேன்.
அதாவது:

1.   சோர்வு என்பது சாதாரணமாக உடல் சோர்வைக் குறிக்கும். இது உடல் தன் சக்திக்கு மீறி உழைக்கும்போது ஏற்படுவது. இதற்குத் தீர்வு ஓய்வு எடுப்பதுதான். இது ஒரு இயற்கை விதி.

2.   சலிப்பு மன ரீதியாக ஏற்படுவது. வாழ்க்கை ஒரே கதியில் ஓடிக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுவது இயற்கை.

பதிவுலகத்தில் சோர்வும் சலிப்பும் மலிந்திருக்கின்றன என்பது என் அபிப்பிராயம். பலர் ஆர்வத்தில் பதிவுகள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் கொஞ்ச காலத்திலேயே காணாமல் போகிறார்கள். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் மறைந்துவிடும் பதிவுகள் ஏராளம். மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கும் பதிவர்களில் கூட சிலர்தான் தொடர்ந்து பதிவுகள் போட்டு வருகிறார்கள். 

இதற்கான காரணங்களை யாராவது ஆராய்ந்து சொன்னால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பூனைக்கு மணி கட்டுவது யார்?
எனக்குத்தெரிந்த சில காரணங்களைப் பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

1.   பதிவுக்கான பொருள்கள் அமையாமை.
எதைப்பற்றி எழுதுவது என்பது பல பதிவர்களுக்கு ஒரு தலையாய வலி (தலைவலி). சிலர் வழியில் பார்த்த ஒரு சிறு உரையாடலைக் கூட வைத்து ஒரு பதிவு தேற்றி விடுவார்கள். அந்தக்கலை எல்லோருக்கும் வருவதில்லை. இவர்களுக்கு ஆதரவாகத்தான் பல பதிவர்கள் “தொடர் பதிவு” என்ற உத்தியைக் கடைப்பிடிக்கிறார்கள்.

2.   அடுத்தபடியாக எழுதுவதற்குத் தேவையானது கற்பனைத்திறன்.
இது கொஞ்சம் கஷ்டமான விஷயம். கடையில் வாங்கக் கூடிய சரக்குமில்லை. கம்ப்யூட்டர் இவர்களுக்காகவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் copy, paste வசதியைச் செய்து கொடுத்திருக்கிறது. யாரும் கமென்ட் போடாத பதிவைக் காப்பி, பேஸ்ட் செய்தால் வெளியில் யாருக்கும் தெரியாது.

3.   ஊக்கம் இல்லாமை.
பாலோயர்ஸ், ஹிட்ஸ், பின்னூட்டங்கள் வராவிட்டால் பலர் மனமுடைந்து தற்கொலை லெவலுக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் பதிவுலகத்திற்குள் வந்ததே தவறு. அவர்கள் போவதே பதிவுலகத்துற்கு அவர்கள் செய்யும் தியாகம்.

4.   ஆபீஸில் டேமேஜர் தொந்திரவுகள்.
இந்தத் தொந்திரவு பல விதங்களில் இருக்கும். குறிப்பாக இணையக் கட்டுப்பாடுகள். இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர். வேலைக்கே உலை வைக்கும் அபாயமும் உண்டு. என்னைப்போல் பென்ஷன் வாங்கிக் கொண்டு வீட்டில் சொந்தக் கம்ப்யூட்டரில் பதிவு போடும் ஆசாமிகள் ரொம்பக் கம்மி.

5.   அனானி பின்னூட்டங்கள்.
அனானியாகவோ இல்லை ஒரு பெயருடனோ, ஒரு பதிவரைப் பற்றி தரக்குறைவான வகையில் பின்னூட்டங்கள் வந்தால், நன்கு இரும்பு இதயம் கொண்ட பதிவர்களைத் தவிர மற்றவர்கள் ஆடிப்போய் விடுகிறார்கள். இது இயற்கை. இதற்குப் பயந்து பல பதிவர்கள் நமக்கு எதற்கு வம்பு என்று ஓடிப்போகிறார்கள். பொதுவெளிக்கு வந்துவிட்டால் கல் வீச்சுக்குப் பயந்து விடக்கூடாது.  அதே கல்லைப்பிடித்து திரும்ப வீசும் தைரியம் வேண்டும்.

இதையெல்லாம் கடைப்பிடித்து, தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பதிவுகள் போட்டு எல்லோரும் பிரபல பதிவர்கள் ஆக வாழ்த்துக்கள்.