வெள்ளி, 17 அக்டோபர், 2014

நான் என் வாழ்நாளில் இதுவரை சாப்பிடாத இனிப்பு


எனக்கு சிறு வயது முதற்கொண்டே இனிப்பு மேல் அதிகப் பிரியம். நான் ஐந்து வயதாயிருக்கும்போது டிராயர் பாக்கெட்டில் சர்க்கரையை திருடிப் போட்டுக்கொண்டு சிறிது சிறிதாக சாப்பிடுவேன். வெல்லம் கிடைத்தால் இன்னும் அதிக குஷி. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சாப்பிட்டுத்தான் இன்று டயாபெடீஸ் என்னும் நோவை வாங்கி வைத்திருக்கிறேன்.

அதற்காக ஸ்வீட் சாப்பிடுவதை விட முடியுமா, என்ன? நோவு ஒரு பக்கம், ஸ்வீட் சாப்பிடுவது இன்னொரு பக்கம்.

சமீபத்தில் நான் இரண்டு ஸ்வீட்டுகள் (தனித்தனியான விசேஷங்களில்தான்) சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. இது வரை அந்த ஸ்வீட்டுகளை நான் பார்த்ததே இல்லை. சாப்பிட்டதும் இல்லை. (பார்க்காதபோது எப்படி சாப்பிட முடியும்? அது வேறு விஷயம்) அவைகளின் சுவை எழுத்தில் சொல்லி முடியாது. சாப்பிட்டால்தான் அனுபவிக்க முடியும்.

இதில் என்ன கொடுமை என்றால், அந்த ஸ்வீட்டுகளின் பெயர் எனக்குத் தெரியவில்லை. பந்தியில் சாப்பிடும்போது பட்டிக்காட்டான் மாதிரி அதன் பெயரைக் கேட்க முடியுமா என்ன? நாம் அது வரை அந்த ஸவீட்டை பார்த்ததில்லை, சாப்பிட்டதில்லை என்கிற விஷயத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டால் நம் கௌரவம் என்ன ஆகிறது? ஆகவே ஏதோ தினமும் அந்த மாதிரி ஸ்வீட்டுகளைத்தான் வீட்டில் சாப்பிடுவது மாதிரி ஒரு பாவ்லா காட்டிக்கொண்டு வந்து விட்டேன்.

இப்போது என் வருத்தம் என்னவென்றால் எங்காவது பெரிய ஓட்டலில் யாராவது ஓசியில் விருந்து வைத்தால் இந்த ஸ்வீட்டை எப்படி கேட்பது என்பதுதான்? இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டித்தான் இந்தப் பதிவு. நண்பர்கள் உதவ வேண்டும்.

முதல் ஸ்வீட் ஒருவருடைய சதாபிஷேக விருந்தில் சாப்பிட்டது. அவர் மைசூரைச் சேர்ந்தவர். அந்த விருந்தில் பூரி மாதிரி ஒன்றைப் போட்டு அதன் மேல் ஜீரா சக்கரையைத் தூவினார்கள். ஜீரா சர்க்கரை என்றால் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். சாதா சர்க்கரையை நைசாக அரைத்ததுதான் ஜீரா சர்க்கரை.  பிறகு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றினார்கள். இந்தக் கலவையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டால் தேவாம்ருதம் தோற்றது போங்கள்? அவ்வளவு சுவை.

முழுவதும் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னொன்று சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அத்தனை பேருக்கு முன்னால் கேட்க வெட்கமாய் இருந்ததினால் கேட்காமல் வந்து விட்டேன். ஆனாலும் இந்த பாழாய்ப்போன மனசு அந்த ஸ்வீட்டுக்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறது.

அந்த ஸ்வீட்டின் பெயரும் அது தமிழ் நாட்டில் எங்கு கிடைக்கும் என்று யாராவது தெரிவித்தால் நான் என் ஆயுளுக்கும் (என் ஆயுள் இன்னும் கொஞ்ச காலம்தான்) நன்றியுடையவனாக இருப்பேன்.

இரண்டாவது ஸ்வீட் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்த என் மனைவியிடம் கொடுத்தனுப்பிய ஸ்வீட் பேக்கட்டில் இருந்தது. அவர்கள் ஆந்திராக்காரர்கள். இந்த ஸ்வீட் பேக்கட் மேல் ஒரு கடையில் பெயர் இருந்தது. SIRI A Sweet World, Shop No. 13, NTR Stadium Complex, Brindhavan Gardens,Guntur-7.

அந்த ஸ்வீட் ஒரு காகித ரோல் போல இருந்தது. அது காகிதம் தான் என்று நினைத்துக்கொண்டு அதை பிரித்தேன். பெரிய காகிதமாக பிரிந்தது. உள்ளே பிரவுன் கலரில் ஏதோ இருந்தது. தொட்டு சுவைத்துப் பார்த்தேன். இனிப்பாக இருந்தது. இதை ஏன் இவ்வளவு பெரிய காகிதத்தில் சுருட்டி வைத்திருக்கிறார்கள் என்று யோசித்தேன். என்னுடைய கிழட்டு மூளையில் ஒரு பொறி தட்டியது. அந்தக் காகிதத்தை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டேன் அது வாயில் கரைந்தது.

ஆஹா, இதுவா விஷயம் என்று புரிந்தது. அதாவது அந்தக் காகிதச்சுருளைப் பிரிக்காமல் அப்படியே சாப்பிடவேண்டும் போல என்ற உண்மை புரிந்தது. இதை அப்படியே சுருட்டி சாப்பிட்டேன். இந்த ஸ்வீட் முழுவதும் நெய்யோ நெய். கையில் ஒட்டிக்கொண்ட நெய் வாசனை இரண்டு நாள் போகவில்லை. ருசியோ ருசி. அப்படி ஒரு ருசியை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை.

அடுத்த நான் இன்னொரு ஸ்வீட் மிச்சம் இருந்தது. முதல் நாள் சாப்பிட்டபோது வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் பங்கு போட்டு கொடுத்ததினால் எனக்கு குறைவாகத்தான் கிடைத்தது. மனதிற்குத் திருப்தி ஏற்படவில்லை. ஆகவே இந்த மிச்சம் இருந்த ஸ்வீட்டை நான் ஒருவனாகவே சாப்பிட்டு முடித்து விட்டேன். நன்றாக இருந்தது. திருப்தி அடைந்தேன்.

இதன் விளைவு ஒன்றே ஒன்றுதான். அடுத்த இரண்டு நாட்களுக்குப் பசியே தோன்றவில்லை. இந்த தீபாவளிக்கு குண்டூர் போய் இந்த ஸ்வீட் ஒரு நூறு பீஸ் வாங்கி வரலாமா என்று யோசித்தேன். வீட்டிற்குத் தெரியாமல் அவ்வளவு தூரம் சென்று வருவது சாத்தியமில்லையாதலால் வீட்டில் பர்மிஷன் கேட்டேன். ஒரு ஸ்வீட் சாப்பிட்டே இரண்டு நாள் வயிற்று மந்தத்தில் இருந்தீர்கள். நூறு ஸ்வீட் வாங்கி வந்து எல்லோரும் ஆஸ்பத்திரிக்குப் போகவா என்று என் முயற்சியை தடுத்து விட்டார்கள்.

இது என்ன ஸ்வீட்? இது எங்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். தெரிந்தவர்கள் உதவ வேண்டும்.

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.



வெள்ளி, 10 அக்டோபர், 2014

உடம்பெல்லாம் உப்புச்சீடை

மனித இயல்புகளை துல்லியமாக படம் பிடித்துக்காட்டும் இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டுங்கள்.


விமர்சனம்

மனித மனத்தின் அவலங்களை போட்டோ பிடித்தது போல் காட்டியிருக்கும் இக்கதை எல்லோருடைய மனதிலும் நீண்ட நாள் இடம் பிடித்துக் கொள்ளும்.

வெளித்தோற்றங்கள் ஒருவரின் குணங்களை பிரதிபலிக்கிறது என்கிற ஆழ்ந்த நம்பிக்கையில் நாம் வாழ்கிறோம். புறத்தோற்றத்தைத் தாண்டி உள் மனதின் அழகைக் காண நம் அனுபவ அறிவு நம்மை அனுமதிப்பதில்லை. அதுவே மனிதனின் பெரிய குறைபாடு.

சிறு குழந்தைகளுக்கு அத்தகைய குணங்கள் இன்னும் வரவில்லை என்பதை மிகவும் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. அவர்களும் பெரியவர்களானதும் இந்த கபடமற்ற தன்மை மறைந்து போகுமோ என்னமோ?

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் ரயில் பயணம் அந்தக்காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை தத்ரூபமாக பட்டாபி-பங்கஜம் தம்பதியினர் மூலமாக அனுபவிக்கிறோம். நீண்ட தூரப் பயணத்தில் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை பட்டாபி பாதுகாக்கும் விதம் எல்லோரும் செய்யும் முறையே.

ஆனால் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பொருட்களை எண்ணி கொண்டு போனாலும் தவறு ஏற்படுவது உண்டு என்பதை காண்கிறோம். ஆனால் அந்தத் தவறு சக மனிதரின் மேல் ஏற்பட்ட வெறுப்பினால் விளைந்தது என்பதை அழகாக கதாசிரியர் சுட்டிக் காண்பிக்கிறார்.

அந்த தவறு அவர்கள் வெறுத்த ஒருவராலேயே நிவர்த்திக்கப்படும்போது அவர்களுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சியை வார்த்தைகளால் அளவிட முடியாது. அதற்கு பிராயச்சித்தமாக அவர்கள் செய்யும் தானம் மனதில் வெறுப்பைத்தான் உண்டு பண்ணுகிறது. மனித மனம் நொடியில் எவ்வாறு தன்னை மாற்றிக்கொள்கிறது என்பதை நம்மால் எளிதாக ஜீரணம் செய்ய முடியவில்லை.

இந்தக் கதையை பல நாட்களுக்கு முன்பே படித்திருக்கிறேன். மனதை விட்டு அகலவில்லை. என்றும் சிரஞ்சீவியாக வாழும் கதைகளில் இதுவும் ஒன்று.

பழனி.கந்தசாமி

http://swamysmusings.blogspot.com

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

பத்துமலை முருகன்

தமிழ் இளங்கோவின் இந்தப் பதிவைப் படித்த பின் இந்தப் படங்களைப் பார்க்கவும்.


மலேசியாவில் யாரும் கோவிலில் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்வதில்லை. பத்துமலை முரிகன் கோவிலில் எடுத்த படம்.

                                         .

அதே போல் சிங்கப்பூரிலும் மாரியம்மன் கோவிலில் எடுத்த படம். அங்கும் ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை. நான்தான் பயந்து கொண்டே போட்டோ எடுத்தேன்.


செவ்வாய், 30 செப்டம்பர், 2014

காதலாவது கத்திரிக்காயாவது

விமர்சனம்.


காதலாவது கத்திரிக்காயாவது என்ற வைகோவின் சிறுகதைக்கு என் சிறு விமர்சனம். இதைப் படித்த பின் இந்த சிறுகதையைப் படிக்கத் தோன்றினால் இங்கே செல்லவும்.

காதலாவது கத்திரிக்காயாவது என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அதன் பொருள் என்னவென்றால் சமூகத்தில் வாழும் சாதாரண மனிதர்களுக்கு காதல் என்பது ஒரு எட்டாக்கனி அல்லது காதல் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒன்றல்ல என்பதேயாகும்.

ஆனாலும் அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் இயற்கையை ஒட்டிய உணர்வுகள் வரும் என்பதை அன்றாட வாழ்க்கைப் போராட்ட நிகழ்வுகளுக்கிடையே பின்னியிருக்கும் விதம் அருமை. ஒரு ஆதரவற்ற இளைஞனுக்கும் இளைஞிக்கும் தற்செயலாக ஏற்படும் சந்திப்பு, பரஸ்பர நட்பாக மாறி இறுதியில் காதலாக உருவெடுக்கும் ரசாயன மாற்றத்தை கதாசிரியர் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார்.

கதையில் குறிப்பிடும் நிகழ்வுகள் சாதாரணமாக யாருக்கும் ஏற்படக்கூடியவை. அவைகளைப் பின்னி ஒரு காதல் கதையை புனைந்த வை.கோ. அவர்களை பாராட்டவேண்டும். கதையின் ஓட்டம் ரோல்ஸ்ராய் காரில் பயணம் செய்வது போல் அவ்வளவு சுகமாக இருக்கிறது. இது அவரின் ஒரு தனித்துவம்.


பரமு காமாட்சி ஜோடியின் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்று கதையைப் படித்தவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இயற்கையாகவே தோன்றும். 

திங்கள், 22 செப்டம்பர், 2014

காதல் வங்கி - சிறுகதை விமர்சனம்.

காதல் வங்கி

இந்தக்கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

விமர்சனம்:

ஆற்று நீர் சலசலப்பில்லாமல் அமைதியாக ஓடும்போது அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு சுகம். மனதிற்கு சாந்தியளிக்கும் ஒரு அனுபவம். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது.

அதேபோல் கோயிலில் கடவுள் விக்கிரகத்தை ஒரு நல்ல அர்ச்சகர் தேர்ச்சியாக அலங்காரம் செய்திருந்தால் அதையே பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என்றே தோன்றும்.

சில கதைகள்தான் அத்தகைய அனுபவத்தைக் கொடுக்க வல்லவை. காதல் வங்கி அந்த மாதிரியான ஒரு சிறுகதை. எந்த விதமான நெருடலும் இல்லாமல், அபஸ்வரம் அற்ற ஒரு நல்ல சங்கீதத்தைக் கேட்கும் அனுபவத்தைத் தருகிறது.

அழகை அனுபவிப்பது பல வகைப்படும். அழகில் தெய்வீகத்தைப் பார்ப்பது ஒரு வகை. குழந்தையின் கபடமற்ற அழகு ஒரு வகை. பெண்களைத் தெய்வமாகப் பார்ப்பது ஒரு வகை. இப்படி அழகின் பல பரிமாணங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் திரு. வை.கோ. அவர்கள்.

கண்டதும் காதல் என்பதை நாசூக்காக கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர். இக்காலத்து நவநாரீமணிகளுக்கு மிகவும் வேறுபட்டவளாக கதாநாயகியை சித்தரித்திருப்பது மனதை தொடுகிறது. மிக இயல்பாக அவள் தன் நாயகனுடைய பழக்கவழக்கங்களுக்கு மாற்றிக்கொள்கிறாள்.


ஆனால் நடைமுறையில் இத்தகைய சம்பவங்கள் நடக்குமா என்பது ஒரு கேள்விக் குறியாய் மனதில் தங்குகிறது.

சனி, 13 செப்டம்பர், 2014

இன்னுமொரு விமர்சனம்




இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.(சுடிதார் வாங்கப் போறேன்)

சிறுகதைகளுக்கு ஒரு சம்பவத்தை அப்படியே கண்முன் காட்சியாகக் கொண்டுவரும் வல்லமை உண்டு. ஆனால் இந்த திறமை அந்த கதையின் ஆசிரியரின் சாமர்த்தியம். அப்படிப்பட்டவர்களே சிறுகதை மன்னன் என்று போற்றப்படுகிறார்கள். திரு வை.கோ. அவர்களிடம் இந்தத் திறமை நன்றாக பளிச்சிடுகிறது.

கல்கி, தேவன், கி.வா.ஜ., அகிலன், மு.வ., புதிமைப்பித்தன் ஆகியோர் சிறுகதைகளைப் படித்து வளர்ந்தவன் நான். ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் ஆகிய பத்திரிக்கைகளில் அவர்களது
கதைகள் வெளிவரும். தவிர அந்தப் பத்திரிக்கைகளின் தீபாவளி மலர்களிலும் அவர்களது சிறப்புக் கதைகள் வெளியாகும். இது எல்லாம் ஒரு காலம்.

அப்படிப்பட்ட பத்திரிக்கைகளின் இன்றைய இதழ்களைப் பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒரு துணுக்கைப் போட்டுவிட்டு இதுதான் ஒரு பக்கக்கதை என்கிறார்கள். சிறுகதை எழுதும் ஆசிரியர்களே இல்லையோ என்று மனது வெறுத்துப் போய் இருக்கும்போது பதிவுலகத்திலே திரு வை.கோ. அவர்களின் கைகளைப் படித்து வெகுவாக இன்புற்றவன் தான்.

இந்த சுடிதார் வாங்கும் கதையில் ஒரு மூத்த குடும்பஸ்தனின் மன எண்ணங்களை அப்படியே தத்ரூபமாக காட்டியிருக்கிறார். இவர் வாங்கி வரும் சேலைகளையே அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் மனைவிக்கு சுடிதார் போட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததுதான் வயதான குடும்பஸ்தனுக்கு வரக்கூடாத ஆசை. ஆனாலும் வருவதை எப்படி தடுக்க முடியும்? இதை வெகு நாசூக்காக கோடி காட்டியிருப்பது எல்லோருக்கும் பொருந்தும்.

வரப்போகும் மருமகளுக்கு சுடிதார் வாங்கிக்கொடுத்து நல்ல பெயர் வாங்கவேண்டுமே என்ற ஆதங்கத்தை நுணுக்கமாக விவரித்திருக்கிறார். தெருவில் போகும் பெண்களின் சுடிதார் பேஷன்களைப் பார்த்து மதி மயங்குவது இயற்கையான ஒரு உணர்ச்சி. நாம் அதிக விலை கொடுத்து வாங்கின பொருளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவேண்டுமே என்ற மனதின் வேட்கை அந்த வார்த்தைகளில் புலப்படுகிறது.

ஜவுளிக்கடைகளில் ஜவுளிகளோடு அந்த விற்பனைப் பெண்களும் விற்பனைப் பொருளானால் நன்றாக இருக்கும் என்ற கற்பனை எல்லா இளைஞர்களுக்கும் இனிப்பாக இருக்கும். (பெரிசுகளுக்கும் கூடத்தான்)

கடைசியில் தான் வாங்கின சுடிதாருக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று அறியும்போது தான் பட்ட கஷ்டங்களெல்லாம் மறந்து ஒரு சந்தோஷம் கிடைக்கிறதே, அதற்காகத்தான் திரும்பத் திரும்ப மனிதர்கள் இந்தக் கஷ்டங்களை வலுவில் சுமக்கிறார்கள். இந்த உண்மையை மறைமுகமாக கதாசிரியர் இக்கதையின் மூலம் வலுவாக சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு நல்ல சிறுகதை படித்த மனத்திருப்தி கொடுத்த ஆசிரியரைப் பாராட்டுகிறேன்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

நான் பெற்ற விருது

திருமதி ரஞ்சனி நாராயணனுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றி. இவர் ஒரு பிரபல பதிவர். பல வருடங்களாக பிளாக்கில் எழுதி வருகிறார். பதிவர் சந்திப்புகளில் நேரிலும் சந்தித்திருக்கிறேன்.

அவர்கள் எனக்கு ஒரு விருது கொடுத்து என்னை மிகவும் கௌரவப்படுத்தி இருக்கிறார்கள்.

                              versatile-blogger
இந்த விருது ஒரு பெரிய விருது என்று கருதுகின்றேன்.  இந்த விருதை எனக்களித்தற்காக அவருக்கு மீண்டும் நன்றி.

உலகில் எதுவும், தாயன்பு உட்பட, இலவசம் அல்ல என்று எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அப்படியே இந்த விருதுக்கும் சில விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

1. இந்த விருதினை என்னுடைய பிளாக்கில் போடவேண்டும். இது ஒரு ஜுஜுபி வேலை. காப்பி, பேஸ்ட் வேலை. அதைத்தான் தினமும் செய்து பழகி விட்டோமே. அதனால் அதை சுலபமாகச் செய்து விட்டேன்.

2. விருது கொடுத்தவருக்கு நன்றி சொல்லவேண்டும். இதுவும் மிகவும் சுலபம்தான். அதையும் செய்து விட்டேன்.

3. என்னைப்பற்றி சில விஷயங்கள் கூற வேண்டும். இது கொஞ்சம் கடினமான வேலை. நான் இப்போதெல்லாம் எந்த கடின வேலையையும் செய்வதில்லை. ஆகவே இந்த வேலையைத் தவிர்க்கிறேன். தவிர தற்பெருமை குற்றம் என்று நன்னூலில் சொல்லியிருக்கிறது. நான் ஒரு நன்னூல்தாசன்.

4. இந்த விருதை இன்னும் சில பேர்களுக்கு அளிக்கவேண்டும். இதுதான் இந்த விருதின் மிகக் கடுமையான நிபந்தனை. இந்தக் காரணத்திற்காகவே இந்த விருதினையே மறுக்கலாமா என்றுதான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் அன்புடன் ஒருவர் கொடுக்கும் எதையும் நிராகரிக்கலாகாது என்னும் கருத்து காரணமாக இந்த விருதை ஏற்றுக்கொண்டேன்.

இப்படி நான் சொல்வதற்கு காரணம் இப்படியே ஒவ்வொருவரும்  பலருக்கு இந்த விருதைக் கொடுக்க முற்பட்டால் கொஞ்ச நாளில் இந்த விருதை வாங்குவதற்கு பதிவர்கள் யாரும் மிஞ்ச மாட்டார்கள். இந்தக் காரணத்தை முன்னிட்டு நான் இந்த விருதை யாருக்கும் வழங்கப்போவதில்லை.

ஆக மொத்தம் நான் பதிவர்களிலேயே வித்தியாசமானவன் என்பதை உணர்த்தி விட்டேன். அந்த வகையில் இந்த விருது எனக்கு மிகவும் பொருத்தமே.

திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், 8 செப்டம்பர், 2014

பாசப் போராட்டம்

VGK 02 ] தை வெள்ளிக்கிழமை

இந்தக்கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

விமர்சனம்.

தாய்மை என்பது ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் இயற்கை உணர்வு. ஐந்தறிவு மட்டும் இருக்கும் மிருகங்களில் கூட இந்த உணர்வை பல நேரங்களில் பார்க்கலாம். அந்தப் பாசப்பிணைப்புக்கு முன்னால் வேறு எந்த உணர்வும் இணையல்ல. இந்த உணர்வை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இந்தக் கதாசிரியர்.

மனித மனம் விசித்திரமானது. ஒரு சமயம் எடுக்கும் முடிவுகள் வேறொரு சமயத்தில் மாறி விடுகின்றன. இதுதான் இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் இந்த நிகழ்வு அரங்கேறுகிறது. இதை குற்றம் என்று சொல்ல முடியாது. பிரசவம் பார்த்த டாக்டர் இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அந்த கதா பாத்திரம் மனதில் நிலை பெறுகிறது.

சராசரி இந்தியக் குடும்பங்களில் நடைபெறும் பாசப் போராட்டங்கள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பங்களை நாம் நம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக சந்திக்க முடியும். சிறுகதையின் சிறப்பே அதுதான். நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கக் கூடிய மனிதர்களையும் சம்பவங்களையும் நம் முன்னால் நிறுத்துவதுதான் ஒரு கதாசிரியரின் வெற்றி.


அந்த வகையில் இந்தக் கதை நம் மனதில் நீங்கா இடம் பெறுகிறது.

இந்த விமர்சனத்திற்குத்தான் இரண்டாம் பரிசு கிடைத்தது.

சனி, 6 செப்டம்பர், 2014

கதை கதையாம்...


பிரபல பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். எழுத்தில் இன்பம் கண்டவர். தாம் பெற்ற இன்பத்தை இவ்வைகயமும் பெறட்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடு ஒரு விமர்சனப்போட்டி நடத்தி வருவது அனைத்துப் பதிவர்களும் அறிந்ததே.

இந்தப் போட்டியில் பல பதிவர்கள் கலந்து கொண்டு பரிசுகளைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பேர்களுக்கு பரிசு கொடுக்கிறார். எனக்கும் கூஊஊஊஊஊஊஊஊட ஒரு மூன்றாம் பரிசு கிடைத்ததென்றால் பாருங்களேன்.

இந்த மூன்றாம் பரிசு கிடைத்த ஊக்கத்தினால் நானும் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்கிறேன். ஆனாலும் பரிசு ஒன்றும் கிடைப்பதாகக் காணவில்லை. இருந்தாலும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற முதுமொழிக்கேற்ப விடாமல் ஒவ்வொரு போட்டிக்கும் விமர்சனம் எழுதியனுப்பிக்கொண்டிருக்கிறேன். கடைசியாக ஒரு ஆறுதல் பரிசாவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பரிசு பெற்ற விமர்சனங்களை வைகோ தன்னுடைய பதிவில் பிரசுரிக்கிறார். அந்தப் பரிசு பெற்ற விமர்சனங்கள் எல்லாம் அந்த கதையை விட நீளமாக இருக்கின்றன. இவ்வளவு திறமை உள்ளவர்கள் ஏன் தாங்களாகவே கதை எழுதாமல் அடுத்தவர் கதைகளுக்கு விமர்சனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற என் சந்தேகத்திற்கு இது வரை விடை கிடைக்கவில்லை.

சரி, அது எப்படியோ போகட்டும். நான் ஒவ்வொரு சிறுகதைக்கும், 80 வயதானபின் எஞ்சியிருக்கும் கொஞ்நஞ்ச  என் மூளையைக் கசக்கிப் பிழிந்து விமர்சனங்கள் எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறேன். சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் நன்னூல் சூத்திரத்தை சிறுவயதில் படித்த காரணத்தினால் மற்றவர்கள் ஒரு நாவல் அளவிற்குச் சொல்வதை நான் ஒரு வரியில் சொல்லி விடுவேன்.

என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் இந்த அளவுகோலின்படி எழுதப்பட்டவை. பரிசு பெறாத விமர்சனங்களை வைத்துக்கொண்டு வைகோ என்ன செய்யப்போகிறார்? ஆகவே அவருடைய அனுமதி உண்டு என்கிற நம்பிக்கையில் நான் எழுதிய விமர்சனங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

விமர்சனம் 1.

ஜாங்கிரி. நினைத்தாலே இனிக்கும் ஒரு இனிப்பு. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அத்தனை இன்பங்களும் இதற்கு உண்டு. இதை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இதை உருவாக்குபவனும் ஒரு மனிதன்தான். அவன் உருவாக்கும் இந்த ஜாங்கிரி.

மற்றவர்களுக்குத்தான் இனிமையே தவிர, அதை உருவாக்குபவன் அதை விரும்பி சாப்பிடுவதில்லை. எந்த உணவும் அப்படித்தான். அதை செய்பவன் அதை ரசித்து உண்ண முடியாது.

தவிர, அவன் வாழ்க்கையில் இனிப்பு சுவை இல்லாததுதான் ஒரு சோகமான உண்மை. இந்த உண்மையை ஒரு நிகழ்வின் மூலம் நம் கண்முன் நிறுத்தும் கதைதான் “ஜாங்கிரி”. மனிதர்களின் பல பரிமாணங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
நிறைய செலவு செய்து பெரிய விழா நடத்தும் பெரிய மனிதர்களுக்கு சாதாரண மனிதப் பண்பு இல்லாமல் போனது நடைமுறையில் பல இடங்களில் சந்தித்திருந்தாலும் இக்கதையில் அது ஆணித்தரமாக காட்டப்பட்டுள்ளது.


சிறுகதையின் வெற்றியே வாசகர்களை கதாபாத்திரங்களோடு கட்டிப்போடுவதுதான். அதை மிகத் திறம்பட இந்த கதையில் ஆசிரியர் செய்திருக்கிறார். அந்த சமையல்காரர் ஏன் வாழ்க்கையில் வெற்றிபெற முயற்சிகள் செய்யவில்லை என்று அவர் மீது கோபம் வருகிறது. அதுதான் கதாசிரியரின் வெற்றி.  


கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மாறிவரும் கலாசாரங்கள்


"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று அந்தக் காலத்திலேயே நன்னூலில் எழுதி வைத்துச் சென்றார்கள் நம் முன்னோர்கள். இந்தக் காலத்து நடப்புகள் அதை நிரூபணம் செய்கின்றன.

நான் சிறுவனாக இருந்தபோது கல்யாணங்களில் பெண்ணும் பையனும் பார்த்துக்கொள்வது என்பது தாலி கட்டும் சமயத்தில்தான். இருவரும் உறவினர்களாக இருந்தால் அது வேறு விஷயம்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த வழக்கம் மாறி கல்யாணத்திற்கு முன்பு பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு கோயிலிலோ அல்லது ஒரு பொது இடத்திலோ பார்த்துக்கொள்வது பழக்கமாகியது. நான் சொல்வது பிராமணரல்லாத சமூகங்களில் நடக்கும் பழக்கவழக்கங்கள்.

கொஞ்ச நாள் கழித்து நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெண்ணும் பையனும் சேர்ந்து ஓட்டலுக்குப் போவதும் சினிமாவிற்குப் போவதும் சகஜமாயிற்று. இவை எல்லாம் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன்தான் நடந்தன.

இப்போது புதிதாக ஒரு வழக்கத்தை எங்கள் பக்கத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். பஞ்சாங்கம் பார்ப்பவர்களுக்குத் தெரியும். அதில் ஒரு இடத்தில் விருந்திற்குப் போகக் கூடாத நாட்கள் என்று ஒரு குறிப்பு இருக்கும். அதாவது ஒருவர் வீட்டிற்குப் புதிதாக விருந்திற்குப் போவதாக இருந்தால் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் போகக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கும். ஏன் என்றால் அப்படிப் போய் விருந்துண்டால் அந்த உறவு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதை கல்யாணப் பெண்ணுக்கும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது கல்யாண முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் அன்று அந்தப்பெண் புருஷன் வீட்டிற்குப்போவதும் ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும் அல்லவா ? பஞ்சாங்கப்படி அப்படி விலக்கப்பட்ட நாளில் பெண் புருஷன் வீட்டிற்குப் போனால் உறவுகள் பாதிக்கப்படும் என்று யாரோ ஒரு அதி மேதாவி சொல்லி, அதற்கு ஒரு மாற்று ஏற்பாடும் சொல்லியிருக்கிறான்.

அதாவது அந்தக் கல்யாண நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அந்தப் பெண் புருஷன் வீட்டிற்குப் போய்விட்டு வந்தால் இந்த பஞ்சாங்க விதிக்கு தப்பித்து விடலாமாம். இப்போது எங்கள் பக்கம் இப்படி ஒரு புது நடைமுறை பழக்கத்திற்கு வந்துள்ளது.

முற்காலத்தில் உண்டான பழக்கவழக்கங்கள்  அனுபவத்தின் அடிப்படையில் ஏற்பட்டவை. அவைகளில் பல நன்மைகள் உண்டு. ஆனால் தற்காலத்தில் அந்தப் பழக்க வழக்கங்களை நாகரிகத்தின் பெயரால் மாற்றி அமைக்கிறோம். அவைகளின் விளைவுகள் எப்படியிருக்கும் என்று நாளாவட்டத்தில்தான் தெரிய வரும்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கல்யாணமாகாத இளைஞனும் இளைஞியும் "சேர்ந்து வாழுதல்" என்ற ஒரு கலாச்சாரம் உருவாகியுள்ளதை அறிவீர்கள். அப்படி சில மாதங்கள் அல்லது வருடங்கள் வாழ்ந்து இருவருக்கும் ஒத்துப்போனால் பிறகு கல்யாணம் செய்து கொள்வார்கள். இதற்குள் அவர்களுக்கு ஓரிரு குழந்தைகள் கூடப் பிறந்திருக்கலாம். இந்தப் பழக்கம் நம் நாட்டில் கூட பெரிய நகரங்களில் பரவ ஆரம்பித்திருப்பதாக கேள்விப்படுகிறோம்.

பழங்காலத்தில் ஆதிவாசிகள் சமூகத்தில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது என்று படித்திருக்கிறோம். ஆக மொத்தம் நாம் பழங்கால கலாச்சாரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம். வாழ்க நாகரிகம். 

புதன், 13 ஆகஸ்ட், 2014

வணிக நாணயம்



நாணயம் என்று ஒரு வார்த்தை பழக்கத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும். தெரியாதிருந்தால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பணத்திற்கும் நாணயம் என்று சொல்வார்கள். நாம் இப்போது பார்க்கப்போவது அந்த நாணயம் அல்ல.

வியாபாரத்தில் நேர்மை என்று ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு பொருளை விற்பவன் அதற்கு வாங்கும் விலைக்குத் தகுந்ததான பொருளைக் கொடுக்கவேண்டும். அந்தப் பொருளின் தரத்திலோ, பயன்பாட்டிலோ ஏதாவது குறை இருந்தால் அதற்கு விற்பவன் பொறுப்பேற்க வேண்டும். இதைத்தான் வியாபாரத்தில் நாணயம் இருக்கவேண்டும் என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள்.

அப்படி நாணயமாக வியாபாரம் செய்தவர்கள் முன்னேற்றமடைந்தார்கள். மக்கள் அப்படிப்பட்வர்களைத்தான் ஆதரித்தார்கள்.

ஆனால் இன்றைய விளம்பர உலகில் நாணயம் என்றால் அது எங்கே விற்கிறது என்று கேட்கும் அளவிற்கு வந்து விட்டது. சமீபத்தில் நடந்த என் அனுபவத்தைக் கேளுங்கள்.

இப்போதெல்லாம் எந்தப் போருள் வாங்கினாலும், அதற்கு விற்பனைக்குப் பிறகு தரப்படும் பராமரிப்பு பணியை விற்பவர் ஏற்றுக்கொள்வதில்லை. பராமரிப்புக்கென்று தனியாக ஒரு கம்பெனியை ஒவ்வொரு உற்பத்தியாளரும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள்தான் அந்தப் பொருளுக்கு "விற்பனைக்குப் பின் பராமரிப்பு" (After Sales Service) என்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நாம் என்ன நம்புகிறோம் என்றால் "நாம் வாங்கும் பொருளுக்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதை அவர்கள் சரி செய்து தருவார்கள்" என்று.

இந்த மாதிரி பராமரிப்புக்கென்று தனி அமைப்பு வைத்திருப்பதே நம்மைப் போன்ற இளிச்சவாயன்களை ஏமாற்றுவதற்காகவே. அவர்களுக்கென்று கட்டணமில்லா போன் நெம்பர் ஒன்று இருக்கும். அந்த நெம்பருக்குப் போன் செய்தால் எப்போதும் அதை யாரும் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்தக் கசமாலங்களுக்குத் தெரியும் - ஒவ்வொரு போன்காலும் ஒரு பிரச்சினையைத் தான் கொண்டு வரும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.

அப்படித் தப்பித் தவறி யாராவது எடுத்தால் மறு முனையிலிருந்து "க்யா பாத் ஹை" என்று ஒரு கேள்வி வரும். நாம் சுதாரித்துக் கொண்டு "இங்கிலீஷ் மே போலோ" சொல்வதற்குள் லைனை கட் செய்து விடுவார்கள். அநேமாக உங்களில் பலர் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள்.

நான் ஐந்து வருடங்களுக்கு முன் பிரபல கம்பெனி ஒன்றின் பிரிட்ஜ்  20000 ரூபாய் கொடுத்து வாங்கினேன். சமீபத்தில் அதனுடைய கைப்பிடி உடைந்து விட்டது. இது என்ன சாதாரண ரிப்பேர்தானே என்று அந்தக் கம்பெனியின் சர்வீஸ் சென்டருக்குப் போனேன். விஷயத்தைச் சொன்னதும் அங்கு வரவேற்பில் இருந்த நவநாகரிக யுவதி, "சார், நீங்க உங்க பிரிட்ஜை இங்கு கொண்டு வந்தால் நாங்கள் ரிப்பேர் செய்து கொடுப்போம். இல்லையென்றால் இந்த நெம்பருக்குப் போன் செய்யுங்கள், அவர்கள் உங்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் செய்து தருவார்கள்" என்று மிழற்றியது. (மிழற்றியது என்றால் என்ன அர்த்தம் என்று தமிழறிஞரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது இந்த மாதிரி ஒரு சர்வீஸ் சென்டருக்கு ஒரு முறை போய் வாருங்கள்.)

அந்த நெம்பருக்குப் பலமுறை போன் செய்து ஒருவாறாக லைன் கிடைத்தது. அதிலிருந்த நபர் விவரத்தைக் கேட்டுக்கொண்டு  எங்கள் சர்வீஸ் இன்ஜனியர் உங்களைத் தொடர்பு கொள்வார் என்று சொல்லி என் மொபைல் நெம்பரை வாங்கிக்கொண்டார். உங்கள் கம்ளெய்ன்ட் நெம்பர் என்று ஒரு பதினைந்து இலக்க யெம்பரைத் தந்தார். நானும் இது பெரிய கம்பெனியாச்சே. நம் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.

அடுத்த நாள் சர்வீஸ் இன்ஜினியர் போன் செய்து எல்லா விவரங்களையும் விலாவாரியாக கேட்டு விட்டு, சரி சார் நான் கம்பெனிக்கு இந்த ஸ்பேர் பார்ட் வேண்டுமென்று ஆர்டர் போட்டு விடுகிறேன், பார்ட் வந்ததும் நான் உங்கள் வீட்டிற்கு வந்து பிரிட்ஜை சரி செய்து தந்து விடுகிறேன் என்றார். எனக்கும் அசாத்திய நம்பிக்கை வந்து விட்டது.

இரண்டு நாள் கழித்து என் மொபைலுக்கு ஒரு செய்தி. உங்கள் பிரிட்ஜ்ஜுக்கு வேண்டிய ஸ்பேர் பார்ட் எங்களிடம் இல்லை. ஆகவே உங்கள் கம்ப்ளெய்ன்டை இத்துடன் மூடுகிறோம். அவ்வளவே. நான் என்ன செய்வது? திரும்பவும் அந்த சர்வீஸ் டிபார்ட்மென்டைக் கூப்பிட்டேன். அவர்கள் சொன்னது என்னவென்றால், சார் நீங்கள் பிரிட்ஜ் வாங்கி ஐந்து வருடங்களாகி விட்டன, அந்த மாடல் இப்போது மார்க்கெட்டில் இல்லை, அதனால் அதற்கு ஸ்பேர் பார்ட் கிடைக்காது. இப்படி சொன்னால் நான் என்ன செய்வது என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் இன்றைய நாணயத்தின் உச்ச கட்ட பிரதிபலிப்பு. சார் அந்த பிரிட்ஜை உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் டீலரிட்ம் கொண்டு போனால் அதை வாங்கிக்கொண்டு உங்களுக்குப் புதிதாய் பிரிட்ஜ் கொடுப்பார்கள் என்றார்கள்.

நான் ஒரு மடையன். இதைக் கேட்டுக் கொண்டு பக்கத்திலிருக்கும் டீலரிடம் போனேன். ஆஹா, அதற்கென்ன, தாராளமாய் எடுத்துக்கொள்கிறோம் என்றார்கள். மாடல் நெம்பர், வாங்கின வருடம் எல்லாம் கேட்டு விட்டு, உங்கள் பிரிட்ஜ் 500 ரூபாய்தான் பெறும், ஆனால் நீங்கள் எங்களுடைய நீண்ட நாள் கஸ்டமர் என்பதால் ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக்கொள்கிறோம். புது பிரிட்ஜ் 25000 ரூபாயிலிருந்து கிடைக்கும், உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம் என்றார்கள்.

ஆகவே நண்பர்களே, நீங்கள் இப்போது அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மாறிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரே வித்தியாசம். அங்கு பழைய சாமான்களை யாரும் வாங்க மாட்டார்கள் இங்கு அதற்கு அடிமாட்டு விலை கொடுப்பார்கள்.

சனி, 2 ஆகஸ்ட், 2014

தமிழனென்று ஓர் இனம்


கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு இப்பூவுலகில் வாழ்ந்து வரும் இனம் தமிழினம். பிற்காலத்தில் இவ்வினத்தில் சில புல்லுருவிகளின் சதியால் இனக் கலப்பு ஏற்பட்டது என்னமோ உண்மைதான். இருந்தாலும் தமிழினம் தன் தனித்தன்மையை இது வரையிலும் காத்தே வந்திருக்கிறது. இனியும் காப்போம் என்று மார் தட்டும் தனித்தமிழர்கள் இருக்கிறார்கள்.

தமிழினத்திற்கு எந்த அவமானம் ஏற்பட்டாலும் அவர்கள் தீக்குளிப்பார்கள் என்பது உறுதி. இந்த சூழ்நிலையில்தான் பார்பனர்களின் ஆதரவோடு செயல்படும் மோடி அரசு சம்ஸ்கிருத மொழித்திணிப்பை பின் வாசல் வழியாக கொண்டு வருகிறது. இதை தமிழினத்தின் காவலர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

சாமானிய மனிதர்களான நாம் என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒரு வழி  புலனாகியது. அதாவது தமிழ் மொழியில் வடமொழிக்கலப்பு உள்ளதா என்ற ஒரு சுய பரிசோதனை செய்யலாம் என்று தோன்றியது. அப்படிக் கலந்திருந்தால் அந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்களைக் கொடுத்திருக்கிறேன். அவைகளில் தமிழ் அல்லாத சொற்கள் எவை என்று பகுத்தறிந்து கூறுங்கள்.

ஆகாசம்
உபாயம்
நகம்
வீரன்
ஆனந்தம்
தோரணம்
பாடம்
சபை
மாயை
வீணை
ஆயுதம்
கீதம்
புஸ்தகம்
பயம்
பழம்
சுகம்
வாகனம்
விஷம்
தர்மம்
நரகம்
மேகம்
பக்தன்

இப்போதைக்கு இது போதும். அடுத்த பதிவில் என்னுடைய விடையைக் கூறுகிறேன்.

பின் குறிப்பு: இந்தப் பதிவில் ஆரம்பத்தில் போட்டிருக்கும் படத்திலுள்ள பெண்மணி 100 சதம் தமிழ்ப் பெண்மணிதான் என்று தமிழினத்தின் பேரில் உறுதி கூறுகிறேன்.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் சிறை பிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம்.



இத்தகைய செய்திகளை பல வருடங்களாக, ஏறக்குறைய நான்கு நாட்களுக்கு ஒரு முறை செய்தித்தாள்களில் படிக்கிறோம். அடுத்த நிமிடம் மறந்து போகிறோம். இது ஏன் இப்படி நடக்கிறது?

ஒரு ஈழத்தமிழ் பதிவர் தன் பதிவில் எழுதியிருந்தார் - கச்சத்தீவு பல நூற்றாண்டு காலமாக இலங்கைக்கு சொந்தமான பகுதி. அதில் இந்திய நாட்டுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஏன் இதை வலியுறுத்துவதில்லை என்றால், ஈழப்போராட்டத்தில் இந்தியத் தமிழர்களின் அனுதாபமும் ஆதரவும் இப்போது எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் இதைப்பற்றி வாய் திறப்பதில்லை.

இதன் உண்மையை வரலாற்று ஆசிரியர்கள்தான் சொல்ல முடியும். சாதாரண இந்தியத் தமிழனான எனக்குத் தெரிந்ததெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் இந்திய-இலங்கை அரசுகள் ஒரு ஒப்பந்தம் போட்டு, கச்சத்தீவில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒத்துக்கொண்டார்கள் என்பதே.

சமீபத்தில் சென்னை நீதி மன்றம் ஒன்றில் கூட மத்திய அரசு இந்த நிலையை திட்டவட்டமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது என்று செய்தித்தாள்களில் படித்த ஞாபகம் இருக்கிறது. இருந்தும் தமிழக மீனவர்கள் ஏன் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்றால் அங்கு மீன் அதிகமாகக் கிடைப்பதேயாகும். இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்.

இருந்தாலும் இந்த சிறை பிடிப்பு, கடிதங்கள், மீனவர் விடுதலை என்கிற நாடகம் ஏன் தொடர்ந்து நடக்கிறது என்றால், வெறும் வாயையே எத்தனை நாளைக்குத்தான் மெல்லுவது? கொஞ்சம் அவல் இருந்தால் நல்லதுதானே என்கிற நடைமுறைத் தத்துவம்தான்.