திங்கள், 11 மே, 2015

கம்ப்யூட்டர் காப்பி

                                       Image result for டவரா காப்பி
நான் காலையில் தினமும் சுமார் மூன்று மணி வாக்கில் எழுந்து விடுவேன். காலை எழுந்தவுடன் படிப்பு என்ற முது மொழிக்கேற்ப கம்பஃயூட்டர் படிப்பில் உட்கார்ந்து விடுவேன். அப்போது சொஞ்ச நஞ்சம் இருக்கும் தூக்கக் கலக்கம் போக நானே ஒரு காப்பி போட்டுக்குடிப்பேன். அதுதான் கம்ப்யூட்டர் காப்பி.

தேவைப்படும் பொருட்கள்.

1. இரண்டு ஸ்பூன் நெஸ்லெ பால் பவுடர்

2. ஒரு ஸ்பூன் புரூ இன்ஸ்டன்ட் காப்பித்தூள்.

3. அரை ஸ்பூன் சர்க்கரை.

4. ஒரு டம்ளர் தண்ணீர்.


தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சர்க்கரையைப் போட்டு பொருத்தின கேஸ் அடுப்பின் மீது வைக்கவும். தண்ணீர் சிறிது சூடானதும் இரண்டு ஸ்பூன் பால் பவுடரை அதில் பரவலாகப் போடவும்.

ஒரு ஸ்பூன் புரூ காப்பி பவுடரை டம்ளரில் போடவும். இப்போது பால் பவுடர் நன்கு கரைந்து பால் கொதிக்க ஆரம்பிக்கும். அதை எடுத்து காப்பித்தூள் போட்டிருக்கும் டம்ளரில் ஊற்றி இரண்டு தடவை ஆற்றவும்.

அவ்வளவுதான். கம்ப்யூட்டர் காப்பி தயார். மொத்தம் மூன்று நிமிடம் ஆகும். 

சனி, 9 மே, 2015

காப்பி குடிப்பது எப்படி?

ஆன்மா-ஆத்மா விசாரத்தைக் கொஞ்ச நாள் தள்ளி வைக்கலாம். இப்போது பூலோக சோமபானம் என்று சொல்லக்கூடிய காப்பியை எப்படி தயாரித்துக் குடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

காப்பி என்றால் பிராமணாள் ஆத்துக் காப்பிதான் காப்பி. மற்றதெல்லாம் கழுதண்ணிதான். அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

நல்ல அரேபிகா காப்பிக்கொட்டைஒன்று அல்லது இரண்டு கிலோ வாங்கி ஆத்தில் ஸ்டாக் வைத்துக்கொள்ளவேண்டும். காலையில் எழுந்ததும் குமுட்டி அடுப்பைப் பற்றவைத்து அதில் வாணலியை வைத்து அன்றைக்குத் தேவைப்படும் அளவிற்கு காப்பிக்கொட்டைகளை எடுத்து அதில் போட்டு வறுக்கவேண்டும். காப்பிக்கொட்டை நன்றாக வறுபட்டவுடன் ஒரு வாசனை வரும். அப்போது அதை இறக்கி வைத்து விட்டு அடுப்பில் வெந்நீர் வைக்கவேண்டும்.

                                Image result for hand grinder coffee
இந்த மாதிரி காப்பிக் கொட்டையைக் கையால் அரைக்கும் ஒரு இயந்திரம் அன்று எல்லா பிராமணாள் வீட்டிலும் தவறாது இருக்கும். நான் முன்பு சொன்ன மாதிரி வறுத்த காப்பிக்கொட்டையை இந்த இயந்திரத்தில் போட்டு அரைத்து வரும் காப்பிப்பொடியை அப்படியே காப்பி பில்ட்டரில் போடவேண்டும்.

      Image result for coffee filterImage result for coffee filter

காப்பித்தூளை பில்ட்டரில் போட்ட பிறகு ரெடியாக இருக்கும் வெந்நீரை அதில் ஊற்றி மூடி வைத்து விடவேண்டும். இப்போது காப்பி டிகாக்ஷன் இறங்க ஆரம்பிக்கும். அது சொட்டு சொட்டாக விழும் சப்தம் கேட்கும். அப்படிக் கேட்காவிட்டால் பில்ட்டரை கரண்டியால் இரண்டு தட்டுத் தட்டவும்.

இப்போது பால்காரன் பால் சப்ளை செய்திருப்பான். கேன் பால் அல்ல. பசு மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்து நம் கண் முன்னால் பால் கறக்கும் பாத்திரத்தில் தண்ணீர் இல்லை என்று காட்டிப் பின்பு கறந்து கொடுக்கும் பால். இதை அடுப்பில் வைத்து காய்ச்சவேண்டும். பால் பொங்குவதற்கு சற்று முன்னால் அதை இறக்கி காப்பிப் பாத்திரத்தில் தேவையான அளவு ஊற்றி, அதில் இப்போது ரெடியாக இருக்கும் காப்பி டிகாக்ஷனை அளவாக ஊற்றி, அளவான சீனி சேர்த்து, இரண்டு தடவை ஆற்றிக் கலக்கி, டபரா செட்டில் ஊற்றிக் கொடுத்தால் வீடே காப்பி வாசனையில் கமகமக்கும்.

                                Image result for டபரா காப்பி

இந்தக் காப்பியைக் குடிப்பதே ஒரு கலை. டம்ளரை அலுங்காமல் வெளியில் எடுத்து அதில் இருக்கும் காப்பியை டபராவில் ஊற்றி, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக டம்ளரில் ஊற்றி சாப்பிடுவதே ஒரு பேரின்பம். சாப்பிடும்போது உஸ்ஸ்ஸென்று ஒரு சவுண்ட் கொடுக்கவேண்டும். இதுதான் காப்பி சாப்பிடும் முறை.

வெள்ளி, 8 மே, 2015

இந்த வருட பிளஸ் 2 முடிவுகள்.

                                            Image result for +2 students
நேற்று பிளஸ் 2 முடிவுகள் வெளியாகின. என் பேரனின் மார்க்குகள் அவ்வளவு தரமானதாக இல்லை. இந்த வருடம் பொதுவாகவே எல்லோரும் கம்மி மார்க்தான் என்று சொல்லுகிறார்கள். வீட்டில் எல்லோருக்கும் வருத்தம். ஆனால் என்ன செய்ய முடியும்? இருக்கும் மார்க்குக்கு தகுந்தமாதிரி மேற்படிப்பைத் தொடர வேண்டியதுதான்.

ஆத்மாவை அறிந்து கொள்ள பலருக்கும் விருப்பமில்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த மனிதப் பிறவி எடுத்ததே தன்னை அறிவதற்காகத்தான் என்று ஆன்மீகத் தலைவர்கள் காலம் காலமாக கூறிக்கொண்டு வருகிறார்கள்.

தன்னை அறிவது என்பது ஆத்மாவை அறிவதுதான். அதை மிகவும் எளிதாக சிறு குழந்தைக்குக் கூடப் புரியும் வகையில் கொடுத்தால் கொள்வாரில்லை. போகட்டும், ஆத்மாவின் தலைவிதி இன்றைய நாளில் அவ்வளவுதான்.

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஆத்மா எனப்படுவதும் உயிர் எனப்படுவதும் ஒன்றுதானா அல்லது வேறு வேறா? வேலை இருப்பவர்கள் இந்தக் கேள்வியை விட்டு விட்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கவும். மற்றவர்கள் மட்டும் இதை யோசித்து மூளையைக் குழப்பவும்.

நாளையிலிருந்து ஏதாவது உருப்படியான பதிவு போடுவதற்கு சப்ஜெக்ட் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

வியாழன், 7 மே, 2015

ஆத்மாவும் அனாத்மாவும்

                                       Image result for ஞானம்
வாசகர்கள் என்னை மன்னிக்கக் கோருகிறேன். இன்று +2 ரிசல்ட் வருவதால் என் மூளை வேலை செய்ய மறுக்கிறது. அதனால் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு. இந்தப் பதிவைப் படித்து மூளை கலங்கினால் கம்பெனி பொறுப்பேற்காது.

ஆத்ம ஞானம் என்பது எது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ; எதனால் இந்த உலகம் பிரகாசிக்கிறதோ; அந்த பிரம்மவடிவாகவே உலகம் உள்ளதோ; இப்பிரபஞ்சம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. அதைப் பற்றி அறிவதே ஆத்ம ஞானம் ஆகும். இந்த ஆத்ம ஞானத்தை அறிந்தவரை ஆத்ம ஞானி என்பர்.
தங்கத்தால் வளையல், கடுக்கன், மோதிரம் போன்ற நகைகள் செய்யப்படுகிறது. ஆபரணமாக ஆவதற்கு முன்னும், அவை உருக்கப்பட்டு ஆபரணத்தின் தன்மையை இழந்துவிட்ட போதும், தங்கம்தான், இடைப்பட்ட காலத்தில், பெயரும், உருவமும் பலவாக கூறப்படுகிறது. அது போல, உலகத் தொடக்கம் - நடு - முடிவு எல்லாம் இறைவனே.
வேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த குருவின் வழியாக கேட்பது சிரவணம், கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல்மனனம், கேட்டதை மனதில் அசைபோடுதல் (நிதித்யாசனம்), வேதம், குரு, சாத்திரங்கள், யுக்தி, அனுபவம் முதலிய சாதனங்கள் வழியாக மட்டுமே ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மாவை விசாரனை செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமயமான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும்.
இது போன்ற அனாத்மா (ஆத்மாவின் எதிர்மறை பொருள்) பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் ஆத்மா அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், நீர், காற்று, நெருப்பு, சப்தம், சுவை, தொடு உணர்வு, முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும்முக்குணங்களின் சாம்ய அவஸ்தையான பிரகிருதியும் (இயற்கை) ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, ஆத்மா ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்.

துயரத்திற்கு காரணம் தன்னைப் பற்றிய அறியாமை எனும் அஞ்ஞானமே. ஞானிகள் துயரப்படுவதில்லை. ஞானத்தினால் வாழ்க்கைத் துயரத்திலிருந்து விடுபடலாம். ஆத்மாவைப் பற்றிய அறியாமையால் மனிதர்கள் துயரப்படுகிறார்கள். ஆத்மா நிலையானது, மாறாதது, என்றும் நித்தியமாக இருப்பது. ஆனால் அனாத்மா எனும் இந்த உடல் பிறப்பு, வளர்வு, தேய்வு மற்றும் இறப்புடன் கூடியது. அனாத்மா அழிவுக்கு உட்பட்டது என்று ஆத்ம-அனாத்மா தத்துவம் விளக்கப்படுகிறது.


செவ்வாய், 5 மே, 2015

சமூக அவலங்கள் - ஒரு கற்பனை

                                  Image result for வீதிச் சண்டை
நம் கண் முன்னால் நடக்கும் பல காரியங்கள் சமூக விரோதச் செயல்கள் என்று நாம் உணர்ந்தாலும் அவைகளைத் தட்டிக் கேட்க நம்மால் முடிவதில்லை. நாம் ஒருவர் மட்டும் அதைத் தட்டிக்கேட்பதினால் என்ன ஆகிவிடப் போகிறது? இந்த நாடே நம் ஒருவரது செய்கையால் மாறி விடப்போகிறதா என்ற எண்ணம்தான் நம் மனதில் முன் நிற்கிறது.

ஒரு  அசம்பாவிதம் அல்லது ஒரு அக்கிரமம் நம் கண் முன்னால் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்தவுடன் நாம் என்ன நினைக்கிறோம்? இது ஒரு அக்கிரமம், இதைத் தடுப்போம் என்று தோன்றுகிறது. ஆனால் அடுத்த நொடி, இதை நாம் தடுக்கப் போனால் சுற்றி இருப்பவர்கள் நம் உதவிக்கு வருவார்களா? நம் ஒருவரால் மட்டும் இந்தக் காரியத்தைத் தடுக்க முடியுமா? அப்படித் தடுக்கப்போய் நமக்கு ஏதாவது ஒரு தீங்கு வந்தால் அதைத் தடுப்பது யார்?

அந்த மாதிரி நாம் பாதிக்கப்பட்டால் நம் வீட்டிலுள்ளவர்கள் என்ன சொல்வார்கள்? "வெளியில் போனால் உங்கள் வேலையைப் பார்த்து விட்டு வருவீர்களா? ஊர் சண்டையில் எதற்குத் தலையிட்டு வீண் வம்பை விலைக்கு வாங்கி வந்திருக்கிறீர்கள்? ரோட்டில் அத்தனை ஜனங்கள் இருந்தார்களே? அவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு? " இது நம் வீட்டில் நமக்குக் கிடைக்கும் அர்ச்சனை.

அந்த நிகழ்வில் ஒரு வேளை போலீஸ் வந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அங்கு இருக்கும் எல்லோரையும் போலீஸ் வேனில் அள்ளிப் போட்டுக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய் விடுவார்கள். போலீஸ்காரர்களுக்கு ஒரு சட்ட விரோதமான காரியம் நடக்கும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளே. அப்படி அள்ளிக்கொண்டு போகும்போது அவர்கள் யார் குற்றவாளி, யார் என்ன செய்தார்கள் என்றெல்லாம் அங்கு வைத்து விசாரணை செய்ய மாட்டார்கள். அவர்களுக்குப் போலீஸ் ஸ்டேஷன்தான் பாதுகாப்பான இடம். அது அவர்கள் கோட்டை.

அங்கு வைத்துத்தான் அவர்கள் ஒவ்வொருவராக விசாரிப்பார்கள். இந்த விசாரிப்பு உடனடியாக நடந்தாலும் நடக்கும், இல்லை தாமதானாலும் பல மணிகள் தாமதமாகலாம். அந்த போலீஸ் நலைய இன்ஸ்பெக்டருக்கு வரும் வேலைகளைப் பொறுத்து இந்த விசாரணை நடக்கும். அப்போது நீங்கள் நடந்ததைச் சொல்லி, நீங்கள் அந்த அக்கிரமத்தைத் தடுப்பதற்காகத்தான் அந்த நிகழ்வில் தலையிட்டீர்கள் என்று சொன்னீர்களேயானால், அந்தப் போலீஸ்காரர்களும், உங்கள் வீட்டில் கேட்கும் அதே கேள்விகளைத்தான் கேட்பார்கள்.

அந்த சம்பவம் நடக்கும் இடத்திற்கு எதற்காகப் போனீர்கள்? அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களா?  அந்த இடத்தில் எத்தனையோ பேர் இருந்தார்களே, அவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன் வந்தது? இத்தியாதி, இத்தியாதி. போலீஸ்காரர்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள பல விதமான கேள்விகள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

இதற்குள் உங்கள் வீட்டிற்கு தகவல் போய், உங்கள் வீட்டிலிருந்து ஒரு பட்டாளமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விடும். அவர்கள் எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் வழியும். அவர்களும் இந்தப் போலீஸ்காரர்கள் கேட்ட கேள்விகளையே திரும்பவும் கேட்பார்கள். அங்கு ஏன் போனிர்கள்? எல்லோரும் சும்மா இருக்க நீங்கள் மட்டும் ஏன் இந்த வம்பிற்குப் போனீர்கள்? இத்தியாதிகள்.

இதையெல்லாம் பார்த்த பிறகு உங்களுக்கே நீங்கள்தான் ஏதோ செய்யத் தகாத செயலைச் செய்து விட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதாகத் தோன்ற ஆரம்பித்து விடும். இந்த களேபரங்கள் எல்லாம் நடந்து முடிந்து நீங்கள் உண்மையில் நிரபராதி என்று போலீஸ்காரன் உணர்ந்து உங்களை வீட்டிற்குப் போகச் சொல்லும்போது அவன் கடைசியாகச் சொல்லும் வார்த்தை "பெரிசு, இந்த மாதிரி வம்புக்கெல்லாம் இனிமேல தலையிடாதீங்க" என்பதாகத்தான் இருக்கும். அதுபோக நம் வீட்டாருக்கும் ஒரு வார்த்தை சொல்லுவான். "பெரிசைத் தனியாக எங்கேயும் போக விடாதீங்க" என்பான். இதுதான் "டாப்" புத்திமதி.

இது எல்லாம் முடிந்து நீங்கள் வீட்டிற்கு வந்த பிறகு, தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு ஒரு சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்த பிறகுதான் மற்ற வீட்டு வேலைகள் ஆரம்பிக்கும், சொந்தக்காரர்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க வருவார்கள். உங்கள் வீர தீரப் பிரதாபங்களை எல்லாம் கேட்ட பிறகு அவர்களும் இந்த மாமூல் கேள்விகளைக் கேட்பார்கள். அங்கு ஏன் போனீர்கள்? இத்தியாதி. இத்தியாதி.

இத்தோடு முடிந்து விடுமா? கேஸ் பைல் தயார் செய்து கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டால், அதில் நீங்கள்தான் முக்கிய சாட்சியாகும். ஒவ்வொரு வாய்தாவிற்கும் நீங்கள் கோர்ட்டுக்குப் போய்வர வேண்டியிருக்கும். உங்களுக்குத் துணையாக ஒருவர் வரவேண்டியிருக்கும். இல்லையென்றால் நீங்கள் போய் வருவதற்குள் வேறு வம்பு ஏதாவது சம்பாதித்துக் கொண்டு வந்து விடுவீர்கள் என்ற எண்ணம் உங்கள் குடும்பத்தினரின் மனதில் ஏடிக்கொண்டே இருக்கும். கோர்ட் கேஸ் முடிய பல வருடங்கள் ஆகலாம். அதற்குள் உங்கள் கேசை சித்திரகுப்தன் முடித்தாலும் முடித்து விடலாம்..

மொத்தத்தில் உங்கள் வாழ்க்கை, கொலைக் குற்றம் செய்து விட்டு பத்து வருடம் ஜெயிலுக்குப் போய் வந்தவன் நிலைக்குத் தள்ளப்படும். உங்கள் வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடும். உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு கைதியாக நடத்தப்படுவீர்க்ள. இது நான் என் அனுபவத்தில் பார்த்த பல சம்பவங்களின் தொகுப்பு. ஆனால் இது மாதிரிதான் நிச்சயம் நடக்கும்.

இந்த கற்பனைகள் ஏன் வந்தன என்றால் தினமும் செய்தித்தாள்களில் கற்பழிப்புச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றனவே, நம் கண் முன்னால், நம் துரதிர்ஷ்டவசமாக, அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் நாம் என்ன செய்யவேண்டும் என்று யோசித்தேன். அதனால் வந்த விளைவுதான் இது.
இதைப் படிக்கும் அன்பர்களும் தங்களை கற்பனைக் குதிரைகளைத் தட்டி விட்டு யோசியுங்கள். உங்கள் குடும்ப அங்கத்தினருடன் விவாதியுங்கள்.
நல்ல கருத்துகள் உதித்தால் அதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஞாயிறு, 3 மே, 2015

இந்திய நாட்டின் புற்று நோய்

                                        Image result for தலித் குடியிருப்புகள்
நாட்டிற்கே நோய் வருமா? வரும். வந்து வெகு காலம் ஆகி விட்டது. இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நம்மில் பல பேர் அதை உணராமல் அல்லது நம் ஆறுதலுக்காக அதை மறந்து விட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம் வீடுகளில் யாராவது ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் ஓடிப்போய் விட்டாள் என்று வைத்துக் கொள்வோம். நம் வீட்டில் நடக்காத வரையில் இதைப் பற்றிக் கேள்விப்பட்டால் "அடப் பாவமே, அப்படியா நடந்து விட்டது" என்று கூறுவதோடு அதை மறந்து போகிறோம். நமக்கு வேண்டியவர்களாக இருந்தால் நேரில் போய் துக்கம் விசாரித்து விட்டு வருவதோடு சரி.

நமக்கு வேண்டாதவர்களாய் இருந்தால் "பெண்ணை வளர்த்த லட்சணத்தைப் பார்" என்று வாய் கூசாமல் பேசுவோம். இதே காரியம் நம் வீட்டிலேயே நடந்திருந்தால் நாம் கூனிக் குறுகிப் போய் விடுவோம். அதைப் பற்றிப் பேசவே வெட்கப்படுவோம். இது நம் குடும்பத்திற்கு ஒரு அவமானச் சின்னமாக ஆகி விடும். வெளி விசேஷங்களில் கலந்து கொள்ள மாட்டோம். மற்றவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக மாட்டோம்.

இப்படிப்பட்ட ஒரு அவமான உணர்ச்சியை அனுபவித்தால்தான் அது எவ்வளவு கொடுமையானது என்று தெரியும். அப்படிப்பட்ட ஒரு அவமானச்சின்னத்தைச் சுமந்து கொண்டு இந்நாட்டில் 20 சதம் மக்கள் வாழ்கிறார்கள். இந்த உண்மையை நாம் என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? இல்லையே?

திடீரென்று இந்த ஞானோதயம் எனக்கு எப்படி உதயமானது என்று கேட்கிறீர்களா? என்னுடைய ஒரு பதிவில் என்னுடைய கம்யூனிடி சர்ட்டிபிகேட்டைப் பிரசுரித்திருந்தேன். அது ஒரு தற்செயலாக நடந்த செயல். மற்ற சர்ட்டிபிகேட்டுகளுடன் இதுவும் சேர்ந்து விட்டது. இதைப் பார்த்த ஒருவர் உங்கள் ஜாதியைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன வந்தது, இதே மாதிரி தலித் மக்கள் அவர்கள் ஜாதியைச் சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தார்.

அப்போதைக்கு ஏதோ சப்பைக் கட்டு பதில் சொன்னேனே தவிர, என் மனதில் இதைப் பற்றி தீவிரமான சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. கூகுளில் தலித்துகளைப் பற்றி ஏதாவது கருத்துகள் இருக்கிறதா என்று தேடினேன். சில கிடைத்தன. அவைகளைப் படித்த போதுதான் நம் நாட்டில் இத்தகைய புற்று நோய் இருப்பதை உணர்ந்தேன். நான் என்னமோ திடீரென்று தலித்துகளுக்கு ஆபத்பாந்தவனாக ஏன் மாறினேன் என்று கேள்விகள் கேட்டால் எனக்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனாலும் இந்த அவலம் என் மனதில் பல நாட்களாக இருந்து உறுத்திக்கொண்டு வருகிறது.

நம் நாடு சுதந்திரம் பெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு பெரிய நாட்டின் அரசே இதை ஒழிக்க எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இருந்தாலும், இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இந்த தீண்டாமை எனும் புற்று நோயை ஒழிக்க முடியவில்லையே. ஏன் ? இது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இதற்கு இந்நாட்டின் அனைத்து தரப்பினரும் காரணமே. இருந்தாலும் இந்த நோய்க்குத் தீர்வு என்னவென்று புரியவில்லை? சமூக ஆர்வலர்கள் இதைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்று நான் ஆராயவில்லை. என் மனதில் பட்டதைக் கூறியிருக்கிறேன்.

சனி, 2 மே, 2015

என்னுடைய பலஹீனம்

                                   Image result for கோவில்
நேற்று நானும் என் மனைவியும் எங்கள் ஊரில் (சும்மா ஒரு ஐந்து கி.மீ. தூரம்தான்) ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்குப் போயிருந்தோம். அங்கே கோயில் வளாகத்தில் நான் கொஞ்ச தூரம் சென்று விட்ட பிறகு, என்னைப் பார்த்த ஒரு பெண்மணி, வேறு ஒருவரை அனுப்பி என் பெயரைச் சொல்லி, அவர்தானா என்று விசாரித்து விட்டு என்னைக் கூப்பிட்டுக்கொண்டு வரச் சொன்னார்.

இது என்னடா விபரீதம், என் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு வரச்சொன்னது யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே சென்றேன். அந்தப் பெண்மணி என்னையும் என் மனைவியையும் மிகவும் அன்னியோன்யமாக நலம் விசாரித்தார்கள். இது யாராக இருக்கும் என்று நான் என் மண்டையைப் பலமாக ஆட்டி யோசித்தும் அடையாளம் பிடிபடவேயில்லை.

எப்படியோ சமாளித்து பேசிவிட்டு விடை பெற்றோம். முதலில் என்னைக் கூப்பிட்ட அம்மாள், அவர்கள் பிறந்த தோட்டத்தின் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட்டார்கள். ஆனாலும் அவர்களின் அடையாளம் சட்டென்று மனதில் தோன்றவில்லை.

பிறகு திரும்பி வரும்போதுதான் ஒரு மாதிரி கணக்குப் போட்டுப் பார்த்ததில், ஆஹா, அவர்களல்லவா இவர்கள் என்று அடையாளம் துலங்கியது. அவர்கள் என் மனைவியின் ஒன்று விட்ட அக்காளுக்கு நாத்தனார். அவர்களின் கணவர் எனக்கு பால்யத்திலிருந்து நண்பர். அவர்களின் அண்ணன் என்னுடன் கல்லூரியில் படித்தவர்.

மிகவும் நெருங்கிய உறவுதான். ஆனாலும் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. இரவு முழுவதும் இதே யோசனையாகப் போய்விட்டது. எனக்கு இந்த மாதிரி உறவுக்காரர்களை சரியாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. இது என் ஒரு பெரிய பலஹீனம்.

ஆனால் சிலர், ஒருவரை ஒரு முறை பார்த்துப் பேசினால் போதும், பத்து வருடங்கள் கழித்து பார்த்தால் கூட, நீங்கள் இன்னார்தானே என்று பெயரைச் சொல்லி அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அது ஒரு கொடுப்பினைதான். 

வெள்ளி, 1 மே, 2015

ஜீபூம்பா, ஓடிப்போ.

                                                  Image result for vanishing magic tricks
மந்திரவாதிகளின் ஜாலங்களில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை அந்த ஜாலவித்தைகள் மகிழ்ச்சியையே தருகின்றன. தொப்பியிலிருந்து முயலை வரவழைப்பது இன்றும் ஆச்சரியமே. அதே போல் நின்றுகொண்டிருக்கும் ஒரு மனிதனை மந்திரவாதி அவனுடைய மந்திரக்கோலால் ஒரு தட்டு தட்டி "ஜீபூம்பா, மறைந்து போ" என்றவுடன் அந்த மனிதன் மறைந்து போவான்.

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இந்த மறைந்து போகச் செய்யும் வித்தையே. சிறுகுழந்தைகளுக்கு நாமும் சில சமயம் இந்த வித்தையைக் காட்டி அதை அழவைத்திருக்கிறோம். ஆனால் அது நம் கைத்திறன். ஒரு பொருளை வேகமாக மறைத்தால் குழந்தையினால் அதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.

அது போல் கணிணியில் ஒரு பைலை மவுசினால் தொட்டு "ஜீபூம்பா, மறைந்து போ" என்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விடுவதைப் பார்க்கிறோம். தினமும் நாம் இதைப் பல தடவை செய்கிறோம். ஆனால் இந்த வித்தையை நான் சமீபத்தில் புதிதாகப் பயில நேர்ந்தது. மிகவும் தெரிந்த  வித்தையானாலும் அந்த சமயத்தில் அது என் புத்திக்கு உரைக்கவில்லை. இன்னொருவர் சுட்டிக்காட்டிய பிறகுதான் அது எனக்குப் புலனாகியது.

சமீபத்தில் நான் அநாமதேயங்களைப் பற்றி ஒரு பதிவு போட்டது நண்பர்களுக்கு நன்றாக நினைவு இருக்கும். ஏனெனில் அந்தப் பதிவு கிளப்பிய நாற்றம் உலகமே பரவியது. சிலர் செய்த அக்கிரமங்களால் நான் என் சமநிலையையை இழந்தேன். கடுங்கோபம் என்னைப் பீடித்தது. அந்தப்பதிவில் என் கோபத்தை எல்லாம் கொட்டினேன். புலவர் ஐயா கூட சாந்தமடையுங்கள் என்று ஆறுதல் கூறினார்.

ஆனாலும் இரண்டு நாள் கழித்துத்தான் சமநிலை வந்தது. அந்த நாற்றம் பிடித்த பதிவை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் முத்து நிலவன் என்ற பதிவர் ஒரு எளிமையான யோசனை சொன்னார். அந்தப் பதிவை முழுமையாக "டெலீட்" செய்து விடுங்களேன் என்று கூறினார். எனக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது. அடுத்த விநாடி அந்தப்பதிவில் இருக்கும் "டெலீட்" பட்டனை மவுசினால் ஒரு சின்ன சொடுக்கு சொடுக்கினேன்.

அவ்வளவுதான். அடுத்த விநாடி மந்திரவாதி ஜீபூம்பா சொன்னவுடன் பொருட்கள் மறைவது மாதிரி இந்தப் பதிவு முற்றிலுமாக மறைந்து விட்டது. எங்கு போனது, எப்படிப் போனது என்ற தடயம் ஒன்று கூட இல்லை. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வீட்டின் தரையை சுத்தமாக டெட்டால் போட்டுத் துடைத்தது போல் உணர்ந்தேன்.

இதில் என்ன விசேஷம் என்னவென்றால் இந்த தீர்வு எனக்குத் தெரிந்திருந்தும் அதை இந்த சமயத்தில் உபயோகிக்கலாம் என்று என் புத்திக்கு உரைக்கவில்லை. அப்போதுதான் ஒரு உண்மையை உணர்ந்தேன். ஒரு பெரும் சிக்கலில் ஒருவன் சிக்கி இருந்தால் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு அவன் கண் முன்னால் இருந்தால் கூட அது அவனுக்குத் தெரியாது. வேறு ஒருவர் அதைச் சொன்னால்தான் அவன் அதை உணர்வான்.

ஆகவே பிரச்சினைகளில் சிக்கும்போது இன்னொருவரிடம் யோசனை கேட்டால்தான் அந்தப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இது நான் கற்ற பாடம்.

நண்பர்கள் அறிவுரையை ஏற்று என் தளத்தில் அனானி பின்னூட்டங்களை தடை செய்து விட்டேன். மேலும் பதிவிற்குப் பொருந்தாத பின்னூட்டங்களை பிரசுரிப்பது இல்லை என்ற முடிவும் மேற்கொண்டிருக்கிறேன். 

புதன், 29 ஏப்ரல், 2015

வயதாவதின் நன்மைகள்.

                                       Image result for மூன்று குரங்குகள்

நேற்றைய பதிவில் மகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் பொம்மை வைத்திருந்தார் என்று பார்த்தோம். அதில் ஒன்று கண்ணை மூடிக்கொண்டும், இன்னொன்று காதைப் பொத்திக்கொண்டும், மற்றொன்று வாயைப் பொத்திக்கொண்டும் இருக்கும்.

அந்த பொம்மைகளின் தாத்பரியம் என்னவென்றால் தீயதைப் பார்க்காதே. தீயதைக்கேட்காதே, தீயதைப் பேசாதே என்பதாகும். ஒருவன் நல்லவனாக வாழ அவன் இந்தக் கொள்கைகளை அனுசரிக்கவேண்டும்.

ஆனாலும் இளமை வேகத்தில் இதையெல்லாம் யோசித்து அனுசரிக்கும் பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை. மனிதனைப் படைத்த கடவுள் இதற்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்தியுள்ளார். இளமையில் அவன் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும், வயதான பின்பாவது அவன் இந்தக் குற்றங்களைச் செய்யாமல் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்த்துக்கொள்ளட்டும் என்று சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்.

முதலில் கண்களை எடுத்துக் கொள்வோம். வயதாக வயதாக கண் பார்வை மங்குகிறது. இது நம்மைப் படைத்தவன் ஏற்பாடு. இதை மனிதன் தன்னுடைய மூளூயினால் எப்படியோ ஓரளவு சரி செய்து காலத்தை ஓட்டுகிறான். ஆனாலும் கடைசி காலத்தில் அவனுக்கு முழுவதுமாக பார்க்க முடிவதில்லை. இப்போது அவனால் கெட்டது எதையும் பார்க்க முடியாதல்லவா?

இரண்டாவது காதுகளை எடுத்துக்கொள்வோம். அறுபது வயதானால் எல்லோருக்கும் காது கேட்கும் திறன் குறையும். நல்ல புண்ணியம் செய்த ஒரு சிலருக்கு சீக்கிரம் காது மந்தமாகி விடும். (காது நன்றாகக் கேட்கும் வயதானவர்கள் புண்ணியம் குறைவாக செய்திருக்கிறார்கள் எனக்கொள்க.) இதனால் அவர்கள் தீயவைகளைக் கேட்கும் வாய்ப்பு குறைந்து போகிறது.

மூன்றாவது வாய். இது இரண்டு வகைகளில் மனிதனுக்கு எதிரி. நாக்கு இளம் வயதில் ருசியை நன்கு அறிந்து கொள்வதினால் கண்டதையும் சாப்பிடத் தோன்றும். இரண்டாவது வாய் நன்றாகப் பேச முடிவதால் கண்டதையும் பேசத் தோன்றும். வயதானவர்களுக்கு நாக்கு ருசி போய்விடும். எதைத் தின்றாலும் மண்ணைத் தினபது போலவே இருக்கும். அதனால் கண்டதைச் சாப்பிட முடியாது. அடுத்து பேச்சு குழறும். இதனால் இவர்கள் பேசுவதைக் கேட்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். இப்படி இவர்கள் தீயதைப் பேச மாட்டாமல் கடவுள் ஆக்கி விட்டார்.

ஆகவே மனிதர்களே, நீங்கள் இயற்கையோடு ஒத்துழைத்தீர்களேயானால் ஆண்டவன் உங்களுக்கு நற்கதி அளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறான் என்பதை அறியவும்.