செவ்வாய், 20 நவம்பர், 2012

இருசக்கர வாகனங்களும் விபத்துகளும்.

செய்தித்தாள்களைப் படித்தால் அனுதினமும் தவறாமல் கண்ணில் படும் செய்தி என்னவென்றால் இரு சக்கர வாகன விபத்துகள்தான். இரண்டு அல்லது மூன்று விபத்துகள் தவறாமல் நடக்கின்றன.

நான் ரோட்டில் போகும்போது இந்த இருசக்கர வாகன ஓட்டிகள் எவ்வாறு ஓட்டுகிறார்கள், விபத்துகள் ஏன் நடக்கின்றன என்று கவனிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அப்படிக் கவனித்ததில் எனக்குப்பட்ட சில குறிப்புகளை இங்கு கொடுக்கிறேன்.

கல்லூரி செல்லும் 21 வயது முதல் 24 வயது வரை உள்ள மாணவர்கள் இரவு 9 மணிக்கு மேல்தான் ரோட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு அப்போது ரோடு "ரேஸ் டிராக்" மாதிரி தெரியும் போல. அவர்கள் வைத்திருக்கும் வாகனம் அதிக பட்சமாக  என்ன வேகத்தில் போகும் என்று டெஸ்ட் செய்வார்கள். கூடவே போட்டிக்கு இன்னும் இரண்டு வண்டிகள் இருக்கும். ஒவ்வொரு வண்டியிலும் மூன்று மூன்று பேர் இருப்பார்கள். பாம்புகள் நெளிந்து ஓடுகிற மாதிரிதான் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். இவர்கள் வண்டிகளெல்லாம் நேர்க்கோட்டில் போகாது என்று நினைக்கிறேன்.

போதாததிற்கு எல்லோரும் சோமபானம் அருந்தியிருப்பார்கள். ஹெல்மட் போடமாட்டார்கள். விபத்திற்கு வேறு காரணங்கள் வேண்டுமா?

அடுத்த ஜாதி, இருசக்கர வண்டி எவ்வளவு பேர்களைத் தாங்கும் என்று டெஸ்ட் செய்பவர்கள். இவர்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்யாணம் ஆகி  இரண்டு குழந்தைகள் இருக்கும். நான்கு பேரும் வண்டியில் போகும்போது வண்டியின் சக்தி குறையும். பேலன்ஸ் கிடைக்காது. ஆனால் அதைக் கவனிக்காமல் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். பெரிய வண்டிகளில் மோதி விபத்து ஏற்படுத்துவார்கள்.

இன்னொரு ஜாதி. ரோட்டின் ஓரத்தில் போய்க் கொண்டிருப்பார்கள். சைடு மிர்ரரைக் கவனிக்க மாட்டார்கள். பின்னால் ஏதாவது பெரிய வண்டி வந்து கொண்டிருக்கும். அதைப் போக விடமாட்டார்கள். அந்த வண்டி மகவும் பக்கத்தில் வந்த பிறகு பயந்து போய் வேகத்தைக் குறைப்பார்கள். பெரிய வண்டியின் இடது மூலை இரு சக்கர வாகனத்தை லேசாகத் தொடும். வாகனம் கவிழ்ந்து வாகனத்தில் செல்பவர்கள் தலை குப்பர விழுவார்கள். தலையில் அடிபட்டு பரலோகம் போவார்கள்.

அப்புறம் இந்த செல்போன்கள் இருக்கிறதே, அதை யமதர்மன்தான் கண்டுபிடித்து இந்த உலகிற்கு அனுப்பியிருப்பான் என்று நம்புகிறேன். செல்போன் பேசும்போது புற உலகில் என்ன நடக்கிறது என்று இவர்களுக்குத் தெரியுமா?

இந்த மாதிரி விபத்துகள் நடந்த பிறகு அவர்களின் தாய் தகப்பனின் நிலை எப்படியிருக்கும் என்று இவர்கள் ஒரு நொடியாவது சிந்தித்தால் இப்படி விபத்துகள் நடக்குமா?

இவர்களெல்லாம் எப்போது திருந்துவார்களோ?

(படங்கள் கூகுள் உதவி)