பதின்ம நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதின்ம நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 மார்ச், 2010

பதின்ம வயது நினைவுகள்.

இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்து என்னை பிரபல பதிவர் தகுதிக்கு உயர்த்திய பதிவர் தருமிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பதின்ம வயது என்பது 10 லிருந்து 18 வரை என்று வைத்துக் கொள்ளலாம். என்னுடைய பதின்ம வயது ஆரம்பத்தில் இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்தது. எங்கள் நகரத்தைச்சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மிலிடரி கேம்ப்புகள். சிப்பாய்கள் தங்குவதற்காக வரிசை வரிசையாக பாரக்குகள். எங்கு பார்த்தாலும் மிலிடரி லாரிகளும் ஜீப்புகளும் போய்க்கொண்டே இருக்கும். மிலிடரி லாரி அடித்து யாராவது இறந்து விட்டார்களென்றால் கேள்வி முறை கிடையாது.

காலியாக இருக்கும் இடத்திலெல்லாம் பதுங்கு குழிகள் வெட்டி வைத்திருந்தார்கள். எதிரி விமானம் வருகிறது என்றால் அபாயச்சங்கு ஊதப்படும், அப்போது ரோட்டில் இருப்பவர்களெல்லாம் இந்த பதுங்கு குழிகளுக்குள் போய் ஒளிந்து கொள்ளவேண்டும். இப்படி நோட்டீஸ் அச்சடித்து வீடுவீடாய் விநியோகித்தார்கள்.

தெரு விளக்குகளுக்கெல்லாம் வெளிச்சம் மேலே செல்லாதபடி கவசம் அணிவித்திருந்தார்கள். எதிரி விமானம் இரவில் வரும்போது கீழே ஊர் இருப்பது தெரியாமல் இருக்க இந்த ஏற்பாடு. மேலும் இரவில் அபாயச்சங்கு ஒலித்தால் வீட்டுக்குள் இருக்கும் விளக்குகளையும் அணைத்துவிடவேண்டும். இவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்க ஏ.ஆர்.பி போலீஸ் (Air Raid Prevention) என்று ஒரு தனி போலீஸ் பிரிவு இருந்தது. அவர்களுக்கு சாம்பல் கலரில் ஒரு யூனிபாரம். இருட்டில் தூரத்திலிருந்து பார்த்தால் அவர்கள் இருப்பது தெரியாது. அந்த துணி ஏஆர்பி துணி என்ற பெயரில் இன்றும் துணிக்கடைகளில் விற்கப்படுகிறது.



பெண்டு பிள்ளைகளெல்லாம் எங்கேயும் தனியாகச் சென்றால் மிலிடரிக்காரன் தூக்கிக்கொண்டு போய்விடுவான் என்று ஊர் பூராவும் வதந்தி. நிஜமாகவே எங்கள் வீட்டுக்குப்பக்கத்தில் உள்ள ஒரு டாக்டரின் பெண் ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பட்டப்பகலில் மிலிடரிக்காரர்கள் அவளைக்கடத்த முயற்சித்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த என்னுடைய ஸ்கூல் ட்ரில் மாஸடர் தடுக்கப்போக, அவரை மிலிடரிக்காரர்கள் அடிக்க, அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அந்தப்பெண் தப்பித்து வீட்டுக்கு ஓடிவிட்டது.

இந்தியாவை ஜப்பான்காரன்தான் தாக்குவான் என்று பலமான வதந்தி. அவன் பர்மாவைப்பிடித்து இந்திய எல்லை வரை வந்துவிட்டான். டில்லியிலிருந்த வெள்ளைக்காரர்களில், பெண்கள், குழந்தைகள், ஆண்களில் அதிக முக்கியமில்லாதவர்கள்- இவர்களையெல்லாம் முன்பேயே இங்கிலாந்திற்கு அனுப்பி விட்டார்கள். ஜப்பான்கார ர்கள் எல்லோரும் அந்தக்காலத்தில் குள்ளமாக இருந்தார்களாம். அதனால் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் “குள்ளர்களை நம்பாதீர்கள்” என்று தீப்பெட்டிகளில் அச்சடித்து விற்றார்கள்.

ஜனங்கள் எங்கு சந்தித்தாலும் பேசுவது யுத்தத்தைப்பற்றித்தான். ஆனந்தவிகடனில் ஒருபக்கம் யுத்தச்செய்திகள் வரும். அப்போது எனக்கு அதன் மூலமாகத்தான் யுத்தத்தைப்பற்றி அறிந்துகொள்வேன். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் அவ்வப்போது ஏதாவது அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்கள்.

இரவில் நாங்கள் படுத்தபிறகு சில நாட்களில் அபாயச்சங்கு ஒலிக்கும். ஓ, ஜப்பான்காரன் குண்டுபோட வந்துவிட்டான் என்று நினைத்து பயந்து போர்வையை இளுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிவிடுவோம். விடிந்தபிறகுதான் தெரியும் அது வெறும் ஒத்திகைதான் என்று. நிஜமாகவே 1944 ல் ஜப்பான்காரன் மெட்ராஸுக்கு “எம்டன்” என்கிற கப்பலில் வந்து ஹார்பரின் மேல் குண்டு போட்டான். ஒன்றும் பெரிய சேதமில்லை. ஆனாலும் பாதி மெட்ராஸ் காலி ஆகிவிட்டது.



1945ல் அமெரிக்காக்காரன் ஜப்பான் மேல் அணுகுண்டு போட்டவுடன் யுத்தம் முடிவடைந்து விட்டது. அதைக்கொண்டாடும் விதமாக பள்ளிகளுக்கெல்லாம் மூன்று நாள் விடுமுறை விட்டார்கள். பிறகுதான் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவு செய்து 1947ல் நம் நாடு சுதந்திரம் பெற்றது.