ஞாயிறு, 6 மே, 2012

ஒரு அனுபவமும் அதன் நீதியும்



இரண்டு தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. நான் வசிக்கும் தெருவில் பாதாளச் சாக்கடை பதிப்பதற்காக குழிகள் தோண்டியுள்ளார்கள். தோண்டின மண் பூராவும் ஒரு புறம் குவித்து வைத்துள்ளார்கள். மண் குவிக்காத பக்கம் ஒரு ஐந்து அடி அகலம் மட்டுமே உள்ளது. அதில் நடக்கும் மக்களும் இரு சக்கர வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தன.

நான் காலை 7 மணிக்கு நடைப்பயிற்சி போய்விட்டு வரும்போது ஒரு கார்க்காரன் படு வேகமாக அந்த இடைவெளியில் சென்றான். நான் அதிசயப்பட்டேன். இதில் கார் செல்ல முடியாதே, இவன் என்ன செய்யப்போகிறான் என்று பார்த்துக்கொண்டே வந்தேன். கொஞ்ச தூரம் போன பிறகு மேலே செல்வதற்கு வழி இல்லை. குறுக்கே சிமென்ட் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்தார்கள்.

அந்த கார் டிரைவர் இறங்கி பாதியாக இருந்த ஒரு சிமென்ட் மூட்டையைத் தூக்கி வீசினான். அது சாக்கடைத் தண்ணீரீல் விழுந்தது. அதைத் திரும்ப தூக்கப் போனவன், ஹூம், இது சர்க்கார் சிமென்ட்டுதானே என்று சொல்லிவிட்டு அதை அப்படியே விட்டு விட்டான். நான் அப்போது அந்த இடத்திற்கு வந்து விட்டேன்.

நான் அவனைப் பார்த்து சொன்னேன். சர்க்கார் சொத்தாயிருந்தால் அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா, அதை எடுத்து தரையில் போடு என்று சொன்னேன். அவன் அதைக்கேட்க நீ யார் என்றான். நான் இந்த வீதியில் குடியிருப்பவன் என்று சொன்னேன். அதற்கு அவன் கண்ட மேனிக்கு சத்தம் போட ஆரம்பித்தான். நீ எங்கே வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் போய்க்கொள், எனக்கு கவலையில்லை என்று தாறு மாறாகப் பேச ஆரம்பித்தான். அப்போதுதான் கவனித்தேன், அவன் ஏகத்திற்கும் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.

இனி இவனிடம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று நான் அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த இடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் அவரவர்கள் வீட்டு வாசலில் நின்ற கொண்டு வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவராவது எனக்குத் துணையாக அவனைத் தட்டிக் கேட்க வரவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் எனக்கு நன்றாகப் பரிச்சயம் ஆனவர்களே. ஒரே தெருவில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்கள்தாம்.

இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் ஆபத்துக் காலங்களில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் உதவுவார்கள் என்ற எண்ணம் தவறு என்பதுதான். பக்த்து வீட்டில் கொலை நடந்தாலும் கூட கதவைப் பலமாக சாத்திக்கொள்வார்களே தவிர உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்.
இந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்களே, இந்த நீதியை மனதில் கொள்ளவும்.

சனி, 5 மே, 2012

உணர்ச்சி வசப்படுதலும் அதன் விளைவுகளும்


சமீபத்தில் செய்தித் தாள்களில் வெளியான ஒரு செய்தியை அநேகமாக அனைவரும் படித்திருப்பீர்கள்.

கயத்தாற்றில் ஒரு குடும்பம். தாய் தகப்பன், இரண்டு பையன்கள்,பெரியவனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள். வெளியூரில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். மனைவி பெற்றோருடன் இருக்கிறாள். தம்பி ஒரு கழிசடை. குடித்துவிட்டு ஊர்ப்பெண்களை மேய்வதுதான் அவன் வேலை. யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் தம்பி அண்ணியிடமே வம்பு செய்திருக்கிறான். அவள் முடிந்த வரையில் பொறுமையாக இருந்திருக்கிறாள். முடியாமல் போகவே கணவனிடம் புகார் செய்திருக்கிறாள்.

அண்ணன்காரன் அதீத உணர்ச்சி வசப்பட்டு ஊருக்கு வந்திருக்கிறான். அவனுக்கு இருந்த உணர்ச்சி வெறியில் விவேகம் அவனை விட்டுப் போய்விட்டது. தன் உறவினன் ஒருவனைத் துணைக்கு கூப்பிட்டுக் கொண்டான். தம்பியை நைச்சியமாய் பேசி தங்கள் தோட்டத்து பம்ப் செட் ரூமுக்கு கூட்டிப்போய் குடிக்க வைத்து 70 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டான்.

இதன்பிறகு என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். போலீஸ் கேஸ், சிறை வாசம், கோர்ட்டு விசாரணை, தீர்ப்பு. இந்தக் கூத்து எல்லாம் நடந்து முடிய ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். இந்த சமயத்தில் கேஸ் நடத்த, குடும்பம் நடத்த ஆகும் செலவுகளை எப்படி செய்வது? இருக்கும் சொத்துகளை விற்று செலவுகள் நடக்கும். முடிவில் அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம்.

இதன் பிறகு அவன் மனைவி குழந்தைகள் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய எதிர்காலம் எப்படி ஆகும்? உணர்ச்சி வசப்பட்டு செய்த காரியத்தினால் என்னென்ன விபரீதங்கள் ஏற்பட்டு விட்டன? இந்த நிகழ்வில் எங்கு தவறு நேர்ந்தது?

அந்தக் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் மூத்த மகனை அவன் மனைவியைத் தன்னோடு அழைத்துப் போகச் சொல்லியிருக்க வேண்டும். அது முதல் தவறு. அந்த மூத்த மகனாவது நிலைமையைப் புரிந்துகொண்டு தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அந்த மனைவியாவது நல்ல யோசனை சொல்லியிருக்கவேண்டும். அல்லது அவளுடைய தாய் தகப்பனாவது ஏதாவது மாற்றுத் திட்டங்கள் சொல்லியிருக்கவேண்டும்.

இவைகளெல்லாம் நடக்கவில்லை. கடைசி காலத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவன் செய்த கொலையினால் ஒரு குடும்பம் சீரழிந்து நடுத்தெருவில் நற்கும் நிலை உருவாகிவிட்டது.

இது மாதிரி சம்பவங்கள் இப்போது அதிகமாக நடக்கின்றன. காரணம் பொறுமையின்மை. ஒரு நிமிடம் விளைவுகளைப் பற்றி யோசித்திருந்தால் இந்த செயல்கள் நடந்திருக்குமா?

இதைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்தப் பிரச்சினை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நேரலாம். அப்படி நேரும் பட்சத்தில் உணர்ச்சி வசப்படாமல் அந்தப் பிரச்சினையை கையாள்வது எப்படி என்று இப்போதே யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.

வெள்ளி, 4 மே, 2012

மனச்சோர்வும் தற்கொலைகளும்



வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். இதைத் தவிர காரணமே இல்லாமலும் மனச்சோர்வு ஏற்படலாம். காரணம் எதுவாயினும், இது ஒரு நோய் என்று அறியவேண்டும். பொதுவாக இந்த நோய் தாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஒரு நோய் இருக்கிறது என்று உணர மாட்டார்கள். தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முனைவார்கள். சுற்றி உள்ளவர்கள்தான் சில அறிகுறிகளை வைத்து ஒருவர் இந்த நோயினால் தாக்கப்பட்டுள்ளார் என்று அறிந்து அதற்கான முறையான வைத்தியம் செய்ய வேண்டும்.

இந்த நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்:

  1.   தனிமையை விரும்புதல்: கலகலப்பாக இருக்கும் ஒருவர் தனிமையை விரும்புகிறார் என்றால் அவருக்கு மனக்கலக்கம் ஏற்பட்டுள்ளது என்று அறியலாம்.
  
  2.   நண்பர்களிடம் தொடர்பு இல்லாமை: ஒருவர் வழக்கமாக பழகி வரும் நண்பர்களை விட்டு விலகி இருப்பாரேயானால் அது மனச்சோர்வாக இருக்கலாம்.

  3.   போதை மருந்துகள்/பானங்கள்: இவைகளை உபயோகப்படுத்துதலும் இவைகளுக்கு அடிமையாதலும் நிச்சயமான மன நோய்க்கு அறிகுறிகள்.
  
  4.   பசியின்மை/அதிகப்பசி: இவை இரண்டும் நல்ல அறிகுறிகள் அல்ல. சாதாரணமாக இருக்கும் ஒருவர் சாப்பிடாமலோ அல்லது அதிகமாகச் சாப்பிட்டாலோ அது மனச்சோர்வாக இருக்கலாம்

  5.   எரிந்து விழுதல்/கோபப்படுதல்: வழக்கத்துக்கு மாறான கோபம் அல்லது எரிச்சல் ஒருவரிடம் காணப்படுமாயின் அது மன நோயாக இருக்கலாம்
.
இவ்வகையான மன நோய்க்கு காரணம் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த நோய் பீடித்தவருக்கு சரியான கவனிப்பு இல்லையானால் பல விளைவுகள் ஏற்படும். பொதுவாக பலர் தற்கொலை செய்யக் காரணம் மனச்சோர்வே.

குறிப்பாக இளைஞர்களிடத்திலும் வயதானவர்களிடத்திலும் இந்த மனச்சோர்வு அதிகமாக ஏற்படுகிறது. சூழ்நிலை மாற்றம், எதிர்பாராத துக்கங்கள், தீராத நோய்கள், பரீட்சையில் தோல்வியடைதல் அல்லது மதிப்பெண்கள் குறைவாக வாங்குதல் போன்ற காரணங்களினால் இந்த சோர்வு ஏற்படலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பவர்கள் கவனமாக இருந்து அந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் யாராவது இந்த சோர்விற்கு ஆளாகி உள்ளார்களா என்று கவனிப்புடன் இருப்பது அவசியம்.

மனச்சோர்வு ஆரம்ப நிலையில் இருந்தால் குடும்ப அங்கத்தினர்களே இதை சரி செய்து விடலாம். நல்ல ஆறுதல், கவனிப்பு, கண்காணிப்பு, ஆலோசனைகள் மூலம் ஒருவரின் மனச்சோர்வைப் போக்கலாம். கொஞ்சம் தீவிரமாக இருந்தால் மருத்துவரை சந்திப்பது அவசியம். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இளைஞர்களும், முதியவர்களும் தங்கள் மன வலிமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இது ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பொறுத்தது. குடும்பத்திலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அந்தக் குடும்பத்தில் யாருக்கும் மனச்சோர்வு வராது. 

புதன், 2 மே, 2012

பெற்றோர்களே ஜாக்கிரதை


10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு பரீட்சைகள் முடிந்து, மாணவர்கள் லீவை அனுபவித்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் பெற்றோர்களின் வயிற்றில் ஒரு இனம் தெரியாத வேதனை அல்லது கவலை இருந்து கொண்டிருக்கும்.

காரணம், தங்கள் வாரிசுகளை இனி என்ன படிப்பில் சேர்க்கலாம் என்பதுதான். இன்றுள்ள கல்வி வாய்ப்புகள் இன்றைய பெற்றோர்கள் படிக்கும்போது இல்லை. அதனால் அவர்களுக்கு அதிக குழப்பம் ஏற்படவில்லை. ஆனால் இன்றுள்ள படிப்புகளை முழுமையாக யாரும் அறிந்திருப்பது கடினம். இன்றைய இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள்? அதனால் அவர்கள் வாழ்க்கை நன்றாக அமையுமா? என்கிற கேள்விகள் ஒவ்வொரு தகப்பனையும் ஆட்டிக்கொண்டு இருக்கும்.

பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருப்பவர்களுக்கு கவலை கொஞ்சம் குறைவு. மார்க்கைப் பொருத்து ஏதாவதொரு கோர்சில் சேர்த்து விட்டால் இரண்டு வருடத்திற்கு கவலை இல்லை என்று பொதுவாக எல்லோரும் நினைப்பார்கள்.ஆனால் பொறுப்புள்ள பெற்றோர்கள் அப்படி இருக்கக் கூடாது. பையனோ, பெண்ணோ, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய முழுத் திட்டமும் இப்போதே தயார் பண்ணிக்கொள்ளவேண்டும்.

வாரிசுகளின் ஆசாபாசங்கள், குடும்ப பொருளாதாரம், வாரிசுகளின் திறமை இவைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தத் திட்டம் தயாரிக்கப்படவேண்டும். திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானதாக இருக்கவேண்டும். எதிர்பார்த்த மார்க்குகள் கிடைக்காவிடில் மாற்றுத்திட்டம் என்ன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதில் சம்பந்தப்பட்ட வாரிசுகளின் முழு ஈடுபாடு அவசியம். அவர்கள் தங்கள் பெற்றோர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி தங்கள் எதிர்காலப் படிப்பைப் பற்றிய கனவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் கவனக் குறைவாக இருந்தால் பல அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. என் உறவினர் பையன் தான் விரும்பும் படிப்பில் பணம் கொடுத்துச் சேர்த்தவில்லை என்பதால் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகாத மாதிரி பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்.

திங்கள், 30 ஏப்ரல், 2012

உதகமண்டலம் - மலைகளின் ராணி

மலை வாசஸ்தலங்களின் ராணி எனப் புகழ் பெற்றது மக்களால் சுருக்கமாக ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம். ஒத்தைக்கல் மந்து என்பது மருவி உதகமண்டலம் ஆகி அது சுருங்கி ஊட்டி என்றாயிற்று.

கோடை காலத்தில் தங்க நல்ல இடம். பேங்கில் ஓரளவு கணிசமான அளவு தொகை (சுமார் 10 லட்சம்) இருந்தால் குடும்பத்துடன் ஒரு வாரம் போய் இருந்து விட்டு வரலாம். ஹனிமூன் தம்பதிகள் பெண்ணின் தகப்பனார் செலவை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் போய்வர தகுந்த தலம்.

ரூம் வாடகை 4000 ரூபாயிலிருந்து 20000 ரூபாய் வரை அவரவர் சக்திக்குத் தகுந்த மாதிரி கிடைக்கிறது. நீங்கள் அரசாங்க உயர் அதிகாரியாய் இருக்கும் பட்சத்தில் கவர்ன்மென்ட் விடுதிகளில் உங்கள் டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த ஊட்டியில் பணி புரியும் அலுவலர்கள் ஏற்பாடு செய்து விடுவார்கள். மற்றவர்கள் தங்கள் கைக்காசைத்தான் செலவு செய்யவேண்டும்.

என்னை மாதிரி இளைஞர்களுக்கு அங்கு போனவுடன் நாலு பெக் விஸ்கி போட்ட மாதிரி தலை கழுத்தில் நிற்காமல் தள்ளாடும். அப்படிப்பட்டவர்கள் அங்கும் இங்கும் அலையாமல் ரூமில் கம்பளியைப் போர்த்திக்கொண்டு தூங்கவும்.

நானும் என் நண்பரும் இரண்டு நாட்கள் ஊட்டி சென்று வந்தோம். இவ்வாறு சென்று வர வாய்ப்பு இல்லாத நண்பர்கள் இங்கு இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து இன்புறவும்.


1.சேரிங் கிராஸ்:

ஊட்டியில் முதலில் உங்களை வரவேற்கும் அடையாளச்சின்னம்.



2. ஊட்டி லேக்:

தண்ணீரைத் தொட்டு விட்டால் ஒரு பாட்டில் பினாயில் வேண்டும் கை கழுவ. அத்தனையும் சுத்தமான சாக்கடை நீர்.


3. பொட்டானிகல் கார்டன்.


பல சினிமாக்களில் காட்டப்பட்டு விட்டதால் நேரில் பார்க்கும்போது அவ்வளவு த்ரில் இருக்காது.





4. சில இயற்கை / செயற்கைக் காட்சிகள்.





5. நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்:

Lakshmi Cottages
272,Church Hill Lane,
Behind Safire Grand Cottage,
Udhagamandalam - 630001.


Phone: LL 0423-2452141
Mobile: 98435 67425


24 hours hot water, Parking Space Available. Located in a serene atmosphere within walking distance of Charring Cross. 





ஆயுட்காலத்தில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஊர்.


புதன், 25 ஏப்ரல், 2012

பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!

பணம் ஒரு பேய்.


பணக்காரனுக்குத் தூக்கம் இல்லை.


பணம் வந்தால் குணம் போய்விடும்.

இப்படிப் பல பழிமொழிகளைக் கேட்டிருப்பீர்கள். அவை அனைத்தும் உண்மைதான்.

கூடவே இந்தக் கதையையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு ராஜாவிடம் ஒரு அதிகாரி வேலை பார்த்து வந்தான். நல்ல வாழ்க்கை நடத்தப் போதுமான சம்பளம் ராஜா கொடுத்து வந்தார். அவனும் தன் மனைவி மக்களுடன் நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஒரு நாள் அவன் ஒரு வேலையாக வெளியூர் போகவேண்டியிருந்தது. கட்டுச்சாதம் கட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டான். போகும் வழியில் ஒரு காடு. அதன் வழியாகப் போகும்போது அவனுக்குச் சிறிது களைப்பாயிருந்ததால் ஒரு மரத்தடியில் இளைப்பாறப் படுத்தவன் அப்படியே தூங்கிப்போனான்.

தூங்கி எழுந்து கட்டுச்சோற்றை சாப்பிடலாமென்று பார்க்கையில் கட்டுச் சோத்தைக் காணவில்லை. இந்தக் காட்டில் என் கட்டுச்சோற்றிற்கு எந்தத் திருடன் வந்தான் என்று சத்தமாகப் புலம்ப ஆரம்பித்தான்.

அப்போது அவன் படுத்திருந்த மரத்தில் இருந்து ஒரு பூதம் இறங்கி வந்தது. அது சொல்லிற்று; நான் இந்த மரத்தில் வசிக்கும் பூதம். நான் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. உன்னுடைய கட்டுச்சாத வாசனை என்னை மயக்கியது. அதனால் அதை எடுத்து சாப்பிட்டு விட்டேன். அதற்குப் பதிலாக நான் உனக்கு ஏழு ஜாடி தங்கக்காசுகள் கொடுக்கிறேன்  நீ அதை வைத்துக்கொள். இப்போது நீ வீட்டுக்குப் போனால் அந்த ஏழு ஜாடிகளும் இருக்கும் என்றது.

இவனும் உடனே ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்து பார்த்தான். பூதம் சொன்ன மாதிரி ஏழு ஜாடிகள் இருந்தன. அவைகளை ஆவலுடன் திறந்து பார்த்தான். எல்லா ஜாடிகளிலும் தங்கக் காசுகள் இருந்தன. அவன் சந்தோஷத்துடன் எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். ஏழாவது ஜாடியைப் பார்த்ததும் அவன் சந்தோஷம் காணாமல் போனது. காரணம் அந்த ஜாடியில் தங்க நாணயங்கள் ஒரு அரைக்கால் ஜாடி அளவு குறைவாய் இருந்தது.

இவனுக்கு ரொம்ப வருத்தமாய்ப் போய்விட்டது. அந்த ஜாடியையும் நிரப்பிப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்து விட்டது. ராஜாவிடம் சம்பளம் அதிகம் வேண்டுமென்று கேட்டுப் பெற்றான். மூன்று வேளைச் சாப்பாட்டை இரண்டு வேளையாக்கி பறகு ஒரு வேளையாக்கினான். வீட்டில் இருக்கும் பண்ட பாத்திரங்களையெல்லாம் விற்றான். என்ன செய்தும் அந்த ஏழாவது ஜாடியை நிரப்பவே முடியவில்லை. இந்த ஏக்கத்திலேயே உடல் மெலிந்து பயித்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டான்.

ராஜா அவனை அழைத்து என்ன காரணத்தினால் இப்படி இளைத்து விட்டாய் என்று கேட்டார். அதற்கு அவன் ஒன்றுமில்லைங்க என்றான். ஆனால் ராஜாவிற்கு காரணம் விளங்கி விட்டது. அந்த ஏழு ஜாடி தங்கக்காசுகள்தானே என்றார். அவனுக்கு ஆச்சரியமாய் போய் விட்டது. நம் வீட்டில் இருக்கும் ஜாடிகள் ரகசியம் ராஜாவிற்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டான்.

இவன் ஆச்சரியப்பட்டதைக் கண்ட ராஜா சொன்னார். அந்த பூதத்தையும் அதன் ஏழு ஜாடி தங்கக் காசுகளையும் எனக்குத் தெரியும். நீ உயிரோடு வாழ விரும்பினால் அந்த ஏழு ஜாடிகளையும் கொண்டுபோய் அந்த பூதத்திடமே கொடுத்து விட்டு வா என்றார். இவனும் அதை மாதிரி செய்து கொஞ்ச நாளில் பழைய மாதிரி ஆனான்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், பணத்தின் மீதுள்ள ஆசையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதுதான். நமக்காகத்தான் பணமே தவிர பணத்துக்காக நாம் இல்லை என்பதை உணரவேண்டும். நம் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கவேண்டும். எதிர்காலத்திற்காக சேமிக்கவும் வேண்டும்.

பணம் இல்லாமல் இவ்வுலக வாழ்க்கை இல்லை. எதிர்காலத்திற்காக சேமிக்கிறேன் என்று சொல்லி நிகழ்காலத்தை நாம் இழந்து விடக்கூடாது.

பதிவுகளில் எரிச்சலூட்டுபவை.


1. முகநூல் விளம்பரம்
நிறைய பதிவுகளில் இந்த முகநூல் விளம்பரம் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னால் வந்து நிற்கிறது. சின்னப் பசங்க அம்மா காலையே சுத்திச்சுத்தி வருவாங்களே அந்த மாதிரி. நாயை விட்டுகிற மாதிரி சூ, சூ என்றால் போகாமல் அப்படியே நிற்கிறது. பதிவை விட்டு ஓடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.


2. மேலும் படிக்க
பதிவுக்குள்ள போனமா, பதிவப் படிச்சமான்னு இருக்கணும். அதை உட்டுப்புட்டு மோர், தயிர், மேலும், இப்படீன்னு பல பதிவுகளில் போட்டிருக்கிறார்கள். அந்த மோரும் தயிரும் எங்கிருக்குதுன்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது.


3. கருப்பு பின்புலம்
வெள்ளையில் கருப்பு எழுத்துக்கள்தான் படிப்பதற்கு சுகம். சில பேர் கருப்பு பின்புலத்தில் வெள்ளை அல்லது வேறு கலர் எழுத்துகளை உபயோகிக்கிறார்கள். அந்த மாதிரி பதிவுகளைப் படிக்கவே முடிவதில்லை.


4. சிறிய எழுத்துகள்
எழுத்துகள் ஓரளவுக்கு படிக்கிற மாதிரி இருக்கணும். சின்ன சின்ன எழுத்துக்கள் படிப்பதற்கு கடினமாக இருக்கின்றன. அதைப் பெரிது பண்ணிப் படிக்க கம்ப்யூட்டரில் வசதி இருந்தாலும் அது ஒரு கூடுதல் வேலை. இதனால் பதிவைப் படிக்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம்.


5. வரிகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லாமை.
ஒரு பக்கம் முழுவதும் இடைவெளி இல்லாமல் ஒரு பதிவு இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் போதிய இடைவெளி இருந்தால்தான் படிக்க சௌகரியம்.


6. பின்னூட்டம் போடுவதற்கு இடைஞ்சல்கள்
ஐயா பின்னூட்டம் போடுங்கள் என்று கோவில்களில் பிச்சைக்காரர்கள் கூவுகிற மாதிரி கூவுகின்ற பதிவுகளை நிறையப் பார்க்கின்றோம். சரி, ஐயோ பாவம் என்று பின்னூட்டம் போடப் போனால் வரும் உபத்திரவம் அதிகம். முதலில் தமிழில் பின்னூட்டம் போடுகின்றோம். முடித்து பப்ளிஷ் என்று சொன்னால் உடனே வேர்டு வெரிபிகேஷன் என்று ஒன்று. நீங்கள் ரோபோட் இல்லையென்று நிரூபியுங்கள் அப்படீன்னு ஒண்ணு. அதில மேகமூட்டத்தில கலங்கின மாதிரி ஆங்கில எழுத்துக்கள். அப்புறம் நீங்க ஆங்கிலத்திற்கு மாறி, அந்த எழுத்துக்களை ஒண்ணாம் கிளாஸ் பையன் மாதிரி எழுத்துக்கூட்டி டைப் பண்ணவேண்டும். அப்புறம் பப்ளிஷ் பண்ண வேண்டும்.


ஏதோ ரோபோட் வந்து இவங்க பதிவுல ஆயிரக்கணக்குல பின்னூட்டம் போட்ட மாதிரியும் அதைத் தடுக்க இந்த யுத்தியைக் கடைப்பிடிக்கற மாதிரியும் பாவலா. இதனால் வருகிற ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் ஓடிப்போய்விடும்.


பதிவுகள் போடுவது நாலு பேரு படிக்கட்டும் என்றுதானே. அதில் இவ்வளவு சங்கடங்கள் கொண்டு வந்தால் எப்படிங்க படிக்கிறது? எப்படிங்க பின்னூட்டம் போடறது? பதிவுலக கனவான்களே, சிந்தியுங்கள்.

திங்கள், 23 ஏப்ரல், 2012

நல்ல ஆஸ்பத்திரியை அடையாளம் காண்பது எப்படி?



மனிதனாகப் பிறந்தவர்களுக்கு ஆண்டவன் பல சோதனைகளைக் கொடுக்கிறான். அதில் ஒன்றுதான் உடல்நலக் குறைவு. சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்ற வியாதிகளென்றால் நாம் வழக்கமாகப் போகும் டாக்டரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்ளலாம்.


ஆனால் சற்றுப் பெரிய, குறிப்பாக நெஞ்சுவலி போன்ற நோய்கள் வந்து விட்டால், வீட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிடும். என்ன செய்வது, எந்த ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என்பது பற்றி ஆளாளுக்கு யோசனை சொல்வார்கள். வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்களானால் பிரச்சினை இல்லை. ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம். எவ்வளவு செலவானாலும் கொடுத்துவிட்டு வந்து விடலாம்.


ஏழைக்குடும்பங்களுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. நேராக கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவார்கள். அங்கு என்ன ஆனாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப் பக்குவம் அவர்களுக்கு உண்டு.


ஆனால் நடுத்தர வசதியுள்ள குடும்பங்களில் இந்த மாதிரி சமயங்களில் முடிவு எடுப்பது மிகவும் கடினம். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போவது அவர்களுக்கு கௌரவக்குறைச்சல். பெரிய ஆஸ்பத்திரிகளுக்குப் போய் அங்கு ஆகும் செலவுகளைத் தாக்குப் பிடிப்பதுவும் கடினம். இவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது.


இவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா நபர்களுக்கும் மெடிகல் இன்சூரன்ஸ் எடுப்பது மிக மிக அவசியம். அதுவும் ஆஸ்பத்திரிகளில் பணம் செலுத்த வேண்டியிராத பாலிசி எடுப்பது அவசியம். அது தவிர இந்த வசதிகளைச் செயல்படுத்தும் ஆஸ்பத்திரிகள் எவை என்று கண்டு பிடித்து, அவைகளுடன் தொடர்பு வைத்திருப்பது அவசியம். 


இவைகளையெல்லாம் தங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்போதே செய்து வைத்திருப்பது அவசியம். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது போல் இருக்கக்கூடாது.


இந்தக் குறிப்புகளை நான் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. டாக்டர்கள் கண் கண்ட தெய்வங்கள்தான். அதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரி என்று ஒன்று கட்டிவிட்டார்களேயானால் அவர்களே சாத்தான்களின் மறு அவதாரமாகி விடுகிறார்கள்.


உலகத்தில உசிரோட இருக்கிற நோயாளிகளுக்குத்தான் வைத்தியம் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனா எனக்குத் தெரிந்து இங்குள்ள பெரிய கார்பரேட் ஆஸ்பத்திரியில் செத்துப் போனவர்களுக்குக் கூட வைத்தியம் பார்ப்பார்கள். சினிமா இல்லைங்க. நிஜம்.


ஒருவர் சீரியஸ் நோயாளியாக இருந்தால் அவரை உடனடியாக ICU வில் வைத்து விடுவார்கள். இது எல்லாருக்கும் தெரியும். நெருங்கிய உறவினர்களை மட்டும் தினம் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பார்க்க விடுவார்கள். என்ன வைத்தியம் பார்க்கிறார்கள் என்ற விவரம் சொல்ல மாட்டார்கள். தினம் காலையில் டாக்டர் வந்து விட்டுப் போனவுடன் ஒரு முழ நீளத்திற்கு மருந்து லிஸ்ட் கொடுப்பார்கள். அந்த மருந்துகளை அந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் கடையில்தான் வாங்க வேண்டும்.


அதை ICU வாசலில் கொண்டு போய்க் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். நாம் என்ன நினைப்போமென்றால், இந்த மருந்துகளை எல்லாம் நம் உறவினருக்குக் கொடுப்பார்கள் என்றுதானே? உங்கள் நினைப்பு தவறு. அந்த மருந்துகள் அப்படியே மருந்துக் கடைக்குப் போய் விடும். தினந்தோறும் இப்படி லிஸ்ட் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நாமும் வாங்கிக்கொடுத்துக்கொண்டே இருப்போம்.


இதை நம்புவது கடினம். பெரிய ஆஸ்பத்திரிகளில் இப்படியும் மனச்சாட்சி இல்லாமல் இருப்பார்களா என்ற சந்தேகம் வரும். இது நடக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன்.


ஆகவே நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் உங்கள் ஊரில் இருக்கும் ஆஸ்பத்திரிகளைப் பற்றி நன்கு விசாரித்து,ICU இல்லாத ஆஸ்பத்திரியைக் கண்டுபிடித்து அந்த ஆஸ்பத்திரியின் டாக்டரிடம் தொடர்ந்து தொடர்பில் இருங்கள். 


சில ஆஸ்பத்திரி டாக்டர்கள் நோயாளிகளிடம் அதீத அன்புடையவர்களாய் இருப்பார்கள். அவர்கள் ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டால் நோய் குணமானபின்பும் உங்களை டிஸ்சார்ஜ் செய்யமாட்டார். நீங்களாக டாக்டரை நச்சரித்தால் ஒழிய உங்களை டிஸ்சார்ஜ் பண்ண மாட்டார். அப்படிப்பட்ட ஆஸ்பத்திரியில் போய் சிக்கிக் கொள்ளவேண்டாம்.


நீங்கள் எப்பேர்ப்பட்ட வியாதியிலிருந்தும் குணமாவது உங்கள் விதியைப் பொருத்துத்தான் அமையும் என்பதை மனதில் கொள்ளவும். அதனால் உங்களுடைய வசதிக்கு மீறீன வைத்தியத்திற்குத் தலைப்படாதீர்கள்.


உங்களுக்கு எப்போதும் நல்ல உடல் நலம் வாய்க்க ஆண்டவன் அருள் புரியட்டும்.