வெள்ளி, 10 மே, 2013

வருமானவரி என்றால் என்ன?


ஐயா.வருமான வரி யார் யாருயெல்லாம் கட்ட வேண்டும்.ரிட்டன் தாக்கல் செய்வது என்றால் என்ன?வரி கட்ட வில்லை என்றால் என்ன செய்து விடுவார்கள்.
தங்களின் பதில் தனி பதிவாக வெளியிட்டால் நலம்.

ஆஹா, கடவுள் எப்படியெல்லாம் கருணை காட்டுகிறார், பாருங்கள். பதிவு போட சப்ஜெக்ட் இல்லாமல் அல்லாடும்போது "ஆரிஃப்" ரூபத்தில் வந்து உதவுகிறார் பாருங்கள்.
==================================================================================

வருமான வரி கட்ட உங்களுக்கு வருமானம் இருக்கவேண்டும். வருமானம் இல்லாதவர்கள் வருமான வரி கட்டவேண்டியதில்லை. இந்த உண்மை அந்த பெயரிலிருந்தே உங்களுக்கு விளங்கியிருக்கவேண்டும். இருந்தாலும் ஒரு ஆசிரியன் என்கிற முறையில் இதைச் சொல்வது என் கடமையாகிறது.

நான் சம்பாதிக்கிறேன். அதற்கு அரசுக்கு எதற்கு வரி செலுத்தவேண்டும் என்று சிலர் கேட்பார்கள். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி. அரசு இல்லாவிட்டால் உனக்கு வேலை ஏது? சம்பளம் ஏது? நீயே இருக்க முடியாதே? இதைப் புரிவது கொஞ்சம் கடினம்தான்.

எவ்வளவு வருமானம் இருப்பவர்கள் வருமான வரி கட்டவேண்டும்? இது ஒரு சிக்கலான கேள்வி. நம் நாட்டில் சட்டம் ஒன்று சொல்லும். ஆனால் மக்கள் ஒரு விதமாக நடப்பார்கள். முதலில் சட்டத்தை சொல்கிறேன். பிறகு நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

சிலருடைய வருமானத்தை துல்லியமாக கணக்குப் போட்டுவிடலாம். மாத வருமானத்திற்கு வேலை பார்ப்பவர்களின் சம்பளம் இவ்வளவு என்று மாதாந்திர சம்பள பட்டியலைப் பார்த்தால் தெரிந்து விடும். இவர்கள்தான் நம் நாட்டின் அச்சாணி. இவர்களுக்காகத்தான் பெரும்பாலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்களைப் பார்த்து பயப்படுபவர்களும் இவர்கள்தான்.

இவர்களுக்கான வருமானவரிச் சட்டம் என்ன சொல்லுகிறதென்றால்,  வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் இரண்டு லட்சத்திற்கு மேல் வாங்கும் சம்பளத்திற்கு வருமான வரி செலுத்தவேண்டும். வரி விகிதம் இவர்களுக்கு ரூபாய்க்கு பத்து பைசா மட்டுமே. இவர்கள் ஐந்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால் அந்த அதிக சம்பளத்திற்கு வரி ரூபாய்க்கு இருபது பைசா. சம்பளம் பத்து லட்சத்திற்கு மேல் இருந்தால் வரி ரூபாய்க்கு முப்பது பைசா. இதுதான் அதிக பட்ச வரி விகிதம்.

வருமானவரி சட்டத்தின்படி வருடம் என்பது ஏப்ரல் 1 ந்தேதி ஆரம்பித்து அடுத்த வருடம் மார்ச் 31 ந்தேதி முடிவடையும் வருடமாகும். இதை கணக்கு வருடம் என்பார்கள் அதாவது "Accounting Year" என்பார்கள். அதற்கு அடுத்த வருடத்தை "Assessment Year" சுருக்கமாக "AY" என்பார்கள். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவே சில வருடங்கள் ஆகும்.

நீங்கள் பிராவிடண்ட் பண்ட்டில் பணம் போடுபவராக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்டவேண்டியதில்லை. அதே போல் மெடிகல் இன்சூரன்ஸ் செய்திருந்தால் 15000 ரூபாய்  வரை வரி இல்லை. பல டொனேஷன்களுக்கும் இவ்வாறு சலுகைகள் உண்டு.

சொந்தமாக வீடு கட்டியிருந்தால், அதற்கு கடன் வாங்கியிருந்தால், அந்தக் கடனின் வட்டிக்கு வரி இல்லை. வாடகை வீட்டில் குடியிருந்தால் அந்த வாடகைப் பணத்தின் ஒரு பகுதிக்கு வரி விலக்கு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் யாராவது ஊனமுற்றிருந்தால் அவர்கள் பராமரிப்புக்கு என்று ஒரு தொகைக்கு வரி விலக்கு உண்டு.

இப்படியாக இன்னும் பல விலக்குகள் உண்டு. அவைகளைப் பற்றி இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டில் வேலை செய்பவர்களுக்கே சரியாகத் தெரியாது. நாமும் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை.

இப்படி இந்த சட்டதிட்டங்களை எல்லாம், எல்லோரும் தெரிந்து வைத்திருப்பது கடினம். ஒவ்வொரு ஆபீசிலும் இந்த சட்டதிட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் ஒருவர் இருப்பார் (என்னை மாதிரி). அவரிடம் போனால் அவர் உங்களுக்கு எவ்வளவு டாக்ஸ் வரும் என்று ஐந்து நிமித்தில் கணக்குப் போட்டு சொல்லிவிடுவார். என்ன, அவருக்கு ஒரு பார்ட்டி வைக்கவேண்டி வரும். அவ்வளவுதான்.

நீங்கள் ஆபீசில் வேலை செய்பவராக இருந்தால் உங்கள் வருமான வரியை அவர்களே பிடித்தம் செய்து அரசுக் கணக்கில் கட்டிவிடுவார்கள். அதற்கான ஒரு சர்டிபிகேட்டும் கொடுப்பார்கள். இந்த சர்டிபிகேட் பின்னால் தேவைப்படும்.

நீங்கள் ரிடையர் ஆகியிருந்தாலோ அல்லது வியாபாரம் செய்பவராகவோ இருந்தால் இந்த வரியை நீங்களே பேங்கில் கட்டவேண்டும். அதற்கு அவர்கள் ரசீது கொடுப்பார்கள்.

இப்படி நீங்கள் மார்ச் 31ந் தேதிக்குள் அந்த வருடத்திற்கான வருமான வரியைக் கணக்குப்போட்டு கட்டிவிட்டால் பாதி கிணறு தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இந்த வரி கட்டின விபரங்களை அதற்குரிய படிவத்தில் சரியாக எழுதி அதை வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்குண்டான படிவத்தில் ஒப்புதல் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். இதைத்தான் இன்கம்டாக்ஸ் ரிடர்ன் சமர்ப்பிப்பது என்று சொல்வார்கள். நாம் வாங்கும் ஒப்புதலுக்கு "Acknowledgement" என்று பெயர். இது மிகவும் முக்கியமான தஸ்தாவேஜு. இந்த வேலையை ஜூலை 31க்குள் செய்து முடித்துவிடவேண்டும்.

நீங்கள் பாட்டுக்கு வரி கட்டிவிட்டு, நாம்தான் வரி கட்டிவிட்டோமே என்று இருந்தீர்களானால், நீங்கள் வரி கட்டாதவராகத்தான் வருமானவரி இலாக்கா உங்களைக் கருதும். இந்த ரிடர்ன் பல பக்கங்களுடையதாய் சில வருடங்கள் முன்பு வரை இருந்தது. அத்தகைய படிவங்களை வைப்பதற்கு போதுமான இடம் வருமானவரி அலுவலகங்களில் இல்லாமையால் இப்போது இந்த படிவங்களை ஒரு சிங்கிள் காகிதமாக மாற்றிவிட்டார்கள்.

இந்த சிங்கிள் காகிதத்தை அச்சடிக்கத்தான் அவர்களுக்கு நேரம் இல்லை.

இத்துடன் வருமான வரி சமாச்சாரம் முடிந்து விடாது. உங்கள் கர்மவினை சரியாக இல்லாவிட்டால், உங்கள் வருமானவரிப் படிவம் ஒரு கிளார்க் கண்ணில் பட்டு அவனுக்கு அதில் ஏதாவது சந்தேகம் வரும். அப்போது அவன் உங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புவான். அதில் ஒரு தேதியில் வருமானவரி ஆபீசுக்கு வரச்சொல்லி இருக்கும். அன்று நீங்கள் நேரில் போய் விளக்கம் கொடுக்கவேண்டி இருக்கும்.

இந்த நடைமுறைகளெல்லாம் நம் போன்ற சாதாரண பிரஜைகளுக்குத்தான். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரிய பெரிய வியாபாரிகள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் ஆகியோருக்கு இந்த வருமானவரிச் சட்டங்கள் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும்.

நீங்கள் மந்திரியாக இருந்தால், நான் வருமானவரி படிவம் தாக்கல் செய்ய மறந்துவிட்டேன் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். தேச சேவையில் இந்த மாதிரி சாதாரண விஷயங்கள் நினைவில் இருப்பது கடினம்தானே.

பின்சேர்க்கை:

சில வார்த்தைகளுக்கு வருமானவரி இலாக்காவில் அர்த்தம்.

1. Financial Year: இது ஏப்ரல் 1 ம் தேதி முதல் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி முடிய உண்டான வருடம். இதை Accounting Year என்றும் சொல்லுவார்கள்.

2. Assessment Year: உங்கள் வருமான வரியை கணிப்பது, ரிடர்ன் சமர்ப்பிப்பது ஆகியவைகளுக்கு உண்டான வருடம். 31-3-2013 அன்று முடிவடைந்த கணக்கு வருடத்திற்கு 1-4-2013 முதல் 31-3-2014 வரை உண்டான வருடம்தான் Assessment year.

3. FY 2012-13  என்றால் 1-4-2012 முதல் 31-3-2013 வரை. இதற்கான Assessment Year = AY 2013-14.

4. AY 2013-14  என்றால் 1-4-2013 முதல் 31--3-2014 வரை.

இந்த வருடக் கணக்கை சரியாகப் புரிந்து கொள்ள எனக்கு 78 வயது தேவைப்பட்டது. உங்களில் அநேகர் என்னைவிட கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள். ஆகவே இந்தக் கணக்கை சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

AY 2013-14 வருடத்திற்கான வருமான வரிப் படிவம் இன்டர்நெட்டில் வந்துவிட்டது. அதை டவுட்லோடு செய்து பிரின்டிங் சென்டரில் கொடுத்தால் பிரின்ட் செய்து கொடுப்பார்கள். நம்மைப்போல் சாதாரணர்களுக்கு உண்டான படிவம் ITR 1 என்பதாகும். இது இரண்டு பக்கம் உள்ளது. இதை ஒரே காகிதத்தில் பிரின்ட் செய்யவேண்டும். தவிர இது  கண்டிப்பாக கலர் பிரின்ட்டாக இருக்கவேண்டும்.

கூடவே ITR V என்று ஒரு படிவம் இருக்கிறது. அதை கருப்பு வெள்ளையில் பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் வருமானவரி அலுவலகத்தில் ITR1 படிவத்தைக் கொடுத்ததும், இந்தப் படிவத்தில்தான் வரி ரிடர்ன்ஐ பெற்றுக்கொண்டதற்கான கம்ப்யூட்டர் ரசீதை ஒட்டிக்கொடுப்பார்கள். இதுதான் வரி ரிடர்ன் சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி. பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தப் படிவங்களில் உள்ள எல்லா விவரங்களையும் தவறாமல் கொடுக்கவேண்டும். குறிப்பாக உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பர். பேங்கின் IFSC  கோட் ஆகியவை கண்டிப்பாக வேண்டும்.  IFSC என்றால் Indian Financial System Code  என்பதின் சுருக்கம். இது அந்தந்த பேங்கிலோ அல்லது இன்டர்நெட்டிலோ கண்டு பிடிக்கலாம்.

இந்த விளக்கங்கள் போதுமென்று நினைக்கிறேன். மேலும் விவரங்கள் தேவைப்படின் பின்னூட்டத்தில் எழுதுங்கள். தனிப்பட்ட ஆலோசனை தேவைப்படுபவர்கள் நேரில் தக்ஷிணையுடன் வரவும்.

32 கருத்துகள்:

  1. அனைவருக்கும் பயன்படும்படி புரிந்து கொள்ளும்படி
    பிரம்ம சூத்திரமாய் இருக்கும் வருமான வரியை
    எளிமையாய் புரியவைத்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. வரி கட்டவில்லையென்றால் என்ன செய்து விடுவார்கள்? என்கிற கேள்விக்கு பதிவில் பதில் சொல்லவில்லை. இது ஒரு சிக்கலான கேள்வி. வருமான வரி இலாக்காவிற்குத் தெரியாத வரைக்கும் ஒன்றும் பிரச்சினை இல்லை. எசகு பிசகாக சிக்கிக்கொண்டீர்களோ, உங்களைப் பின்னி எடுத்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  3. அங்கங்கே உங்கள் பாணி நகைச்சுவை இருந்தாலும் எல்லா விவரங்களையும் தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள். நடிகர்கள், அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும் வேதனையான உண்மை.

    //எசகு பிசகாக சிக்கிக்கொண்டீர்களோ, உங்களைப் பின்னி எடுத்து விடுவார்கள்.//

    நீங்கள் பிரபலமானவராக இல்லாத பட்சத்தில்! :)))

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள விளக்கமான பகிர்வுகள்.. நன்றி...

    பதிலளிநீக்கு
  5. வரி விஷயத்துலே இந்தியா கொஞ்சம் பரவாயில்லைன்னு நினைக்கிறேன். சில வரிவிலக்கு சலுகைகள் கிடைக்குதே! வீட்டுக்கடன் போன்றவைகளுக்குன்னு நினைக்கிறேன். இதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்.

    இங்கே சம்பளம் கிடைப்பதே வரிகள் பிடித்தமான பிறகுதான். வாயைத் திறக்க முடியாது. இதில்லாமல் ஜி எஸ் டி. வகையில் 15% எல்லாப்பொருட்களுக்கும் உண்டு. ப்ரெட் பால் உட்பட சகலவகைகளுக்கும்.

    வங்கியில் இருக்கும் நம்ம சேமிப்புக்கு வரும் வட்டியில் கூட 20 % வரி எடுத்துக்குவாங்க.

    வரி ஏய்ப்புன்னு ஒன்னு இல்லவே இல்லை!

    வெல்ஃபேர் ஸ்டேட் என்பதால் கஷ்டத்தில் அரசு உதவும். 65 வயசனதும் எல்லோருக்கும் உதவிப்பணம் கிடைக்கும்.

    வேலையே செய்யாமல் Dole காசில் வாழ்பவர்களுக்கும் வரி கட்டி ஓய்ஞ்சு போன ஆத்மாக்களுக்கும் 65 ஆனதும் உதவிப்பணம் ஒன்னுபோலதான். சமத்துவம்

    பதிலளிநீக்கு
  6. //நீங்கள் மந்திரியாக இருந்தால், நான் வருமானவரி படிவம் தாக்கல் செய்ய மறந்துவிட்டேன் என்று கூட சொல்லிக்கொள்ளலாம்.//

    நாடு விடுதலை பெற்றதிலிருந்து மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் 15 ஆண்டுகளுக்கு மேல் வருமான வரி படிவத்தை தாக்கல் செய்யவில்லை. காரணம் கேட்டதற்கு ‘மறந்துவிட்டேன்.’ என்று சொன்னதை இங்கு நினைவு கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்,

    பதிலளிநீக்கு
  7. Good post sir . Very much thanks for u sir i dont know Hypothdication. Before 2 year I bought bike from Hdfc bank .my due's fully finished but i didnt get Noc. Here after i will get Noc. Thank u very much sir

    பதிலளிநீக்கு
  8. தக்ஷிணை இல்லாமல் விரிவான விளக்கம்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  9. //சிலருடைய வருமானத்தை துல்லியமாக கணக்குப் போட்டுவிடலாம். மாத வருமானத்திற்கு வேலை பார்ப்பவர்களின் சம்பளம் இவ்வளவு என்று மாதாந்திர சம்பள பட்டியலைப் பார்த்தால் தெரிந்து விடும். இவர்கள்தான் நம் நாட்டின் அச்சாணி. இவர்களுக்காகத்தான் பெரும்பாலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்களைப் பார்த்து பயப்படுபவர்களும் இவர்கள்தான்.//

    மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், இவர்களே பாவப்பட்ட ஜன்மங்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  10. //இந்த ரிடர்ன் பல பக்கங்களுடையதாய் சில வருடங்கள் முன்பு வரை இருந்தது. அத்தகைய படிவங்களை வைப்பதற்கு போதுமான இடம் வருமானவரி அலுவலகங்களில் இல்லாமையால் இப்போது இந்த படிவங்களை ஒரு சிங்கிள் காகிதமாக மாற்றிவிட்டார்கள்.//

    ஓஹோ, இது தான் உண்மையான காரணமா? அச்சா, பஹூத் அச்சா.

    நல்லா நகைச்சுவையாக எழுதுகிறீர்கள்..பாராட்டுக்கள் ஐயா. ;)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, வை.கோ. ஆனாலும் உங்கள் திறமைக்கு என்னுடையது கால் தூசிதான்.

      நீக்கு
  11. //வரி கட்டவில்லையென்றால் என்ன செய்து விடுவார்கள்? என்கிற கேள்விக்கு பதிவில் பதில் சொல்லவில்லை. இது ஒரு சிக்கலான கேள்வி. வருமான வரி இலாக்காவிற்குத் தெரியாத வரைக்கும் ஒன்றும் பிரச்சினை இல்லை. எசகு பிசகாக சிக்கிக்கொண்டீர்களோ, உங்களைப் பின்னி எடுத்து விடுவார்கள்.//

    இருப்பினும் தூக்கில் போட்டுவிட மாட்டார்கள். கவலை வேண்டாம் என்று ஏன் ஐயா சேர்க்கவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் உங்கள் தூக்கத்தை இழந்து விடுவீர்கள் அல்லவா?

      நீக்கு
  12. sir yenakku oru doubt nan bank accountil fixxed deposit potten 1 lakh athukku tax unda??

    பதிலளிநீக்கு
  13. sir unga pathivu yengallukku mikavum apanullatha irunthathu , ithai pola innum neraya pathivukalai ungalidam irunthu yethir parkiom , yenaku sila santhekangal irukendrathu, nan bankil fixed depositl 1 lakh poten athai tirupi yedukum pothu 1,000 tax pidichutan athu sariya ??

    பதிலளிநீக்கு
  14. அரசு, அங்கீகரிக்கப் பட்ட தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே வருமான வரி கட்டுகிறார்கள் ஏனென்றால் அவர்களால் மறைக்க முடியாது, வியாபாரம் செய்பவர்கள் என்ன சம்பாதித்தாலும் பட்டை நாமம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு இத்தகைய கருப்புப் பணம்தான் காரணம்.

      நீக்கு
  15. // மாத வருமானத்திற்கு வேலை பார்ப்பவர்களின் சம்பளம் இவ்வளவு என்று மாதாந்திர சம்பள பட்டியலைப் பார்த்தால் தெரிந்து விடும். இவர்கள்தான் நம் நாட்டின் அச்சாணி. இவர்களுக்காகத்தான் பெரும்பாலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்களைப் பார்த்து பயப்படுபவர்களும் இவர்கள்தான்.//

    மாத வருமானக்காரர்கள் படும்பாடு சொல்லி மாளாது.. மூன்று மாதம் சம்பளமே வருமானவரியைச் சரி செய்வதில் போய்விடும்

    // . வரி கட்ட வில்லை என்றால் என்ன செய்து விடுவார்கள் //

    இதற்கு நீங்கள் விவரமே சொல்லவில்லை.

    பதிலளிநீக்கு
  16. அரசு அலுவலகங்கள், பெரிய தனியார் அலுவலகங்கள் எல்லாம் அங்கு பணி புரிபவர்களின் வருமான வரியை கணக்கிட்டு பிடித்தம் செய்து வருமான வரி அலுவலகத்திற்கு கட்டவேண்டும். அப்படிக் கட்டாவிட்டால், ஆடிட்டர் ஆடிட் ரிப்போர்ட் கொடுக்கமாட்டார்.

    சிறு வியாபாரிகள், சொந்தத் தொழில் புரிவோர் பெரும்பாலும் வருமான வரி செலுத்துவதில்லை. காரணம் அவர்கள் ஒழுங்காக கணக்கு வைப்தில்லை. இவர்களை வருமான வரித்துறையும் கண்டு கொள்வதில்லை.

    பெரிய நிறுவனங்கள் சொந்தமாக ஒரு ஆடிட்டரையே தங்களுக்கு வைத்திருப்பார்கள். இவர்கள் சட்டத்திற்கு உட்பட்டும் உட்படாமலும் என்னென்ன திருட்டுத்தனம் உண்டோ அத்தனையிலும் கை தேர்ந்தவர்கள். எவ்வளவு குறைவாக வருமான வரி செலுத்த முடியுமோ அந்த அளவு குறைவாக கட்ட ஏதுவாக கணக்குகளை எழுதுவார்கள். பெரிய கம்பெனிகளில் மிக அதிக சம்பளம் வாங்குபவர்கள் இவர்களே.

    சாதாரண பிரஜைகள் வரி செலுத்தாமல் இருக்க முடியும். ஆனால் ஏதாவது விவகாரத்தில் வருமான வரி இலாக்கா உங்களைக் கண்டுபிடித்தால் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். நீங்கள் அதை அலட்சியம் செய்யும் பட்சத்தில் இரண்டாவது நோட்டீஸ் வரும். அதையும் அலட்சியம் செய்தால் பிறகு சம்மன் வரும். அதையும் அலட்சியம் செய்தால் அரெஸ்ட் வாரன்ட் வரும். இதற்கும் நீங்கள் தலைமறைவாகி விட்டால் உங்கள் கேஸ் போலீசுக்கு தரப்படும். அப்புறம் நீங்களாச்சு, உங்கள் ஊர் போலீஸ்காரர் ஆச்சு.

    எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எனக்கு இதில் அனுபவம் இல்லாததால் இதற்கு மேல் விவரம் கொடுக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி சட்டத்தின் ஓட்டைகளை உபயோகபடுத்தி வருமான வரியை குறைக்கும் ஆடிட்டர்களை வைத்து அந்த சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க வழி வகுத்தால் என்ன?
      ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டைகளை அடைத்தால் சில வருடங்களில் சரியாகி விடுமே
      புது புது ஓட்டைகள் கண்டு பிடிக்கப்படும்தான். என்ன எல்லா ஓட்டைகளையும் அடைக்க இன்னும் சில வருடங்கள் அதிகமாகும். அவ்வளவுதானே
      ஆனால் இதற்கெல்லாம் மனது வேண்டும்.
      ஆடிடர்களும் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுகொள்வார்களா? ஒட்டியே இல்லை என்றால் இவர்களுக்கு எதற்கு அதிக சம்பளம் என்று சம்பளத்தை குறைத்து விடுவார்களே

      திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்
      திருட்டை ஒழிக்க முடியாது

      சேலம் குரு

      நீக்கு
    2. சேலம் குரு அவர்களே,
      சுத்த வெவரங்கெட்ட மனுசனா இருக்கீங்களே, சட்டத்தில ஓட்டையெல்லாம் நாங்களே போட்டு வச்சதுதான். அந்த ஓட்டைகள் இல்லாட்டா எங்களுக்கு (அரசியல்வாதிகள்) கோடி கோடியாய் எவன் கொட்டுவான்? நாங்க எப்படி பொளக்கறது? எங்க வாரிசுகள் எப்படி வாழறது? கொஞ்சம் மூளையத் தீட்டி வையுங்க.

      (கொச்சைத்தமிழுக்கு மன்னிக்கவும்.)

      நீக்கு
  17. ஐயா தெளிவான முறையில் விளக்கம் கொடுத்ததிற்கு மிக்க நன்றி ! . இன்னும் பல விஷயங்கள் தங்களிடம் கற்க வேண்டியுள்ளது.
    நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருந்தால் தெளிவாக்கி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. பிரம்ம சூத்திரமாய் இருக்கும் வருமான வரியை
    எளிமையாய் புரியவைத்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  19. அருமையான விளக்கங்கள்! மேலோட்டமாக நகைச்சுவை இருந்தாலும் இன்றைய ஊழல்களை நினைத்து மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை!

    பதிலளிநீக்கு
  20. தெரியாத விளக்கங்கள் ! அருமை!நன்றி !

    பதிலளிநீக்கு
  21. பயனுள்ள தகவல்கள் பக்குவத்துடன் விளக்கங்கள்! வாழ்த்துக்கள் நன்றி!

    பதிலளிநீக்கு
  22. நேர்ல பேசினது மாதிரி இருந்துச்சு ஐயா,ரொம்ப நன்றி!

    பதிலளிநீக்கு
  23. இதில் இன்னமும் பல சந்தேகங்கள் உள்ளன, நான் தற்போது ஒய்வு பெற்றுவிட்டேன்,எனக்கு கிடைத்த சுமார் 3௦ லச்சம் தொகையை வங்கி தேபோசிடில் போட்டு மாதா,மாதம், சுமார் 24000/- வட்டியும், பென்ஷன் ஆக ரூபாய் ௨௦௦௦௦/-சேர்த்து மாதம் மொத்தம் 44,000/- பெறுகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் நான் பெரும் வட்டிக்கு 1௦% வருமான வரி பிடித்தம் வங்கியிலேயே பிடித்தம் செய்த பிறகும் நான் ஆண்டுதோறும் வருமான ஆண்டின் எந்த மொத்த வருமானத்திற்கு ரெடேர்ன் சமர்பிக்க வேண்டுமா,என்பது குறித்து தெளிவு படுத்துமாறு கேட்டுகொள்கிறேன்

    பதிலளிநீக்கு