சனி, 17 மே, 2014

நானும் GMB யும்.


திரு GMB  யின் பிளாக்கை அறியாதவர்கள் பதிவுலகை அறியாதவர்கள் என்றே கூறலாம். தன்னுடைய எழுத்துக்களினாலும் எந்த ஊருக்குச்சென்றாலும் அந்த ஊரிலுள்ள பதிவர்களைச் சந்திப்பதிலும் அவர் தனித்து நிற்கிறார். அவர் பதிவுலகத்தில் கால் பதித்த நாட்களிலிருந்து அவர் பதிவுகளை ரசித்து வந்திருக்கிறேன். மத்திய அரசு நிறுவனமான BHEL ல் வேலை பார்த்து ஓய்வு பெற்று பெங்களூரில் வசித்து வருகிறார்.

ஒரு முறை அவர் கோவைக்கு வந்திருந்தபோது என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். நான் இதிலென்ன கஷ்டம் தாராளமாக வாருங்கள் என்று பதில் போட்டிருந்தேன். அவர் என் வீட்டை கண்டுபிடித்து தம்பதி சமேதராக வந்தே விட்டார். நேரம் போறாமையினால் சிறிது நேரமே இருந்து விட்டுப் புறப்பட்டார். இது நடந்து ஏறக்குறைய மூன்று வருடம் இருக்கும்.

போன வருடம் நானும் என் நண்பர் ஒருவரும் பெங்களூர் போகவேண்டி இருந்தது. நான் இவரை சந்திக்க ஆவல் கொண்டு அவருடைய வீட்டு விலாசம், டெலிபோன் நெம்பர் எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் பெங்களூரில் நாங்கள் எங்களை வரவேற்ற நண்பரின் அன்புப் பிடியில் சிக்கி விட்டபடியால் இவருடைய வீட்டிற்கு செல்ல இயலாமல் போனது. போன் செய்து என் இயலாமையைக் குறிப்பிட்டு சந்திக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்டிருந்தேன்.  அவரும் பெரிய மனதுடன் மன்னித்தேன் என்றார்.

ஆனால் இந்த நிகழ்வு அவருடைய மனதிலிருந்து மறையவில்லை என்று பிற்பாடுதான் தெரிய வந்தது. அது எப்படியென்றால், சென்ற மாதம் நான் திருச்சிக்கு என் பேரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்குப் போயிருந்தேன். அப்போது ஒரு இடைவெளி கிடைத்ததைப் பயன்படுத்தி
திரு.வைகோ. அவர்களைப் பார்த்துவிட்டு வந்தேன். அவரை அறியாதவர்களும் யாரும் இருக்கமாட்டார்கள்.

{ஒரு முக்கிய குறிப்பு: பிரபல பதிவர்கள் ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த மாதிரி (என்னையும் சேர்த்து?!) பிரபல பதிவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதைப்பற்றி பதிவுகள் போடவேண்டும்.}

நிற்க, நான் வைகோவை சந்தித்தது பற்றி ஒரு பதிவில் எழுதியிருந்தேன். அதைப் படித்த திரு GMB. என் மீது ஒரு அஸ்திரம் ஏவிவிட்டார். அது என் நடு மனத்தில் ஆழமாகப் பாய்ந்து விட்டது. "பெங்களூர் வந்திருந்தும் என்னைப் பார்க்காது போய்விட்டீர்களே" என்ற அஸ்திரம்தான் அது.

இனி என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போதுதான் எங்கோ படித்திருந்த ஒரு பொன்மொழி நினைவிற்கு வந்தது. பாக்கி வைக்காமல் தீர்க்கவேண்டிய சமாசாரங்கள் மூன்று உண்டு. 1. மனிதனின் கடமைகள். 2. தான் வாங்கிய கடன். 3. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு. இவைகளைத் தீர்க்காவிட்டால்
அவை மீண்டும் வளர்ந்து ஒருவனை கஷ்டத்திற்குள்ளாக்கும். ஆகவே GMB யை சந்திக்கவேண்டிய கடமை இருக்கிறது. அதை தீர்க்கவேண்டும். அதுவும் எனக்கு வயதாகிக்கொண்டு இருப்பதால் அதை தள்ளிப்போட முடியாது என்று முடிவு செய்து, உடனடியாக பெங்களூருக்கு போகவர ரயில் டிக்கட் புக் செய்து விட்டு இவருக்கு செய்தி அனுப்பினேன்.

உங்கள் வீட்டு விலாசமும் வரும் வழியையும் தெரிவியுங்கள் என்று பல முறை மெயில் அனுப்பியும் மனுஷன் பதிலே போடவில்லை. சரி என்ன ஆனாலும் ஆகட்டும், பிளான் பிரகாரம் பெங்களூர் போவோம் என்று முடிவு செய்திருந்தேன். நான் புறப்படும் தினத்திற்கு முதல் நாள் இவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் என்ன சொல்லியிருந்தார் என்றால்............

மீதி அடுத்த பதிவில்.