ஞாயிறு, 29 ஜூலை, 2012

பதிவுகளின் பயன்

.
பல்லாயிரக்கணக்கானவர்கள் பதிவு எழுதுகிறார்கள். உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பல விதமான கருத்துகள் எழுதப்படுகின்றன. இவைகளை எழுதுபவர்களுக்கோ அல்லது படிப்பவர்களுக்கோ இந்தப் பதிவுகளினால் என்ன பயன் என்று சிறிது சிந்திப்போம்.

பதிவு எழுத வந்தவர்கள் பெரும்பாலும் யாரையாவது பார்த்துத்தான் பதிவுலகத்திற்குள் வந்திருப்பார்கள். இதில் கூகுளின் பங்கு மகத்தானது. அவர்கள் இந்த வசதியைக் கொடுக்காவிடில் பதிவுலகம் இவ்வளவு வளர்ந்திருக்குமா என்பது ஒரு கேள்விக் குறியாகத்தான் இருந்திருக்க முடியும்.

இரண்டாவது எழுதுபவர்களின் கற்பனைக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது. அவர்களின் எழுத்துத் திறமையை உலகிற்குக் காட்ட ஒரு வாய்ப்பாக அமைகின்றது. மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை. அவனுக்கு உணர்ச்சி பூர்வமான தேவைகளும் இருக்கின்றன. அவைகளில் ஒன்று தன் கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லவேண்டும் என்பது. இந்த தேவையை பதிவுகள் நல்ல முறையில் பூர்த்தி செய்கின்றது. அதனால்தான் பதிவுகள் பிரபலமாக இருக்கின்றன.

ஆனால் நாம் எல்லோரும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பதிவில் எழுதப்படும் கருத்துகள் எவ்வகையிலாவது படிப்பவர்களுக்கு உதவ வேண்டும். நகைச்சுவைப் பதிவு மனதை சந்தாஷப்படுத்தும். பயணப் பதிவுகள், நாமே அந்த இடங்ளுக்குப் போன உணர்வைக்கொடுக்கும். கதைகள் மனதை வருடிக்கொடுக்கும். ஆன்மீகப் பதிவுகள் கோவில்களுக்குப் போன திருப்தியைத் தரும்.

இவ்வாறு பலதரப்பட்ட பதிவுகள் ஏதாவது ஒரு வகையில் படிப்பவர்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கின்றன. ஆனால் சில பதிவுகள் படிப்பவர்களின் மனதைக் கெடுக்கும் விதமாகவோ அல்லது எதற்கும் உதவாத தகவல்களையோ தருகின்றன. அவ்வாறு எழுதுபவர்கள் சிறிது சிந்திக்கவேண்டும். நம் பதிவில் எழுதும் சிந்தனை மக்களுக்கு ஏதாவது வகையில் உதவுமா, இல்லையென்றால் அப்படிப்பட்ட பதிவுகளை எழுத தயங்க வேண்டும்.

தவிர, பதிவில் ஒரு சிந்தனை மக்கள் முன் வைக்கப்பட்டால் படிப்பவர்கள் அதைப்பற்றி தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டமாகப் போடவேண்டும். பதிவுகள் ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக அமைய வேண்டும். அப்போதுதான் பதிவுகளின் முழுப் பயனும் கிடைக்கும். இன்றோ பின்னூட்டங்கள் வெறும் முகஸ்துதிகளாக இருக்கின்றனவே தவிர, ஆக்கபூர்வமான கருத்துகளாக இல்லையென்பது வருத்தத்திற்குரியது.

பதிவர்களின் சந்திப்பில் இத்தகைய கருத்துக்ளை விவாதித்தால் பதிவுலகம் ஒரு பயனுள்ள சக்தியாக உருவெடுக்கும் என்பது என் கருத்து. பதிவர்களே, சிந்தியுங்கள்.