புதன், 17 அக்டோபர், 2012

காணாமல் போன பூனைக்குட்டிகள்.

எங்கள் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த நான்கு பூனைக்குட்டிகள் எங்கு போயின என்று தெரியாமல் வருந்திக்கொண்டிருந்தேன் அல்லவா. இப்போது கிடைத்த ஒரு நல்ல செய்தி.

எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஏழெட்டு வீடுகள் தள்ளி, ஒரு வீட்டில் ஒரு முஸ்லிம் பாய் கோழி மற்றும் மட்டன்  பிரியாணிகள் செய்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். பார்சல் மட்டும்தான். பல இடங்களில் விற்பனை மையங்கள் உள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும் வேலைக்கார அம்மா அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் குடியிருக்கிறார்கள்.

நேற்று அவர்கள் சொன்ன தகவல். இந்த காணாமல் போன நான்கு பூனைக்குட்டிகளும் அந்த பிரியாணி கடையில்தான் இருக்கின்றனவாம். என் மாப்பிள்ளையும் அந்த வழியாகப் போகும்போது இவைகளைக் கண்டிருக்கிறார். நான் இன்னும் நேரில் பார்க்கவில்லை. ஆகவே, இந்த பூனைக்குட்டிகள் நல்ல வசதியான இடத்தில் இருக்கின்றன என்ற தகவல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

தாய்ப் பூனை வேகாத இறைச்சிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குட்டிப்பூனைகளுக்கு பிரியாணியே கிடைப்பது ஆண்டவன் திருவிளையாடலே.

இந்த சம்பவத்தில் ஒரு அதிசயம் என்னவென்றால், முதலில் மூன்று குட்டிகள்தான் காணாமல் போயின. அவை பிரியாணிக் கடைக்குப் போய்விட்டன என்று இப்போது தெரிகிறது. அடுத்த நாள் காணாமல் போன ஒரு பூனைக்குட்டியும் எப்படி சரியாக அந்தப் பிரியாணிக் கடைக்கே சென்று மற்ற குட்டிகளுடன் சேர்ந்தது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்! ஒரு சமயம் அந்த மூன்று குட்டிகளில் ஒன்று திரும்பி வந்து, நல்ல இடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லி, இந்த நாலாவது குட்டியையும் கூட்டிக்கொண்டு போயிருக்குமோ?

இப்போது என் மனதை வாட்டும் விஷயம் என்னவென்றால், இந்த தாய்ப்பூனை தினமும் மூன்று வேளை எங்கள் வீட்டிற்கு வந்து தன் குட்டிகளைத் தேடுகிறது. அதன் குட்டிகள் பிரியாணிக்கடையில் வசதியாக இருக்கின்றன என்ற செய்தியை அதற்குப் புரிய வைப்பது எப்படி? யாருக்காவது பூனை பாஷை தெரிந்திருந்தால் உடனே என்னைத்தொடர்பு கொள்ளவும். ஒரு சமயம் டோண்டு ராகவனுக்குத் தெரிந்திருக்குமோ?

செவ்வாய், 16 அக்டோபர், 2012

என் கேள்விக்கு என்ன பதில்?


அன்புள்ள நண்பர்களே,

நமது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இரண்டு சாதாரண சம்பவங்களை இங்கே நான் விவரிக்கிறேன்.  உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவைகளுக்கு என்ன முடிவு எடுப்பீர்கள் என்று யோசியுங்கள். (உங்களுக்கு வயது 70 ஐத் தாண்டி விட்டது என்று வைத்துக்கொள்வோம்.)

சம்பவம் ஒன்று:

நீங்கள் உங்கள் ஊரிலிருந்து டில்லிக்குப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நண்பர் டில்லியிலிருக்கும் தன் மகளுக்கு ஒரு விலை உயர்ந்த நகை ஒன்றைக் கொடுத்தனுப்புகிறார். அவருடைய மகள் நீங்கள் வரும் ரயில் அல்லது விமானத்திற்கே வந்து அந்த நகையை வாங்கிக்கொள்வாள், உங்களுக்கு சிரமம் வைக்கமாட்டாள் என்று உங்கள் நண்பர் உறுதி கூறுகிறார்.

பிரயாணத்தின்போது அந்த நகை வைத்திருந்த பெட்டி காணாமல் போகிறது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நிலை என்ன?

சம்பவம் இரண்டு:

நீங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கிறீர்கள். உங்கள் நண்பர் வந்து உங்களை அவர் வேலையாக ஒரு ஊருக்குப் போவதற்கு உங்களைத் துணைக்கு அழைக்கிறார். நீங்களும் சரியென்று போகிறீர்கள். போகும்போது அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி உங்களுக்கு பலமான அடி பட்டு விடுகின்றது. உங்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். உங்களை யார் கவனிப்பார்கள்? கண்டிப்பாக உங்கள் குடும்பத்தார்கள்தான். இந்த நிலையில் அவர்கள் என்ன சொல்வார்கள்?

தவிர, உங்கள் வைத்தியச்செலவு சில லட்சங்கள் ஆகிறது. இதை யார் கொடுப்பார்கள்?

இந்தக்கேள்விகளுக்கு எனக்கு விடை சொல்லத் தெரியவில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? நன்றாக யோசியுங்கள்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு




பூனையின் தன்மானம் என்று நான் ஒரு பதிவு போட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்தப் பூனை பக்கத்து வீட்டில் குட்டி போட்டுவிட்டு, பின்புதான் எங்கள் வீட்டு வாசலில் நின்று கத்தியது. முதல் நாள் வீட்டுக்கார அம்மா அதை விரட்டி விட்ட செய்தி உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

இரண்டு நாள் கழித்து மறுபடியும் அந்தப் பூனை வாசலில் வந்து கத்தியது. நான் ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் பால் ஊற்றிக் கொண்டுபோய் வைத்தேன். சமர்த்தாக அதைக் குடித்துவிட்டுப் போய்விட்டது. அடுத்த நாள் அது தன் குட்டிகளையெல்லாம் கொண்டு வந்து எங்கள் வீட்டு பாத்ரூம் மொட்டை மாடியில் வைத்துக் கொண்டது. பூனை தான் போட்ட குட்டிகளை அடிக்கடி இடம் மாற்றி வைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டு பாத்ரூம் மொட்டைமாடி வெயில், மழைக்கு பாதுகாப்பாக இருந்ததால் அங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு போகவில்லை.

நான் தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் பால் வாங்கப் போவேன். அன்று அப்படி பால் வாங்கி வந்தவுடன் என்னைப் பார்த்து பரிதாபமாக கத்தியது. அப்புறம் போய் அதற்காக தனியாக கால் லிட்டர் பால் வாங்கி வந்து அதற்கு ஊற்றி வைத்தேன். பாதி குடித்து விட்டுப் போய்விட்டது. அப்புறம் மதியம் வந்து மீதிப் பாலையும் குடித்துவிட்டது.

அடுத்த நாளும் இப்படியே செய்தேன். அப்புறம் என் வீட்டம்மா, தயிர் சாதம் பிசைந்து வைத்தாள். பாலைவிட தயிர் சாதத்தை அந்தப் பூனை விரும்பி சாப்பிட்டது. அந்தப் பூனை இரவு முழுவதும் எங்கோ போய்விட்டு காலையில்தான் குட்டிகளைப் பார்க்கவரும். அப்போது, அந்தக்குட்டிகள் பலவாறாக அந்தப் பூனையின் மேல விழுந்து கொஞ்சி, அப்புறம் பால் குடிக்கும். குட்டிகளுக்கு பால் கொடுத்த பிறகு தாய்ப் பூனை எங்களிடம் வந்து நின்று கொள்ளும். ஏதாவது தின்பதற்கு வைத்தால் ஒழிய இடத்தை விட்டுப் போகாது.

இப்படி ஒரு பத்து நாள் சென்ற பிறகு ஒரு குட்டி மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டது. மொட்டை மாடியின் உயரம் 8 அடி இருக்கும். பூனைக்குட்டிகள் இப்படி விழுந்தாலும் அவைகளுக்கு அடி ஒன்றும் படாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தாய்ப் பூனை அதைக் கவ்விக்கொண்டு போய் திரும்பவும் மொட்டை மாடியிலேயே விட்டு விட்டது. இரண்டு நாள் கழித்து இரண்டு குட்டிகள் கீழே விழுந்து விட்டன. தாய்ப்பூனை அவைகளை அப்படியே விட்டுவிட்டது. மேலே இரண்டு குட்டிகள், கீழே இரண்டு குட்டிகள், ஆக நான்கு குட்டிகளுக்கும் பால் கொடுத்துக்கொண்டு இருந்தது.

அப்புறம் இரண்டு நாள் கழித்து இன்னொரு குட்டியும் கீழே வந்து விட்டது. இப்போது மேலே இருக்கும் ஒரு குட்டி மட்டும் கீழே உள்ள மூன்று குட்டிகளையும் பார்த்துக் கத்திக் கொண்டு இருந்தது. ஒரு நாள் இரவு இந்த மேலே இருக்கும் குட்டிப்பூனை போட்ட சத்தத்தைப் பொறுக்க முடியாமல் என் பேரன் ஏணி வைத்து ஏறி அதையும் கீழே இறக்கி விட்டான். அது கொஞ்சம் நோஞ்சான். தானாக கீழே குதிக்கமுடியவில்லை.

இப்படியாக இந்த நான்கு குட்டிகளும் தாய்ப்பூனையும் என் காருக்கு அடியில் குடித்தனம் நடத்த ஆரம்பித்தன. எப்போது பார்த்தாலும் பூனைகளின் மியா மியா சத்தம் வீட்டைச் சுற்றி கேட்க ஆரம்பித்தது. அதுகள் பண்ணும் சேட்டைகளைப் பார்த்த என் வீட்டுக்காரி, இவைகளைப் பிடித்து எங்காவது கொண்டு போய் விட்டுவிட்டு வாங்களேன் என்று நச்சரிக்க ஆரம்பித்தாள். அவைகளைப் பிடிக்கப்போனால் காருக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டன. பல தடவை முயன்றும் என்னால் அவைகளைப் பிடிக்க முடியவில்லை. தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்.

என் வீட்டுக்கு பக்கத்து தெருவில் மீன் கடைகளும் மட்டன் கடைகளும் நிறைய இருக்கின்றன. தாய்ப்பூனை அங்கு போய், அவர்கள் பரிதாபப்பட்டு போடும் மீன்களையும் மாமிசத் துண்டுகளையும் கொண்டு வந்து குட்டிகளுக்கு கொடுக்க ஆரம்பித்தது. அவை தின்னது போக மிச்சங்கள் நாற்றமடிக்க ஆரம்பித்தன. அவைகளை கிளீன் பண்ணுவது பெரும்பாடாக ஆயிற்று. என் வீட்டுக்கார அம்மாவோ சுத்த சைவம். வீட்டில் ஒரே களேபரம். என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கும் போது ஒரு நாள் மூன்று குட்டிகளைக் காணோம். எங்கு போனது என்று தெரியவில்லை. கடைசியாக கீழே இறக்கிவிட்ட குட்டி மட்டும்தான் இருந்தது.

தாய்ப்பூனை அங்கும் இங்கும் அலைந்து அந்தக் குட்டிகளைத் தேடியது. ஆனால் அந்தக் குட்டிகள் போனவை போனதுதான். என்ன ஆயிற்று என்றே யாருக்கும் தெரியவில்லை. தாய்ப்பூனை அந்த ஒரு குட்டிக்கு மட்டும் பால் கொடுத்துக்கொண்டு இருந்தது.

இன்று காலையிலிருந்து அந்த ஒரு குட்டியையும் காணவில்லை. தாய்ப்பூனை அதைத் தேடி, காலையிலிருந்து பரிதாபமாக கத்திக்கொண்டே வீட்டைச் சுற்றிச்சுற்றி வருகிறது. குட்டி எங்கே போனது என்று தெரியவில்லை. அதன் பரிதாபக் குரலைக் கேட்டால் மனது பிசைகிறது. என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது.

இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால் அந்தக் குட்டிகளின் தந்தைப் பூனையாக இருக்கவேண்டும். அது எப்போதாவது வந்து போய்க்கொண்டு இருந்தது. காலை பத்து மணிக்கு அதுவும் வந்து தாய்ப் பூனையுடன் சேர்ந்து கத்திக்கொண்டு வீட்டைச் சுற்றிச்சுற்றி வருகின்றன.

பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டிக்குள் போடும் மனிதர்கள் எங்கே? குட்டியைத் தேடித் தவிக்கும் பூனை எங்கே?

சனி, 13 அக்டோபர், 2012

இன்றைய நாட்டு நடப்பு


இன்றைக்கு புரட்டாசி சனிக்கிழமை. பெருமாளுக்கு உகந்த நாள். எப்படியாவது ஒரு நல்ல செய்தியுடன் ஒரு பதிவு போடலாம் என்று தினத்தந்தி செய்தித்தாளைப் படித்தேன. என்னுடைய அல்லது உங்களுடைய துரதிர்ஷ்டம் இந்த செய்திகள்தான் கிடைத்தன.

1.  கோபியில் ஈமு பண்ணை நடத்தி 8 கோடி மோசடி செய்த பெண் போலீஸ் உட்பட 3 பேர் கைது.
 
2.  கடன் வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி

3.  திருமணம் செய்வதாகக் கூறி பத்தாவது படிக்கும் மாணவியை கர்ப்பிணியாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் தலைமறைவு.

4. சுய உதவிக்குழுவினருக்கு கடன் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் ஏமாற்றிய "அப்ரோ" நிறுவனர் ஏசுதாஸ் கைது.

5.  வணிக வளாக லிப்டில் ஓவர் லோடு ஆட்கள் ஏறினதில் லிப்ட் ஒரு மணி நேரம் நின்றது.

6.  குடி போதையில் 3 வயது குழந்தையைத் தவிக்கவிட்ட தந்தை.

7.  பைனான்ஸ் கம்பெனி ஏஜண்டின் கணவர் அவமானம் தாங்காமல் தற்கொலை.

8.  15000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது.

9.  போர்ஜரி கடிதம் கொடுத்து அரசு மான்யத்தை சுருட்டிய மத்திய மந்திரி சல்மான் குர்ஷீத்.

நான் ரொம்ப நல்ல எண்ணத்துடன்தான் பேப்பரைப் படித்தேன். என் கண்ணில் பட்ட செய்திகள் இவை. வேறு நல்ல செய்தி ஏதாவது உங்கள் கண்களில் பட்டிருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

நவீன முதியோர் இல்லங்கள்


மக்களிடையே, குறிப்பாக சில வட்டங்களில் உள்ளவர்களிடம், பணம் ஒரு பொருட்டல்ல என்ற நிலை நிலவுகின்றது. அதிலும் தன்னுடைய மகன்கள் வெளி நாட்டில் வேலையிலிருந்தால் பணம் அதிகம் துள்ளி விளையாடும். இப்படிப் பட்டவர்களைக் குறி வைத்து இப்பொழுது சில பில்டர்கள் கல்லா கட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

அது பற்றிய விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் காட்டும் வசீகரங்கள் சில.

1. முற்றிலும் பாதுகாப்பான தனி வீடுகள்.
2. 24 x 7 பாதுகாப்பு
3. சீனியர் சிடிசன்களுக்கான ஸ்பெஷல் கட்டுமானம்.
4. சென்ட்ரல் கிச்சன்.
5. மருத்துவ வசதி
6. தியான மண்டபம்
7. உடற்பயிற்சி மையம்
8. வாக்கிங்க் போக தனிப் பாதை
9. பிக்னிக் வசதி
10. ரீடிங்க் ரூம்
11. விளையாட்டு அறை
12. கேபிள் டி.வி.
13. லாண்ட்ரி
14. பொது கிளீனிங்க்
15. பிரேயர் ஹால்
16. ஹவுஸ் கீப்பிங்க்

இப்படி வசதிகளை அடுக்கி வரும் விளம்பரங்களைப் பார்த்து விட்டு அயல்நாட்டிலிருக்கும் மகன்/மகள் உடனே அப்பாவிற்கு ஒரு ப்ளாட் புக் பண்ணி விடுவார்கள். ப்ளாட் ஒன்று 25 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை போகிறது. தங்கள் பெற்றோர்களுக்கு, தங்களைப் பெற்ற கடனை இதன் மூலம் தீர்த்த திருப்தி அவர்களுக்கு கிடைக்கிறது.

இந்த மாதிரி அமைப்புகளை நீடித்து நிர்வகிப்பதில் உள்ள சிரமங்கள் பலருக்குப் புரிவதில்லை. வீடுகளைக் கட்டி விற்பதுடன் கான்ட்டிராக்டரின் வேலை முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு அந்த அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த கூட்டமைப்பில் குடியிருப்பவர்களையே சேரும். ஒரு தனி வீட்டிற்கு வேண்டிய பராமரிப்பு வேண்டாமென்றுதான் இத்தகைய கூட்டமைப்புகளுக்கு சீனியர் சிடிசன்கள் வருகிறார்கள். மறுபடியும் அதே வேலை என்றால் அவர்களால் எப்படி நிர்வகிக்க முடியும்?

ஒரு பெரிய குடியிருப்பில், சென்ட்ரல் கிச்சனுடன், பராமரிப்பு வேலைகளை கவனிக்க ஒரு ஆள் போட்டாலும் அவரைக் கண்காணிக்க ஒரு தலைவர் வேண்டும். இப்பொழுது இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. வயதான பின்பும் இத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்ளும் திறன் இருப்பது கடினம்.

ஆகவே இந்த மாதிரி சீனியர் சிடிசன் குடியிருப்பில் வீடு வாங்குவது யோசித்து செய்யவேண்டும். பணம் இருக்கிறதென்று அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது.

எந்த திட்டமும் ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சிகரமாகத் தெரியும். நாளாவட்டத்தில் அதன் கவர்ச்சி மங்கி அதன் உள் விகாரங்கள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். கூட்டு முயற்சிகள் பெரிய அளவில் வளராததற்கு காரணம் இதுதான். தொடர்ச்சியான முனைப்பு இருப்பது கடினம்.

பிரச்சினைகள் தோன்றும்போது இந்த வீடுகளைக் கட்டிக் கொடுத்தவர் அங்கு இருக்கமாட்டார். அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு அந்த வீடுகளில் குடியிருப்பவர்களையே சேர்ந்ததாகும். தரமான உணவு என்பது கனவாக மாறலாம். மற்ற எல்லா வசதிகளும் ஆரம்ப காலத்தில் காட்டியது போல் பராமரிக்க முடியாமல் போகலாம்.

அத்தகைய வீடுகளை உங்கள் இஷ்டம்போல் விற்க அல்லது வாடகைக்கு விட பல சங்கடங்கள் ஏற்படும். இந்த சிக்கல்களை எல்லாம் மனதில் கொண்டு இம்மாதிரி குடியிருப்பில் சேருங்கள்.

திங்கள், 8 அக்டோபர், 2012

இயற்கை விவசாயம் - கூடுதலாக சில சிந்தனைகள்


இயற்கை வழி விவசாயம் மூலம் கிடைக்கும் உணவுப்பொருட்கள் சுகாதாரமானவை. மனிதன் ஆரோக்யமாக வாழ்வதற்கு நல்ல, சுகாதாரமான, கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இல்லாதிருப்பது அவசியம். இயற்கை வழி விவசாயம் செய்தால் அத்தகைய உணவுப் பொருட்கள் நமக்கு கிடைக்கும். தவிர, சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை. நிலவளம் பாதுகாக்கப்படுகிறது.

ஏனெனில் இந்த முறை விவசாயத்தில் இயற்கைக்கு எதிராக எதுவும் செய்யப்படுவதில்லை. இயற்கை உரங்கள், இயற்கை வித்துக்கள், இயற்கையில் கிடைக்கும் பூச்சி மருந்துகள் இவைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்படி விவசாயம் செய்யப்படும்போது நில வளம் பாதுகாக்கப்படுகிறது. சத்துள்ள, சுகாதாரமான உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. இத்தகைய உணவைச் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

இத்தகைய விவசாயத்தை நிச்சயமாக செயல்படுத்த முடியும். அதற்கான மனநிலைதான் வேண்டும். இந்த முறை விவசாயத்தில் பல விதமான பயிர்கள் விளைவிக்கப்படுவதால் நில வளம் பாதிக்கப்படுவதில்லை. பலர் இத்தகைய பண்ணைகளை வைத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பண்ணைகளைப் பராமரிப்பதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அது தவிர, அந்தப் பண்ணைதாரர்களுக்கு இது ஒரு பெருமையும் சேர்க்கும். அவர்கள் லாப நஷ்டம் பார்ப்பதில்லை. அல்லது அவர்கள் கணக்குகள் லாபம் காட்டக்கூடும்.

மனித மனம் விசித்திரமானது. தான் கொண்ட நம்பிக்கைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் கேட்காது. அதனால் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யும். நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது பேர் செய்வது தவறு என்று சொல்லும். தான் சொல்வது பிரச்சினை மிகுந்தது என்றாலும், நம்பிக்கை இழக்காமல் சொன்னதையே செயல்படுத்துக்கொண்டு இருக்கும்.

இதற்கு இயற்கை விவசாயமும் விலக்கல்ல. இயற்கை விவசாயம் நல்லதுதான். ஆனால் வளர்ந்த நாடுகளிலேயே பத்து சதம் விவசாயிகள் கூட இயற்கை விவசாயம் செய்வதில்லை. அதன் நன்மைகள் தெரிந்தும் கூட அவர்களால் இயற்கை விவசாயம் செய்ய முடியவில்லை.

ஏன்? இயற்கை விவசாயத்திற்கு வேண்டிய இயற்கை உரங்கள் போதுமான அளவு இல்லை. இந்தியாவில் மொத்தமாக என்ன நடக்கிறது என்று நேரில் போய் பார்க்க முடியாது. நாம் அறிந்ததை வைத்து அறியாததை யூகிக்க முயல்கிறோம். அதுதான் நடைமுறையில் செய்யக்கூடியது. எனக்குத் தெரிந்த ஒரு யதார்த்தம், எல்லா மாநிலங்களிலும் விவசாயத்திற்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன், கால்நடைகளை வைத்துத்தான் நிலங்களை உழுது பண்படுத்தினார்கள். விவசாயப் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று அந்த வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. கால்நடைகளின் பராமரிப்பு செலவு அதிகரித்து விட்டது. தீவனப் பயிர்களுக்குப் பதில் வேறு பயிர்கள் பயிரிட்டால் கூடுதல் வருமானம் வருகின்றது. தற்போது பயிரிடப்படும் பெரும்பாலான பயிர்களில் தானியம் மட்டும்தான் கிடைக்கிறதே தவிர, கால்நடைகளுக்கான தீவனம் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களினால் விவசாயிகள் பால் மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு எருதுகளை எல்லாம் விற்று விட்டார்கள்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் துடியலூர் சந்தைகளில் முன்பு கால்நடைகள் அதிக அளவில் விற்கவும் வாங்கவும் செய்வார்கள். இப்போது இந்த கால்நடைகளின் வியாபாரம் மிகவும் குறைந்து விட்டது. காரணம் விவசாயப் பண்ணைகளில் கால் நடைகள் இல்லை. நான் படிக்கும்போது விவசாயக் கல்லூரியில் எருதுகளும் பசுக்களுமாக 200 உருப்படிகள் இருந்தன. தற்போது 20 உருப்படிகள் கூட இல்லை. காங்கயம் பட்டக்காரர் ஆயிரக்கணக்கான எருதுகளும் மாடுகளும் வளர்த்துக்கொண்டு இருந்தார். இப்போது அவரிடம் பெயரளவிற்குத்தான் கால் நடைகள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த நிலைதான் இருக்கிறது. ஆகவே இயற்கை விவசாயத்திற்கு வேண்டிய தொழு உரம் மிகவும் அரிதாகி விட்டது. அடுத்ததாக இலைதழைகள். முன்பு இருந்த அளவு மரங்களும் காடுகளும் இப்போது இல்லை. இரண்டாவது, கிடைக்கும் இலை தழைகளை நிலத்திற்கு கொண்டு சேர்க்க அதிக செலவு ஆகிறது. இந்த செலவு விவசாயத்திற்கு கட்டுபடியாவதில்லை.

மனிதக்கழிவுகளைச் சேகரிக்கும் முறைகள் மாறிவிட்டன. முன்பு நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளையும், மனிதக் கழிவுகளையும் சேர்த்து கம்போஸ்ட் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நகரத்தைச் சுற்றிலுமுள்ள விவசாயிகள் தானியமல்லாத மற்றப் பயிர்களுக்கு அதைப் பயன்படுத்தினார்கள். ( நம்பள்கி அமெரிக்காவில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருந்தார். சைனாவில் நெற்பயிருக்கு இதுதான் முக்கிய உரம். அங்கு இந்த மனிதக் கழிவுகளை அருவருப்புடன் பார்ப்பதில்லை).

தற்போது அதிகரித்து வரும் கோழிப் பண்ணைகள் கொஞ்சம் இயற்கை எருக்களைக் கொடுக்கின்றன. ஆனால் இந்தக் கோழி உரம் விலை அதிகமாகின்றது.

இயற்கை உரங்களின் விலையும் அதிகம். கிடைக்கும் அளவும் குறைவு. இது இயற்கை விவசாயத்திற்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கை விவசாயப் பண்ணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பண்ணைகளிலிருந்து கிடைக்கும் பொருள்களை அதிக விலைக்கு விற்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் இந்த இயற்கை விவசாயம் கட்டுப்படியாகும்.

இந்த இயற்கைப் பொருள்களின் நன்மையை உணர்ந்து அதிக விலை கொடுத்து வாங்குமளவிற்கு நம் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. இந்த சாதக பாதகங்களை எல்லாம் கணக்கில் கொண்டுதான் இயற்கை விவசாயம் வளர வேண்டும்.

மக்கள் நாட்டில் நிலவும் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகாயத்தில் கோட்டை கட்டுவோம் என்று வீராப்பு பேசுவதில் பயனில்லை.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

நான் வெட்கப்படுகிறேன்?


என்னுடைய போன பதிவின் தலைப்பு கொஞ்சம் கொஞ்சம் என்ன, மிக அதிகமாகவே விரசமாக அமைந்து விட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். பதிவை போஸ்ட் பண்ணுவதற்கு சில விநாடிகளுக்கு முன்தான் இந்த தலைப்பை வைத்தேன்.

நான் முதலில் வைத்திருந்த தலைப்பு "இளம் பெண்களின் கொலைகள்" என்பதாகும். இப்படி தலைப்பு வைத்தால் பார்வையாளர்கள் அதிகம் வரமாட்டார்கள், அதனால் கொஞ்சம் *********, என்ன சொல்வது என்று தெரியவில்லை,  வைத்துவிட்டேன். எதிர் பார்த்த மாதிரி அநேகம் பேர் பார்வையிட்டார்கள். அருமைத் தம்பி, பழமை பேசி கூட கேட்டுவிட்டார்.


அண்ணா வணக்கம். கடையில நெம்பக் கூட்டமுங்களா??!

வாங்க, தம்பி. கடைல கூட்டம்னா கூட்டம், அப்படியொரு கூட்டம். இத்தனை கூட்டத்தை நான் என் பதிவுலக வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. பதிவு போட்ட 24 மணி நேரத்தில் 1735 பார்வையாளர்களும் 26 பின்னூட்டங்களும் சேர்ந்துள்ளன. பெரிய கம்பெனிக்காரன் எல்லாம் நல்ல விளம்பர   வாசகங்களுக்கு ஏன் அவ்வளவு பணத்தை வாரி இறைக்கறான்னு இப்ப நான் நல்லா புரிஞ்சிகிட்டேன்.

சரக்கு எப்படியிருந்தாலும் வெளிப்பூச்சு நல்லா இருந்தா வித்துப் போயிடும் அப்படீங்கறது தெள்ளத்தெளிவா புரியுது. ஆனா இந்த உத்தியை இனி நான் பயன்படுத்த மாட்டேன். எனக்கு இந்த விளம்பரம் வேண்டாம்.




நண்பர் இக்பால் செல்வன் எழுதிய பின்னூட்டமும் அதற்கு நான் கொடுத்த விளக்கத்தையும் பாருங்கள்.


இந்தப் பதிவுக்கும், அதன் தலைப்புக்கும் நான் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றேன் ...

இந்தப் பதிவு பெண்கள் அடக்கம் ஒடுக்கமாக இருந்தால் ஏன் பிரச்சனை என்ற தொனியில் எழுதியது முறையான ஒன்றல்ல ..

ஆண்கள் தான் மேற்சொன்ன பிரச்சனைகள் / குற்றங்களை செய்பவர்களாக இருக்கின்றார்கள். கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களே .. அத்தோடு சமூக சுதந்திரம், விழிப்புணர்வு, அந்நியர்களோடு பழகும் விதங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையும், பெண்களை சுகிக்கவும், கசக்கி எறியவும் ஆண்களுக்கு கற்றுத் தந்த சமூகக் கோணலாகவே இச்சம்பவங்களை நான் பார்க்கின்றேன். நன்றிகள் !



உங்களுடைய தார்மீகக் கோபம் மிகவும் நியாயமானதே. பதிவின் தலைப்பு பெண்களை மட்டும் குற்றவாளிகள் போல் சித்தரிக்கிறது. இது நியாயமல்ல. அதற்காக பெண்கள் சமுதாயத்திடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

முதலில் இந்தப் பதிவிற்கு "இளம் பெண்களின் கொலைகள்" என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். பதிவிடுவதற்கு சில விநாடிகளுக்கு முன்தான் அதிகமான வாசகர்களை ஈர்க்கலாமென்ற எண்ணத்தில் தலைப்பை மாற்றினேன். அதற்கு காலம் கடந்து வருந்தி என்ன பயன்?

என்னுடைய அடுத்த பதிவில் இந்தக் கண்டனத்திற்கு என்னுடைய விளக்கம் அல்லது சமாதானம் அல்லது பாவமன்னிப்பு - ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளவும் - காணலாம்.


கடைசியாக,  பதிவின் தலைப்பை மாற்றிவிட்டேன்.

இந்த தலைப்பு யாருடைய மனதைப் புண்படுத்தியிருந்தாலும், குறிப்பாக பெண்கள் சமுதாயத்திடம், நான் எனது மனப்பூர்வமான வருத்தத்தை  தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 4 அக்டோபர், 2012

இளம்பெண்களின் கொலைகள்


கோவையில் கடந்த ஒரு வாரத்தில் நான்கு இளம் பெண்கள் அவர்களுடைய காதலர்கள் என்று சொல்லப்படுபவர்களினால் கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.  அதில் இரண்டு கொலையில் ஒரு தலைக் காதல் என்கிறார்கள். ஆனால் செய்தியைப் படிக்கும்போது, அந்தப் பெண் முதலில் காதலுக்கு உடந்தையாக இருந்துவிட்டு பின்னால் மனம் மாறியிருக்கிறாள்.

ஒரு சம்பவத்தில் சொந்த அத்தை மகளையே, அவளுடைய முறைப் பையன்  கொலை செய்த சம்பவமும் நடந்திருக்கிறது.

ஒரு சம்பவத்தில் பெண்ணின் தாய் தந்தை இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெண் இங்கே ஒரு உறவினர் வீட்டில் இருந்து கொண்டு படித்துக்கொண்டு இருக்கிறது. இது என்ன குடும்பம் என்று புரியவில்லை.

நேற்று செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி. முகநூல் மூலம் அறிமுகமானவர்கள். ஒரு லீவு நாளில் வெளியூர் போகலாம் என்று அழைத்தானாம். இரு தோழிகள் இரண்டு முகநூல் நண்பர்களுடன் வெளியூர் போனார்களாம். அங்கு லாட்ஜில் ரூம் போட்டுத் தங்கினார்களாம். பிறகு என்ன நடக்கும் என்பதுதான் நன்கு தெரியுமே? இப்பொது அவர்கள் போட்டோவைக் காட்டி மிரட்டுகிறார்களாம். அப்படீன்னு போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள்.

பால் குடிக்கும் பாப்பா. ஒன்றுமே தெரியாது பாருங்கள். இவர்களையெல்லாம் எப்படித் திருத்த முடியும்?

இது தவிர, நகைக்காக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து தாக்குவதும் கொலை செய்வதும் பல இடங்களில் நடந்துள்ளன.

இவை எல்லாம் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறான் என்று சந்தேகப்பட வைக்கின்றது.

இதற்கென்ன காரணம் என்று மக்கள் சிந்திக்கவேண்டும். காரணம் எதுவாக இருப்பினும், தற்காப்புக்காக மக்கள் தேவையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். தற்காப்புக்கான வழிமுறைகள் தெரிந்திருந்தும் கடைப்பிடிப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை.

குழந்தைகளைப் பெறுவது என்பது பெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகும். குழந்தைகள் தானாக வளர்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருப்பது தவறு. அவர்களின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, அவர்கள் போகும் பாதை சரியானதுதானா என்று கண்காணிக்கவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும்.

நகரங்களில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள் புதிதாக வீட்டிற்கு வரும் நபர்களை வீட்டினுள் எக்காரணம் கொண்டும் விடக்கூடாது. அப்படி வருபவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்பார்கள். இதுதான் வழக்கமான உத்தி. தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பது என்பது நமது பண்பாடு. வந்தவர்கள் வாசலில் நிற்க, கதவை அப்படியே திறந்த நிலையில் விட்டுவிட்டு வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்றால், புதிதாக வந்தவன் வீட்டிற்குள் நுழைந்து கதவை உட்பக்கம் தாட்பாள் போட்டுவிட்டு கொலை செய்கிறான்.

ஒருவன் வாசலில் நிற்கும்போது எப்படி வாசல் கதவை சாத்தி தாளிட்டுவிட்டுப் போவது என்பது நம் பெண்களிடம் இருக்கும் ஒரு குணம். இந்த குணத்தைப் பயன்படுத்தித்தான் பல திருட்டுகள் நடக்கின்றன. வீட்டிற்கு ஒரு இரும்பு கிரில் கேட் போட்டு யார் வந்து என்ன விசாரித்தாலும் அதைத் திறக்காமல்தான்  பதில் சொல்லி அனுப்பவேண்டும். தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. அதனால் பாவம் வந்தாலும் சரி என்று இருக்கவேண்டும்.

பெண்கள் காலை நேரத்தில் நடைப் பயிற்சி செய்வது இப்போது அதிகரித்துள்ளது. அப்போது ஒருவராகச் செல்லுதல் கூடாது. தவிர நகைகள் போட்டுக் கொண்டு போவதும் உசிதமல்ல. இன்று தங்கம் விற்கும் விலையில் ஒரிரு பவுன்கள் நகைகள் கூட ஆபத்தாக இருக்கின்றன.

ஆனால் பலமுறை பட்டாலும் மனிதனின் மனோபாவம் மாறுவதில்லை என்பது ஒரு சோகமான சூழ்நிலை.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதுவும் குற்றம்


மகாத்மா காந்தி நினைவுப் பதிவு

இந்த இரண்டும் குற்றமே இல்லை. போலீசில் மாட்டிக் கொள்வதுதான் குற்றம். நன்கு படித்த ஆசிரியர் சொல்லும் வார்த்தையா இது என்று பலரும் நினைக்கலாம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இப்படி அடுக்கு மொழியில் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனால் நம் நாட்டின் நடைமுறையில், நான் மகாத்மா காந்தி மாதிரி சத்தியம் மட்டும்தான் பேசுவேன் என்று வாழும் தைரியம் எனக்கு இல்லை. ஒன்று மட்டும் என்னால் முடிந்தது. என் வாழ் நாளில் நான் எதற்கும் லஞ்சம் வாங்கியதில்லை. அப்படி வாய்ப்புள்ள வேலையில் நான் இருக்கவில்லை என்பதுதான் முழு உண்மை.

நான் பல இடங்களில் லஞ்சம் கொடுத்திருக்கிறேன். அதைப் பெரிய சாதனையாகவோ, கெட்டிக்காரத்தனமாகவோ நான் கருதவில்லை.   அதை நான் நியாயப் படுத்தவும் இல்லை.  என்னால் நேர்வழியில் சென்று அந்தக் காரியத்தை முடிக்க இயலவில்லை. அது என் கையாலாகத்தனம். அதை ஈடுகட்ட இந்த உபாயத்தைக் கையாண்டேன். அவ்வளவுதான்.

உதாரணத்திற்கு ஒரு காரியம். அந்தக்காலத்தில் கவர்ன்மென்ட் வேலை எதுவென்றாலும் அதற்குரிய பீஸை டிரஷரியில் கட்டி அந்த செலானைக் கொடுக்கவேண்டும். இந்த மாதிரி செலான் மூலம் பணம் கட்டியிருப்பவர்களுக்கு அதன் நடைமுறைகள் தெரியும்.

செலான் பாரம் வாங்குவதே ஒரு கலை. அதைப் பூர்த்தி செய்து உள்ளே கொடுத்தால் ஒரு மணி நேரம் கழித்து அதற்கு ஒரு நெம்பர் போட்டுக் கொடுப்பார்கள். அதைக் கொண்டுபோய் ஸ்டேட் பேங்கில் பணம் கட்டவேண்டும். ஏகப்பட்ட பேர் இருப்பார்கள். பணம் கட்டவே ஒரு மணி நேரம் ஆகும். பின் செலான் வர மாலை ஐந்து மணி ஆகும். கட்டாயம் ஒரு நாள் ஆகும்.

இந்த வேலையை முடித்துக்கொடுக்க புரோக்கர்கள் உண்டு. அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி பணமும் கமிஷனும் கொடுத்துவிட்டு மறுநாள் போனால் செலான் ரெடியாக இருக்கும். இங்கு நான் சட்டப்பிரகாரம்தான் நடப்பேன் என்றால் வெட்டி அலைச்சல்தான் மிஞ்சும்.

ஆகவே என்னுடைய சுயநலத்திற்காக மனச்சாட்சிக்கு எதிராக செயல்பட்டிருக்கிறேன். இது சரியா இல்லை தவறா என்ற விவாதத்திற்கு முடிவே இருக்காது.

மகாத்மா காந்தியே இன்று உயிருடன் இருந்தாலும் நம் நாட்டின் தலைவிதியை மாற்ற அவரால் முடியாது என்பதுதான் உண்மை.

திங்கள், 1 அக்டோபர், 2012

தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரி செய்தல்


என்னுடைய பிளாக்கில் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்யாமல் இருந்தது. என்னுடைய பிளாக்கில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். நண்பர்கள் தமிழ் இளங்கோவும் அப்துல் பாசித்தும் இரண்டு தீர்வுகள் கூறியிருந்தார்கள்.

ஒன்று டெம்ப்ளேட்டில் கரெக்ஷன் செய்வது. மற்றொன்று லேஅவுட்டில் பேஸ்ட் செய்வது. உங்களுக்குப் பிடித்ததைப்  பயன்படுத்தலாம். இரண்டு முறைகளும் நன்றாகவே இருக்கின்றன.

தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை கீழே கொடுத்துள்ள இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி சரி செய்யலாம். இரண்டும் நன்றாக உள்ளன.

முறை ஒன்று:
வணக்கம்! உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை எனக்கும் வந்தது. கீழே குறிப்பிட்டுள்ள தளம் சென்று பார்க்கவும். நன்றி!
http://www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html 

முறை இரண்டு:
Abdul Basith30 September 2012 9:17 PM

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

உதவி செய்ய முடியுமா?

என்னுடைய பதிவில் சும்மா இருக்க முடியாமல் சில நாட்களுக்கு முன்  டெம்ப்ளைட்டை மாற்றினேன். ஒரு மாதிரியாக எல்லா திரட்டிகளையும் இணைத்து விட்டேன். தமிழ்மணம் தவிர மற்றவை எல்லாம் சரியாக இருக்கின்றன.

தமிழ் மணம் திரட்டியில் இணைக்க URL ல் "in" ஐ "com" என்று மாற்றி சேர்ந்தால் சேர்ந்துகொள்கிறது. ஆனால் ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லை.

கழுதையை என்ன செய்தால் ஒழுங்காகப் பொதி சுமக்கும் என்று யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

சனி, 29 செப்டம்பர், 2012

ஈரோடு மாவட்டக்காரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

உலகத்தில் மிக விலை உயர்ந்த பொருளான காண்டாமிருகத்தின் கொம்பிற்கு பல்லாயிரக்கணக்கில் தேவை இருக்கிறது. அந்தக் கொம்பின் மருத்துவக் குணங்களை அனைவரும் அறிவர். இந்தக் காண்டாமிருகம் ஆப்பிரிக்கா காடுகளில் லக்ஷக்கணக்கில் திரிந்து கொண்டு இருக்கின்றன. அங்குள்ளவர்களுக்கு இந்தக் கொம்பின் மதிப்பு தெரியாததால் அதை சும்மா தங்கள் கழுத்தில் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள்.

நமது நண்பர் ஒருவர் சமீபத்தில் ஆப்பிரிக்கா போயிருந்தார். அப்போது அவர் ஆயிரக்கணக்கில் காண்டாமிருகக் கொம்புகள் ரோடு ஓரங்களில் கொட்டிக்கிடப்பதைப் பார்த்தார். இதற்கு சர்வதேச மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கும் என்பதை உணர்ந்து அங்குள்ள லோகல் தலைவர்களுடன் அக்ரிமென்ட் போட்டுவிட்டு வந்துள்ளார்.

அதை சர்வதேச மார்க்கெட்டில் விற்பதற்காக ஒரு மார்க்கெட்டிங்க் கம்பெனி ஈரோட்டில் ஆரம்பித்துள்ளோம். யாம் பெற்ற இன்பம் ஈரோடு மக்களும் அடைய விரும்புகிறோம். இதற்காக வருகிற திங்கட்கிழமை ஈரோடு கொங்கு திருமண மண்டபத்தில் ஒரு கூட்டம் கூட்டியிருக்கிறோம். கூட்டத்தில் விருப்பமுள்ளவர்களை கம்பெனி மார்க்கெட்டிங்க் ஆபீசராக நியமனம் செய்ய உள்ளோம். மாத சம்பளம் 50000 ரூபாய். நீங்கள் வீட்டிலிருந்து கொண்டே கம்பெனி வேலையைச் செய்யலாம்.

ஆபீசர் வேலைக்கு டெபாசிட் தொகை வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வேலையில் சேர விருப்பமுள்ளவர்கள், தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டிராப்ட் கொண்டு வரவும். டிராப்ட் " ஈரோடு காண்டாமிருகம்  கம்பெனி" என்ற பெயருக்கு எடுக்கவும். வேலைக்குத் தகுதியுள்ளவர்களுக்கு உடனே அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் கொடுக்கப்படும்.

அனைவரும் வருக, வருக, வருகவே.

பின் குறிப்பு: வேலையில் சேர்ந்த பிறகு எக்காரணம் கொண்டும் டெபாசிட் தொகை திருப்பித் தர மாட்டாது. ஈரோடு மாவட்டம் தவிர வேறு மாவட்டக்காரர்கள் வரவேண்டாம்.

ஒரு திருத்தம்


எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது | உலகவாழ்க்கையே வெறும் ஜெயிலு வாழ்க்கைதான்......

பழனி.கந்தசாமி at சாமியின் மனஅலைகள் - 10 hours ago
மேற்கண்ட தலைப்பில் என்னுடைய பிளாக்கில் ஒரு பதிவு வெளியானதாக கூகுள் காட்டும். அது ஒரு தவறான சரியான தகவல்தான். அது எப்படி நடந்தது என்பது ஒரு வெட்கக்கேடான சம்பவம்.
இப்போது பதிவுகளில் பின்னூட்டம் போடுவது ஒரு பெரிய கலையாகி மர்மமாகி வருகிறது. ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு மாதிரியான பின்னூட்ட வழிகள் வைத்திருக்கிறார்கள். நேற்று ஒருவர் 

எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது


என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்து விட்டு ஒரு பின்னூட்டம் போட முயற்சி செய்தேன். என்னமோ ஈமெயில், அப்பன் பேரு, ஆத்தா பேரு எல்லாம் கேட்டது. எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு அவங்க சொன்ன பட்டனை அழுத்தினா, என்னுடைய பிளாக்கில் அதே தலைப்பில் ஒரு பிளாக் ஏறி விட்டது.

என்னடா வம்பாப் போச்சே அப்படீன்னு அதை உடனே டெலீட் செய்தேன். ஆனா கூகுள்காரன் கொம்பனாச்சே, உடுவானா, அதையும் லிஸ்ட்டுல சேர்த்துட்டான். அதை கிளிக் பண்ணினா ஒரு மண்ணும் இல்ல. பார்த்தவங்க எல்லாம் பேஜாரா ஆயிட்டாங்க.

இதைப் பார்த்தவங்க எல்லாம் பேராசிரியருக்கு ஏதோ மறை கழண்டு போச்சு போலன்னு நெனச்சிருப்பாங்க. அப்படி நெனச்சா அதில தப்பு ஒண்ணும் இல்லை. கொஞ்ச நாளாகவே மண்டைக்குள்ள என்னமோ லூசா ஆடற மாதிரிதான் இருக்கு. கழட்டிப் பாக்கோணும். எப்படியும் இந்த ஆயுத பூஜைக்கு எல்லாத்தையும் கிளீன் பண்ணோணும். இதையும் கிளீன் பண்ணிடறேன்.