திங்கள், 24 செப்டம்பர், 2012

கடவுள் செய்யும் அக்கிரமம்




மனிதன் பிறக்கும்போது எல்லோரும் சமம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒருவன் பணக்காரனாகிறான், இன்னொருவன் பிச்சைக்காரனாக இருக்கிறான். கடவுள் ஏன் இந்த பட்சபாதம் காண்பிக்கிறார்? இது காலம் காலமாக கேட்கப்பட்டு வரும் கேள்வி.

ஆன்மீகவாதிகள் சொல்லும் வியாக்யானம் என்னவென்றால் அவரவர்கள் பூர்வஜன்ம கர்ம பலன்களின்படி இவ்வுலக வாழ்க்கை அமைகிறது என்கிறார்கள். அப்போது மறு ஜன்மம் உண்டு என்று ஊர்ஜிதமாகிறது. இந்தக் கொள்கையை ஆதரிப்பவர்கள் மேலும் சொல்வதாவது. போன ஜன்மாவில் பாவகாரியங்கள் செய்ததால்தான் உனக்கு இந்த ஜன்மாவில் இவ்வாறு துன்பங்கள் வந்துள்ளன. இந்த ஜன்மாவில் நீ நல்ல காரியங்கள் செய்வாயாகில் அடுத்த ஜன்மாவில் நீ சுகப்படுவாய் என்று கூறுகிறார்கள்.

இந்த தத்துவத்தை ஏற்றுக்கொள்வதில் ஒரே ஒரு தயக்கம், இப்பூவுலகில் பிறந்த எவருக்குமே தங்களுடைய பூர்வ ஜன்ம ஞாபகம் அணுவளவு கூட இருப்பதில்லை. அப்படி இருக்கையில் இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை இவைகளை எப்படி நம்ப முடியும்? என்று யாராவது கேட்டால், சாஸ்திரம் சொல்லுகிறது, ஆகையால் நீ நம்ப வேண்டும் என்கிறார்கள்

சாஸ்திரங்கள் ஆகாயத்திலிருந்தா விழுந்தது? அதுவும் நம்மைப்போன்ற மனிதன் எழுதியதுதானே? இப்படிக்கேட்டால் நீ நாத்திகன், நீ நாசமாய்ப்போவாய் என்று சாபம் கொடுக்கிறார்கள்.

நான் நினைக்கிறேன். மனிதனின் ஏற்றத் தாழ்வுகளை நியாயப் படுத்த அல்லது அவைகளை நினைத்து மனிதன் துவண்டு போகாமலிருக்க கொஞ்சம் புத்திசாலி மனிதன் கண்டுபிடித்த யுக்திதான் இது. காலம் காலமாய் சொல்லி வந்ததினால், பலர் அதை உண்மை என்றே நம்புகிறார்கள். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். என்று ஒரு சித்தர் இருந்தார் என்றால் அன்றிருப்பவன் எல்லாம் நம்பினாலும் நம்புவார்கள்.

கர்ம வினை, மறுஜன்மம், புண்ணியம், பாவம் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான். ஒருவனுடைய நம்பிக்கைகள்தான் அவனை ஆத்திகனாகவோ நாத்திகனாகவோ அடையாளம் காட்டுகின்றன. உண்மை எது என்று யாரால் சொல்ல முடியும்?