செவ்வாய், 8 ஜனவரி, 2013

மருமகன்களுக்குப் பிடித்த மாமனார் எப்படியிருப்பார்?


வர வர பதிவுகளுக்கு சப்ஜெக்ட் தேத்தறது கஷ்டமாப் போச்சுதுங்க. எத்தனை நாட்களுக்கு விவகாரமில்லாத சப்ஜெக்டுகளை வைத்தே காலத்தை ஓட்டறது? அதனால கொஞ்சம் வெவகாரமான சப்ஜெக்டைப் பிடித்திருக்கிறேன். நண்பர் ஸ்ரீராம் தன் பின்னூட்டத்தில் ஒரு சப்ஜெக்ட் கொடுத்து உதவியிருக்கிறார்.

இது பெரிய உதவி அல்லவா? அவருக்கு மிக்க நன்றி.

பதிவிலிருந்து விலகி ஒரு கேள்வி... ஏன் மாமனாருக்கும் மருமகன்களுக்கும் ஒத்துக் கொள்வதேயில்லை?!! அதுபோலவே நாத்தனார் Vs அண்ணி..!

நான் மருமகனாக இருந்து இப்போது மாமனாராக இருக்கிறேன். எனக்கு மூல நட்சத்திரம் ஆனதால் மாமனார் இல்லாத வீட்டில் பெண்ணைக் கட்டினேன். ஆகவே எனக்கு மாமனாரை விரட்டும் பாக்கியம் இல்லாமல் போயிற்று.

எனக்கு இரண்டு பெண்கள். ஆகவே இரண்டு மாப்பிள்ளைகள்.

பொதுவாக அனைத்து தகப்பனார்களுக்கும் பெண் குழந்தைகள் பேரில்தான் பாசம் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டும் பெண்கள் என்பதால் இந்த வித்தியாசத்தை நான் அனுபவித்ததில்லை.

இந்த இயற்கையினால், பெண்ணுக்கு கல்யாணம் ஆகும்போது தன் சொத்தைப் பறிகொடுத்தது போல், ஒவ்வொரு தகப்பனும் உணருவான். தாய்க்கு அந்த உணர்வு வராது. ஏனென்றால், அவள் இந்த நடைமுறையை நன்கு அனுபவித்திருக்கிறாள்.

சொத்தைப் பறிகொடுத்தவனுக்கு, அந்தச் சொத்தை பிடுங்கி அனுபவித்துக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் எரிச்சல் வருவது இயல்புதானே. இதுதான் மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையில் வரும் பிரச்சினை.

அது போக, மாமனாரிடம் இருக்கும் மற்ற சொத்துக்ளையும் ஏன் நமக்கே, இப்பொழுதே  கொடுக்கக்கூடாது என்று ஒவ்வொரு மருமகனுக்கும் தோன்றுவது இயற்கை. இது மேலும் மேலும் பிரச்சினைகளை வளர்க்கிறது. இப்போதெல்லாம் பெண் பார்க்கப் போகும்போதே, மாமனாரின் உடல் நிலையையும் ஒரு நோட்டம் போட்டுவிடுகிறார்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்தால் வேறு இடம் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

இதே மாதிரிதான் நாத்தனார்-அண்ணி பிரச்சினையும். இவ்வளவு நாளாக தங்கைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த அண்ணன்காரன், தனக்கு கல்யாணமானவுடன் தன் பெண்டாட்டிக்குத்தான் எல்லாம் வாங்கிக் கொடுப்பான். தங்கையை புறக்கணித்து விடுவான். இதனால் நாத்தனாருக்கு அண்ணி பேரில் பொறாமை வந்து விடுகிறது.

இது உலக இயற்கை. இந்த மனத்தாங்கல்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

எல்லா மருமகன்களுக்கும் பிடித்த மாமனார் சொத்தையெல்லாம் மருமகன் பேரில் எழுதி வைத்துவிட்டு இப்படித்தான் சுவரில் தொங்கிக்கொண்டு இருப்பார்.