வியாழன், 22 ஜனவரி, 2015

வீடு வாங்குவது எப்படி? ஒரு புலம்பல்.


                                       

கார் வாங்குவதைப் பற்றி எழுதப்போக ஒருவர் வீடு வாங்குவதைப்பற்றி எழுதச்சொன்னார். நானும் பெரிய கித்தாப்பாக எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்புறம் இதைப் பற்றி யோசிக்கும்போதுதான் வீடு வாங்குவது என்பது இன்றைய கால நிலவரத்தில் எவ்வளவு கடினமான விஷயம் என்பது உறைத்தது.

இன்றைய பொருளாதார நிலையில் ஒருவன் எவ்வளவு சம்பாதித்தால் ஜீவிக்க முடியும் என்பதற்கு ஒரு நிலையான பதில் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். நடுத்தர வர்க்கம் என்று சொல்லக் கூடியவர்கள் படும்பாடுதான் சொல்லில் அடங்காதது.

ஒரு பெரு நகரத்தில் இன்று வீட்டு வாடகை ஆகாசத்தில் இருக்கிறது. குழந்தைகளின் பள்ளிச் செலவோ நினைத்துப் பார்க்க முடியாதபடி உயர்ந்து இருக்கிறது. உணவுப் பொருட்கள், கேஸ், காய்கறிகள் இவைகளைத் தவிர்க்க முடியாது. பண்டிகைகள், ஊர்ப்பிரயாணம், கல்யாணம் மற்றும் மற்ற விசேஷங்கள், வைத்தியம் இப்படி தவிர்க்கமுடியாத செலவுகளினால் மாதச் சம்பளக்காரர்கள் படும் சிரமங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

இப்படி இருக்கையில் எதிர் காலத்திற்காக எப்படிச் சேமிப்பது, வீடு வாங்குவது எப்படி, குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வது எப்படி என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த சோதனைகளையெல்லாம் எப்படித் தாண்டி வந்தேன் என்று நினைத்தால் ஒரு குழப்பம்தான் மிஞ்சுகிறது.

இந்த நிலையில் வீடு வாங்க என்ன யோசனை சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய வயதுதான் என்று நினைக்கவேண்டி இருக்கிறது. என்னால் இன்றுள்ள பொருளாதார நிலையை, அதில் வரும் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என் அனுபவம் இன்றைய காலகட்டத்தில் எதற்கும் உதவாது என்று புரிவதற்குத்தான் உதவும் என்று புரிகிறது.

நான் வளர்ந்த, வாழ்ந்த காலம் அப்படி. ஒரு மூட்டை (100 கிலோ) அரிசி 10 ரூபாய் என்று விற்றதைப் பார்த்தவன் நான். மார்க்கெட்டுக்கு ஐந்து ரூபாயைக் கொண்டு போனால் ஐந்து பேர் கொண்ட என் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வருவேன். என் கல்யாணத்திற்கு (1964) ல் மொத்தமாக 2000 ரூபாய் செலவு செய்தேன். நேற்று ஓட்டலுக்குப் போய் வந்த என் பேரன் ஆறு பேர் சாப்பிட்டதற்கு 2000 ரூபாய் பில் ஆகியது என்கிறான்.

இன்று ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு என்ன செலவு ஆகிறதென்பது எனக்குத் தெரியவில்லை. நான் பிறந்து வளர்ந்தது ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தின் அடி மட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தில்தான்.
ஆடம்பரம் என்றால் என்னவென்று தெரியாமலேயே வளர்ந்தவன் நான்.

அப்படி வளர்ந்த என்னாலேயே இன்றைய பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று உள்ள பொருளாதார நிதர்சனங்களை உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆகையால் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனால் ஒரு வீடு எப்படி வாங்க முடியும் என்பதற்கு வழி காட்ட எனக்குத் தெரியவில்லை.  நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

புதன், 21 ஜனவரி, 2015

மகாபாரதமும் மாதொரு பாகனும்



"நிர்வாணபுரியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்" என்று ஒரு பழமொழி உண்டு. நான் முதலிலேயே அரைப் பைத்தியம்.  முழுப்பைத்தியம் ஆகாமலிருக்கத்தான் இந்தப் பதிவு.

மாதொரு பாகனைப் பற்றி ஏறக்குறைய பெரும்பாலானோர் தங்கள் தங்கள் கருத்துக்களை பதிவேற்றி விட்டார்கள். நேற்று ராத்திரி, (எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்) தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது, இதைப்பற்றிய நினைவு வந்தது. ஊரே தீப்பற்றி எரிகிறது,  நாமும் நம் பங்கிற்கு ஏதாவது கொஞ்சம் செய்ய வேண்டாமா என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

இராமாயணம், மகாபாரதம் இரண்டும் நம் நாட்டில் இந்துக்களால் போற்றிக் கொண்டாடப்படும் மாபெரும் இதிகாசங்கள். அவற்றைப்பற்றி ஏதாவது மோசமாகப் பேசினால் நான் உயிருடன் எரிக்கப்படுவேன் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். ஆகவே அவற்றைப் பற்றித் தவறாக ஒன்றும் பேசமாட்டேன்.

அதில் வரும் சில நிகழ்வுகளை மட்டும் அப்படியே மேலோட்டமாக சுட்டிக்காட்ட மட்டும் விரும்புகிறேன். இந்த நிகழ்வுகள் ஏற்கெனவே தொலைக் காட்சியில் ஒளி பரப்பப்பட்டவைதான். நான் ஒன்றும் புதிதாக இட்டுக்கட்டவில்லை.

சந்தனு மகாராஜாதான் மகாபாரதத்தில் வரும் முதல் ராஜா. இவருக்கு இரண்டாவது பெண்டாட்டி சத்தியவதி என்ற மீனவ ராஜகுமாரி. சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்பவை அவர்கள் பெயர், இதில் சித்திராங்கதன் கல்யாணம் செய்யாமலேயே ஒரு சண்டையில் இறந்து போகிறான்.அடுத்தவன் விசித்திரவீரியன். இவனுக்கு அம்பிகை, அம்பாலிகை என்று இரண்டு காசி நாட்டின் இளவரசிகளை மணமுடிக்கிறார்கள்.

விசித்திரவீரியன் குழந்தைப்பேறு இல்லாமல் இறந்து போகிறான். சத்தியவதி தர்ம சங்கடத்தில் மூழ்கிறாள். ராஜ்யத்திற்கு வாரிசு இல்லை. வாரிசு இல்லாத ராஜயத்தை எதிரிகள் பிடித்துக்கொள்வார்கள். என்ன செய்வது என்று யோசித்து ஒரு உபாயம் செய்கிறாள். அதன் விளைவாக இரண்டு வாரிசுகள் உண்டாகின்றன. திருதராஷ்டிரன், பாண்டு ஆகிய இருவரும்தான் அந்த வாரிசுகள்.

அந்த உபாயம் என்னவென்பதை  டிவி தொடர் மூலம் வாசகர்கள் நன்கு அறிவார்கள். அதை நான் இங்கு விவரித்து தேசப் பிரஷ்டம் ஆக விரும்பவில்லை. அதனால் அதைத் தவிர்க்கிறேன். அதே மாதிரி பாண்டவர்கள் ஐவரும் பிறந்த வழியும் அனைவரும் அறிந்ததே.

இந்தக் கதை நடந்தது திரேதா யுகத்தில். இப்போது நடக்கும் கலியுகத்திலும் இந்த மாதிரி வம்ச விருத்திக்காக சில உபாயங்களைக் கடைப்பிடித்ததாக பெருமாள் முருகன் என்பவர் மாதொரு பாகன் என்கிற தன் நாவலில் குறிப்பிட்டிருக்கிறாராம். நான் இந்த நாவலைப் படித்ததில்லை. திரேதாயுகத்தில் நடந்ததை கலியுகத்திலும் நடந்ததாகச் சொல்லலாமோ?  வம்பில் சிக்கிக்கொண்டார்.

பெருமாள் முருகனுடைய அப்பா ஒரு தீர்க்கதரிசி. தன் மகன் எதிர் காலத்தில் சைவ-வைஷ்ணவப் போராட்டத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக இரண்டு கடவுள் பெயர்களையும் சேர்த்து பெருமாள் முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார். யாரானாலும் தங்கள் பெயருக்கு "ஹானி" வருகிறமாதிரி நடந்து கொள்ளக்கூடாது. இவர் தன் பெயருக் கேட்ப நடந்து கொள்ளவில்லை.

இப்போது மர-இடுக்கில் வாலை விட்டுவிட்டு ஆப்பை பிடுங்கின குரங்கின் நிலையில் இருக்கிறார். இதனால் நான் சொல்லும் நீதி என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்கள் பெயருக்கேட்ப நடந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டில் ஆப்பைப் பிடுங்கின குரங்கின் கதிதான் வாய்க்கும்.

நான் என் பெயருக்கேட்ப நடந்து கொள்கிறேனா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். இல்லையென்று சொன்னால் வருத்தப்படமாட்டேன்.

பின்குறிப்பு - குரங்கு வாலை விட்டுட்டு ஆப்பைப் பிடுங்கின படம் கிடைக்கவில்லை. அதனால் இந்தப் படத்துடன் திருப்திப் பட்டுக்கொள்ளவும்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

பெண்கள் பொட்டு வைத்தல் - ஒரு ஆராய்ச்சி


பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வது பற்றி கூகுளில் தேடியபோது கிடைத்தவை.

http://senthilvayal.com/2012/04/08/ என்ற தளத்தில் வந்த பதிவு. தளத்தின் உரிமையாளரிடமிருந்து உரிய அனுமதி பெற்று மீள் பதிவாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

அழகிற்கு அழகு சேர்க்கும் பொட்டு

பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும்.
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத்திறனும் திறனுக்கும் உரிய இடம் நெற்றி. யோகக் கலையில் இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை நாம் உணர்ந்திருப்போம்.
நாம் வெறும் நெற்றியாக இருக்ககூடாது என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.
இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் மங்கையர்கள் பல வித டிசைன்களில் முகத்தை அழகுபடுத்தி கொள்கின்றனர். நாம் வைக்கும் பொட்டு நம் முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். ஆதலால் முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை தேர்வு செய்து முகத்தின் அழகை அதிகரிக்க செய்யுங்கள் என அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீல் வடிவ பொட்டு
வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

இதய வடிவ முகம்
இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.

வட்ட பொட்டு
ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.
சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.
முக்கோணப் பொட்டுக்கள்
முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.
முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான்.

http://www.valaitamil.com/what-are-benefit-of-applying-kumkum-than-a-bindi_10132.html என்ற தளத்தில் இருந்து எடுத்த ஸ்கிரீன் ஷாட்
இந்த விடியோவையும் பார்க்கவும்



கணவனை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா கூடாதா என்பதற்கு நல்ல விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

http://jothidanilayam.blogspot.in/2014/02/blog-post_9.html

என் பதிவு ஒன்றில் பெண்கள் கண்டிப்பாக பொட்டு வைத்துக் கொள்ளவேண்டும் என்று எழுதியிருந்தேன். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ஒருவர் விதவைகள் என்ன செய்வது என்று கேட்டிருந்தார். அவருக்கான அறிவியல் பூர்வமான பதில் மேற்குறிப்பிட்ட பதிவில் இருக்கிறது.  

திங்கள், 19 ஜனவரி, 2015

கார் வாங்குகிறீர்களா?

                                        

பொருளாதாரப் பாடத்திலே மனிதனின் தேவைகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.

1. அத்தியாவசியத்தேவைகள். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றும் இதில் அடங்கும்.

2. சௌகரியங்கள். ஒரு இரு சக்கர வாகனம், படுக்க ஒரு கட்டில் மெத்தை, மின் விசிறி இப்படியாக வாழ்வதற்கு ஏற்படுத்திக்கொள்ளும் சில சௌகரியங்கள்.

3. ஆடம்பரப்பொருட்கள். அதிக பொருட் செலவில் ஏற்படுத்திக்கொள்ளும் வசதிகள் இதில் அடங்கும். பெரிய குளிரூட்டப்பெற்ற பங்களா, பெரிய கார், அத்தியாவசிய, தானாகச் செய்யக்கூடிய வேலைகளுக்குக் கூட ஆட்கள், இப்படி பல சமாச்சாரங்கள்.

நடைமுறை வாழ்க்கையில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போவதற்கு அனைவருமே முயற்சி செய்கிறோம். சைக்கிள் வைத்திருப்பவர் ஸ்கூட்டர் வாங்க ஆசைப் படுகிறார். ஸ்கூட்டர் வைத்திருப்பவர் கார் வாங்க ஆசைப் படுகிறார். இவ்வாறு ஆசைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நேர்மையான வழியில் பொருள் ஈட்டி இவ்வகையான ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டால் அந்தப் பொருட்களினால் சந்தோஷம் வரும்.

அப்படியில்லாமல், நான் முன்பு ஒரு பதிவில் சொன்ன மாதிரி கஞ்சா விற்று சம்பாதித்திருந்தால் அந்த வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பமே மிகுந்திருக்கும்.

இந்த தேவைகளில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், இவைகளை ஒன்றுக்கொன்று குழப்பிக்கொள்வதுதான். அதாவது எது அத்தியாவசியம், எது ஆடம்பரம், எது சௌகரியம் என்பதில் ஏற்படும் குழப்பங்கள்தான் ஒரு குடும்பத்தில் கருத்து வேறுபாடு வருவதற்குக் காரணமாக அமைகிறது.

கல்லூரியில் படிக்கும் மகன் ஒரு கைத் தொலைபேசி வேண்டும் என்று விரும்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் படிப்பிற்கும் கைத்தொலை பேசிக்கும் சம்பந்தம் ஏதுமில்லை.  ஆனாலும் அவன் விரும்புகிறான் என்று தகப்பன் வாங்கிக்கொடுக்கிறான். அவன் ஏதோ ஆயிரம் இரண்டாயிரம் ரூபாயில் வாங்கலாம் என்று நினைத்திருப்பான். ஆனால் மகனோ லேட்டஸ்ட் ஆக வந்திருக்கும் ஐபோன் 50000 ரூபாய் விலையில் வேண்டுமென்று கேட்பான்.

வம்பு வந்து விட்டதல்லவா? இதுதான் இன்றைய தலைமுறையினரின் வியாதி. அந்த தகப்பன் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தக் கைபேசியை வாங்கிக் கொடுத்து விட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்பு நடப்பவற்றை நாம் வெகு சுலபமாக யூகித்துக்கொள்ளலாம்.

இன்று ஒரு புருஷனுக்கு வேலை உயர்வு வந்து  ஐந்து இலக்க சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டான் என்றால் உடனே அவன் மனைவிக்கு ஏற்படும் ஆசை ஒரு கார் வாங்கலாமே என்பதுதான். தன் புருஷனுடன் வேலை பார்க்கும் ஒருவன் கார் வாங்கி விட்டான் என்று அவன் பெண்டாட்டி பீத்திக்கொள்கிறாள். நாம் எப்போது கார் வாங்குவது என்று அவள் தினமும் புருஷனை நச்சரிப்பாள். புருஷனும் இந்த நச்சரிப்புத் தாங்காமல் அங்கே இங்கே கடன் வாங்கி ஒரு காரை வாங்கி விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவனுக்கு சனி திசை ஆரம்பமாகிவிட்டது என்று பொருள். தன்னுடைய நிலைக்கு மேல் ஆசைப்படும் எந்தப் பொருளும் ஆடம்பரம்தான். தகுதிக்கு மீறிய ஆடம்பரம் துன்பத்தையே கொண்டுவரும்.

கார் வாங்குவதைப் பற்றி எழுதுமாறு ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார், "வரவு எட்டணா செலவு பத்தணா, மீதி இரண்டணா துந்தனா" என்று ஒரு சினிமாவில் பாடினார்கள். ஆடம்பரச் செலவுகள் சொய்து அந்தக் குடும்பம் எப்படி சிதறுண்டு போனது என்று அந்த சினிமாவில் துல்லியமாகக் காட்டினார்கள்.

இன்றைய காலகட்டத்தில் கார் வாங்குவது யாரால் முடியும் என்றால் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவர்களால் மட்டுமே முடியும். காரின் விலை குறைந்த பட்சம் ஆறு லட்சம் ஆகும். இதில் கடன் வாங்கினால் 2 லட்சம் கைப் பணம் 4 லட்சம் கடன் என்று வைத்துக்கொண்டால் மாதம் ஏறக்குறைய ஏழாயிரம் ரூபாய் அந்தக் கடனுக்காக கட்டவேண்டிவரும்.

குடும்பச் செலவு, வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு, பொழுதுபோக்கு செலவுகள், உடை, வேலைக்காரர்கள், குழந்தைகளுக்கான எதிர்காலச் சேமிப்பு, தன்னுடைய பென்ஷனுக்கான சேமிப்பு, வருமான வரி இப்படி கணக்குப் பார்த்தால் ஒரு லட்சம் வருமானம் வாங்குகிறவன் கூட செலவுகளைச் சமாளிக்கத் திணறித்தான் போவான்.

கார் வைத்துக்கொள்ள அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தனியாக அலவன்ஸ் கொடுக்காத பட்சத்தில் கார் பெரிய சுமையாக மாறி விடும்.

ஒரு காரின் நேரடி செலவுகள், மறைமுக செலவுகள் என்னென்ன என்று நான் கணக்குப்போட்டு வைத்துள்ளேன். அதைப் பாருங்கள்.

1. காரின் விலையான 6 லட்சத்திற்கு வட்டி மாதம் ஒன்றுக்கு  ரூ.6000
2. டிப்ரீஷியேஷன்                                                        "              "                ரூ.5000
3. கார் சர்வீஸ், இன்சூரன்ஸ், சில்லறை ரிப்பேர்             "                ரூ.2000
4. பெட்ரோல் 500 கி.மீ. ஓட்டம்                                  "             "                 ரூ.2000
                                                                                                                               --------------
                                                                               மொத்தம்                            ரூ.15000
                                                                                                                               --------------

கார் மாமனார் வீட்டு சீதனமாக இருந்தால் முதல் இரண்டு செலவுகள் இல்லை.

இது தவிர நீங்கள் கார் வைத்துக்கொண்டு இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது எங்காவது சுற்றுலா செல்லவேண்டி வரும். அதற்கான செலவுகளைக் கூட்டிக்கொள்ளவும்.

காரில் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்கப்போனால் வெறும் கையுடனா போகமுடியும். முன்பு பஸ்சில் போகும்போது ஒரு பிஸ்கட் பேக்கட் வாங்கிப்போனால் போதும். ஆனால் காரில் போகும்போது ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்வீட் இப்படி வாங்கிக்கொண்டு போனால்தான் காரில் செல்வதற்கு அடையாளம்.

இப்படியாக கார் வாங்குவது முற்றிலும் ஆடம்பரச் செலவே. அதற்கான வசதி இருந்தால் செய்யலாம்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஒரு வெள்ளரிக்காய் கதை

                                                     

பழைய காலத்தில் கிராமங்களில் காலைக் கடனைக் கழிக்க ஊருக்கு வெளியில் பொட்டல் காட்டுக்கு செல்வார்கள். அப்படி ஒரு ஊரில் பொட்டல் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு வெள்ளரித்தோட்டம் இருந்தது. அந்த ஊரில் ஒருவன் பொட்டல் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு வெள்ளரிக்காயைப் பறித்து அதைத் தின்றுகொண்டே காலைக் கடனைக் கழித்துக் கொண்டிருந்தான்.

அந்த வழியில் போன அந்த ஊர்க்காரன் ஒருவன் இவனைப் பார்த்து வெளிக்குப் போகும்போது வெள்ளரிக்கயைத் திங்கலாமா? என்று கேட்டான். அதற்கு அந்த வெள்ளரிக்காயைத் தின்று கொண்டிருந்தவன் சொன்னான்.        "நான் வெள்ளரிக்காயை எப்படிச் சாப்பிட்டால் உனக்கென்ன?  "நான் வெள்ளரிக்காயை சும்மா சாப்பிட்டாலும் சாப்பிடுவேன்,அதில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் சாப்பிடுவேன், நீ யார் அதைக்கேட்க" என்றானாம். (இங்கு "அதில்" என்றால் எது என்பது வாசகர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.

இது ஒரு கதை மட்டுமே. இந்தக் கதையை இங்கு சொல்வதற்கான காரண காரியங்களை யோசித்து உங்கள் மூளையை வீணாகக் கசக்கி வருத்தப்படவேண்டாம்.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

பதிவுலகம்பற்றி என் சிந்தனைகள்


பதிவுலகம் ஒரு நல்ல பொழுது போக்கு தளம். அதே சமயம் புதுப் புதுக் கருத்துகளை அறிந்து கொள்ளவும் உதவுகின்றது. இது பதிவர்களின் சுதந்திர உலகம் என்று சொல்லலாம்.

என் மனதில் தோன்றும் எண்ணங்களை நான் முன்பு டைரியில் அல்லது ஒரு தனி நோட்டுப் புத்தகத்தில் குறித்து வந்தேன். பிளாக்குகள் தோன்றி எனக்கு அவை அறிமுகமானபின் பிளாக்குகளில் எனது மன ஓட்டங்களைப் பதிகிறேன். அவைகளை எல்லோரும் படிக்கலாம் என்ற முறையில் என் பதிவைப் பொதுவில் அதாவது ஓபனாக வைத்திருக்கிறேன்.

என் பதிவைப் படிப்பதும் படிக்காததும் வாசகர்களின் விருப்பம். என் பதிவை நீங்கள் படித்துத்தானாக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வாசகர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் பதிவு எழுதும் ஆர்வம் கொண்டவர்கள் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். சொல்லும் எண்ணங்கள் புதுமையாக இருந்தால் வாசகர்கள் தானாகவே அந்தப் பதிவைப் படிப்பார்கள்.

ஆனாலும் இங்கும் சில வரைமுறைகள் இருக்கின்றன. பதிவர்கள் தங்கள் கருத்துகள் எதுவானாலும் கூறலாம். ஆனால் அவை ஆபாசமாகவோ அல்லது தனி நபர் தாக்குதலாகவோ, வன்முறைகளைத் தூண்டுவதாகவோ, ஒரு தேசத்தின் நலனுக்கு எதிராகவோ, இருக்கக் கூடாது.  இப்படி வரைமுறைகள் உண்டு.

இந்த வரைமுறைகளுக்கு உட்பட்டு பதிவர்கள் தங்கள் கருத்துக்களை எழுதலாம். அப்படி எழுதும் கருத்துகளுக்கு அவர்களே பொறுப்பு ஏற்கவும் வேண்டும். பதிவு எழுதுவது என்பது பிள்ளையைப் பெற்றுவிட்டு குப்பைத்தொட்டியில் போட்டு விட்டுப் போகும் சமாச்சாரமல்ல. ஒவ்வொரு பதிவர் எழுதும் கருத்துகளும் அவருடைய தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கும்.

பின்னூட்டங்கள் இடுபவர்கள் விளக்கம் கேட்கலாம். கருத்தை ஒட்டி விவரங்கள் கொடுக்கலாம். உங்கள் கருத்து தவறென்று சுட்டிக்காட்டலாம். அப்படிக் கூறப்பட்ட பின்னூட்டங்களுக்கு அந்தப் பதிவர் பதில் கூறலாம். கூறாமலும் விடலாம். அதை தன் பதிவில் போடலாம் போடாமலும் இருக்கலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.

பின்னூட்டமிடுபவர்கள் அந்தப் பதிவரைக் கலாய்க்க அல்லது சிண்டு முடிய அல்லது வீண் வம்பு வளர்க்க நினைக்கலாம். அப்படி வரும் பின்னூட்டங்களுக்கு அந்தப் பதிவர்  சரியான பதிலடி கொடுக்கக் கூடும். நான் அப்படித்தான் செய்கிறேன். பின்னூட்டமிடுபவர் என்ன நோக்கத்துடன் எழுதியிருக்கிறார் என்பதை அடையாளம் கண்டு அதற்குப் பொருத்தமான பதில் கொடுக்க நான் தயங்கியதே இல்லை.

பதிவுலகில் பதிவர்களின் நிஜ அடையாளம் காண்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலானோர் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைத்தே வைத்திருக்கின்றனர். அதனால் பின்னூட்டங்களை யார் எழுதுகிறார்கள் என்பதை கணிக்க முடிவதில்லை. அவர்கள் எழுதும் பின்னூட்டங்களை வைத்தே அதற்கு பதில் தர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதில் சில சமயங்களில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கு அப்படி அடையாளத்தை மறைத்து வைத்திருக்கும் பதிவர்களே காரணமாவார்கள்.

நான் படித்து பின்னூட்டம் இடும் பதிவுகளில் அந்தப் பின்னூட்டத்தை பிரசுரிப்பதோ நிராகரிப்பதோ அந்தப் பதிவரின் உரிமை. என் பின்னூட்டத்தை ஏன் நிராகரித்தீர்கள் என்று கேட்க முடியாது. இதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு அந்தப் பதிவில் பின்னூட்டம் இடாமல் இருந்து விட வேண்டியதுதான்.

பதிவுகளினால் பெரிய சமுதாயப் புரட்சி வெடித்து விடும் என்று நான் நம்பவில்லை. காரசாரமான விவாதங்கள் நடக்கலாம். அவ்வளவுதான். சில நாட்களில் அது நீர்த்துப்போகும். ஏதோ பொழுதைப் போக்க ஒரு வழி என்கிற அளவில்தான் பதிவுகளை நான் உபயோகப்படுத்துகிறேன். மறைமுகமான கிண்டலும் நகைச்சுவையும் என் பதிவுகளில் கையாள்கிறேன். இதில் ஒரு சோகம் என்னவென்றால் பலருக்கு அந்த நகைச்சுவையை அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை.

நான் வம்புச்சண்டைக்குப் போவதில்லை. ஆனால் வந்த சண்டையை விடுவதுமில்லை. அதற்கு நான் பிறந்த ஊர், இனம், வளர்ந்த சூழ்நிலை ஆகியவைகளே காரணம். அதற்காக நான் வருந்தவில்லை. என் பாணியை மாற்றவும் போவதில்லை. மாற்ற நினைத்தாலும் பழகின தோஷம் அவ்வளவு சீக்கிரம் மாறாது.  நான் தவறு செய்திருந்தால் அந்த தவறுக்காக மன்னிப்பு கேட்க தயங்குவதில்லை. ஆனால் காரணமில்லாத குற்றச்சாட்டுகளைக் கண்டு சும்மாவும் இருக்கமாட்டேன்.

நடப்பவை நடக்கட்டும். நடப்பவை நன்றாகவே இருக்கட்டும்.

வியாழன், 15 ஜனவரி, 2015

அறிவியல் பதிவு எண் 1

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

                                        

மூடத்தனமான பதிவுகள் எழுதி அலுத்து விட்டது. ஆகவே என்னுடைய படிப்பிற்குத் தகுந்த மாதிரி அறிவியல் பதிவுகளையும் அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். அந்த வரிசையில் இது முதல் பதிவு.

இந்தப் பதிவிற்குண்டான ஆதாரங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து திரட்டப்பட்டவை. லைப்ரரிக்குப் போக முடிவதில்லை. அதனால்தான் இந்த உத்தி.

                                                         

முன்னுரை:

அமெரிக்காவில் பெர்க்கிலி என்னுமிடத்திலுள்ள கலிபோர்னியா யூனிவர்சிடியில் வேலை பார்க்கும்  புரொபசர் ரேங்கில் உள்ள ஒரு ஆராய்ச்சி தம்பதியினர் தங்கள் சபாடிகல் லீவில் இந்தியாவிற்கு வந்திருந்தார்கள். சென்னை வந்த அவர்கள் மகாபலிபுரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு நாள் அங்கு சென்று அங்குள்ள சிற்பங்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய கைடு, குரங்கு பேன் பார்க்கும் சிற்பத்தை அவர்களுக்கு காட்டினான். இது என்ன என்று கேட்டதற்கு அவன் தன் அரைகுறை ஆங்கிலத்தில் " மங்கி பேன் சீயிங்க்" (குரங்கு பேன் பார்க்குது) என்று சொன்னான். அவர்களுக்கு "பேன்" என்றால் என்னவென்று தெரியவில்லை. "வாட் ஈஸ் பேன்" என்றார்கள்.

நம்ம ஆள் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என்னென்னமோ சொல்லியும் அவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை. அவர்கள் கடைசியாக ஒரு பேனைக் காட்டச் சொன்னார்கள். கைடு அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கூப்பிட்டு ஒரு பேனைக் காட்டுமாறு கேட்டுக்கொண்டான். அவள் உடனே தன் தலையிலிருந்து ஐந்தாறு பேன்களை எடுத்து அந்த புரொபசர் அம்மாவிடம் கொடுத்தாள்.

                                  

அந்த வெள்ளைக்காரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தலையில் ஒரு பயலாஜிகல் சிஸ்டமே இருக்குதே என்று வியந்தாள். ஆஹா, நம் ஆராய்ச்சிக்கு ஒரு அருமையான சப்ஜெக்ட் கிடைத்தது என்று இருவரும் ஆனந்தப் பட்டார்கள். ஊருக்குப் போனதும் இதைப் பற்றி ஆராய்ச்சித் திட்டம் போட்டுவிடவேண்டியதுதான் என்று முடிவு செய்து ஊருக்குத் திரும்பினார்கள்.

ஆதாரம்:
George Krucik, MD, MBA
dr george krucik
George provides clinical review consulting services for Healthline.com.  He has a dual career in both medicine and information technology. He practiced primary care medicine in the Bay Area for over 14 years and has served in an executive capacity for several public software companies including Autodesk Australia and EleTel. He has designed and brought to market healthcare applications as a senior product manager atsalesforce.com and Healthline.com.
George graduated with a BS in Computer Science and Mathematics and an MD from the University of Manitoba, in Canada. He recently graduated with an MBA from the University of California

ஆய்வுத்திட்டமும் களப்பணியும்

இந்த ஆராய்ச்சி "தமிழ் நாட்டில் பெண்மணிகளின் தலைப்பேன் ஆராய்ச்சி" என்று பெயர் பெறும்.

களப்பணி இந்திய துணைக் கண்டத்திலுள்ள தமிழ்நாட்டில் நடைபெறும். களப்பணிக்காக 100 உள் நாட்டு உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கொடைக்கானலில் உள்ள கார்ல்டன் ஓட்டலில் இரண்டு வாரப் பயிற்சி அளிக்கப்படும்.

ஒவ்வொருவரும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் அனுப்பப் படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தலா 1000 பெண்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஆராய்ச்சிக்காக தயாரிக்கப்படும் கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் பெற்று அதை பதிவு செய்வார்கள்.

இந்த விவரங்கள் அன்றன்று இணையம் மூலமாக கலிபோர்னியா யூனிவர்சிடிக்கு அனுப்பிவைக்கப்படும். அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தகவல்களைத் தொகுத்து, பகுத்து, வகுத்து, கழித்து, கூட்டி உபயோகமான முடிவுகள் எடுப்பார்கள். இந்த முடிவுகள் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

அவ்வாறு ஒப்புதல் பெற்றபிறகு இந்த முடிவுகள் சர்வதேச விஞ்ஞானக் கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சர்வதேச விஞ்ஞானிகளால் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். இந்த அறிக்கை ஒரு லட்சம் பிரதிகள் தயாரிக்கப்பட்டு உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்களுக்கும், அனைத்து நாட்டு அரசுகளுக்கும், அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் அனுப்பப்படும். இதில் முடிவு செய்யப்பட்ட சிபாரிசுகளை  அனைத்து அரசு நிர்வாகங்களையும் நடைமுறைப் படுத்த அறிவுறுத்தப்படும். அதற்கு வேண்டிய செலவுகளுக்கான மானியம் உலக வங்கி கடனாக வழங்கும்.

ஆய்வு:

களப்பணியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

முடிவுகள்.

1. இந்த விஷயத்தைப் பற்றி ஆயிரம் வருடங்களுக்கு முன்னரேயே பாண்டிய மன்னன் காலத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது.
பெண்களின் கூந்தலில் பேன்கள் வருவதற்குக் காரணம் அந்தக் கூந்தலில் இயற்கையாகவே உள்ள நறுமணம்தான் காரணமா அல்லது மலர்கள் சூடிக்கொள்வதால் ஏற்பட்ட செயற்கை மணம் காரணமா என்று பாண்டிய மன்னன் கேட்டதாக  செப்பேட்டில் பதிவாகியிருக்கிறது.

அதற்கு சிவனே பாட்டெழுதி கோயில் பூசாரியிடம் கொடுத்தனுப்பியதாகவும்  அதனை ஒத்துக்கொள்ளாத அவைப்புலவர் தருமி என்பவர் (பதிவர் தருமி அல்ல) அந்தப் பூசாரிக்கு கொடுக்கவேண்டிய பரிசை மன்னன் கொடுப்பதைத் தடுத்ததாகவும் அதே செப்பேட்டில் கூறப்பட்டிருக்கிறது.

பின்பு சிவனே நேரில் வந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்தி அந்த தருமி மேல் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆகவே தமிழர்களும் ஆராய்ச்சி மனப்பாங்கு கொண்டவர்கள் என்று நிரூபணமாகிறது.

2. தமிழ்நாட்டுப் பெண்களின் தலைகளில் பேன் ஏன் உண்டாகிறது என்று ஆராய்ந்ததில் கீழ்க்கண்ட காரணங்க்ள புலனாகின்றன.

        2.1 தமிழ்நாட்டுப்பெண்கள் வெள்ளிக்கிழமை மட்டுமே தலைக்குக் குளிக்கிறார்கள். மற்ற நாட்களில் தலைக்கு குளிப்பதில்லை. அதனால் தலையில் அழுக்கு சேர்ந்து பேன் உற்பத்தியாகிறது. பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் தினமும் தலைக்குக் குளிப்பதால் அவர்கள் தலையில் பேன் பிடிப்பதில்லை.

       2.2 தமிழ்நாட்டுப்பெண்கள் தங்கள் தலைமுடிக்கு நிறைய எண்ணை தடவி இறுக்கமாகப் பின்னிக் கொள்கிறார்கள். அதனால் தலைமுடிக்கு காற்றோட்டம் போதுமான அளவு கிடைக்காமல் பேன்கள் நன்றாக இனப்பெருக்கம் அடைகின்றன.

        2.3 தவிர இந்தப் பெண்கள் அலங்காரம் என்ற பெயரில் கூந்தல் நிறைய பலவிதமான வாசனைகள் கொண்ட மலர்களை வைத்துக்கொள்கிறார்கள். இந்த வாசனைகள் பேன்களுக்கு மிகவும் பிடித்த வாசனையாகும். இதனாலும் பேன்கள் பெருகி வளர்கின்றன.

இந்தப் பழக்கங்களையெல்லாம் பாரம்பரிய வழக்கங்கள் என்று தமிழ்நாட்டுப்பெண்கள் பாதுகாத்து வருகிறார்கள். இதை அவர்கள் மாற்றவேண்டும். இந்த மாற்றத்திற்கு தமிழ்நாட்டு அறிஞர்களும் பதிவர்களும் உதவ வேண்டும்.

      2.4 தற்கால நாகரிக யவதிகள் இந்தப் பழக்கத்திலிருந்து மாறிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டுக் குளித்து முடியை அப்படியே காற்றோட்டமாக விட்டு விடுகிறார்கள். தவிர தலைக்கு எந்த எண்ணையும் தேய்ப்பதில்லை. எந்த விதமான மலர்களும் வைத்துக்கொள்வதில்லை. இவர்கள் பேன் தொல்லை இல்லாமல் பொடுகுத் தொல்லையினால் மட்டுமே அவதிப்படுகிறார்கள்.
பின்தொடர்ச்சி:

இந்த ஆராய்ச்சி இத்துடன் முடிவு பெறவில்லை. இது சம்பந்தமாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும். இதை தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக் கழகம் எடுத்து செய்யுமென்று எதிர் பார்க்கிறோம்.