திங்கள், 20 அக்டோபர், 2014

ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்களும் !

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

விமர்சனம்

இளம் வயதில் ஏற்படும் உறவுகள் பல பரிமாணங்களில் ஏற்படும். அறியாப் பருவ சிநேகிதம் கால ஓட்டத்தில் எப்படி பரிணமிக்கும் என்று யூகிக்க முடியாது. சகோதர பாசமாகவோ அல்லது காதலாகவோ மாறும் சாத்தியக் கூறுகள் சூழ்நிலையைப் பொருத்தே அமையும்.

இந்தக் கதையில் அவன் அதைக் காதலாக எண்ணுகிறான். ஆனால் அந்தப் பெண்ணோ அதை சகோதர பாசமாக எண்ணிக் கொண்டிருக்கிறாள். இதற்கு காரணம் பெண்களின் மன வளரச்சி ஆண்களை விட துரிதமாக ஏற்பட்டு விடுகிறது. பெண் தன் எதிர் காலத்தை துல்லியமாகத் திட்டமிடுகிறாள். ஆணுக்கு அந்த திறமை வெகு நாட்களுக்குப் பிறகே ஏற்படுகிறது.

இந்த நுணுக்கமான உணர்ச்சிப் போராட்டத்தை வெகு நாசூக்காக கதாசிரியர் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது. எந்த விதமான விரசங்களும் இல்லாமல் ஒரு காதல் கதையை சொல்வது மிகவும் சிரமம். திரு வை.கோ. அதை நிறைவாக செய்திருக்கிறார்.

தன் கற்பனைகள் சிதையும்போது கதாநாயகன் அதை மிகவும் நாகரிகமாக எடுத்துக் கொள்கிறான். இந்தக் கதை ஐம்பது வருடங்களுக்கு முன்  இருந்த சமூக சூழ்நிலையில் நடக்கக் கூடிய கதை. இன்று காலம் மாறி விட்டது. கதாநாயகன் கதாநாயகிக்கு தான் வரைந்த அவளுடைய ஓவியத்தை பரிசாக தருவதற்குப் பதில் முகத்தில் ஆசிட் வீசியிருப்பான்.

ஒரு நல்ல எளிமையான கதை. மனதிற்கு இதமாக இருந்தது.