திங்கள், 17 ஜூன், 2013

வருமானவரி - மேலும் சில விவரங்கள்.

பதிவுகளைப் படிக்கும் பெரும்பான்மையானவர்கள் என்னைப்போல் சட்டங்களுக்கு பயப்படும் நடுத்தர வர்க்க மக்கள் என்று நம்பி இந்தப் பதிவை எழுதுகின்றேன். அப்படி இல்லாதவர்கள் இந்தப் பதிவைப் படித்து உங்கள் பொன்னான நேரத்தை பாழ்படுத்திக்கொள்ளாமல், இன்னும் இரண்டு காசு பார்க்கும் வேலையைச் செய்யவும்.

வருமான வரி என்றால் என்ன என்று கேட்கும் பல கோடீஸ்வரர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாதா என்ற கேள்வி கேட்பவர்களுக்கு விடை இதுதான். நாயை கண்டு பயந்து ஓடுபவனைத்தான் நாய் துரத்தும். தைரியமாக எதிர் நிற்பவனைப் பார்த்து வாலை சுருட்டிக்கொண்டு ஓடும்.

சட்டமும் இப்படித்தான். என்ன,  நாயை கல்லால் அடிக்கவேண்டும். சட்டக் காவலர்களை பணத்தால் அடிக்கவேண்டும். அவ்வளவுதான். நாம் எல்லோரும் நாயைக்கண்டு பயந்து ஓடும் ஜாதி.

வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கு மேல் உங்களுக்கு வருமானம் இருந்தால் நீங்கள் வருமான வரி கட்டவேண்டும் என்று பார்த்தோம். மாமனார் வீட்டிலிருந்து வரும் வருமானத்தை இதில் காட்டவேண்டியதில்லை. மாமனார் என்பதற்கு அர்த்தம் எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். (நமக்கு வருமானம் தரும் ஒவ்வொருவரும் மாமனாரே.)

இப்படி கணக்குப்போட்டு வரும் வருமான வரி 10000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த வரியில் 30 சதத்திற்கு குறையாமல் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் கட்டவேண்டும். 60 சதத்திற்கு குறையாமல் டிசம்பர் 31 க்குள் கட்டவேண்டும். மீதி வரியை துல்லியமாக கணக்குப் போட்டு மார்ச் 15ம் தேதிக்குள் கட்டவேண்டும். இதுதான் சட்டம்.

ஆனால் இப்படி ஒரு சட்டம் இருக்கிறதென்றே பலருக்குத் தெரியாது. மார்ச் 31 க்குள் வரி கட்டினால் போதும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறையிலும் அதையே கடைப்பிடிக்கிறார்கள்.

நானும் என் நண்பர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். போனவருடம் கொடுத்த வருமான வரிப் படிவத்தில், என் நண்பர் தவறுதலாக ஒரு ஆயிரம் ரூபாயைக் குறைத்துக் கட்டிவிட்டார். இந்த ரிடர்ன் எப்படியோ ஒரு வருமானவரி அதிகாரியின் பார்வையில் சிக்கியிருக்கிறது. அதற்கு அவர் என் நண்பருக்கு ஒரு "ஓலை" அனுப்பி விட்டார்.

அந்த ஓலையில் எழுதியிருந்ததாவது. நீங்கள் உங்கள் வருமானவரியில் 1000 ரூபாய் குறைவாகக் கட்டியிருக்கிறீர்கள், அதற்கு 750 ரூபாய் வட்டி சேர்த்து உடனடியாக பேங்கில் கட்டி, கட்டின ரசீதை இந்த ஆபீசுக்கு அனுப்பவும்.

இது என்ன, மீட்டர் வட்டி மாதிரி இருக்கிறதே என்று வருமான வரி அலுவலகத்தில் போய் விசாரித்தோம். அதற்கு அவர்கள் சொன்னது. நீங்கள் உங்கள் வரி முழுவதையும் மார்ச் மாதம்தான் கட்டியிருக்கிறீர்கள், எங்கள் விதிகளின்படி மூன்றில் ஒரு பாகத்தை செப்டம்பர் மாதத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை டிசம்பர் மாத த்திலும் கட்டியிருக்கவேண்டும். இந்த தாமதத்திற்குத்தான் இவ்வளவு வட்டி என்றார்கள்.

ஐயா, இந்த சமாசாரம் எங்களுக்குத் தெரியாதே என்றோம். நீங்கள் இந்தியக் குடிமகன்தானே என்று கேட்டார்கள். ஆம் என்றோம். அப்படியானால் உங்கள் நாட்டுச் சட்டங்களையே நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையே, அது உங்கள் குற்றமல்லவா? என்றார்கள். நாங்கள் ஒரு பதிலும் பேசமுடியவில்லை.

பேசாமல் அவர்கள் சொன்ன பணத்தைக் கட்டிவிட்டு வந்தோம்.

அப்புறம் எங்களுக்குத் தெரிந்த வக்கீல் ஒரு பொன்மொழி சொன்னார்.

Ignorance of rules is no excuse for not following.