வேளாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேளாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

இயற்கை விவசாயம்


இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் நடைமுறைக்கு சாத்தியமா? அதனால் அதிகரித்து வரும் இந்திய மக்களுக்கான உணவை உற்பத்தி செய்ய முடியுமா? தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்வது சாத்தியம்தானா?

இயற்கை விவசாயத்தை ஆதரிப்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் முடியும் என்று ஒரே பதிலை சொல்வார்கள். அதற்கு எதிர்வாதம் செய்து ஒரு முடிவுக்கு வருவது சாத்தியமல்ல. என்ன செய்யலாம் என்றால் அவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டு விடுவதுதான் ஒரே வழி. உண்மையில் இயற்கை விவசாயம் லாபகரமாக இருந்தால் விவசாயிகள் அதைக் கடைப்பிடிப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. அப்படி அந்த முறை ஒத்து வரவில்லையென்றால் விவசாயிகளே அந்த முறையை தள்ளி விடுவார்கள்.

சுதந்திர நாடான இந்தியாவில் பேச்சுரிமை தாராளம். யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும் பேசலாம். சில தலைப்புகள் கவர்ச்சிகரமானவை. அதில் இயற்கை விவசாயமும் ஒன்று. இதைப்பற்றி அவ்வப்போது எழுதுவேன்.

திங்கள், 29 நவம்பர், 2010

விதியை யாரால் வெல்ல முடியும் ?


வேளாண்மை பற்றி பலரும் இந்த தளத்தில் பின்னூட்டம் இட்டு வருகிறார்கள். நான் ஒரு விவசாயப் பட்டதாரியாக இருந்து கொண்டு ஏன் விவசாயத்தைப் பற்றி எழுதக்கூடாது என்று ஏறக்குறைய குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தலையில் என்னுடைய விவசாயக் கருத்துக்களைப் படிக்கவேண்டும் என்கிற விதி இருந்தால் அதை மாற்ற யாரால் முடியும்? ஆகவே விவசாயத்தைப் பற்றியும் எழுதுவது என்கிற முடிவுக்கு வந்துள்ளேன்.

முதலில் என்னுடைய இன்னொரு தளத்தில் எழுதிய சில பதிவுகளை மீள் பதிவாகப் போடுகிறேன். பிறகு விவசாய சம்பந்தமான கேள்வி-பதில் பகுதி ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு கேள்விகளைப் பின்னூட்டமாகவோ அல்லது என்னுடைய மின் முகவரிக்கு மின்னஞ்சலாகவோ அனுப்பலாம். அவ்வப்போது பதில் எழுதுகிறேன்.

முதல் பதிவு - ஒரு புனைவு:

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு. கோயமுத்தூருக்குப் பக்கத்தில் ஒரு விவசாயி. அவனுக்கு ஒரு பத்து ஏக்கர் பூமி இருக்கிறது. அங்கு ஒரு கிணறு. மழை, மாரி ஒழுங்காகப் பெய்வதால் கிணற்றில் தண்ணீல் எப்போதும் வற்றாமல் இருக்கும். அந்தக்கிணற்றிலிருந்து வரும் நீரில் ஒரு ஐந்து ஏக்கரில் தோட்டக்கால் விவசாயம். மீதி ஐந்து ஏக்கரில் மானாவாரி விவசாயம். ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண். விவசாயத்தில் உதவ ஒரு பண்ணையாள். தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் குடி வைத்திருக்கிறான். இவன் ஊருக்குள் இருக்கும் பழங்கால வில்லை வீட்டில் குடியிருக்கிறான்.

விவசாயிக்கும் அவன் மனைவிக்கும் படிப்பு கிடையாது. குழந்தைகள் ஐந்தாவது வகுப்பு வரைக்கும் உள்ளூர் ஆசிரியரிடம் அவருடைய வீட்டில் படித்தார்கள். அதற்கு மேல் படிப்பதானால் டவுனுக்குப் போகவேண்டும். அதனால் படிப்பைத் தொடரவில்லை. பையன் அப்பாவுக்கு உதவியாக பண்ணை வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான். பெண் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்.

தோட்டத்தில் முக்கிய பயிர் சோளம், ராகி, காய்கறிகள், கொஞ்சம் பணப்பயிர்கள். வாய்க்கால் ஓரங்களில் சுமார் ஐம்பது தென்னை மரங்கள் இருக்கின்றன. அந்த விவசாயிக்கு தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்கு வேண்டிய அனைத்தும் தோட்டத்திலேயே விளைகின்றன. விளக்கு எரிக்க கெரசின் ஆயில், உப்பு, சில சமையல் எண்ணைகள், தீப்பெட்டி இது போன்று சில பொருள்களை மட்டும் வெளியில் இருந்து வாங்கவேண்டும். அவைகளையும் வியாபாரிகள் ஊருக்குள் கொண்டு வந்து பண்டமாற்று முறையில் கொடுத்து விட்டுப் போவார்கள். பணத்திற்கு ஏறக்குறையத் தேவையே இல்லை. பண்டிகை சமயத்தில் துணிமணிகளும் கூட பண்டமாற்று முறையிலேயே கிடைக்கும். சிலர் மட்டும் டவுனுக்குப் போவார்கள்.

கூலி கொடுப்பது தானியங்கள் மூலமாகத்தான். வண்ணான், நாவிதன், கொல்லன், கொசவன், பண்டாரம், பஞ்சாங்க அய்யர் அனைவருக்கும் வருடத்திற்கு ஒரு முறை அறுவடை சமயத்தில் தானியங்கள்தான் கொடுக்கப்படும்.

எல்லாத் தேவைகளுக்கும் போக தானியங்கள் மீதி இருக்கும் என்று தெரிந்தால் அவைகளை மட்டும் பண்ணைக்கே வரும் வியாபாரிகளிடம் விற்றுவிட்டு பணம் வாங்கி பெட்டியில் வைத்துக்கொள்வார். இந்தப்பணம் ஒரு கணிசமான அளவு சேர்ந்ததும் ஏதாவது முதலீடு செய்வார்.

பண்ணையில் இரண்டு ஜோடி எருதுகள், இரண்டு பால் மாடுகள், நாலு ஆடு, நாலு கோழி இவைகள் இருக்கும். தோட்டத்தில் விளையும் பயிர்களிலிருந்து வரும் கழிவுகள் இந்தக் கால்நடைகளுக்கு போடுவார்கள். இவைகளிலிருந்து வரும் சாணி முதலானவற்றை கவனமாக சேகரித்து ஒரு எருக்குழியில் சேர்த்து வைப்பார்கள். புதிய பயிர் பயிரிடுமுன் இந்த எருவைப் பயன்படுத்துவார்கள்.

இப்படிப்பட்ட பண்ணை வாழ்க்கைதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. எல்லோரும் ஆரோக்யமாக இருந்தார்கள். இந்தப் பண்ணைகளை ஏறக்குறைய பூலோக சொர்க்கத்திற்கு இணையாகச் சொல்லலாம். அப்படிப்பட்ட பண்ணை இப்போது இருந்தால் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க இன்று ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணைகள் எங்கே போயின? இந்த மாதிரி பண்ணைகளை இன்று உருவாக்க முடியுமா? இயற்கை விஞ்ஞானிகளே, யோசியுங்கள். யோசித்து உங்கள் பதிலைக் கூறுங்கள்.