செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம்-துவக்க விழா

நான்கு நாள் முன்னமேயே இந்தப் பதிவு வெளிவந்திருக்கவேண்டும். தமிழர்கள் வழக்கப்படி இன்று லேட்டாக வெளிவருகிறது.

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கத்தின் துவக்க விழா நேற்று அதாவது ஸ்ரீதுன்முகி ஆண்டு சித்திரை ஒன்றாம் தேதி (14-4-2016) அன்று கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. கூட்டத்திற்கு மொத்தம் மூவாயிரம் பேர் வந்திருந்தார்கள் என்று சொல்ல விருப்பம்தான். ஆனால் வந்திருந்ததோ மூன்று பேர்கள்தான்.
நான், என் இரு நண்பர்கள், ஆகக்கூடி மூன்று பேர்கள். இதற்கெல்லாம் அசந்து விடுவேனா?  "அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்" என்ற கொள்கையில் வளர்ந்தவனாச்சே. நாங்கள் மூவரும் முதலில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டோம். நான் தலைவர். ஒரு நண்பர் உபதலைவர். இன்னொரு நண்பர் காரியதரிசி.

இந்த சங்கத்தின் மூலமாக தமிழை வளர்ப்பது எப்படி என்று ஆலோசனை நடத்தினோம். பாண்டிய மன்னன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். அதே போல் இந்த சங்கத்தையும் பிரபலமாக்குவோம் என்று தீர்மானம் போட்டோம். பின்பு நான் பேசும்போது கூறினேன். தமிழை வளர்க்க முதல் தேவை தமிழன் வளரவேண்டும். தமிழனை எப்படி வளர்த்தலாம் என்று ஆலோசித்ததில் பின்கண்ட யோசனைகள் உதித்தன.

1. தமிழனுக்கு தமிழ்ப்பற்று இல்லை. பேசுவது ஆங்கிலத்தில். பார்ப்பது இந்தி சினிமா. வேலைக்குப் போவது அமெரிக்கா. அங்கு போய் குழந்தை குட்டி எல்லாம் பெத்ததுக்கப்புறம்தான் தான் தமிழன் என்பது ஞாபகம் வரும். உடனே இவனைப்போல் இருப்பவர்கள் எல்லாம் கூடி ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிப்பார்கள். அதில் நடவடிக்கைகள் எல்லாம் அமெரிக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும்.

2. கல்லூரியில் படிக்கும் பெண்கள் எல்லாம் தமிழில் பேச வெட்கப்படுகிறார்கள். அவர்கள் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு பரிபாஷை.

3. தமிழ் சீரியல்களில் வரும் பெண்கள் சீலை கட்டுவதில்லை.

4. ஆகவே இனிமேல் தமிழர்கள் எங்கு இருந்தாலும் ஆண்கள் வேட்டி, சட்டைதான் அணியவேண்டும். பெண்கள் சேலைதான் உடுத்தவேண்டும். சிறு பையன்கள் ஆப்-டிராயர் போட்டுக்கொள்ளலாம். சிறு பெண்கள் பாவாடை, தாவணிதான் போட்டுக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகளை அனுசரிப்பவர்கள்தான் தமிழர்கள். மற்றவர்கள் வந்தேறிகள். இந்த நடைமுறைகளை தமிழர்கள் எந்த அளவிற்கு கடைப் பிடிக்கிறார்கள் என்று கணித்த பிறகு அடுத்த கட்ட செயல்பாடுகளைப் பற்றி விவாதிப்போம். இத்துடன் கூட்டம் கலைகிறது.