வியாழன், 21 மார்ச், 2013

8. இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு.

(இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே)

மறுநாள் சரியாக 10 மணிக்கு பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும் வந்தார்கள். அவர்களை வரவேற்று கான்பரன்ஸ் ரூமுக்குப் போனோம்.


நிதி அமைச்சர் எங்களைக் கூப்பிட்ட விஷயம் என்ன? என்றார்.

நான் இருவரையும் பார்த்துச் சொன்னேன். தற்போது நமது நாட்டு நடப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. வெளிநாட்டுக்காரர்கள் நம்மைக் கேவலமாக மதிப்பீடு செய்கிறார்கள். இதையெல்லாம் மாற்றி நம் நாட்டை உலகின் ஒன்றாம் நெம்பர் நாடு என்று மாற்றவேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்றேன்.

எங்களுக்கும் அது விருப்பமே. ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவது என்றுதான் தெரியாமல் விழிக்கிறோம் என்றார்கள். நான் சொன்னேன், என்னிடம் இப்போது ஏராளமான செல்வம் மற்றும் சகல வல்லமைகளும் இருக்கின்றன. நீங்கள் சரி என்று சொன்னால் என் திட்டங்களை விவரிக்கிறேன், என்றேன். அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு,  பிறகு சொன்னார்கள். எங்களுக்கு விருப்பமே, ஆனால் பாருங்கள், இதில் எங்கள் கட்சித் தலைவரும் சம்பந்தப் பட்டிருக்கிறார். அவர் அனுமதி இல்லாமல் நாங்கள் எந்த முடிவும் எடுக்கமுடியாதே, என்றார்கள்.

அப்படியானால் அவரையும் கூப்பிட்டுக்கொள்வோம் என்றேன். அவர்கள் செல்போனில் பேசினார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அவரும் வந்தார். அவரை மிக மரியாதையாக வரவேற்று அமரச்செய்தாம். அவருக்கும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர் எனக்கும் சில நீண்ட காலத் திட்டங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் நிறைவேற்றுவதானால் எனக்கு உங்கள் திட்டத்தில் ஆட்சேபணை இல்லை என்றார்கள்.

அதற்கென்ன, அப்படியே செய்து விட்டால் போகிறது என்று சொல்லிவிட்டு என் முதல் கேள்வியைக் கேட்டேன். இப்போது நமது இந்திய அரசுக்கு கடன் எவ்வளவு இருக்கிறது என்றேன். நிதி அமைச்சர் உள்நாட்டிலா, வெளி நாட்டிலா என்றார். இரண்டையும் சொல்லுங்களேன் என்றேன்.

உள் நாட்டுக்கடன் பத்தாயிரத்தெட்டு லட்சம் கோடி ரூபாய்கள், வெளிநாட்டுக் கடன் இருபத்தி இரண்டாயிரத்து மூன்று லட்சம் கோடி டாலர்கள் என்றார். இது போக வட்டி தனி என்றும் சொன்னார். இந்தத் தொகையைக் கேட்டு நான் கொஞ்சம் அசந்து விட்டேன்.

சரி, நிதி அமைச்சரே, இந்தத் தொகையை மொத்தமாக நான் தேவலோக பேங்கிடமிருந்து ஒரே தவணையில் தானமாகக் கொடுக்கச் சொல்கிறேன். இந்தக் கடன்களையெல்லாம் பட்டுவாடா செய்து முடிக்க எவ்வளவு நாட்களாகும் என்று கேட்டேன். ஒரு வாரத்தில் முடித்து விடுவோம் என்றார்.

குபேரனைக்கூப்பிட்டு, இவர் கேட்கும் பணத்தைக் கொண்டுபோய் டில்லியில் இவருடைய ஆபீசில் கொடுத்து விட்டு வாருங்கள் என்றேன் அவன் சரியென்று போய்விட்டான். இத பாருங்க நிதி அமைச்சரே, இதில் எந்த சொதப்பலும் இருக்கக்கூடாது. அடுத்த வாரம் இதே நாள் நாம் எல்லோரும் இங்கே கூடுவோம். அப்போது எந்தக் கடனும் நிலுவை இருக்கக் கூடாது, பார்த்து செய்யுங்கள், என்றேன். அவர்கள் மூவரும் சரியென்று தலை ஆட்டிவிட்டுப் புறப்பட்டார்கள்.

புறப்படும்போது அவர்கள் மூவருக்கும் ஒவ்வொரு சூட்கேஸ் பரிசளித்தேன். இதில் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நீங்கள் இந்த மீட்டிங்க்கில் கலந்து கொண்டதற்கான தினசரி அலவன்ஸ் என்றேன். சரி என்று வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த சூட் கேசுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தேன்.

ஆடற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடற மாட்டை பாடி கறக்கவேண்டும், அல்லவா?

செவ்வாய், 19 மார்ச், 2013

7. தூதரகம் திறப்பு.


மறுநாள் எழுந்தவுடன் மயனைக் கூப்பிட்டு, நீங்கள் செக்குவுடன் உடனே பூலோகத்திற்குப் போய் நமக்கு கொடுத்துள்ள நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் "தேவேந்திர நகர்" என்ற நகரத்தை சகல வசதிகளுடன் நிர்மாணியுங்கள். ஒரு பத்தாயிரம் பேர் தங்குவதற்கான வசதிகளும், ஹெலிகாப்டர் தளம் மற்றும் தூதரக ஆபீஸ்களும், நல்ல பாதுகாப்பான மதில் சுவர்களும், மற்றும் அந்த ஊருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.

அப்படியே நமது தேவ்லோக் பேங்கிற்கும் அந்த தூதரகத்துக்குள்ளேயே ஒரு கிளை கட்டுங்கள். அதில் எல்லாவித சௌகரியங்களும் இருக்கட்டும்.

நாளை காலை பத்து மணிக்கு இந்த தூதரக திறப்பு விழா நடக்கட்டும். இந்திரனும் இந்திய ஜனாதிபதியும் இந்த தூதரகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பார்கள். இங்கிருந்து நாம் எல்லோரும் செல்வோம். இந்தியாவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேரை அழைக்கலாம்.

இந்தியாவில் இந்த மாதிரி விழாக்களை நடத்த "Event Manager" கள் இருப்பார்கள். அவர்களில் ஒரு நல்ல நிறுவனத்திடம் இந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள். விழா மிகப் பிரமாதமாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிடுங்கள். விழா முடிந்தவுடன் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் ஆடம்பரமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லி விடுங்கள். நீங்கள் போகலாம் என்று சொன்னேன். அவர்களும் புறப்பட்டுப் போனார்கள்.

இந்திரன் இந்த விழாவிற்காக பூலோகத்திற்குப் போய்வர புருனே சுல்தான் வைத்திருக்குற மாதிரி ஒரு பிளேன் உடனடியாக வாங்குங்கள், அதன் விடியோ இதோ இருக்கிறது. அதனுள் 100 பேர் அமரும்படியான ஒரு நடன அரங்கம் அவசியம் இருக்கட்டும். இந்திரனால் நாட்டியம் பார்க்காமல் கொஞ்சநேரம் இருந்தால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அதனால் ஜாக்கிரதை.



தூதரகத் திறப்பு விழா அழைப்பிதழ் இந்தியாவின் அனைத்து பாரலிமென்ட் உறுப்பினர்கள். வெளிநாட்டுத் தூதுவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள்,
அனைத்து தமிழ் பதிவர்கள், ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும், மத்திய அரசு அனைத்து செயலர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், அனைத்து மத்திய மாநில மந்திரிகளுக்கும் உடனடியாக கொடுத்து விடுங்கள்.

அப்படியே அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, மறுநாள் காலை திறப்பு விழாவிற்கு அனைத்துப் பிரமுகர்களும் வந்து விட்டார்கள். தூதரக வாசலில் அனைவருக்கும் சோமபானம் கொடுத்து வரவேற்கப்பட்டார்கள். வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை இந்திய ஜனாதிபதி அவர்கள் விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் பதித்த தங்கக் கத்தரிக்கோலால் வெட்டி தூதரகத்தைத் திறந்து வைத்தார். ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் அந்த கத்தரிக்கோலை பவ்யமாக வாங்கி தன் பைக்குள் வைத்துக்கொண்டார். இதை பிற்பாடு ஜனாதிபதி வாங்கிக் கொள்வார். இது பல காலமாக அனுஷ்டிக்கப்படும் சம்பிரதாயம்.

பிறகு எல்லோரும் விழாப் பந்தலுக்குள் நுழைந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் தனியாக அழைத்துக்கொண்டு போய் அலங்கார மேடையில் அமரச் செய்தார்கள். கடவுள் வாழ்த்துக்குப் பின்னர், நான் வரவேற்புரை வழங்கினேன். அப்போது நான் சொன்னதாவது.

இந்த நாள் இதுவரை பூலோகத்திலேயே யாரும் பார்த்திராத பொன்னாள். இந்த தேவலோகத் தூதரகத்தை புண்ணிய பூமியான இந்தியாவில்தான் முதலில் அமைக்கவேண்டும் என்று மும்மூர்த்திகளும் விரும்பினார்கள். அதனால்தான் இங்கு அமைத்தோம்.

இன்று முதல் இந்தப் புண்ணிய பூமியில் பல அதிசயங்கள் நடைபெறப் போகின்றன. உலகிலேயே பெரிய வல்லரசாக இந்தியா பரிணமிக்கப் போகிறது. அதன் பலனை இந்திய மக்கள் அனைவரும் அனுபவிப்பார்கள்.

தேனும் பாலும் இனி இந்திய ஆறுகளில் ஓடும். வறுமை என்பதே எங்கும் இருக்காது. ஒரு பெண் சகல ஆபரணாதிகளுடன் டில்லி தெருவில் இரவு பனிரெண்டு மணிக்கு தனியாக, பயமில்லாமல் நடமாடலாம். இந்தியா சொர்க்கபூமியாக மாறப்போகிறது. மகாத்மா காந்தி சொன்ன ராம  ராஜ்யம் வரப்போகிறது. எல்லோரும் அதற்குத் தயாராகுங்கள்.

இந்த விழாவிற்கு வந்துள்ள அனவரையும் இரு கரம் கூப்பி வருக, வருக என்று வரவேற்கிறேன்.

கைதட்டல் வானைப் பிளந்தது. பிறகு ஜனாதிபதி இரண்டு மணிநேரம் பேசினார். வேத காலத்தில் இந்தியாவிற்கும் தேவலோகத்திற்கும் இருந்த தொடர்பிலிருந்து ஆரம்பித்து, இருபத்தியோராம் ஆண்டுக்கு வருவதற்குள் எல்லோருக்கும் பசி வந்து விட்டது. நன்றி நவிலலை சுருக்கமாக கூறிவிட்டு கூட்டத்தை அவசரமாக முடித்து விட்டு எல்லோரும் சாப்பிடப் போனோம்.

சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்த பின் தேவலோக நடன மங்கையர் நால்வரின் நடனம் தொடங்கியது. எல்லோரும் வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் அந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


நடனம் முடிந்து இரவு உணவு அருந்தியபின் எல்லோரும் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுப் போனார்கள். இதற்கு முன்பாகவே நான் இந்திய பிரதம மந்திரியையும் நிதி அமைச்சரையும் பார்த்து மறுநாள் காலை பத்து மணிக்கு ஒரு முக்கிய மீட்டிங்க் வைத்திருக்கிறேன். நீங்கள் இருவரும் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள்.

தேவேந்திரன் ஊருக்குப் போய்விட்டான். நாங்கள் மூவரும் (நான், பொது, செக்கு) உறங்கச்சென்றோம்.

திங்கள், 18 மார்ச், 2013

ஒரு எச்சரிக்கை

கீழ் கண்ட செய்தி எனக்கு ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். மும்பய் போகிறவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்.

Dear All,

Airport Operation Control Centre of Mumbai International Airport Pvt Ltd has issued a security alert in the below mentioned mail. Please inform your network of friends.

  SECURITY ALERT :( Mumbai)

Information reaching Police formation indicates that: There is a syndicate of criminals selling beautiful key holders at Petrol Stations.  They sometimes parade themselves as sales promoters giving out free key holders. Please do not buy or accept these key holders no matter how beautiful they look.
The key holders have inbuilt tracking device chip which allows them to track you to your home or wherever your car is parked . The key holders are very beautiful to resist. Accepting same may endanger your life.

All are therefore requested to pass this message  to colleagues, family members and loved ones.  Be on guard.

Alert everyone in your family , friends , relatives.

Thanks & Regards
AIRPORT OPERATIONS CONTROL CENTRE

சனி, 16 மார்ச், 2013

திசை திருப்பப்படும் மாணவர்கள்

இந்தப் பதிவைப் படிப்பவர்கள், பின்னூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களையும் படிக்கவும். அவை பதிவை விட மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றன.


1965 ம் வருடம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. ஏறக்குறைய தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரிகளிலிருந்தும் திரளான மாணவர்கள் பங்கேற்ற போராட்டம் அது. பின்னணியாக இருந்து இந்தப் போராட்டத்தை வழி நடத்தியவர்கள் அரசியல்வாதிகள்.

அன்றைய முதல் அமைச்சர் நிலைமையைத் தவறாக கையாண்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்களில் ஓரிரண்டு பேரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் மாணவர்களல்ல. மாணவர்களின் பெயரில் சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் முக்கிய அங்கம் வகித்தார்கள்.

எது எப்படியோ, இந்தப் போராட்டத்தினாலும் அடுத்து ஓரிரண்டு ஆண்டுகளில் தொடர்ந்த இன்னொரு போராட்டத்தினாலும், அடுத்து வந்த தேர்தலில், அந்த முதலமைச்சரின் கட்சி படுதோல்வி அடைந்தது. அதுவரை தேர்தலையே சந்தித்திராத கட்சி ஆட்சிக்கு வந்தது. இது வரலாறு.

இந்த வரலாற்றின் மூலம் அரசியல் கட்சிகள் கற்றுக்கொண்டது என்னவென்றால் மாணவர்களை வைத்து நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே. மாணவர்களுக்கு இது புரியாது. அவர்கள் தூண்டுதலுக்கு அடிமையாவார்கள். மாணவர்களுக்குள் சரியான ஒருவனைப் பிடித்து அவனுக்கு பல ஆசைகளைக் காட்டி, அவன் மூலமாக போராட்டத்தை நடத்துவது என்பது அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை.

இலங்கைத் தமிழர் பிரச்சினை 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இதை எப்படி தீர்ப்பது என்று ஒருவருக்கும் தெளிவான கருத்து இல்லை. ஐ.நா. மனித உரிமைக் கமிஷனில் அமெரிக்கா ஏன் தீர்மானம் கொண்டு வருகிறது என்பதை மாணவர்களும் மக்களும் புரிந்து கொள்ளவேண்டும். அதை இந்தியா ஆதரிப்பதினால் ஈழத்தமிழர் பிரச்சினை தீர்ந்து விடுமா என்றும் யோசிக்கவேண்டும்.

அதை விட்டு விட்டு வேறு ஏதோ அரசியல் காரணங்களுக்காக இந்த மாணவர் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறார்கள். மாணவ சமுதாயத்தை இந்த மாயையிலிருந்து யார் காப்பாற்றுவார்களோ, தெரியவில்லை.

ஒரு முன்னாள் ஆசிரியன்.
__________________________________________________________________________

17-3-2013 பின் சேர்க்கை:


மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.


____________________________________________________________________________________________________


இதையும் படியுங்கள் அன்பர்களே:

http://vivasaayi.blogspot.in/2013/03/blog-post_18.html

திருடன், திருடன்

இன்று காலையிலிருந்து பல தளங்களைத் திறக்கும்போது இந்தப் படம் வந்து மிரட்டுகிறது.


நான் உபயோகிப்பது விண்டோஸ் 8 . இந்த செய்தி ஏன் வருகிறது என்று யாராவது சொல்லமுடியுமா?

வெள்ளி, 15 மார்ச், 2013

என்னைத் தோலுரித்த கதை


நான் போன நூற்றாண்டில் பிறந்தவன். ஆனாலும் அந்த நூற்றாண்டின் மவுசே தனி. சிறு வயதில் நான் இரண்டாம் உலக மகா யுத்தத்தை நேரில் பார்த்திருக்கிறேன்.

நாடு சுதந்திரம் வாங்கியதை தூக்கத்திலேயே பார்த்தவன் நான். ராத்திரி 12 மணிக்கு புத்தியுள்ளவன் எவனாவது விழித்திருப்பானா?

மகாத்மா காந்தியை கோட்சே சுட்டதை நேரில் பார்த்தவர்களை நேரில் பார்த்திருக்கிறேன்.

அப்படியே பல சம்பவங்கள். அதை விடுங்கள். இந்த சமயங்களில் எல்லாம் என்னுடன் ஒத்துழைத்த என் தோல் இருபத்தியோராம் ஆண்டு பிறந்து பனிரெண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு என்னுடன் வம்பு பண்ணுகிறது.

இரண்டு வருடம் முன்பு ஒரு வேலையாக (?) காரைக்கால் போயிருந்தேன். அனுபவஸ்தர்கள் என்ன வேலையென்று கேட்க மாட்டார்கள். அனுபவம் இல்லாதவர்களுக்கு அந்த வேலை என்னவென்று சொன்னால் புரியாது. ஆகவே அதை விட்டு விடுவோம்.

நான் அங்குள்ள விவசாயக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். சுற்றிலும் செடி கொடிகளுடன் கூடிய இயற்கைச் சூழ்நிலை. அங்கிருந்த கல்லூரியின் தலைவர் என்னுடைய பழைய மாணவர். அங்கு இருப்பவர்கள் எல்லோருக்கும் என்னை ஸ்பெஷலாக கவனித்துக் கொள்ளச் சொல்லி உத்திரவு போட்டுவிட்டார். எல்லோரும் நன்கு கவனித்துக்கொண்டார்கள். அங்கு குடியிருக்கும் ஒரு லட்சத்தி இருபதனாயிரத்து ஒரு கொசுக்கள் உட்பட.

இந்தக் கொசுக்கள் என்னைக் கவனித்துக் கொண்டதை நான் சரியாகக் கவனிக்கவில்லை. ஊருக்கு வந்து மறு நாள் குளிக்கும்போது உடல் முழுவதும் ஆங்காங்கே சிகப்பு சிகப்பாக ஆகியிருந்தது. என்னமோ ஏதோ என்று பயந்துபோய் டாக்டரிடம் போனேன். அவர் உடம்பைப் பார்த்துவிட்டு, எங்காவது வெளியூர் போயிருந்தீர்களா என்று கேட்டார். நான், ஆமாம், காரைக்கால் போயிருந்தேன் என்றேன்.

அந்த ஊர் கொசுக்கள் பிரபலமானவை. நீங்கள் பிரபலஸ்தர் ஆனதால் உங்களை ஸ்பெஷலாக கவனித்திருக்கின்றன. இந்த அலெர்ஜி ஆயின்ட்மென்டைப் போடுங்கள் சரியாகி விடும் என்றார். அப்படியே போட்டதில் ஒரு வாரத்தில் சரியாகிவிட்டது.

கொஞ்ச நாள் கழித்து திரும்பவும் அதே மாதிரி தடிப்புகள் வந்தன. இந்த முறை நான் வெளியூர் எங்கும் போகவில்லை. காரைக்கால் கொசுக்களுக்கு நாங்கள் இளைத்தவர்களா என்று கோயமுத்தூர் கொசுக்களுக்கு ரோஷம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். மறுபடியும் அதே மருந்தைத் தடவ தடிப்புகள் மறைந்தன.

இப்படியே நானும் இந்தக் கொசுக்களும் இரண்டு வருடம் கண்ணாமூச்சி விளையாடினோம். ஒரு மாதத்திற்கு முன் இந்த தடிப்புகளைப் பார்த்த என் மனைவி, என்னங்க, இது ஏதோ கொஞ்சம் சீரயஸான விஷயம் மாதிரி இருக்கிறது. ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் காட்டுங்களேன் என்றாள் நான் வழக்கம்போல் இது என்ன கொசு சமாச்சாரம், இதுக்கெல்லாம் ஸ்பெஷலிஸ்ட் எதுக்கு என்று இன்டர்நெட்டில் கொசுக்கடிக்கு என்ன வைத்தியம் என்று பார்த்தேன்.

அதில் சொல்லியிருந்த மருந்தை வாங்கி ஒரு மாதம் உபயோகித்தேன். அது நல்ல பலனைக் கொடுத்தது. எப்படியென்றால் தடிப்பு ஆங்காங்கே இருந்தது மாறி, நிறைய இடங்களில் வந்து விட்டது. அந்த இடங்களில் அரிப்பும் ஆரம்பித்துவிட்டது. இனி மேல் வேறு வழியில்லை என்ற நிலை வந்து விட்டது.

என் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போனோம். அந்த டாக்டர் என் பெண்ணுக்குத் தெரிந்த டாக்டர். என் உடம்பில் தடிப்பு உள்ள இடங்களை சுரண்டிப் பார்த்து விட்டு, இது கொசுக்கடி இல்லை என்றார். அப்பாடி என்று நான் பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள், இது ஒரு தோல் வியாதி, இதற்குப் பெயர் "சோரியாசிஸ்" என்று சொன்னார்.

இந்தப் பெயரை நான் முன்பு கேட்டிருக்கிறேன். எய்ட்ஸ் மாதிரி ஒரு வியாதி என்று என் கணிப்பு. ஐயோ, என் நிலை இப்படி ஆகவேண்டுமா என்று என் கற்பனைக் குதிரையில் ஏறி யமலோகம் வரை போய்விட்டேன்.

அப்போது அந்த டாக்டர், இது ஒரு சாதாரண தோல் வியாதிதான், ஒரு மாதத்தில் சரியாகிவிடும் என்றார்கள். அப்போதுதான் என் யமலோகம் போன உயிர் திரும்பி வந்தது.  தன்னுடைய பிரிஸ்கிரிப்ஷன் பேடை எடுத்து, (அது புல்ஸ்கேப் சைசில் இருந்தது) அது நிறைய மருந்துகள் எழுதிக்கொடுத்தார்கள். தினமும் அந்த தடிப்பு இருக்கும் இடங்களில் தோலை உரித்துவிட்டு, அதாவது நன்றாக கிளீன் செய்துவிட்டு அந்த இடங்களில், எழுதியுள்ள ஆயின்ட்மென்ட்டுகளை தடவி வருமாறு சொன்னார்கள்.

நான் டாக்டரிடம் போகும்போதே, என் சொத்துக்ளை பேங்கில் அடகு வைத்து பணம் வாங்கிக்கொண்டு போனது வசதியாகப் போனது. அந்தப் பணத்தில் மருந்துகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். இப்போது தினமும் என் தோலை உரித்துக் கொண்டிருக்கிறேன். உரித்துவிட்டு உப்பு தடவுவதற்குப் பதிலாக ஆயின்ட்மென்ட்டுகளைத் தடவிக்கொண்டு இருக்கிறேன்.

புதன், 13 மார்ச், 2013

6. பூலோகத்தில் தேவலோக தூதரகம்.

(இந்தத் தொடர் முற்றிலும் கற்பனையே. சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே.)

மறுநாள் எழுந்தவுடன் மந்த்ராலோசனை சபை கூடியது. சபை என்றால் நான், பொது மற்றும் செக்கு மட்டும்தான்.

பொது= நான் நேற்று சொன்ன மேட்டரைப் பற்றி சிந்தித்தீர்களா என்றான். பொது, அவசரப்படாமல் நாம் காய்களை நகர்த்தவேண்டும், அவசரப்பட்டால் மும்மூர்த்திகள் நம்மைக் காலி பண்ணிவிடுவார்கள். நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். கேளுங்கள்.

முதலில் நம் தேவலோகத்திற்கு இந்தியாவில் ஒரு தூதரகம் நிர்மாணிக்கவேண்டும். அது சட்டபூர்வமானதாக இருக்கவேண்டும். ஒரு ஐயாயிரம் ஏக்கரில் அந்த தூதரகம் கட்டப்படவேண்டும். சுற்றிலும் உயரமான மதிற்சுவர்களும், நல்ல பாதுகாப்பான வாயிற்கதவுகளும் அமைக்கவேண்டும். இந்திய ஜனாதிபதியையும் தேவேந்திரனையும் சேர்த்து அதற்கு திறப்பு விழா நடத்துவோம்.

இந்தியாவில் இதற்கு முன்பு இப்படியொரு விழா நடக்கவில்லை என்கிற மாதிரி அந்த விழா இருக்கவேண்டும். பொது, நீ முதலில் சென்று இதற்கான சட்டபூர்வமான அனுமதிகளைப் பெற்று வா. செலவைப்பற்றிக் கவலைப்படாதே. எவ்வளவு செலவு ஆனாலும் எப்படியோ காரியத்தை முடித்து வா என்றேன்.

நம் தேவலோக பேங்கில் இப்போது இந்திய கரன்சி இருக்காது. ஆகவே நீ 24 கேரட் தங்க பார்களாக கொண்டுபோய் அங்கே மாற்றிக்கொள். சீக்கிரம் புறப்படு என்றேன்.

அவன் ஒரு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றான். நான் மயனைக் கூப்பிட்டு நம் தேவலோகத்திற்கு நல்ல நான்கு சக்கர வாகனங்களும் விமானங்களும் வேண்டுமே. சீக்கிரம் நாம் பூலோகத்திற்கு விமான சர்வீஸ் ஆரம்பிக்கவேண்டும்.

நீங்கள் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஏர்பஸ் கம்பெனியில் ஒரு ஆயிரம் ஏர்பஸ் 380 ரக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு உடனடியாக அனுப்பச்சொல்லுங்கள். விமானம் ஓட்ட நம் ஆட்களுக்குப் பயிற்சி கொடுக்க நல்ல பயிற்சியாளர்களை ஒரு வருட கான்ட்ராக்டில் கூட்டி வாருங்கள். இந்தியாவில் "கிங்பிஷர்" என்ற ஏரோப்பிளேன் கம்பெனி போண்டியாகிவிட்டதால் அதன் ஆட்கள் எல்லோரும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மொத்தமாக நம் ஏரோப்பிளேன் கம்பெனிக்கு கூட்டி வந்துவிடுங்கள்.


அப்படியே பக்கத்திலுள்ள ஜெர்மனி நாட்டிற்குப் போய் பிஎம்டபிள்யூ வகைக் கார்கள் ஓரு லட்சம் கார்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வாருங்கள். இரண்டு கம்பெனிக்கும் கேஷ் தங்கமாக கொடுத்துவிடுங்கள். நீங்கள் ஒரு ஹெலிகாப்டரில் உடனடியாகப் புறப்படுங்கள் என்று உத்திரவு போட்டேன்.


குபேரனைக் கூப்பிட்டு, இதோ பாரும், குபேரா, நாம் அடுத்த நாடுகளுடன் வியாபாரம் செய்ய தங்கத்தையே நம்பியிருக்கக்கூடாது. பூலோகத்தில் புழங்கும் சில நாடுகளின் நோட்டுக்கள் நம்மிடம் இருக்கவேண்டும். அமெரிக்க டாலர்,  ஐரோப்பிய யூரோ, இந்த இரண்டும் இப்போதைக்குப் போதும். நீங்கள் போய் இந்த இரண்டு நாடுகளின் பேங்குகளுடன் பேசி, அவர்களுக்குப் போதுமான தங்கத்தைக் கொடுத்து அந்த கரன்சிகளை வாங்கி வாருங்கள்.

அத்துடன் ஸ்விஸ் வங்கிக்குப் போய் இந்தியர்கள் அங்கு கருப்புப் பணமாக வைத்திருக்கும் அனைத்து ரூபாய்களையும் வாங்கி வந்து விடுங்கள். அவர்கள் சட்டம், விட்டம் என்று பேசுவார்கள். அதைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களை அப்படியே நிற்கப் பண்ணிவிட்டு இந்திய ரூபாய்கள் அனைத்தையும் கொண்டு வந்து விடுங்கள், என்றேன்.

அரை மணி நேரத்தில் குபேரன் வந்து விட்டான். பிரபோ, ஸ்விஸ் நாட்டுக்கு இன்னொரு முறை நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்றான். ஏன் என்று கேட்டதற்கு, இந்திய ரூபாய்கள் அனைத்தையும் நான் போன ஹெலிகாப்டரில் ஏற்ற முடியவில்லை, அதனால்  நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கொண்டு போனால்தான் சரியாக இருக்கும் என்றான். அப்படியே போய்விட்டு வா என்றேன். போய்விட்டு  அரை மணி நேரத்தில் வந்து விட்டான். ஸ்விஸ் பேங்கில் எத்தனை இந்திய ரூபாய் இருந்தது என்றேன். அவன் சுமார் ஐம்பதாயிரம் லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றான். சரி, எல்லாவற்றையும் லாக்கரில் வையுங்கள் என்றேன்.


அடுத்து சில நிமிடங்களில் மயன் வந்து விட்டான். பிரபோ, நீங்கள் சொன்னபடி ஏர் பஸ்களும், கார்களும் வந்து விட்டன, அவைகளை எங்கே நிறுத்துவது என்றான். தேவலோகத்துக்கு வெளியே இதற்குப் போதுமான ஷெட்கள் கட்டி அங்கே நிறுத்துங்கள் என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் அந்த வேலையை முடித்து விட்டு மயன் வந்து விட்டான்.

மயன், இந்த ஏர்பஸ்களையும் கார்களையும் ஓட்டுவதற்கு வேண்டிய ஆட்களை சித்திரகுப்தனிடம் சொல்லி வாங்கிக்கொள். அவர்களைப் பழக்கத் தேவையானவர்களை பூலோகத்திலுருந்து டெபுடேஷனில் வரவழைத்துக்கொள். பிரஹஸ்பதி சும்மாதானே இருக்கிறார். அவரை இந்த ஓட்டுநர் பயிற்சியைப் பார்த்துக்கொள்ளட்டும். பிறகு அவரே இந்த வாகனங்களுக்கெல்லாம் பொறுப்பாக இருந்து கொண்டு அவைகளை நிர்வகிக்கட்டும்.

மாலை ஆகிவிட்டது. எங்கே இந்தியாவிற்குப் போன பொதுவைக் காணோமே என்று நினைத்தபோது அவன் வந்து விட்டான். அவன் வாயெல்லாம் பல். தலைவா, வெற்றி, வெற்றி என்று கூவிக்கொண்டே வந்தான்.

அவனை உட்காரவைத்து ஆசுவாசப்படுத்திய பிறகு, விவரங்கள் கேட்டேன். எல்லாம் நான் எதிர் பார்த்தபடியேதான் நடந்திருக்கிறது. இவன் நேராக பிரதம மந்திரியின் ஆபீசுக்குப் போயிருக்கிறான். அங்கு இவனுக்குத் தெரிந்த ஒரு எம்.பி. இருந்திருக்கிறார். அவர் கொஞ்சம் பெரிய புள்ளி. இவன் விவரம் சொன்னவுடனே, இருவரும் நேராக பிரதம மந்திரியின் ரூமுக்குப் போயிருக்கிறார்கள். விவரம் சொன்னவுடன், அவர் எல்லாம் பேசிவிட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். பேசிவிட்டேன், நீங்கள் ஒரு பிகர் சென்னால்போதும் என்றார். உடனே அவர் போனில் அவருடைய செக்ரட்டரியைக் கூப்பிட்டு இவர்கள் மேட்டரை முடித்துக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அந்த செக்ரட்டரி ரூமுக்குப் போனவுடன் ஐட்டம் எங்கே என்று கேட்டிருக்கிறார். எம்.பி. எவ்வளவு என்று கேட்க அவர் பத்தாயிரம் (கோடி) என்று சொல்லியிருக்கிறார். அவர் பொதுவைப் பார்க்க, பொது இதோ என்று பத்து சூட்கேசைக் கொடுத்திருக்கிறார். அடுத்த அரை மணி நேரத்தில் தேவலோக தூதரகத்திற்காக தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலமும் அதற்குண்டான நடைமுறை உத்திரவுகளும் கையெழுத்தாகிவிட்டன. நம்முடைய தூதரகத்திற்கு தனிப்பட்ட முறையில் Special Diplomatic Immunity கொடுத்திருக்கிறார்கள். இந்திய ஜனாதிபதியும், பிரதம மந்திரியையும் தவிர்த்து வேறு யாரும் நம் தூதரக நடவடிக்கைகளில் தலையிடமுடியாது. தவிர, தேவலோகத்தில் இந்தியாவிற்கும் ஒரு தூதரகம் வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்போதுதான் இரு வழிப் போக்குவரத்திற்கு ஏதுவாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்படியா, அதுவும் நியாயம்தான், அப்படியே செய்து விடுவோம் என்றேன்.

நிலம் தமிழ்நாட்டில் எங்கே கொடுத்திருக்கிறார்கள் என்றேன். நீலகிரி மலை அடிவாரத்தில் பவானி ஆற்றை அடுத்து கொடுத்திருக்கிறார்கள் என்றார். தமிழ்நாட்டில் யாராவது இதற்கு ஏதேனும் சங்கடங்கள் கொடுப்பார்களோ என்றேன். என் நண்பர் எம்.பி. இதை அங்கேயே சுட்டிக் காட்டினார்.  நாங்கள் நேராக தமிழ்நாடு சென்று அங்கிருந்து ஏதும் தடங்கல்கள் வராதபடி ஏற்பாடு பண்ணிவிட்டோம் என்றார்.

பிறகு ஏன் நீ வருவதற்கு  இவ்வளவு லேட் என்றேன். அது இந்த ஆர்டரை எல்லாம் காப்பி எடுக்க ஜீராக்ஸ் மிஷினுக்கு கரன்ட் இல்லை. கரன்ட் வந்தவுடன் காப்பி எடுத்துக்கொண்டு வர நேரம் ஆகிவிட்டது என்றார்.

நல்ல வேலை செய்தீர். இப்போது எல்லோரும் ஓய்வெடுப்போம். மற்ற வேலைகளை நாளை பார்ப்போம் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனோம்.

திங்கள், 11 மார்ச், 2013

5. தேவலோகத்தில் பேங்க் உதயம்.

மறு நாள் விடிந்ததும் நாரதர் பேப்பரும் கையுமாக வந்தார். அவர் வாயெல்லாம் பல்.

மந்திரி பிரபோ, தேவலோகம்  முழுவதும் நேற்று இரவு எங்கும்  ஒரே ஆட்டபாட்டம்தான். தேவர்களின் உற்சாகம் கரை புரண்டோடுகிறது, என்றார். நல்லது, கேட்க சந்தோஷமாக இருக்கிறது. இதற்காகத்தானே மும்மூர்த்திகள் என்னை இங்கு வரச்சொன்னார்கள். இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன், பார்த்துக்கொண்டிருங்கள் என்றேன். நாரதர் சரி என்றார்.

அப்புறம் நாரதரே, மகாபாரதத்தில் யுத்தம் ஆரம்பிக்கு முன்பாக தருமர் இங்கு யாரிடமோ கடன் வாங்க வந்தாராமே, அது யார் என்றேன். அதுங்களா, இங்கே குபேரன் என்று ஒருவன் அம்பாரம் அம்பாரமாக வைரம், வைடூர்யம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவைகளை வைத்துக்கொண்டு இருக்கிறான், என்றார். அவனைக்கூப்பிடுங்கள் என்றேன்.

சிறிது நேரத்தில் அவன் வந்தான். வந்து மந்திரி பிரபோ வணக்கம், என்றான். வாரும் குபேரா, நீ அந்த இலங்கை ராவணனின் தம்பியல்லவோ என்றேன். அவன் கொஞ்சம் அசந்து விட்டான். பிரபுவிற்கு என்னுடைய குலம் கோத்திரம் எல்லாம் அத்துபடி போலிருக்கிறது என்றான். நான் எல்லாம் அறிவேன், இப்படி உட்கார் என்றேன்.

நீ வைத்திருக்கும் செல்வங்களையெல்லாம் என்ன செய்கிறாய் என்றேன். ஒன்றும் செய்வதில்லை என்றான். அப்படியா, அப்படி செல்வ லக்ஷ்மியை சும்மா வைத்திருக்கலாமோ, அது அபச்சாரமல்லவா? நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே செய்யலாம் என்றான்.

அப்படியானால் இங்கு ஒரு தேவலோக பேங்க் ஆரம்பிக்கலாம், மயனைக்கூப்பிடுங்கள் என்றேன். மயன் வந்தான். மயா. இங்கு ஒரு பேங்க் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு தேவ்லோக் பேங்க் என்று பெயர். ஸ்விட்சர்லாந்து என்று ஒரு நாடு பூலோகத்தில் இருக்கிறது. அங்குதான் உலகின் மிகப்பெரிய பேங்க் இருக்கிறது. நீயும் குபேரனும் அங்கு போய் அந்த பேங்க்கின் கட்டிடங்கள், பணம் வைக்கும் அறைகள் மற்றும் அதன் நடைமுறைகளைத் தெரிந்து வாருங்கள் என்றேன்.

ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விட்டார்கள். எல்லாம் பார்த்து விட்டோம் என்றார்கள். மயனே, அந்த மாதிரி இங்கு இன்னும் அலங்காரமாகவும், குபேரனின் செல்வங்கள் அனைத்தும் வைக்கும்படியாகவும் ஒரு பேங்க் கட்டுங்கள் என்றேன். உடனே தயாராகிவிட்டது.


குபேரா, இந்த பேங்கிற்கு நான் பிரசிடென்ட், நீதான் தலைமைக் கேஷியர், பொதுவும் செக்கும் டைரக்டர்கள். உனக்கு உதவிக்கு வேண்டிய ஆட்களை யமனிடமிருந்து வாங்கிக்கொள். இன்று மாலை திறப்பு விழா வைத்துக்கொள்ளலாம். இந்திரனுக்கு சமீபத்தில் ஒரு வேலையும் கொடுக்கவில்லை. அவனை வைத்து திறப்பு விழா நடத்துவோம். மும்மூர்த்திகளையும் விழாவிற்கு அழைத்துவிடுங்கள் என்றேன்.

மாலை நான்கு மணிக்கு "தேவலோக் பேங்க்" ஐ இந்திரன் ரிப்பன் வெட்டி திறந்தார். பேங்கிற்குள் இருக்கும் வசதிகளைப் பார்த்து மும்மூர்த்திகளும் அசந்து போய் விட்டனர். எல்லோரும் என்னை வாழ்த்த எனக்கு மிகவும் கூச்சமாகப் போய்விட்டது.


பிறகு விருந்துபசாரம் அரம்பித்தது. மேனகை, திலோத்தமை நடனத்துடன் ஆரம்பித்தோம். நளனும் பீமனும் தங்கள் திறமைகளை எல்லாம் காட்டி பலவித உணவு ஐட்டங்களை தயாரித்திருந்தார்கள். எல்லோரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு அவரவர் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

நாங்களும் தூங்கச்சென்றோம்.

அடுத்த பதிவு - 6. பூலோகத்தில் தேவலோக தூதரகம்.

ஞாயிறு, 10 மார்ச், 2013

பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை கூடாது

கொஞ்ச நாளாக என்னுடைய கற்பனை ஜெட் வேகத்தில் வேலை செய்கிறது. அதனுடைய தாக்கம்தான் இந்தப் பதிவு.


சமீப காலமாக பாலியல் வன்முறைகள் பெருகிக்கொண்டு இருக்கின்றன. காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. சமூக ஆர்வலர்களும் பெண்ணியல் முன்னேற்றவாதிகளும் இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று பலரும் சொல்லிக்கொண்டு வருகின்றனர். அது தவறு. என்னுடைய கருத்து என்னவென்றால் அப்படி தூக்குத் தண்டனை கொடுத்தால், அது எப்படி அந்த குறிப்பிட்ட பெண் அனுபவித்த வேதனைக்கு ஈடாகும்?

சமீபத்தில் நான் தேவலோகம் போயிருந்தபோது அப்படியே யமனையும் ஒரு வேலையாகப் பார்க்கப் போயிருந்தேன். அவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது சார், நரகத்தைப் பார்க்கறீர்களா என்று கேட்டான். சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டு அதைப் பாக்கி வைப்பானேன் என்று போனேன்.

அங்கு பலவிதமான தண்டனைகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவைகளில் எனக்குப் பிடித்த இரண்டு தண்டனைகளைப் பற்றி மட்டும் சொல்லுகிறேன்.

எண்ணைக் கொப்பறை:

பெரிய பெரிய கொப்பறைகளில் நிறைய எண்ணை ஊற்றி கொதிக்கவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று ஒருவனை நான்கு ஆட்கள் தூக்கிக்கொண்டு வந்து அதற்குள் அவனைப் போடுகிறார்கள். அந்த ஆள் படும் பாட்டை எழுத்தால் விவரிக்கமுடியாது. கொஞ்ச நேரத்தில் அவன் வெந்து போகிறான். அவனை. தப்பு, அந்தக் கரிக்கட்டையை வெளியில் எடுக்கிறார்கள். அவனுக்குப் பழைய உடம்பு வந்து விடுகிறது. மறுபடியும் அவனை அந்தக் கொப்பறையில் போடுகிறார்கள்.

இப்படியே அவனை நாள் முழுவதும் செய்கிறார்கள்.

அடுத்தபடியாக நான் பார்த்தது.

தோலுரித்து உப்புக் கண்டம் போடுவது:

தண்டனைக்குரிய ஆளை கைகால்களைக் கட்டி ஒரு மேஜை மேல் படுக்கவைக்கிறார்கள். நல்ல எக்ஸ்பர்ட் அறுவை மன்னர்கள் அவனுடைய தோலை மட்டும் உரித்து விடுகிறார்கள். பிறகு நல்ல நைஸ் உப்பை அவன் உடல் மேல் தடவுகிறார்கள். அப்படியே மேஜையுடன் தூக்கிக்கொண்டு போய் நல்ல வெயிலில் வைத்து விடுகிறார்கள். மாலை வரைக்கும் அவன் அப்படியே கிடக்கிறான். அவன் போட்ட சப்தம் பூலோகம் வரை கூட கேட்டிருக்கும்.

மாலையில் அவனை அவிழ்த்து விட்டால் பழையபடி ஆகிவிடுகிறான். மறுநாளும் இதே மாதிரி செய்வார்களாம்.

நான் பார்த்த வரையில் இந்த இரண்டு தண்டனைகளும் என் மனதிற்குப் பிடித்தன.

என்னுடைய கருத்து. ஏன் இந்த தண்டனைகளை நம் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கக் கூடாது?

சனி, 9 மார்ச், 2013

ஒரு விளம்பரம்

விளம்பரம்

ஒரு புதிய விமான சர்வீஸ்


தமிழ்நாட்டிலிருந்து தேவலோகத்திலுள்ள இந்திரபுரிக்கு விமான சர்வீஸ் தொடங்கவுள்ளோம்.  கட்டணம் ஒரு கோடி ரூபாய் மட்டுமே. போக விருப்பமுள்ளவர்கள் முன் பதிவு செய்துகொள்ளவும்.

எமது புது விமான சர்வீசுக்கு அனுபவமுள்ள பைலட்டுகள், கோ-பைலட்டுகள், விமான பணிப்பெண்கள், மற்றும் கிரவுண்ட் ஸ்டாப் தேவைப்படுகிறார்கள். வேலைக்கு அணுகவும். நின்று போன விமான சர்வீஸ்களிலிருந்து வருபவர்கள் முறையான டிஸ்சார்ஜ் சர்டிபிகேட்டுடன் வரவும்.



டிஸ்கி: இது ஒரு கற்பனை விளம்பரம். உண்மை என்று ஏமாந்து போனால் கம்பெனி பொறுப்பேற்காது.

வெள்ளி, 8 மார்ச், 2013

4. புரட்சிகரமான மாற்றங்கள்


சரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.

இளைப்பாறிவிட்டு எல்லோரும் ஆபீசில் கூடினோம். சித்திரகுப்தன் எல்லா தேவர்களையும் குடியிருப்பில் இருத்திவிட்டு எல்லோருக்கும் அடையாள அட்டை கொடுத்தாயிற்று என்றான். நல்லது உட்கார் என்று சொல்லிவிட்டு மந்திராலோசனையை ஆரம்பித்தேன்.

பகல்-இரவு தோற்றுவித்தல் - நாரதரிடம் கேட்டேன். இங்கு ஏன் எப்பொழுதும் பகலாகவே இருக்கிறது. இரவு ஏன் இல்லை?

அவர் சொன்னார், பல கோடி காலமாக இப்படியேதான் இருக்கிறது. யாரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.

நான் இதை எப்படி மாற்றுவது? பூலோகம் மாதிரி 12 மணி நேரம் பகலாகவும் 12 மணி நேரம் இரவாகவும் மாற்றவேண்டுமே என்றேன்.

நாரதர் அதற்கென்ன, அப்படியே செய்து விடலாம். நான் சூரியனைக் கூப்பிடுகிறேன். நீங்கள் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் என்றார்.

சூரியன் வந்தார். நாரதர் அவரிடம் விஷயத்தைச் சொன்னார். சூரியன் இந்திரனிடம் கேட்கவேண்டுமே என்றார். நாரதர் சொன்னார், சூரியரே, இப்போது இங்கு இவர்தான் சகல காரிய அதிகாரஸ்தர். இந்திரன் வேலைகளையெல்லாம் இவர்தான் பார்க்கிறார், ஆகையால் நீ இவருடைய ஆணையை ஏற்றுக்கொள்ளலாம் என்றார். சூரியனும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தேவர்களை தூங்குவித்தல் - நாரதரே, இந்தத் தேவர்களை இரவில் தூங்க வைக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன். பிரபோ, அவர்கள் கண் இமைப்பதில்லையாதலால் அவர்கள் தூங்க முடியவில்லை என்றார்.

அப்படியா, சங்கதி, இந்த நொடி முதல் எல்லாத் தேவர்களுக்கும் இமைகள் இமைக்கட்டும். அப்படியே அவர்கள் பேய் மாதிரி மிதக்காமல் அவரவர்கள் கால்களினால் நடக்கட்டும் என்றேன். இந்த விஷயங்களை விவரமாக தேவதந்தியில் போட்டு விடுங்கள் என்றேன்.

தேவலோகத்தில் நடைமுறை பாஷை - இனிமேல் தேவலோகத்தில் தமிழ்தான் நடைமுறை பாஷையாக இருக்கும். அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும் தமிழிலேயே நடக்கும். திருவள்ளுவர், தொல்காப்பியர், பரிமேலழகர் ஆகியோர் உடனடியாக அனைத்து தேவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கவேண்டும்.

தேவர்களுக்கு பசி தாகம் உண்டாக்குதல் - நாரதரே, நீங்கள் எல்லாம் உணவின் ருசியை அறியாமலிருப்பதால்தான் உங்களுக்கு வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை. ஆகையால் நாளை காலையிலிருந்து உங்கள் அனைவருக்கும் பசி, தாகம் உண்டாகட்டும். அவர்கள் தாங்களாகவே சமையல் செய்யக் கற்றுக்கொள்ளும் வரை காமதேனு அவர்களுக்கு உணவு சப்ளை செய்யட்டும்.

நளன், பீமன் இருவரும் இங்குதானே இருக்கிறார்கள் என்றேன். நாரதர் அவர்களை உடனே வரவழைத்தார். என்ன, நள பீமர்களே, நலமா? என்றேன். அவர்கள் என்ன ஊருங்க இது, ஒரு வேலை வெட்டி இல்லை, சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை, மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார்கள்.

உங்கள் கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு தீர்ந்து விட்டன. இனி தேவர்களுக்கு பசி, தாகம் உண்டாகும். அவர்களுக்கு சமையல் கலையை நீங்கள் இருவரும் கற்றுக்கொடுக்கவேண்டும். உடனே ஆரம்பியுங்கள் என்றேன். அவர்களை மிகுந்த சந்தோஷத்துடன் போய்விட்டார்கள்.

கற்பகதருவைக் கூப்பிட்டு அனைத்து தேவர்களுக்கும் ஒரு வருடத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணை வகையறாக்களை உடனே சப்ளை செய்யவும் என்றேன். அதுவும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது.

நாரதரே, ஒரு வருடத்திற்கான உணவு ஏற்பாடுகளைச் செய்தாய் விட்டது. அடுத்த வருடத்திலிருந்து தேவர்கள் அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். அதற்கான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன்.

இது கொஞ்சம் கடினமான வேலை, பிரபோ. தேவர்கள் இதுநாள் வரை உடம்பை வருத்தி எந்த வேலையையும் செய்து பழகியவர்களல்ல. தவிர, அவர்கள் ஆளும் வர்க்கமாகவே இருந்து விட்டதால் அவர்கள் விவசாய வேலை செய்ய பிரயோஜனப்பட மாட்டார்கள். நமது சித்திரகுப்தனைக் கேட்டால் இந்த வேலைக்குத் தகுந்த ஆட்களை அடையாளம் காட்டுவார் என்றார்.

சித்திரகுப்தா, இதற்கு என்ன வழி என்றேன். பிரபோ, இதற்கு நல்ல வழி இருக்கிறது. யமலோகத்தில் பலர் அவர்கள் தண்டனை காலம் முடிந்து சும்மா இருக்கிறார்கள். அவர்கள் எந்த கடின வேலையையும் செய்து பழகியவர்கள். அவர்களை தேவலோகத்தில் விவசாயம் செய்ய கூப்பிட்டுக்கொள்ளலாம் என்றான். அப்படியே ஆகட்டும் என்றேன்.

இப்டியாக தேவர்களின் இருப்பிடம், உணவு ஏற்பாடுகள் முடிந்தன.

தேவலோகத்தில் மின்சாரம், சமையல் எரிவாயு, குடிதண்ணீர் ஆகி வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்யும்படி மயனுக்கு உத்திரவு போட்டேன். அவனும் அதை செய்து முடித்தான்.

எல்லோரையும் அவரவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் மூவரும் விடுதிக்குத் திரும்பினோம். அப்போது பொது, தலைவா, நாம் இப்படித் தேவர்களுக்கே பாடுபட்டுக் கொண்டிருந்தால், நம் பிள்ளை குட்டிகளின் கதி என்ன ஆவது? என்றான். நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தினாய், நானும் இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு யோசனை இருக்கிறது.

அதாவது இங்கு ஏகப்பட்ட இடம் காலியாக இருக்கிறது. இந்தத் தேவர்களோ ஒரே எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதனால் இந்த உபரியாக இருக்கும் இடத்தையெல்லாம் பிளாட் போட்டு விற்கலாமா என்று ஒரு ஐடியா மனதில் இருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் இரவு யோசித்து காலையில் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனேன்.

புதன், 6 மார்ச், 2013

மருந்து சாப்பிடுவது எப்படி?


பெயரில்லா4 மார்ச், 2013 4:36 PM
எனக்கு ஒரு சந்தேகம். ஆங்கில மருத்துவம் படித்த டாக்டர்களால் ஏற்பட்டது. மருந்து எழுதிகொடுக்கும்போது சா.பி. / சா. மு. என்று சரியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள். கேள்வி கேட்க பயந்து கொண்டு மருந்து கடையில் கேட்க வேண்டியதாய் இருக்கிறது. அது எந்த அளவு சரியாக இருக்கும் என்று ஒரு பயத்திலேயே சாப்பிட வேண்டியிருக்கிறது. சா.பி. மாத்திரையை ஆகாரம் சாப்பிடுமுன் சாப்பிட்டாலோ சா. மு. மாத்திரையை ஆகாரம் சாப்பிட்ட பின் சாப்பிட்டாலோ பலன் இல்லை என்கிறார்கள்.

ஆராய்ச்சி டாக்டரான நீங்கள் இதற்கு ஒரு வழி சொல்ல முடியுமா? மருந்தி பெயரை வைத்தோ அல்லது அதன் மூலக்கூறுகளை வைத்தோ சா.பி. / சா. மு என்று கண்டு பிடிக்க முடியுமா? அதை உங்களுக்கே உரித்தான கொங்கு தமிழில் நகைச்சுவையுடன் சொன்னால் நாங்கள் உங்களை PhD டாக்டர் என்ற நிலையில் இருந்து MBBSடாக்டர் என்ற நிலைக்கு உயர்த்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளோம். எனவே நடுவில் கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது இதைப்பற்றியும் பதியுங்களேன் ஐயா

மருந்து சாப்பிடுவது என்ன பெரிய இந்திரஜால வித்தையா? மருந்தை வாயில் ஊற்றினால் வயிற்றுக்குப்போகிறது, இதற்கு ஒரு பதிவா? என்று கேட்பவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

பெயரில்லாவின் பின்னூட்டத்தில் மருந்து சாப்பிடுவது சாப்பாட்டிற்கு முன்பா அல்லது பின்பா என்பதைப்பற்றி ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார்.

இதைப் பற்றிய ஒரு நகைச்சுவைக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒருவர் தன்னுடைய வெய்ட்டைக் குறைக்க டாக்டரிடம் போனார். அவர் இனிமேல் நீங்கள் இரவில் ஒரு டம்ளர் பாலும் ஒரு பழமும் மட்டும் சாப்பிடுங்கள் என்றார். இவர், டாக்டர், இதை சாப்பாட்டுக்கு முந்தி சாப்பிடவா அல்லது சாப்பாட்டிற்குப் பிந்தியா? என்று கேட்டார். டாக்டர் என்ன சொல்ல முடியும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

நோயாளிகள் டாக்டரைப் பார்க்கப்போகும்போது அவர்களுக்குப் பதட்டம், டாக்டருக்கோ நேரமின்மை. இதனால் பல சமயங்களில் மருந்து சாப்பிடும் முறை பற்றிய விவரங்களைப் பற்றி தெளிவாக டாக்டரிடம் கேட்க முடிவதில்லை. மருந்துக் கடைகளில் உள்ள பார்மசிஸ்ட்டுக்கு இந்த விவரங்கள் ஓரளவு தெரியும். ஆனால் மருந்துக் கடைகளில் பார்மசிஸ்ட் பெயருக்குத்தான் உண்டே தவிர, அவர் பெரும்பாலும் இருக்கமாட்டார்.

இந்த நிலையில் என்ன செய்வது? நோயாளியும் ஓரளவு விழிப்புடன் இருந்தால்தான் இன்றைய உலகில் வாழமுடியும்.

ஏன் சில மருந்துகளை சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடவேண்டும், ஏன் சில மருத்துகளை சாப்பாட்டுடனோ அல்லது சாப்பிட்ட பிறகோ சாப்பிடவேண்டும்?

உங்களுக்கு வயிற்று வலி என்று வைத்துக்கொள்வோம். இது வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதினால் வருவது. சாப்பட்டவுடன் வலி அதிகமாகிறது. அப்போது இந்த அமிலத்தைச் சமன்படுத்தக் கொடுக்கும் மருந்தை சாப்பாட்டிற்கு அரை மணி முன்பு சாப்பிடவேண்டும். அப்போதுதான் வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலம் சமன்படுத்தப்பட்டு நீங்கள் சாப்பிடும்போது வலி இருக்காது. இந்த மருந்தை சாப்பிட்டபின் சாப்பிட்டால் பலன் இருக்காது.

அதேபோல் சர்க்கரைக்காக சாப்பிடும் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னால் சாப்பிடவேண்டும். அப்போதுதான் அந்த மருந்து இன்சலினை அதிகமாக சுரக்கவைத்து நீங்கள் சாப்பிட்டவுடன் உண்டாகும் சர்க்கரையை சமன்படுத்த உதவும். ஆனால் இன்சுலின் ஊசி போடுபவர்கள் சாப்பிட்ட பின்புதான் போடவேண்டும். இன்சுலின் உடனடியாக வேலை செய்யக்கூடியது. இரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையை சமன்படுத்த இது உதவும். இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை இல்லாத சமயத்தில் இந்த ஊசியைப் போட்டால் சரக்கரையின் அளவு ரத்தத்தில் குறைந்து மயக்கம் வரக்கூடும்.

சில மருந்துகள் வயிற்றில் எரிச்சலை உண்டு பண்ணும். பெரும்பாலான வலி நிவாரணிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. அவைகளை வயிற்றில் உணவு இருக்கும்போதுதான் சாப்பிடவேண்டும். அப்போதுதான் வயிற்றெரிச்சல் உண்டாகாது. ( அடுத்தவன் நன்றாக வாழ்வதைப் பார்த்து வரும் வயிற்றெரிச்சல் வேறு. அது எப்போதும் இருந்து கொண்டேதான்  இருக்கும்.அதை மாற்ற மருந்து இல்லை)

பொதுவாக மருந்துகளை சாப்பிட்டபிறகு எடுத்துக்கொண்டால் அவை இரத்த்துடன் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலான மருந்துகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். ஆகவே டாக்டர்கள் உணவிற்கு முன்னால் சாப்பிடுங்கள் என்று ஸ்பெஷலாகச் சொல்லாத வரை அவைகளை சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடுவதுதான் நல்லது.

நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிடவேண்டிய மருந்துகளை ஒரு முறைக்கு இருமுறை டாக்டரிட்ம் எப்போது, எப்படி சாப்பிடவேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். சில மாத்திரைகளை வாயில் நன்றாக மென்று சாப்பிடவேண்டும். அவைகளை அப்படியே விழுங்கினால் பலன் இருக்காது.

அனைத்து மருந்துகளுடனும் மருந்துக் கம்பெனியின் அச்சடித்த குறிப்பு ஒன்று இருக்கும். அதில் மருந்தின் தன்மை, எப்படி சாப்பிடவேண்டும், பக்க விளைவுகள் ஏதாகிலும் உண்டா என்கிற விபரங்கள் இருக்கும். அந்தக் குறிப்பை நன்கு படித்து அதன்படி மருந்தைச் சாப்பிடவேண்டும்.

சில ஒவ்வாமை நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் லேசானது முதல் நல்ல தூக்கம் வரை உண்டு பண்ணக்கூடியவை. அவைகளைப் பொதுவாக இரவில்தான் சாப்பிடச் சொல்லுவார்கள். இருந்தாலும் மறுநாள் பகலிலும் அதன் தாக்கம் இருக்கும். அப்படிப்பட்ட மருந்துகளைச் சாப்பிடுபவர்கள் வாகனம் ஓட்டவோ, கனரக இயந்தரங்களில் வேலை செய்வதோ கூடாது. விபத்துகள் நேரிடலாம்.

எந்த மருந்தானாலும் டாக்டர்கள் குறிப்பிடும் நாட்களுக்குச் சாப்பிடவேண்டும். நோயின் அறிகுறிகள் ஓரளவு மறைந்தவுடனேயே மருந்தை நிறுத்தி விடுவதுதான் நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். மருந்து வாங்கும்போதே, டாக்டர் பத்து நாளைக்கு எழுதியிருந்தால், இரண்டு நாளைக்குக் கொடுங்கள் என்று வாங்குபவர்கள் அநேகம்.

டாக்டர் சொல்லும் நாட்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும். அப்போதுதான் அந்த நோய் முழுவதுமாகக் குணமாகும். ஆனால் சில டாக்டர்கள் தாங்களாகவே மருந்துக்கடை வைத்துக்கொண்டு அதன் முலம் காசு பார்ப்பதும் உண்டு. அத்தகைய டாக்டர்களிடம் போகாமல் இருப்பது உத்தமம்.

மருந்து சாப்படும்போது, இந்த மருந்து நம் நோயைக் குணப்படுத்தும் என்ற நம்புக்கையுடன் சாப்பிடவேண்டும். என்னமோ டாக்டர் கொடுத்திருக்கார், அல்லது மகன் வாங்கிக் கொடுத்திருக்கான், என்று கடனுக்காகச் சிப்பிட்டால் வியாதி குணமாக காலம் செல்லும்.

மருந்துகள் சாப்பிடவேண்டிய சூழ்நிலை வராமல் காத்துக்கொள்வது உத்தமம்.

திங்கள், 4 மார்ச், 2013

3. தேவலோக நகர்வலம்


காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தேடினேன். யாரையும் காணோம். காப்பி எப்படி குடிப்பது என்று தெரியவில்லை. பொதுவைக்கூப்பிட்டு விசாரித்தேன். அவரும் அதற்காகத்தான் அலைந்து கொண்டிருந்தார். செக்கும் வந்து சேர்ந்தார்.

அப்போது என் ஞானதிருஷ்டியில் பார்த்தபோது தேவலோகத்தில் ஒரு பயலும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. காலையில் டிபனும் சாப்பிடமாட்டார்களாம். சரி என்று காமதேனுவை வரச்சொன்னேன். அது வந்து "பிரபோ, என்ன வேண்டும்?" என்று கேட்டது.

இதோ பார் காமதேனு, இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருந்து எங்களுக்குத் தேவையானதை எல்லாம் சப்ளை செய். அப்புறம் வேறு ஏற்பாடு செய்யலாம். இப்போது எங்களுக்கு மூன்று காப்பி. நல்லா ஸ்ட்ராங்கா கொண்டு வா" என்றோம். உடனே காப்பி வந்தது. அருமையாக இருந்தது. காலை உணவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டது. ஆளுக்கு இரண்டு இட்லி, ஒரு உளுந்து வடை, ஒரு நெய் ரோஸ்ட், ஒரு காப்பி, அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு, காலைக்கடன்களை முடித்து, குளித்து விட்டு வந்தோம்.

இன்றைக்கு என்ன செய்தி, பார்க்கலாம் என்று பார்த்தால் ஒரு நியூஸ் பேப்பரையும் காணோம். அப்போது நாரதர் வந்தார். அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏதும் இல்லை. கையில் தம்புரா, வாயில் நாராயண நாமம். வாருங்கள் நாரதரே, சௌக்கியம்தானே என்று கேட்டேன். நான் சௌக்கியம், இந்திரன்தான் கொஞ்சம் சோர்ந்திருக்கிறான். மும்மூர்த்திகளுக்கு அவன் பேரில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை போலிருக்கிறது. அதுதான் உங்களை பூலோகத்திலிருந்து வரவழைத்திருக்கிறார்கள். உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும், என்றார்.

இந்த ஆளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், இவனுக்கு தேவைக்கு மேல் விஷயம் தெரிந்திருக்கிறது என்று முடிவு செய்து, நாரதரே, உங்களுக்கு ஒரு விசேஷப் பதவி கொடுக்கிறேன். அதாவது நீங்கள்தான் இனி தேவலோகப் பிரசுரகர்த்தர். அதாவது முதலில் இங்கு ஒரு செய்தித்தாள் ஆரம்பித்து அதில் தேவலோகத்தில் நடப்பவைகள் எல்லாம் பிரசுரிக்கவேண்டும். நீங்கள் எங்கள் புது ஆபீசிலேயே ஒரு ரூமில் இருந்து கொள்ளலாம் என்று சொன்னேன்.

அவர் ஒத்துக்கொண்டார். பத்திரிகைக்கு பெயர் வைத்தோம். "தேவ தந்தி"
நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் நீங்கள் ஆபீஸ் சென்று அங்கு மயன் இருப்பார். பத்திரிக்கை முதல் பிரதியை அச்சடித்து விநியோகியுங்கள் என்றேன். எத்தனை காப்பி அடிப்பது என்றார். இங்கு இருப்பது முப்பத்திமுக்கோடி நபர்கள். ஆளுக்கு ஒன்று. உபரியாக ஒரு பத்தாயிரம் காப்பிகள். அவ்வளவுதான் என்றேன். நாரதர் போய்விட்டார்.

நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போனோம். அன்றைய தேவதந்தி டேபிள்மேல் இருந்தது. அதில் நாங்கள் மூவரும் தேவலோகம் வந்து பதவி ஏற்றது, இந்திரனின் வருத்தம், நாங்கள் புது ஆபீசில் குடியேறியது, அன்று நகர்வலம் செல்வது ஆகிய விவரங்கள் அனைத்தும் விலாவாரியாக கொடுக்கப்பட்டிருந்தன.

மயனைக்கூப்பிட்டு நகர்வலம் போகலாமா என்றேன். அவர் சரி என்றார். நாங்கள் மூவர், மயன், நாரதர் ஆகக்கூடி ஐந்து பேர். ஆபீசை விட்டு வெளியில் வந்தோம். வெளியில் எந்த வாகனமும் காணவில்லை. மயனிடம் என்ன, வாகனம் எதுவுமில்லையா? என்றேன். மந்திரி, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு லொடலொட புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானை இருக்கிறது. அதை வேண்டுமானால் வரச்சொல்லட்டுமா என்றான்.

மயன், யானையெல்லாம் சரிப்படாது. புஷ்பக விமானத்தில் பூலோகத்திலிருந்து வந்த உடம்பு வலியே இன்னும் சரியாகவில்லை. பூலோகத்தில் இத்தாலி என்னும் ஊரில் புதிதாக புஷ்பக விமானங்கள் "ஹெலிகாப்டர்" என்னும் பெயரில் விற்கிறார்கள். அந்த விமானங்களுக்கான ஆர்டரை இந்தியா கேன்சல் செய்து விட்டபடியால் அவை ரெடியாக இருக்கும். ஒரு அரை டஜன் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றேன். கூடவே அதை ஓட்டுவதற்கு ஆறு பைலட்டுகளையும் ஆறு மாத டெபுடேஷனில் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றேன்.

மயன் ஆனாலும் படு சுறுசுறுப்பு. அடுத்த சில நிமிடங்களில் ஆறு ஸ்பெஷல் விஐபி ஹெலிகாப்டர்கள் பைலட்டுகளுடன் தயாராக நின்றன. இன்று நாம் எல்லோரும் ஒரு ஹெலிகாப்டரிலேயே போகலாம் என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டோம்.

எங்கு பார்த்தாலும் தேவர்கள். ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். ஜிகுஜிகு துணிகளில் பஞ்சகச்சமும், மேலாடைகளும் அணிந்திருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை, கால் இடுப்பு, தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். பொது - நாலு பேரை நம் ஊருக்கு கடத்திக்கொண்டு போனால் நாலு தலைமுறைக்கு வேண்டிய சொத்தை அந்த நகைகளினால் சம்பாதித்து விடலாம் போலிருக்கிறதே, தலைவா, என்றார். சும்மா இரும் பொது என்று சொல்லிவிட்டு, அந்த தேவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன்.

தேவர்கள் ஆண்-பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. நாரதரே, நாம் கீழே இறங்கி அவர்களுடன் கொஞ்சம் பேசலாமா என்று கேட்டேன். அவர் பேஷாப் பேசலாமே என்றார். ஹெலிகாப்டரை கீழே இறக்கினோம்.

நாரதர் போய் நாலைந்து ஜோடி தேவர்களைக் கூட்டிவந்தார். நெருக்கத்தில் பார்க்கும்போதுதான் மேலும் பல விஷயங்கள் தெரிய வந்தன. இந்தப் பயல்களின் கால்கள் தரையிலிருந்து ஒரு ஜாண் மேலேயே இருந்தன. எல்லோருடைய மூஞ்சிகளும் ஜப்பான்காரன் மூஞ்சி மாதிரி ஒரே மாதிரியாக இருந்தன. ஒரு ஆளைக் கூப்பிட்டு உன் பெயரென்ன என்று கேட்டேன். அவன் விழித்தான்.

நாரதரிடம் இவன் பெயர் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். நாரதர் இவர்களுக்கெல்லாம் பெயர் இல்லை என்றார். என்ன, இவன்களுக்குப் பெயர் இல்லையா, அப்புறம் எப்படி ஒவ்வொருத்தனையும் கூப்பிடுவீர்கள் என்று கேட்டேன். அவர்களை எதற்குக் கூப்பிடவேண்டும்?அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம்? என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.

நாரதரே, எங்கள் பூலோகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அவர்கள் அந்தப் பெயரினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள், அப்படி இங்கே இவர்களுக்குப் பெயர் வைக்கவில்லையா? என்றேன். இல்லை என்றார். சரிதான், நம் ஊரில் தெருவில் திரியும் ஆடுமாடுகளுக்கெல்லாம் பெயரா வைத்திருக்கிறோம், அது மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இந்த மாதிரி இருந்தால் நம் திட்டங்களுக்குச் சரிப்படாதே, என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சித்திரகுப்தன் ஞாபகம் வந்தது.

அவனை அழைத்தேன். உடனே வந்து "வணக்கம் மந்திரி பிரபோ" என்றான். அன்றைய பத்திரிக்கையைப் படித்திருக்கிறான். சித்திரகுப்தா, இதென்ன இங்குள்ளவர்களுக்கெல்லாம் பெயரே கிடையாதாமே, ஏன் என்றேன். பிரபோ, அதற்கு அவசியமே ஏற்படவில்லை என்றான். நான் "அதற்கு அவசியம் இப்போது வந்து விட்டது. இவர்களுக்கெல்லாம் பெயர் கொடு" என்றேன். பிரபோ, அவ்வளவு பெயர்களையும் உடனே கண்டுபிடிப்பது சிரமம். நடைமுறைச் சிக்கலும் வந்து விடும். ஆகவே ஒவ்வொருவருக்கும் நெம்பர் கொடுத்துவிடலாமென்றான்.

சரி, அப்படியே செய்துவிடு. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள அட்டை தயார் செய்து, அதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லிவிடு என்றேன். நெம்பர் கொடுப்பதற்கு முன் சில வேலைகள் இருக்கின்றன. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு மயனைக் கூப்பிட்டேன்.

மயன், இவர்களை ஒரு ஒழுங்கில் குடியமர்த்தவேண்டும். இப்போது இவர்கள் எங்கே குடியிருக்கிறார்கள் என்றேன். அப்படியென்றால்.... என்று மயன் இழுத்தார். இவர்கள் இப்படியே உலாத்திக்கொண்டு இருப்பார்கள், இவர்களுக்கு வீடு வாசல் என்று ஒன்றும் கிடையாது என்றார். என்னடா, நம் பூலோக தெரு நாய்கள் கதி மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.

அப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். செக்கு, நீயும் இதைக் கேட்டுக்கொள். நீதான் இனிமேல் இந்த குடியமர்ப்புகளை பரிபாலனம் செய்யவேண்டும். இந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரித்து குடியமர்த்தவேண்டும். இந்த தேவலோகத்தை முப்பத்திமூன்று மாநிலங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம். ஒவ்வொரு மாநிலத்தையும் பத்துப் பத்து மாவட்டங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துப் பத்து வட்டங்கள் இருக்கட்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் 70 கிராமங்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கோடி தேவர்கள். மாநிலத் தலைநகரில் பத்து லட்சம் தேவர்கள் இருக்கட்டும். மாவட்டத் தலைநகரில் ஒரு லட்சம் தேவர்கள். வட்டத் தலைநகரில் பத்தாயிரம் தேவர்கள். மீதி 70 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் மொத்தம் உள்ள 7000 கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் பேராக இருக்கட்டும். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆளுக்குப் பத்து ஹெக்டேர் (25 ஏக்கர்) நிலம் இருக்கட்டும். அதில் கிணறு, மோட்டார் பம்ப்செட் வசதியும் இருக்கட்டும்.

எல்லோருக்கும் குடியிருக்க வீடுகள் தயாராகட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஜோடி தங்கட்டும். ஆக மொத்தம் 16 கோடி 50 லட்சம் வீடுகள் இப்போதைக்குப் போதும். ஜனத்தொகை பெருகும்போது அவர்களுக்கு, பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர், மின்சாரம், பாதளச்சாக்கடை இணைப்பு ஆகியவைகளைக் கொடுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டில், மெத்தை, மாடுலர் கிச்சன், டிவி, டெலிபோன் ஆகியவை இருக்கட்டும். அவைகளுக்கு உடனடியாக உபயோகம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தேவைப்படும்.

மாநிலத் தலைநகரங்கள், மாவட்டத்தலைநகரங்கள், வட்டத்தலைநகரங்கள் ஆகியவற்றில் அந்தந்த இடங்களுக்குத் தகுந்த மாதிரி அலுவலங்கள் கட்டுங்கள். அவை சகல வசதிகளும் பொருந்தியதாக இருக்கட்டும். இது தவிர ஒவ்வொரு நகரத்திற்கு அருகாமையிலும், கூடவே பத்துப் பத்து சேடலைட் நகரங்கள் அமைக்க தேவையான காலி இடம் வைத்திருங்கள்.

அனைத்து மாநிலத்தலைநகர்களும் ஆறு வழிப்பாதை மூலம் இணையுங்கள். மாவட்டங்களுக்கு இடையே நான்கு வழிப்பாதைகள். வட்டங்களுக்கு இடையேயும் கிராமங்களுக்கு இடையேயும் இரு வழிப்பாதைகள் தயாராகட்டும்.

மயன் இந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். சித்திரகுப்தனிடம் இந்த தேவர்களை இந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்துங்கள். அப்புறம் அவர்களுக்கு நெம்பர் கொடுப்பது எளிது. ஒவ்வொரு  ஆளுக்கும் பனிரெண்டு இலக்கத்தில் எண்கள் கொடுங்கள். முதல் இரண்டு எண்கள் மாநிலத்தைக் குறிக்கட்டும். அடுத்த இரண்டு எண்கள் மாவட்டத்தையும் அதற்கடுத்த இரண்டு எண்கள் வட்டத்தையும் குறிக்கட்டும். மீதி ஆறு எண்கள் அவர்களின் அடையாள எண்ணாக வரிசைக் கிரமமாகக் கொடுங்கள் என்றேன். சித்திரகுப்தன் சரி என்று சொல்லிவிட்டு அந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான்.

அப்புறம் ஒரு ஜோடியைக்கூப்பிட்டு மற்ற விஷயங்களை விசாரித்தோம். அந்த விசாரணையில் தெரிய வந்தது அவர்களை பேசுவது தேவபாஷை அதாவது வடமொழி. அவர்களுக்கு பசி தாகம் கிடையாது. அங்கு எப்போதும் பகல்தான். அவர்கள் தூங்குவது இல்லை. அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை. அவ்வப்போது கொஞ்சம் சோம்பானம் மட்டும் அருந்துவார்கள். அது இந்திரன் மாளிகையில் பீப்பாய் பீப்பாயாக வைத்திருக்கிறது. அந்தப் பீப்பாய்கள் தீரத்தீர, காமதேனு அவைகளை நிரப்பி வைத்து விடும்.

ஏறக்குறைய பூலோகத்தில் தெருவில் திரிந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகள் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சரி, இவைகளை ஒவ்வொன்றாக கவனிப்போம் என்று முடிவு செய்தேன்.

காலையில் சாப்பிட்ட டிபன் ஜீரணமாகிவிட்டிருந்தது. நாரதரிடம் என்ன, மதிய உண்வு சாப்பிடலாமா என்று கேட்டேன். அது என்ன மதிய உணவு? அதை எதற்கு சாப்பிடவேண்டும்? என்றார். வாருங்கள், காட்டுகிறேன் என்று சொல்லி, அவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் இருப்பிடம் சென்றோம். காமதேனு காத்துக் கொண்டு இருந்தது.

அதனிடம் டில்லி அசோகா ஹோட்டலில் மதிய உணவிற்கு என்னென்ன செய்திருக்கிறார்களோ, அதில் எல்லாவற்றிலும் எங்களுக்குத் தேவையான அளவு கொண்டுவா என்று சொல்லிவிட்டு, கைகால்கள் கழுவிவிட்டு டைனிங்ஹால் வந்தோம். சாப்பாடு தயாராக இருந்தது. நாங்கள் நால்வரும் (நாரதர் உட்பட) உட்கார்ந்தோம். இதுதான் மதிய உணவா என்று நாரதர் கேட்டார். ஆமாம் நாரதரே, இங்கே நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பிட மாட்டீர்களா என்று கேட்டேன். அவர் சொன்னார், தேவலோகத்தில் பசி, தாகம் கிடையாதாகையால் இதற்கெல்லாம் அவசியமில்லை என்றார்.


சரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.

தொடரும்...