திங்கள், 9 பிப்ரவரி, 2015

பழனியில் பழனி.கந்தசாமி செய்த மடத்தனம்

                               

நான் ஒரு தானியங்கி பல்சக்கர மாற்றி (அதாங்க Auto Gear Change - நான் இனி பதிவில் முடிந்தவரை தமிழில் எழுதலாம் என்று சபதம் மேற்கொண்டுள்ளேன்.) கொண்ட சொகுசு உந்து (car) வாங்கிய விபரம் ஏற்கெனவே நண்பர்களுக்குத் தெரியும். அந்த சொகுசு உந்தில் பழனிக்குப் போய்வரலாம் என்று என் மனைவி வேண்டுகோள் விடுத்தாள்.

நான் அந்த வேண்டுகோளை பல காரணங்களுக்காக ஏற்றுக்கொண்டேன். முதல் காரணம் -அந்த சொகுசு உந்து வாங்கி ஒரு மாதத்தில் ஒரு இலவச பராமரிப்பு செய்யவேண்டும். அந்த காலக் கெடுவிற்குள் கொஞ்சமாவது அந்த சொகுசு உந்தை ஓட்டியிருந்தால்தானே அதில் ஏதாவது சில்லறைக் கோளாறுகள் இருப்பது தெரியும். அப்போதுதானே அதை முதல் பராமரிப்பில் இலவசமாக சரி செய்து கொள்ளலாம். பழனி போய் வருவது இதற்குத் தோதாக அமையும் என்று நினைத்தேன். (இந்த யோசனைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக என் மூளையில் உதிக்கும். இதற்கெல்லாம் விடுதி அறை -  Hotel Room போட்டு யோசிக்கவேண்டியதில்லை)

இரண்டாவது காரணம் எங்கள் சொந்த ஊரில் இருந்து எங்கள் உறவினர்கள் தைப்பூசத்திற்காக பழனிக்கு காவடி எடுப்பது வழக்கம். இதற்காக ஒரு அமைப்பைத் தோற்றுவித்து கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நானும் சேர்ந்திருக்கிறேன். அந்த அமைப்பின் சார்பில் இரண்டு நாள் பழனியில் பூசை நடக்கும். ஒரு கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து ஆட்கள் வைத்து சமையல் செய்து தடபுடலாக சிற்றுண்டி, பேருண்டி முதலானவை தரப்படும்.

அவ்வப்போது நாங்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்வோம். அந்த வழக்கப்படி இந்த வருடம் கலந்து கொள்ளலாமே என்றபடியால் பழனி போகும் என் மனையாளின் வேண்டுகோளுக்கு இணங்கினேன்.

மூன்றாவது காரணம் இந்த புது சொகுசு உந்தின் குணநலன்களை நன்கு புரிந்து கொண்டால்தானே அதனுடன் வாழ்க்கை நடத்த முடியும். இவ்வாறாக பல காரணங்களை உத்தேசித்து பழனி போவதென்று முடிவு செய்தேன்.

இரண்டு நாள் தங்குவதற்கான மூட்டை முடிச்சுகள் எல்லாம் கட்டிக்கொண்டு ஒரு நல்ல நேரம் பார்த்து பழனிக்குக் கிளம்பினோம். வழியில் ஏதும் பிரச்சினை இல்லாமல் பழனி போய்ச் சேர்ந்து ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். பழனியில் தைப்பூசத்திற்காக ஏறக்குறைய தமிழ் நாட்டின் பாதி மக்கள் - ஸ்ரீரங்கம் தொகுதி நீங்கலாக - வந்திருந்தார்கள். வீதியில் மக்கள் மேல் மோதாமல் நடக்கமுடியாது.

இதைப் பார்த்த நாங்கள் இரண்டு நாள் தங்கும் யோசனையைக் கைவிட்டோம். மறுநாள் காலையில் முருகனைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு புறப்பட்டு விடலாம் என்று முடிவு செய்தோம். அதன்படியே மறுநாள் காலையில் சென்று கயிற்றுந்தில் - Rope Car - மேலே சென்று 200 ரூபாய் சீட்டு வாங்கி சிறப்பு வழியில் சென்றோம். நாங்கள் முன்கூட்டியே முருகனிடம் சந்திக்கும் நேரம் பற்றி முன்பதிவு செய்யாததினால் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாய்ப் போயிற்று.

நேரில் பார்த்தபோது என்னப்பா இப்படிப் பண்ணி விட்டாய் என்று கேட்டதற்கு ஆமாம் இன்று எத்தனை ஆயிரம் பேர் என்னைப் பார்க்க வரப்போகிறார்கள் தெரியுமா, அதற்குத் தகுந்தாற்போல் நான் அலங்காரம் செய்து கொள்ளவேண்டாமா என்றான். இது நியாயமாகப் பட்டதால் நான் அவனைக் கோபித்துக்கொள்ள முடியவில்லை.

பேட்டியை முடித்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு வந்து ஓய்வெடுத்தோம். பிறகு கல்யாண மண்டபத்திற்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டோம். அப்போது அங்கு வந்திருந்த என் பெரியம்மா பையன் தானும் எங்களுடன் கோவை வருகிறேன் என்றான். சொகுசு உந்தில்தான் இடம் இருக்கிறதே என்று நான் சரி என்று ஒத்துக்கொண்டேன். அவன் பின்னால் திருவாளர் சனி பகவான் ஒளிந்து கொண்டு இருந்ததை நான் கவனிக்கவில்லை.

அவன் தன்னுடைய உடமைகளைக் கையோடு எடுத்து வந்திருந்தான். நான், என் மனைவி, அவன் ஆகிய மூவரும் நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். என் சொகுசு உந்தின் சாவி என் கையில் இருந்தது. சொகுசு உந்தின் பின்புறம் சாமான்கள் வைக்கும் பகுதியைத் திறந்தேன். அந்த இடத்திற்கு மேல் ஒரு தட்டு இருக்கிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். என் பெரியம்மா பையனின் பையை இரண்டு கைகளாலும் வாங்கவேண்டி இருந்ததால் சாவியை அந்தத் தட்டில் வைத்து விட்டு பையை வாங்கி உள்ளே வைத்தேன்.

சாமான் வைக்கும் பகுதிக் கதவைச் சாத்தினேன். அது பூட்டிக்கொண்டு விட்டது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த திரு. சனி பகவான் சிரிக்கும் சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்ததில் சாவியை நான் எடுக்காமல் கதவைச் சாத்திப் பூட்டி விட்ட மடத்தனம் மூளையில் பட்டது.

ஆகா, முருகன் நம்மைச் சோதிக்கிறான் என்று புரிந்தது. அங்கு சுற்றியிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். சொகுசு உந்தின் கதவில் இருக்கும் ரப்பர் பட்டையை எடுத்துவிட்டு ஒரு அடிக்கோலால் உள்ளே தள்ளினால் கதவு திறந்து விடும் என்றார்கள். அப்படி செய்து பார்த்ததில் அடிக்கோல் உடைந்ததே தவிர பலன் ஒன்றுமில்லை.

வாழ்க்கையில் சோதனைகள் வருவது இயற்கை. ஆனால் எந்த சோதனைக்கும் முருகன் ஒரு தீர்வை வைத்திருப்பான் என்று நம்பினேன். அப்படியே முருகன் ஒரு வழி காட்டினான். விறுவிறுவென்று விடுதியை வெளியில் வந்தேன். வரிசையாக முச்சக்கர வாடகை உந்துகள் நின்றிருந்தன. அதில் ஒன்றின் ஓட்டுனரைக் கூப்பிட்டு என் பிரச்சினையை ச் சுருக்கமாகச் சொல்லி, இதைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல ஆள் வேண்டுமே என்றேன்.

உந்தில் ஏறுங்கள் என்று சொல்லி அங்குமிங்கும் அலைந்து ஒரு ஆளைப் பிடித்தோம். அந்த ஆள் எங்கள் பின்னாலேயே வந்தார். என் சொகுசு உந்தைப் பார்த்தார். ஐயா, நீங்கள்தான் இந்த வண்டியின் சொந்தக்காரரா என்று கேட்டார். ஆமாம் தம்பி, இப்பத்தான் சுளையாக நாலேமுக்கால் லட்சம் போட்டு வாங்கினேன் என்று சொன்னேன். சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டேன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

அப்படியா என்று கேட்டு விட்டு கதவு சந்தில் நான் கொண்டு வந்திருந்த இரும்பு அடிக்கோலை விட்டு ஏதோ செய்தார். மந்திரம் போட்டது போல் கதவு திறந்து கொண்டது. இரண்டே நிமிடம்தான் ஆயிற்று. ஆடற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது. சரி, தம்பி, எவ்வளவு வேண்டும் என்றேன். அவர் தன்னுடைய முதலாளிக்குப் போன் போட்டுப் பேசினார் பிறகு 200 ரூபாய் கேட்டார்.

அப்போதுதான் நான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட விசயம் உறைத்தது. இனி என்ன செய்ய முடியும்? பேசாமல் அவர் கேட்ட ரூபாயைக் கொடுத்தேன். முச்சக்கர உந்தின் ஓட்டுனரிடம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டேன். அவர் சளைத்தவரா என்ன? 100 ரூபாய் வேண்டும் என்றார். பேசாமல் அதையும் கொடுத்தேன். எல்லாவற்றையும் திரு. சனி பகவான் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவுதான். மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன். மறுநாள் இலவச பராமரிப்புக்காக பணிமனையில் விட்டேன். அங்கு வழக்கமான என் வண்டியைப் பராமரிக்கும் பணியாளர் பிரிந்து கிடக்கும் ரப்பர் பட்டைகளைப் பார்த்து விட்டு என்ன நடந்தது என்று கேட்டார்.

நான் நடந்தவைகளைச் சொன்னேன். சரீங்க, இனி மேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ( என் வயது காரணமாக என்ன மடத்தனம் செய்திருக்கிறீர்கள் என்று கேட்கவில்லை) என்று சொல்லி விட்டு எல்லா பராமரிப்பு வேலைகளையும் முடித்துக் கொடுத்தார். ரப்பர் பட்டைகளை மாற்ற ஆயிரம் ரூபாய் ஆயிற்று. எல்லாம் முருகனின் அருள் என்று எடுத்துக்கொண்டேன்.

இதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், மடத்தனம் செய்வதில் தவறில்லை, ஆனால் ஒரு மடத்தனம் செய்தவுடன் அதை உணர்ந்து உடனே சரியான ஆளிடம் சென்று விடவேண்டும் என்பதுதான்.
சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பதில்தான் உங்கள் திறமை வெளிப்படும். அந்த வகையில் நான் கெட்டிக்காரன்.