சனி, 21 மே, 2016

இந்த சட்டசபைத் தேர்தலில் எனக்கு நடந்த அநியாயம்

                            Image result for ஓட்டுக்குப் பணம்

இந்த சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பு பல கட்சிகளின் சார்பிலும் கொடுக்கப்பட்டது என்று பலவலாகப் பேசிக்கொண்டது எல்லோருக்கும் தெரியும். என்னுடைய காதிற்கும் இந்த செய்தி அப்படியே அரசல் புரசலாக வந்தது.

நானும் மிக ஆவலுடன் இந்த அன்பளிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். என் ஆசை இலவு காத்த கிளி போல் வீணாகிப்போனதில் என் மனது செக்கு நூறாக உடைந்து விட்டது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பெவிகால் போட்டு ஒட்ட வைத்துக்கொண்டிருக்கிறேன்.

இலவு காத்த கிளி என்றால் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பச்சைத் தமிழன் ஆகவே எனக்குத் தெரியும். அந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் கொள்கிறேன்.

இலவம் பஞ்சு என்பது ஒரு வகையான மரத்தில் காய்க்கும் காய்களிலிருந்து எடுக்கும் பஞ்சு. இதை மெத்தை தலையணைகளில் அந்தக் காலத்தில் உள்ளே திணித்து தைப்பார்கள். உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது. இந்தக் காய்கள் பச்சைப் பசேல் என்று இருக்கும்.

சில கிளிகள் இதை ஒரு வகை பழம் போல் நினைத்து இது பழுக்கட்டும், பழுத்த பிறகு திங்கலாம் என்று காத்துக்கொண்டு இருக்கும். ஆனால் இந்தக் காய்கள் பழுக்காமல் திடீரென்று ஒரு நாள் வெடித்து விடும். காத்துக்கொண்டிருந்த கிளிகள் நமது காப்டன் மாதிரி ஏமாந்து போகும்.

நானும் இந்த மாதிரி ஆகிப்போனேன். ஒரு பயலும் என்னிடம் வந்து,  "தாத்தா, ஓட்டுப்போடுவதற்கு இதோ அன்பளிப்பு" என்று கொடுக்கவில்லை. எனக்கு என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தி விட்டார்களே என்ற ஏக்கம் மாறவே மாட்டேனென்கிறது. இந்த அநியாயத்தை எதிர்த்து சர்வதேசக் கோர்ட்டில் ஒரு வழக்கு பதியலாம் என்ற எண்ணமும் இருக்கிறது.

அதனால்தான் நான் ஓட்டுப்போடவில்லை என்ற ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பதிவில் இரண்டு ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். அவைகளை ரகசியமாகப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன்.

                              Image result for கேப்டன் விஜயகாந்த்

வெள்ளி, 20 மே, 2016

திமுக வின் தோல்விக்கு காரணம் என்ன?

                               Image result for tasmac tamilnadu

சட்ட மன்ற தேர்தல் ஆரம்பிக்கும்போதே முக என்ன சொன்னார் என்பது நினைவு இருக்கிறதா?

நான் முதல் அமைச்சர் பதவி ஏற்றவுடன் போடும் முதல் ஆணை மது விலக்கு ஆணைதான் என்றார்.

அதைச் செய்வாறோ இல்லையோ, செய்து விட்டால் என்ன பண்ணுவது என்ற கவலை தமிழ்க் குடிமகன்கள் மனதில் தோன்றி அரித்துக்கொண்டே இருந்தது.

இந்த ஆளை விடக்கூடாது என்று அவர்கள் மனதில் தோன்றிய எண்ணமே திமுக வின் தோல்விக்கு வழி வகுத்தது.

வாழ்க டாஸ்மாக்.

வியாழன், 19 மே, 2016

ஆஹா, நம்ம (அம்மா) கட்சி ஜெயிச்சாச்சு !

                          Image result for இரட்டை இலை சின்னம்
ஜெயலலிதாம்பிகை சஹஸ்ர நாம அர்ச்சனை ஆரம்பிச்சாச்சு. இலவசங்களுக்கு காத்திருங்கள்.. வாழ்க இரட்டை இலை. வீழ்க உதய சூரியன்.

சில கேள்விகள்.
1. உனக்கு வெட்கம் கிடையாதா?
2. உனக்கு சுய மரியாதை கிடையாதா?
3. உனக்கு ரோஷம் கிடையாதா?
4. உனக்கு மானம் இல்லையா?
5. நீ உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா?


எல்லாக்கேள்விகளுக்கும் ஒரே பதில் - இல்லை. இப்ப என்ன பண்ணுவீங்க?

                                   Image result for இரட்டை இலை சின்னம்

செவ்வாய், 17 மே, 2016

தப்புக்கணக்கு போட்டுவிட்டேன் !

                                       Image result for கருணாநிதி குடும்பம்
போன பதிவில் நான் அம்மா புகழ் பாடியதை அனைவரும் படித்திருப்பீர்கள். எனக்கு தன்மானம் இல்லையா என்று கூட ஒருவர் பின்னூட்டம் போட்டிருந்தார். இத்தனை வயசுக்கப்புறம் சின்னப்பசங்க மாதிரி தன்மானம், ரோஷம், சுயமரியாதை அப்படீன்னு எல்லாம் பேசிக்கிட்டு திரியலாமா?

இப்ப விஷயத்திற்கு வருகிறேன். போன பதிவில் போட்டது எல்லாம் சும்மானாச்சுக்கும் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லப் போவதுதான் நிஜம். அம்மா புகழ் பாடி அலுத்துப்போச்சு. இனி அய்யா  புகழ்தான் பாடப்போகிறேன்.

அய்யாவின் அனுபவம் என்ன? சாதுர்யம் என்ன? எப்படி இருந்தவர் எப்படி ஆகியிருக்கார் என்று பாருங்கள். எத்தனை நாளைக்குத்தான் சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருக்க முடியும்? ஆகவே அவரை முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்ப்பது என்று பச்சைத் தமிழர்கள் அனைவரும் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறட்டும். எத்தனை நாளைக்குத்தான் ஒரே முகத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பது?

வாழ்க தமிழகம், வாழ்க தமிழ், வாழ்க, வாழ்கவே.

பின்குறிப்பு; உனக்கு முதுகெலும்பு என்று ஒன்றிருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரு பதில். விஞ்ஞான உலகில் ஒரே கொள்கையைப் பிடித்துக்கொண்டிருப்பவன் அடி முட்டாள்.

ஞாயிறு, 15 மே, 2016

அம்மா என்றழைக்காத தமிழனும் உண்டோ?




அம்மா என்றழைக்காத தமிழனும் அம்மாவுக்கு ஓட்டுப்போடாத தமிழனும் இல்லை. பெர்ர்ர்ர்ரிய வெற்றி விழாவிற்குத் தயாராகுங்கள். அம்மாதான் தமிழ்நாட்டின் விடிவெள்ளி. அம்மா முதலமைச்சராக பதவியேற்கும் விழாவிற்கு எல்லோரும் வந்து சேருங்கள்.

சனி, 14 மே, 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம் - எதிர்காலத்திட்டங்கள்

                                    Image result for tamil vazhkai thathuvam
சங்கம் ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் உருப்படியாக ஏதும் செய்யவில்லை. இப்படியே போனால் நம்மை கிறுக்கர்கள் என்று எல்லோரும் கேலி செய்வார்களே என்று யோசித்தேன்.

செயலாளர் நண்பர் சொன்னார். சங்கத்தின் பெயரிலேயே கிறுக்கர்கள் சங்கம் என்று பெயர் வைத்துவிட்டு எல்லோரும் நம்மைக் கிறுக்கர்கள் என்று சொல்வார்களே என்றால் எப்படி?

அதுவும் ஒரு விதத்தில் நியாயம்தான் என்று ஒப்புக்கொண்டு, அடுத்து தமிழர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இந்த திட்டத்திற்கு முதலாவதாக தமிழர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசியம். அப்புறம்தான் அவர்களை முன்னேற்றுவது எப்படி என்று யோசிக்க முடியும். இதற்கு என்ன செய்யலாம் என்று செயலாளரைக் கேட்டேன்.

ஒரு பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். அங்குள்ள தமிழ்த்துறை தலைவருடன் பேசி இதற்கு ஒரு செயல் திட்டம் தீட்டுவோம் என்றார். இது நல்ல யோசனையாக இருக்கிறதே, அப்படியே செய்வோம், ஒரு நல்ல பல்கலைக்கழகமாகத் தேர்வு செய்யுங்கள் என்றேன்.

எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். அனைத்து ஏற்பாடுளையும் செய்து விட்டு உங்களைச் சந்திக்கிறேன் என்றார். அப்படியே செய்யுங்கள் என்று விடைகொடுத்து அவரை அனுப்பி வைத்தேன்.

வியாழன், 12 மே, 2016

இவன்தான் பச்சைத் தமிழன்

இன்று முகப்புத்தகத்தில் ஒரு செய்தி பார்த்தேன். அதை கீழே கொடுத்துள்ளேன்.

அன்பாளர்களே,
அமெரிக்காவின் புகழ்பெற்ற நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில் திருவள்ளுவர் தனது கைப்பட எழுதிய திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளதாம். பனியில் புதைந்திருந்த இதை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தபோது இதன் வயது மூன்றாயிரம் முதல் நான்காயிரம் என்று தெரியவந்ததில் அவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். இது வெளியே வந்தால் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்று நிரூபணமாகிவிடும் என்பதால் நாசா அதை அழித்துவிட முயற்சி செய்தது. அங்கே பணி புரியும் தமிழக விஞ்ஞானி ஒருவர் உயிரைப் பணயம் வைத்து அதைப் படம் எடுத்து நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் ஆப் அனுப்ப அது இங்கே வெளியாகியுள்ளது.
நண்பர்களே,
நாசா நிறுவனம் இந்த ஆதாரத்தை சர்வர்களில் இருந்து அழிக்கப் பார்க்கும் என்பதால் இதைக் கண்ட மறுவினாடியில் ஷேர் செய்து விடவும். இதன் மூலம் தமிழின் அரிய பொக்கிஷத்தை நாம் அழியாமல் பாதுகாக்க முடியும். நன்றி.


இதைப்போல் ஒரு முட்டாள்தனம் தமிழனால் 

மட்டும்தான் செய்யவும் நம்பவும் முடியும்.


புதன், 11 மே, 2016

கட்டுப்பாட்டை இழந்து .....

                                     Image result for car accidents

வாகன விபத்துச் செய்திகளை பிரசுரிக்கும் தமிழ் பத்திரிக்கைகள் ஒரு வார்த்தையைத் தவறாது உபயோகிப்பதைப் படித்திருப்பீர்கள். அது என்னவென்றால் "வாகனம்,  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து" விபத்து ஏற்பட்டது என்று எழுதுவார்கள்.

நானும் இந்த சொற்றொடரை பலமுறை படித்திருக்கிறேன். அது எப்படி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழக்கும் என்று யோசித்திருக்கிறேன். ஏனென்றால் நானும் ஒரு வாகனம் வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

அப்படி யோசிக்கும் போது சில சிந்தனைகள் என் மனதில் உருவாகின. அவைகளை உங்களுடன் பகிர்கிறேன்.

ஒரு வாகனம், கார் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒருவர் ஓட்டும்போது அது அவருடைய எண்ணங்களுக்கு இசைந்தவாறு ஓடுகிறது. வேகமாகப்போக வேண்டுமானால் ஆக்சிலரேடரை அழுத்தினால் வேகமாகப்போகிறது. இடதுபுறம் திரும்ப ஸ்டியரிங்கை இடது புறம் திருப்பினால் காரும் இடது புறம் திரும்புகிறது. காரை நிறுத்தவேண்டுமானால் பிரேக்கை அழுத்தினால் கார் நிற்கிறது.

இப்படித்தான் காரை உருவாக்கியிருக்கிறார்கள். இந்க்காரின் குணாதிசியங்களை நன்கு அறிந்தவர்கள் காரை தன் கட்டுப்பாட்டில் வைத்து விபத்தில்லாமல் ஓட்டுவார்கள். ஆனால் அந்தக் காரின் சக்திகளை நன்றாகப் புரிந்து கொள்ளாத ஒருவன் அதை ஓட்டும்போது ஒரு கட்டத்தில் அதை தன் கட்டுப்பாட்டுக்குள் நிலை நிறுத்த முடிவதில்லை.

உதாரணமாக அந்தக் கார் 150 கிமீ வேகத்தில் போகக்கூடும். அந்த வேகத்தில் போகும்போது அதை வளைவுகளில் சுலபமாகத் திருப்ப முடியாது. அப்படி திருப்பும்போது அந்தக் கார் ஓட்டுனர் நினைக்காத திசையில் போகும். அப்போது விபத்து ஏற்படுகிறது. அதே போல் அந்த வேகத்தில் போகும் காரை அவசரமாக நிறுத்தவேண்டும் என்று சடன்பிரேக் போட்டால் கார் குட்டிக்கரணம் அடிக்கும்.

இந்த தன்மைகளை இளைஞர்கள் உணருவதில்லை. அதனால்தான் பல விபத்துகள் ஏற்படுகின்றன. அனுபவப்பட்ட ஓட்டுனர்கள் கூட சோர்வாக இருக்கும்போது இந்த உண்மைகளை மறந்து விடுகிறார்கள். அவர்களும் விபத்து உண்டாக்குகிறார்கள். தவிர சோர்வுடன் கார் ஓட்டும்போது அவர்களின் விவேகம் குறைந்து விடுகிறது. தூரத்தில் நிற்கும் லாரி நிற்கிறதா அல்லது ஓடிக்கொண்டிருக்கிறதா என்பதை அவர்களால் உணர முடிவதில்லை.

வெகு சமீபத்தில் வந்தவுடன்தான் நிலைமை புரிகிறது. அப்போது பதட்டத்தில் அவர்கள் செய்யும் தவறுகள் விபத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் எல்லோருக்குத் சாதாரண சமயத்தில் நன்கு தெரியும். ஆனால் வாகனத்தில் ஏறி அந்த சீட்டில் உட்கார்ந்தவுடன் அவர்கள் வேறு மனிதனாக மாறிப்போகிறார்கள். தாங்கள் கற்றவற்றை மறந்து போகிறார்கள். "நான் எவ்வளவு அனுபவப்பட்ட ஓட்டுனர், என் வண்டிக்கு விபத்து எப்பொழுதும் ஏற்படாது" என்ற மமதையுடன் காரை ஓட்ட முற்படுகிறார்கள்.

இந்த மமதைதான் விபத்துகளை ஏற்படுத்துகிறது. மக்கள் எப்போது திருந்துவார்க்ள என்று தெரியவில்லை.

ஞாயிறு, 8 மே, 2016

வருகின்ற தேர்தலில் ஓட்டுப்போடுவது எப்படி?

                         
                                 Image result for tamilnadu election 2016 comedy

தமிழக சட்டசபைத் தேர்தல் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் 10 நாளில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி விடும். இந்த தேர்தலில் எல்லோரும் ஓட்டுப்போடவேண்டும் என்று விடாது பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது. ஆகவே உங்கள் ஓட்டை வேட்பாளர்களில் நல்லவருக்குப் போடுங்கள் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். இது ஒரு உண்மையான புத்திமதி.

எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் என்னவென்றால் வேட்பாளர்களில் நல்லவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான். அனைத்து வேட்பாளர்களும் ஏதாவதொரு கட்சியின் சார்பில்தான் நிற்கிறார்கள். ஆகவே அந்தக்கட்சிகளின் தன்மை, அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு அவர்கள் செய்த நன்மைகள் இவைகளை வைத்துத்தானே அந்தக் கட்சியின் தன்மை பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். அப்படித் தெரிந்துதானே ஓட்டுப்போட முடியும்.

கட்சிகள் ஆட்சி செய்தபோது அவர்கள் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். பல இலவசப் பொருள்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னும் இலவசங்கள் கொடுப்போம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

இந்த இலவசங்களை எப்படிக் கொடுக்க முடியும் என்பது எனக்கு வேண்டாத சிந்தனை. ஒன்று மட்டும் நிச்சயம். யார் வந்தாலும் இலவசங்கள் தொடரும். ஆகவே யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? எனக்கு இலவசங்கள் வருமல்லவா?

இந்த சிந்தனையில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் மக்களே. ஆகவே நான் ஓட்டுப்போட்டாலும் போடாவிட்டாலும் ஏதோ ஒரு கட்சி ஜெயித்து ஆட்சிக்கு வரும். அவர்கள் இலவசங்களை வாரி வழங்கப் போகிறார்கள். இதில் ஏதாவது லாஜிக் தவறு இருக்கிறதா?

தேன் எடுப்பவன் புறங்கையில் வழியும் தேனை, நக்கத்தான் செய்வான். அதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் ஓட்டுப்போட அவசியம் இருப்பதாக க்கருதவில்லை. நீயெல்லாம் ஒரு படித்தவனா, உன் ஜனநாயக உரிமையை இப்படிக் கேவலமாகப் பேசுகிறாயே, உனக்கு வெட்கம் மானம் இல்லையா என்று எல்லோரும் கேட்பீர்கள் என்று தெரியும்.

என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் நான் கட்டாயம் ஓட்டுப்போடுகிறேன். போட்டியில் இருக்கும் கட்சிகளில் யோக்கியமான கட்சி எது? இதற்கு யாராவது ஒருவராவது பதில் சொன்னால் போதும்.

இப்படிச் சிந்திப்பதால்தான் அனைத்துக் கட்சிகளும் படித்தவர்களை வெறுக்கின்றன.

                                   Image result for tamilnadu election 2016 comedy

சனி, 7 மே, 2016

காதல் கல்யாணங்கள்

ஒரு ஊழியனின் குரல் 

என்கிற தளத்தில் வெளி வந்த
இப்பெண்ணின் கேள்விக்கு பதிலென்ன?

என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்.


நான் இந்த கலப்புத் திருமணங்களைப் பற்றி சில சொந்தக் கருத்துகள் வைத்திருக்கிறேன். அவை என்னைப் பிற்போக்குவாதியாகவும் சாதி வெறியனாகவும் இன்னும் பல அடைமொழிகளுக்கு உரியவனாகவும் காட்டலாம். அவைகளைப் பற்றி கவலைப்படாமல்தான் இந்த பின்னூட்டம் போடுகிறேன். இந்தப் பின்னூட்டம் மேலும் பல மாற்றுக்கருத்துகளுக்கு வழி வகுத்தால் நன்மை உண்டாகும்.

காதல் என்பது ஒரு பருவக்கவர்ச்சியே என்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்க சாத்தியமில்லை. இதை சரியான கோணத்தில் கையாள்வதற்கு நம் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.நாம் வாழும் காலம் என்ன, நம் வாழ்க்கையை வாழ என்னென்ன தேவைகள் உண்டு, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற நாம் என்ன தகுதி பெற்றிருக்கவேண்டும் என்ற சிந்தனைகள் ஒவ்வொரு பொறுப்புள்ள இளைஞன் மற்றும் இளைஞிக்கு வேண்டும்.

18 வயது பெண்ணும் 21 வயது பையனும் கல்லூரியில் பழகும்போது காதலில் ஈடுபட்டு கல்யாணம் செய்து கொண்டால் அவர்களுக்கு வாழ்க்கை நடத்த என்ன பொருளாதார வசதி இருக்கும்? என்ன உலக அனுபவம் இருக்கும்? இந்த நடைமுறை உண்மையைப் புரிந்து கொள்ளாமல் காதல் என்ற போர்வையைப் போர்த்துக்கொண்டு கல்யாணம் செய்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் தோற்று விடுகிறது.

இந்த மாதிரி கல்யாணங்களில் சாதி வேறுபாடும் கலந்து விட்டால் அந்தக் காதலர்களின் வாழ்க்கை இன்னும் பிரச்சினைக் குரியதாகிறது. இந்தப் பிரச்சினையை ஒரு சமுதாயப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அதற்கு மாற்று வழிகளாக ஏதாவது கருத்துகள்  மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இந்தப்பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். இந்த நிகழ்வுகளுக்கு வெறும் சாதிச் சாயம் மட்டுமே பூசி சாதி வெறியை அதிகரிப்பதினால் யாருக்கு என்ன பயன்?

கல்யாணம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணும் சமநிலையில் இருக்கவேண்டும். அதாவது அவர்கள் குடும்பம், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள் இத்தியாதி. இவை சமநிலையில் இருந்தால்தான் அவர்களின் திருமணம் வெற்றிகரமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கலப்புத் திருமணங்களில் இந்த சம நிலை இருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே அவைகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.

ஜாதி வெறி என்று சொல்வதினால் அது உடனே மறைந்து போகப் போவதில்லை. இதை அரசியலாக்குவதால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எந்த விடிவும் ஏற்படப்போவதில்லை. இந்த நிலை மாறுவதற்கு தமிழ் நாட்டில் இன்னும் பல காலங்கள் ஆகும். அதற்குள் கீழ் நிலையிலிருப்பவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு அவர்களுக்கு வழிகாட்டத் தகுந்த தலைவர்கள் வேண்டும். இதற்கெல்லாம் காலம் பிடிக்கும். அதற்குள் அவசரப்பட்டு கலப்புத் திருமணங்கள் செய்யும் ஜோடிகள் பல இன்னல்களுக்கு ஆளாகத்தான் வேண்டும்.

நம் சமுதாயம் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடையுமா, அடையாதா, அடையும் என்றால் எத்தனை காலம் பிடிக்கும் என்பதே ஒரு பெரிய கேள்விக் குறிதான்.

இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கலானது. சம்பந்தப்பட்டவர்களின் உணர்ச்சியைத் தூண்ட வல்லது. ஆகவே இதைப்பற்றி எழுதும்போது மிகவும் கவனமாகத்தான் எழுதுகிறேன். நான் இந்தப் பதிவு எழுதுவதின் நோக்கமே ஒரு சமுதாய மாற்றத்திற்கான சிந்தனைகள் வளர வேண்டும் என்பதற்காகவே. அப்படியும் சிலர் என் மீது தனிப்பட்ட முறையில் கோபப்படலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரச்சினையை விட்டு விட்டு தனி நபர் மீது கோபம் கொள்வது எந்த வகையிலும் அந்தப் பிரச்சினை தீர்வதற்கு உதவாது என்பதை உணர வேண்டும்.

வியாழன், 5 மே, 2016

கந்தனின் கோடைகால திண்டாட்டம்-பாகம் 2

                     
                          Image result for amazon logo
சென்ற பதிவின் கடைசி வரிகள்.

என் பேங்க் கணக்கில் இருந்து எட்டாயிரம் ரூபாய் அவன் கணக்கிற்குப் போனது. கேமரா வருகிறது, வந்து கொண்டே இருக்கிறது என்று ஈமெயில் செய்திகள் மணிக்கொரு தரம் வந்தன. நானும் வாயில் ஈ போவது தெரியாமல் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன். கடைசியில் ஒரு நாள் கேமரா பார்சல் வந்தே விட்டது.

அதை வாங்கி புதுப்பெண்டாட்டியைக் கொண்டாடும் நாசூக்கில் பிரித்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி.........


நான் கேட்ட மாடலுக்குப் பதிலாக அதற்கு இரண்டு படி கீழேயுள்ள மாடல் கேமராவை அனுப்பியிருந்தான். அதைப் பார்த்தவுடனேயே என் மனம் கீழே விழுந்த கண்ணாடிக்கோப்பை மாதிரி சுக்கு நூறாக உடைந்தது.

சிந்தனாகூலத்தில் ஆழ்ந்தேன். வீறுகொண்டெழுந்து போராடலாமா அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு இந்த மாடல் கேமராவையே வைத்துக்கொள்ளலாமா என்று இரு யோசனைகளுக்கிடையில் கொஞ்ச நேரம் போராடினேன். நாம் பிறந்த இனம் என்ன? வளர்ந்த விதம் என்ன? ஒரு பிரச்சினையை எதிர் கொண்டு போராடாமல் தோல்வியை ஒப்புக்கொண்டால் வருங்கால சந்ததியினர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற தன்மான உணர்ச்சி பிரவாகமாக ஊற்றெடுத்தது.

போராடத் தயாரானேன். முதலில் அந்தக் கம்பெனிக்கு ஒரு செய்தி அனுப்பினேன். உடனே பதில் வந்தது. அந்த த் தவறான மாடல் கேமராவைத் திருப்பி அனுப்பி விடுங்கள். நாங்கள் உங்கள் பணத்தை அனுப்பி விடுகிறோம் என்றார்கள்.

நான் இரண்டு கேள்விகள் கேட்டேன். 

1. நான் அந்தக் கேமராவை எப்படித் திருப்பி அனுப்புவது? அதற்கு வேறு தண்டச்செலவு செய்யணுமா? 

2. எனக்கு கேமராதான் வேண்டும், பணம் வேண்டாம். நான் இந்தக் கேமரா மீது  மிகுந்த ஆசை கொண்டுள்ளேன். அது கிடைக்காவிட்டால் நான் வாழ்க்கையை வெறுத்து விடுவேன்.

முதல் கேள்விக்கு பதில் - நீங்கள் அந்தக் கேமராவை அது வந்த பெட்டியிலேயே வைத்து நன்றாக பேக் செய்து வைத்திருங்கள். எங்கள் ஆள் வந்து வாங்கிக்கொள்வான் என்றார்கள்.

இரண்டாவது கேள்விக்கு பதில் - நீங்கள் கேட்ட கேமராவையே அனுப்புகிறோம் என்றார்கள்.

நான் இந்த வேண்டாத கேமராவை நன்றாக பேக் செய்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன். ஒருத்தனும் வரவில்லை. மறுநாள் இன்டர்நெட்டில் தேடி அமேசான் கம்ப்ளெய்ன்ட் தளத்தைக் கண்டுபிடித்தேன். அதில் என்னுடைய பிரச்சினையை சொன்னேன். ஐந்து நிமிடத்தில் போனில் என்னைத் தொடர்பு கொண்டார்கள். நான் விபரம் கூறியவுடன் இன்று மாலைக்குள் அந்த பார்சலை எங்கள் ஆள் வந்து வாங்கிக்கொள்வான் என்றார்கள்.

மாலை வந்தது. பிறகு இரவும் வந்தது. ஒருவனையும் காணோம். தூங்கி எழுந்தேன். இதை விடக்கூடாது என்று திரும்பவும் கம்ப்ளெய்ன்ட் டிபார்ட்மென்டுக்கு புகார் அளித்தேன். அந்தப் புகாருக்கு பதில் கொடுத்த பெண்மணி இன்று கட்டாயம் அந்தப் பார்சலை வாங்க ஆள் வரும். நீங்கள் கவலைப்படவேண்டாம் என்று உறுதி அளித்தாள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் நான் இந்தியாவிலிருந்து புகார் அளித்தால் வேறு ஏதோ நாட்டிலிருந்து போன் பேசுகிறார்கள். அந்த நெம்பருக்கு திரும்ப பேச முயற்சித்தால் கனெக்ஷன் கிடைப்பதில்லை. சரி விதிப்படி நடக்கட்டும் என்று காத்திருந்தேன். அன்று மாலை ஒருவன் வந்து அந்தப் பார்சலை வாங்கிக்கொண்டு ஒரு ரசீது கொடுத்து விட்டுப் போனான்.

சரி, பாதி கிணறு தாண்டி விட்டோம் என்று நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். நான்கு நாள் ஆகியது. அந்தக் கம்பெனிக்காரனிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. அவ்வளவுதான், நம் பணம் அரோகராதான் போலிருக்கிறது என்று முடிவு செய்து விட்டேன். இருந்தாலும் முயற்சிப்போம் என்று இன்டர்நெட்டை மேய்ந்ததில் இன்னொரு முனை கிடைத்தது. அதாவது இந்த மாதிரி நடந்தால் இந்த தளத்தில் புகார் அளித்தால் விசாரித்து நம் பணத்தைத் திருப்பிக்கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள்.



இதில் நான் என் புகாரைப் பதிந்தேன். அதற்கு உடனே பதில் வந்தது. உங்கள் புகாரைப் பெற்றுக்கொண்டோம். ஒரு மாதத்தில் இதைப்பற்றி விசாரித்து நீங்கள் சொன்னது உண்மையாக இருந்தால் உங்கள் பணம் திருப்பியளிக்கப்படும். அதற்குள் அந்த கம்பெனிக்காரன் நீங்கள் கேட்ட பொருளைக் கொடுத்து விட்டால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும் என்றார்கள். சரி, ஏதோ நாம் புகார் அளித்தால் பதிலாவது சொல்கிறார்களே, அந்த மட்டில் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

இந்தப் புகார் அளித்த விபரம் எல்லாம் அந்த கேமரா அனுப்பிய கம்பெனிக்காரனுக்கும் போகும் போல் இருக்கிறது. அவன் உடனேயே, ஐயா உங்கள் பொருளை அனுப்பி விட்டோம், இரண்டு நாளில் வந்து விடும், வந்தவுடன் இந்தப் புகாரை தயவு செய்து திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டியிருந்தான்.

இரண்டு நாளில் கேமரா பார்சல் வந்து விட்டது. பிரித்துப் பார்த்தேன். நான் கேட்ட மாடல் கேமராவே இருந்தது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் எல்லாம் அந்தக் கேமராவில் எடுக்கப்பட்டவைகளே. நான் கொடுத்த புகாரையும் வாபஸ் பெற்றுக்கொண்டேன்.


இந்த அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் அமேசான் கம்பெனி என்பது வெறும் புரோக்கர் கம்பெனிதான். அவன் ஒரு பொருளையும் உற்பத்தி செய்வதில்லை. பல வியாபாரக் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு 
நம் போன்றவர்களிடமிருந்து ஆர்டர் பிடித்துத் தருகிறான். இதில் அமேசான்காரனுக்கு கமிஷன். அதை வைத்து அவன் பிழைக்கிறான். பொருட்கள் சப்ளை செய்யும் கம்பனிகளுக்கு அமேசான்காரனால் கூடுதல் பிசினஸ் கிடைக்கிறது.

இப்படி இவர்கள் இரண்டு பார்ட்டியும் நம்மால் பயனடைகிறார்கள். இதில் கூடுதலாக அமேசான்காரன் சொந்தமாக ஒரு கூரியர் சர்வீஸ் வைத்திருக்கிறான். இதன் மூலமாகத்தான் நாம் ஆர்டர் செய்யும் பொருட்கள் எல்லாம் வருகின்றன. இதில் ஒரு கூடுதல் வருமானம் அமேசான் காரன் பெறுகிறான்.

ஆன்லைன் வியாபாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஆனாலும் இதில் சிக்கல்கள் இருக்கின்றன. நாம்தான் கவனமாக செயல்படவேண்டும்.