வியாழன், 5 ஜூலை, 2012

அந்தரங்கமா அல்லது அம்பலமா?




மனிதனுக்கு அந்தரங்கம் என்று ஒன்று இருக்கிறது. அவன் நினைத்த, நினைக்கும் எண்ணங்கள், செய்த, செய்யப்போகும் செயல்கள் இவைகளைப்பற்றி, எல்லாவற்றையும் எல்லோரிடத்திலும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அப்படிச் சொல்பவனை பைத்தியக்காரன், வெள்ளைச்சோளம், விவேகமற்றவன், இப்படி பல பட்டங்களினால் அழைக்கப்படுவான்.


இப்படித்தான் எங்கள் காலத்தில் இருந்தது. காலங்கள் மாறுகின்றன. வாழ்க்கை நெறிகள் மாறுகின்றன. இன்று open Society என்று சொல்லுகிறார்கள். மனிதன் வாழ்வில் ஒளிவு மறைவு கூடாது. எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மனிதன் நாகரிகம் அடைந்தபோது மானத்தை மறைக்க ஆடைகள் அணிய ஆரம்பித்தான். இப்போது நாகரிகம் முற்றிப்போய் Nude club ஆரம்பித்து நடக்கின்றன.


இன்றைய விஞ்ஞான வளர்ச்சியினால் மனித வாழ்விற்கு வேண்டிய கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்கா வண்ணம் வந்து கொண்டிருக்கின்றன. பாதி பேருக்கு அதிகமாக வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் நமது புண்ணிய பூமியில் ஆளுக்கு ஒன்று என்ற அளவில் செல்போன்கள் இருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ரோட்டில் நடந்து செல்லும் பாதி ஆட்கள் செல்போன் பேசியபடிதான் நடக்கிறார்கள். மீதிப் பேர் செல்போனைக் கையில் வைத்தபடிதான் நடக்கிறார்கள்.


காலையில் தூங்கி எழுந்தவுடன் எல்லோரும் செய்யும் காரியங்களை காலைக்கடன்கள் என்று பூடகமாகச் சொல்லிவந்தோம். அதே மாதிரி தம்பதிகள் குடும்பம் நடத்தினார்கள் என்று குறிப்பிட்டோம். ஆனால் அவற்றை இன்று படம் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். பிறகு வம்பில் மாட்டிக்கொண்டு குய்யோ முறையோ என்று ஓலமிடுகிறார்கள். 


இன்டர்நெட்டில், செல்போனில் முகம் பார்க்காமலேயே தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். தங்கள் அந்தரங்கங்களை முன்பின் தெரியாதவர்களுடன் பகிர்கிறார்கள். தேவையில்லாத பிரச்சினைகள் எழுகின்றன.


விஞ்ஞான வளர்ச்சியின் பயனை இவ்வாறு விவஸ்தையில்லாமல் பயன்படுத்தி சீரழிந்து போகும் இந்திய சமுதாயத்தினை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியுமா என்று சொல்ல முடியவில்லை.