புதன், 12 ஜனவரி, 2011

சிவப்பு நாடா தர்பார் – தொடர்ச்சி.


என்னுடைய சிவப்பு நாடா தர்பார் பதிவில் வடுவூர் குமார் போட்ட பின்னூட்டமும் அதற்கு என்னுடைய எதிர்வினையும்.

படிக்கும் போதே எரிச்சலாக வருதே எப்படி மனம் ஒப்பி செய்தீர்கள்? இம்மாதிரி கால விரயம் அடுத்தவர் வாழ்வை கெடுக்கும் சான்ஸ் இருப்பதால் நீங்கள் மேலதிகாரிக்கு ஆலோசனை சொல்லவில்லையா? அல்லது மரியாதை நிமித்தமாக சொல்லக்கூடாதா? :-)
வர வர அரசாங்க அலுவலகத்தை அதிலிலும் அதன் உள்ளே நம் ஏதாவது வேலைக்காக செல்லனும் என்றால் ஆயிரம் முறை யோசிக்கவேண்டியிருக்கு.சமீபத்தில் என்னுடைய கடவுச்சீட்டை புதுப்பிக்க சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு சென்ற போது கண்டவை ...

உட்கார கூட இருக்கை இல்லை, தேவையில்லாத கியூ அதைக்கட்டுப்படுத்த ஒளிப்பான் இருந்தாலும் அது வேலை செய்யவில்லை ஆனால் பணம் வாங்கும் இடத்தில் அது வேலை செய்கிறது.காறி துப்பனும் போல் இருந்தது.மண்டை உள்ளே இருப்பது எந்த அளவுக்கு காய்ந்துபோயிருந்தால் பொது ஜனத்தை இப்படியெல்லாம் பழிவாங்க முடியும்.
அவர்கள் தேவை என்பதை கியூவில் நிற்கும் போது அல்லது உங்கள் முறை வரும் போது தான் தெரிந்துகொள்ளமுடியும்.இணையத்தில் அவர்கள் தேவை முழுமையாக இல்லை அல்லது அன்று வேலை பார்க்கும் அதிகாரியின் மன நிலையை பொருந்து உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இன்னும் எத்தனியோ!!
வடுவூர் குமார் அவர்களுக்கு,
உங்களுடைய ஆதங்கத்தை நன்கு புரிந்து கொண்டேன். ஆனால் அன்று நான் செய்தது தவறுதான். இளமை வேகத்தில், நான் சரியாக என் கடமைகளைச் செய்துகொண்டு இருக்கும்போது தார்க்குச்சி போடுகிறாரே என்ற வேகம்தான் என்னை அப்படிச் செய்யத்தூண்டியது. வாயில்லாப் பிராணிகளான மாட்டையோ, குதிரையையோ கூட அதிகம் விரட்டினால் முரண்டு பிடிப்பதில்லையா? அப்படி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இதைப்பற்றி மேலும் ஒரு பதிவு போடுகிறேன்.


அரசு அலுவலகங்களில் இப்போது இருக்கும் நிலையைப்பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. நான் ஏதோ நகைச் சுவைக்காகப் போட்ட பதிவு என்றாலும் இந்த நிலை எல்லோருடைய வாழ்க்கையையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை. இதன் காரணத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழிஎன்ற பழமொழியைத்தான் உதாரணம் காட்டவேண்டும்


அரசு ஊழியர்கள் என்று ஒரு கூட்டம் ஆகாயத்திலிருந்து குதிக்கவில்லை. அவர்களும் இந்த சமுதாயத்திலிருந்து வந்தவர்களே. இன்றைய சமுதாயத்தில் என்னென்ன கேடுகள் ஊறியிருக்கின்றனவோ, அத்தனையும் அரசு ஊழியர்களிடமும் இருக்கின்றன. மக்களின் மனப்போக்கு இன்று வெகுவாக மாறியிருக்கிறது. அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் சம்பளம் ஆபீசுக்கு வருவதற்காக மட்டும்தான் என்ற மனப்பான்மையில் இருக்கிறார்கள். வேலை செய்ய வேண்டுமென்றால் அந்த வேலை யாருக்கு உபயோகமாக இருக்கிறதோ, அவர்கள் அதற்குரிய கட்டணத்தைக் கட்டவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

சக ஊழியர்களுடைய பயணப்படியை சேங்க்ஷன் செய்யக்கூட கூலி எதிர்பார்க்கும் அலுவலகங்கள் உண்டு. அப்புறம் அந்த ஊழியர் பொய் பயணப்படி போடாமல் என்ன செய்வார்? மக்களிடம் நேர்மை என்ற குணம் அறவே இல்லாமற் போயிற்று.
 

பல்கலைக் கழகங்கள் சரஸ்வதி குடியிருக்கும் ஆலயம் என்று போற்றுகிறோம். அங்கே சரஸ்வதி படும் பாடு பிரம்மாவிற்குத்தான் தெரியும். முதுகலை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எப்படி தயாராகின்றன என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்? நினைக்க நினைக்க வயிறு எரிவதுதான் மிச்சம். புரோபசர்களின் இன்றைய சம்பளம் என்னவென்று தெரியுமா? அந்தச் சம்பளம் செரிக்க அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா? கெழவனுக்கு எதற்கு இந்த வீண் புலம்பல் என்று நையாண்டி மட்டும் செய்வார்கள். தெருவில் பார்த்தால் கல்லெடுத்து அடித்தாலும் அடிப்பார்கள்.



அரசு ஊழியர்களும் இன்று கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். அது போதவில்லையென்றுதான் கிம்பளமும் வாங்குகிறார்கள். விலை வாசி ஏறிவிட்டபடியால் கிம்பளமும் இப்போது ஆயிரத்தில் இருந்து லட்சங்களுக்கு ஏறியிருக்கிறது.
இதோடு இந்த நாற்றம் புடிச்ச பதிவு போதும். வேறு ஏதாவது போற வழிக்கு புண்ணியம் தேடற வழியைப் பார்ப்போம்.