ஞாயிறு, 14 ஜூன், 2015

கொள்கைப் பிடிப்பு - வைராக்கியம்

                                        Image result for உழைப்பாளர் சிலை


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 
     
அ- 67 கு-66


எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.


வாழ்க்கையில் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் வாழ்கிறோம். சிலர் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைகின்றனர். சிலரால் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைய முடிவதில்லை. ஏன்?

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுவாக அவன் "விதிப் பயன்" என்று எல்லோரும் கூறிவிடுவார்கள். ஆனால் இது சரியா? அனைத்துக் காரியங்களும் விதிப்படிதான் நடக்கிறதென்றால் மனித முயற்சிக்குப் பலன் ஏதும் கிடையாதா?

இது காலம் காலமாகக் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்குப் பதில்தான் இதுவரை யாரும் சொல்லவில்லை. பதில் கண்டுபிடிப்பதுவும் லேசான காரியம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு பழனி. கந்தசாமி பதில் தேடுகிறார். என்ன தைரியம் பாருங்கள்.

பலருடைய அனுபவத்தில் நேர்மையாக உழைப்பவர்கள் அப்படி ஒன்றும் சீக்கிரத்தில் மேலுக்குப் போனதாக தெரியவில்லை. தில்லு முல்லு செய்பவர்கள் சீக்கிரம் மேலுக்குப் போவதை கண்கூடாகப் பார்க்கிறோம். இதை அவரவர்கள் விதி என்று சொல்லிவிட்டு நாம் நம் வேலையைக் கவனிக்கப் போய்விடுவோம்.

இங்குதான் நீங்கள் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய விதி என்ன வென்று அவனுக்கும் தெரியாது. வேறு யாருக்கும் தெரியாது. ஆனாலும் நாம் உண்மையாக முயற்சி செய்தால் அதற்கு உண்டான பலன் கிடைக்கும் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவரே சொல்லிப் போயிருக்கிறார்.

தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன்
மெய்வருந்தக் கூலி தரும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் தம்மாலான முயற்சியைச் செய்வது அவசியமல்லவா? இதைத்தான் வைராக்யம் என்கிறோம். இப்படி ஒரு முயற்சி செய்வதைப் பற்றிய ஒரு பாடலைப் படியுங்கள்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்.

எல்லோரும் தங்கள் தங்களை முயற்சியினால் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன். இதில் ஒரு ஒரு முக்கிய பாய்ன்டைக் குறித்துக்கொள்ளவும். இருட்டில் போகும்போது ஒரு விளக்கை கையில் எடுத்தப்போவது போல் இந்த மாதிரி முயற்சிகளுக்கு மோடி மாதிரி அல்லது அதானி மாதிரி ஒரு துணை இருந்தால் உங்கள் முயற்சி 100 சதம் வெற்றியடையும். அந்த மாதிரி துணை கிடைப்பதுவும் உங்கள் முயற்சியினால்தான் சாத்தியமாகும். 

வெள்ளி, 12 ஜூன், 2015

Mohamed ali at பெட்டகம்

வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை!

Mohamed ali at பெட்டகம் - 2 hours ago

சமீப காலமாக இவருடைய எந்தப் பதிவைத் திறந்தாலும் கீழ்க்கண்ட மாதிரி ஒரு எச்சரிக்கைச் செய்தி வருகிறது. அதன் பிறகு மேலே போய் படிக்கத் தயக்கமாக இருக்கிறது.

என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னுடைய கம்ப்யூட்டரில் ESET antivirus programme இன்ஸ்டால் செய்திருக்கிறேன். வேறு யாருக்காவது இந்த மாதிரி தொந்திரவு இருக்கிறதா என்று தெரியவில்லை.


ஓவியமாம் ஓவியம்?

இந்த ஓவியம் 140 மில்லியன் டாலராம்.

அப்படீன்னா எத்தனைங்க?

most expensive paintings

இதுல என்ன இருக்கு? என் மர மண்டைக்கு ஒண்ணும் புரியல? உங்களுக்காவது எதாச்சும் புரியுதா பாருங்க.

அதைவிட இது கொடுமை. 186 மில்லியன் டாலராம்.

expensive painting

இந்தப் படம் அதைவிடக் கொடுமை. நம்ம வீட்டுப் பாப்பா இதை விட நல்லாப் படம் போடும்.

ஆதாரம். எனக்கு வந்த பாபா மெயில்.

ஒரு கணக்கு - எனக்கு கணக்கு கொஞ்சம் வீக். இருந்தாலும் ஒரு கணக்கு போட்டுப் பார்ப்போமா?

ஒரு மில்லியன்  =  10 லட்சம்
ஒரு டாலர்           =   60 ரூபாய்
10 லட்சம் டாலர் = 600 லட்சம் ரூபாய் அதாவது 6 கோடி
ஆகவே ஒரு மில்லியன் டாலர் என்பது 6 கோடி ரூபாய்.

அப்போ 140 மில்லியன் டாலர் என்பது 840 கோடி ரூபாய்.
                 186 மில்லியன் டாலர் என்பது 1116 கோடி ரூபாய்.

எனக்கு ஒரு சந்தேகம். இத்தனை பணம் அவர்கள் எப்படி சம்பாதித்தார்கள்? இந்தப் படத்திற்கே இப்படி கோடிக்கணக்காக செலவழிப்பவர்கள் மொத்தம் எத்தனை பணம் வைத்திருப்பார்கள்?

புதன், 10 ஜூன், 2015

அஜினோ மோட்டோவும் மேக்கி நூடுல்ஸ்ஸும்

                                     
                                      Image result for maggi noodles images

இன்றைய தேதியில் மிக மிக ஹாட் டாபிக் இந்த "மேக்கி நூடுல்ஸ்" தான். இதைப் பற்றி நாமும் ஏதாவது சொல்லாவிடில் இந்திய நாடு எம்மை மன்னிக்காது. (இந்த தன்மைப் பன்மை ஒரு flow வுக்காக உபயோகப் படுத்தப்பட்டுள்ளது).

முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது இந்த "பிபிஎம்" என்றால் என்ன என்பதாகும்.

ppm என்பது Parts per Million என்பதின் சுருக்கம். அதாவது பத்து லட்சம் கிராம் பொருளில் ஒரு கிராம் வேறு ஒரு பொருள் இருப்பதை இந்த அளவினால் குறிப்பிடுவார்கள். இது மிக மிகக் குறைந்த அளவில் அந்தப் பொருள் இருக்கிறது என்று புரிவதற்கான அளவு.

அது எப்படி இவ்வளவு குறைவாக இருக்கும் பொருளைக் கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்வி இதற்குள் உங்கள் மனதில் தோன்றியிருக்கவேண்டும். அப்படித் தோன்றவில்லை என்றால் இப்போது தோன்ற வைத்துக்கொள்ளுங்கள்.

இதற்காகத்தான் பல ஊர்களில் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து
"National Analytical Laboratory" என்கிற பெயரில் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி, அவைகளை பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதியை விட்டுத் திறக்க வைத்து, பல விஞ்ஞானிகள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கிய பல பல நூதன பகுப்பறியும் கருவிகள் இங்கே இருக்கும்.

இந்தக் கருவிகளில்தான் இந்த மாதிரியான நுண்ணிய அளவில் இருக்கும் பொருளை பகுத்தறிவார்கள். இந்த சோதனைச்சாலைகளுக்கு ஒரு டைரக்டர், பல உதவி டைரக்டர்கள், கணக்கில்லாத ஆரய்ச்சியாளர்கள் என்று ஒரு பெரிய படையே இருக்கும். இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கும் மேக்கி நூடுல்ஸ் மாதிரி சமாச்சாரங்களுக்கான ஆணி வேர் இத்தகைய ஆராய்ச்சி சாலைகளில்தான் உதயமாகும்.

இந்த சோதனைச் சாலைகள் பற்றிய இத்தகைய செய்திகள் எல்லாம் சும்மா உங்கள் மாதிரி பொது மக்களை மயக்குவதற்காக சொல்லப்படும் சமாச்சாரங்கள். அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களைப் போன்ற இந்த மாதிரி சோதனைச்சாலைகளில் பணி புரிந்தவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் நாங்கள் உண்மையை வெளியே சொல்ல மாட்டோம் ஏனென்றால் எவனாவது தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொள்வானா?

இப்போது என்ன நடந்திருக்கும் என்றால் இந்த மேக்கிக்காரன் யாரையோ உசுப்பி விட்டிருக்கவேண்டும். என்ன உசுப்பல்? வழக்கமான நடைமுறைகளில் ஏதாவது கசமுசா ஆகியிருக்கவேண்டும். விலைவாசிகளெல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடப்பதை இந்த மேக்கிக்காரன் புரியாமல் இருந்திருக்கவேண்டும்.. அதில் வந்த வினையாகத்தான் இருக்கவேண்டும்.

அதில் சம்பந்தப்பட்டவன் நாயைச் "சூ" காட்டுகிற மாதிரி தன் கீழ் இருக்கும் ஒரு டிபார்ட்மென்ட்டுக்கு ஜாடை காண்பித்திருப்பான்.  நம் ஆட்களுக்குச் சொல்ல வேண்டுமா?  "எள் என்றால் எண்ணையாக" நிற்பவர்களல்லவா? உடனே அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டு சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டு இந்த சோதனைச்சாலைகளுக்கு அனுப்பி பரிசோதனை செய்யச்சொல்லி இருப்பார்கள்.

அந்தச் சோதனைச்சாலையில் இருக்கும் டைரக்டரும் மற்றவர்களும் இந்த "சோதனைச்சாலைக்கு வந்த சோதனையைப் பார்" என்று வருத்தப்பட்டு, சோதனை இயந்திரங்களை தூசி தட்டி, துடைத்து இந்த சேம்பிளை பகுப்பாய்வு செய்து மேல் அதிகாரிகள் விரும்பும் முடிவை விரும்பியபடி தயார் செய்து அறிக்கை கொடுத்து விடுவார்கள்.

இந்த முடிவுகளைப் பற்றி செய்தித்தாள்களில் வந்த விவரங்களைப் பாருங்கள். காரீயம் 2.5 பிபிஎம் க்கு மேல் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஐயா, துல்லியமாக சோதனை செய்திருந்தால் எவ்வளவு காரீயம் இருக்கிறது என்று தெரிந்திருக்கும் இல்லையா? அது எவ்வளவு என்று சொல்லலாம் இல்லையா? ஊஹூம், சொல்ல மாட்டமே? தன் கழுத்துக்கு தானே எவனாவது சுருக்கு மாட்டிக்கொள்வானா? சட்டத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கிறது. அவ்வளவுதான். மேட்டர் முடிந்து விட்டது. அப்பறம் நடப்பதெல்லாம் சட்டக்காவலர்கள் செய்ய வேண்டிய வேலை. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.

இதேபோல்தான் எம்எஸ்ஜி விவகாரமும். சட்டப்படி இருக்கவேண்டியதை விட மிக அதிகமாக இருக்கிறது.அவ்வளவுதான். எவ்வளவு என்று நாங்கள் சொல்ல மாட்டோம். அது எங்கள் வேலையல்ல. உண்மையான காரணத்தை இதற்குள் நீங்கள் யூகித்திராவிடில் நான் வருந்துவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே ஓடையில் தண்ணீர் குடித்த கதை தெரியுமல்லவா? அதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.

சட்டக்காவலர்கள் தங்கள் வேலையைப் பொறுப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். மேக்கி விற்ற கடைக்கார ர்கள் எல்லாம் மேக்கி பேக்கட்களை கடைக்குப் பின்னால் கொண்டு போய் விற்கிறார்கள். ஆபீசர்கள் வந்து கேட்டால் "மேக்கியா, அப்படீன்னா என்ன சார் ? அப்படீன்னு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில்  New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.

பின் சேர்க்கை. உங்கள் கவனத்திற்காக மட்டும்.

MSG எனப்படும்  குளுடாமிக் ஆசிட் பற்றி சில விபரங்கள்.

தினமும் ஒருவரது உணவில் 40 முதல் 50 கிராம் வரையிலான புரதமானது உள்ளெடுக்கப்படவேண்டும். புரதங்கள் பல்வேறு அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் 9அமிலங்கள் உடலுக்கு அத்தியாவசியமானவை. இவை தவிர்ந்த ஏனையவை உடலால் தொகுக்கப்படும் பால் இறைச்சி முட்டை ஆகிய விலங்குப் புரதங்கள் மிகவும் சிறந்த புரதங்களை கொண்டவை. இவற்றில் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் காணப்படும். குளுடாமிக் ஏசிட் என்பதுவும் இத்தகைய அத்தியாவசிய அமினோ அமிலங்களில் ஒன்று.

குளுடாமிக் ஏசிட்டின் இராசயன அமைப்பு.


C5H9NO4                         

Image result for glutamic acid                 

அஜினோ மோட்டோ அல்லது மோனோ சோடியம் குளுடாமேட்/எம்எஸ்ஜி
- இராசயன அமைப்பு


C5H8NO4Na           



Image result for msg chemical structure

இரண்டிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் - எம்எஸ்ஜி யில் ஒரு ஹைட்ரஜன் அணுவிற்குப் பதிலாக ஒரு சோடியம் அணு சேர்க்கப்பட்டிருக்கிறது                                


மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.

MSG—or monosodium glutamate—is a flavor enhancer used in savory foods, especially Asian foods. It contains sodium, but only a third of the amount that you’d get from the same amount of salt.
MSG also includes glutamic acid (aka glutamate), an amino acid that’s found naturally in foods like tomatoes, mushrooms and soybeans and is the source of our fifth taste—umami.
In fact, we eat about 13 grams of natural glutamate a day on average, compared to only around half a gram from MSG.
Some people say they have an MSG allergy—or that MSG gives them headaches, worsens their asthma, causes chest pain or palpitations, or causes mild mood changes or other symptoms, all of which are collectively referred to as Chinese Restaurant Syndrome (because MSG is commonly found in Asian-style meals).
Contrary to popular belief, decades of research fails to support the link between MSG and these reported side effects.
Modest amount of MSG found in the typical Western diet is not linked to symptoms of Chinese Restaurant Syndrome, according to scientific literature from the 1970s to today.
No adverse symptoms were observed when people consumed MSG as part of a meal—even at high doses (up to 147 grams/day), according to a review of studies, published in 2000 in the Journal of Nutrition.
There’s one caveat though: eating MSG may lead to classic symptoms of Chinese Restaurant Syndrome when it is consumed solo and on an empty stomach.
In a 2013 study, researchers gave healthy adults about 10 grams of MSG on average (a fairly large dose) without any food.
Almost all of them experienced headaches, as well as short-term increases in blood pressure and heart rate.
But because MSG is generally used in small amounts as a flavoring (like salt), the likelihood that you’d eat it by itself is slim.
MSG might just be the most love-to-be-hated additive of the day, but the science fails to supports its “bad guy” reputation.

News:
Delhi health minister Satyendar Jain said, "Last week, we lifted 13 samples of Maggi for testing following media reports of these being unsafe for consumption. We found the masala samples, tastemakers of at least 10 such packets, had lead content beyond the prescribed limit of 2.50pm." Jain also said five samples of masala were found containing monosodium glutamate (MSG) without proper label declaration.

திங்கள், 8 ஜூன், 2015

மனம் மயங்குதல் அல்லது கலங்குதல்

                                      Image result for confusion images
சுமைதாங்கி எனும் சினிமாவில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து பிபிஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் நிறையப் பேருக்கு நினைவிருக்கலாம்.

மயக்கமா கலக்கமா  மனதிலே குழப்பமா   வாழ்க்கையில் நடுக்கமா


                         

கண்ணதாசன் மிகுந்த பொருட்செறிவோடு எழுதிய பாடல் இது.

மயக்கம் என்பது இல்லாததை இருப்பதாக அல்லது இருக்கும் ஒன்றை வேறொன்றாக காணும் மனநிலை. இந்த நிலையில் இருக்கும் ஒருவன் எந்த ஆக்கபூர்வமான செயலையும் செய்யும் சக்தி அற்றவனாகிறான். மாயை என்னும் சொல்லிலிருந்து வந்தது மயக்கம்.

கலக்கம் என்பது மனம் தெளிவான நிலையை இழந்து நிற்கும் நிலை. இந்த நிலையில் எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் ஆற்றலை ஒருவன் இழந்து விடுகிறான்.

இந்த இரண்டு நிலைகளும்,  ஒருவன் எதிர்பாராத அல்லது மிகப்பெரிய வாழ்க்கைப் பிரச்சினைகள் ஏற்படும்போது அடையும் நிலைகளாகும். இது சாதாரணமாக பெரும்பலானோருக்கு ஏற்படும் அனுபவமே. இதிலிருந்து வெளிவந்து அந்த பிரச்சினையின் தீர்வுக்காக செயல் புரிபவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

இந்த மயங்குதல் மற்றும் கலங்குதல் நிலையைக் கடப்பது எப்படி என்பது வாழ்க்கையின் ஒரு பெரும் சவாலாகும். மன திடம் உள்ளவர்களுக்கு இது சுலபம். மற்றவர்களுக்கு இது கடினம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான சில தீர்வுகள் இருக்கின்றன. அவரவர்களுக்குப் பிடித்தமானவற்றைக் கடைப்பிடிக்கலாம்.

முழுவதுமாக ஆண்டவன் பேரில் இந்தச் சுமையை இறக்கி வைத்து விடுவது. இது கடவுள் பக்தி உள்ளவர்களால் மட்டுமே முடியக்கூடியது. ஆண்டவன் நேரில் வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பானா என்ற கேள்விக்குப் பதில் இதுதான். ஆண்டவன் நேரில் வராவிட்டாலும் பிரச்சினை தீர்வதற்கு உண்டான ஏதாவது ஒரு வழியைக் காண்பிப்பான்.

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது உதவிக்கு வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம். அல்லது இரண்டொரு நாளில் உங்களுக்கே ஒரு வழி தோன்றலாம். எப்படியோ பிரச்சினை தீர்ந்து விடும். சிறிது நாட்கள் கழித்து நீங்களே நினைப்பீர்கள். "இந்தப் பிரச்சினைக்குப் போயா நாம் இவ்வளவு வருந்தினோம்" என்று.

அடுத்து உங்களுக்கு வேண்டிய பெரியவர்கள் யாராவதிடம் ஆலோசனை கேட்கலாம். இதை ஒரு தன்மானப் பிரச்சினையாகக் கருத வேண்டியதில்லை. அடுத்தவரிடம் யோசனை கேட்பதா என்று நினைக்கக் கூடாது. உடல் தலம் குன்றினால் டாக்டரிடம் போகிறோம். மனதில் கலக்கம் இருந்தால் அடுத்தவரிடம் யோசனை கேட்பதில் என்ன தவறு? அவர்கள் இந்தப் பிரச்சினையை பாரபட்சமில்லாமல் அணுகி ஒரு தீர்வு கண்டுபிடிக்கக் கூடும்.

இந்த நிலையில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். இந்தப் பிரச்சினையில் உங்களால் ஏன் உடனடியாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அந்தப் பிரச்சினை நீங்கள் சம்பந்தப்பட்டது. அதனால் நீங்கள் அதனுடன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு இணைந்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் பாரபட்சமில்லாமல் அந்தப் பிரச்சினையை அணுக முடியவில்லை.

இங்குதான் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட தாமரை இலைத் தண்ணீர் உதாரணம் பொருத்தமாக இருக்கும். அடுத்து நான் எழுதிய "தள்ளிப் போடுதல்" உத்தியும் இந்த மாதிரி பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். இரண்டு நாளைக்கு ஒன்றும் செய்யாமல் இருந்தால் மூன்றாம் நாள் உங்களுக்கே ஏதாவது ஒரு நல்ல யோசனை தோன்றும்.

ஒரு முனிவர் ஒரு ராஜாவிற்குச் சொன்ன புத்திமதியை இங்கு நினைவு கூர்கிறேன். "இதுவும் கடந்து போகும்". இதுதான் அவர் சொன்ன புத்திமதி. எந்தப் பிரச்சினை ஆனாலும் காலம் அதை மாற்றி விடும் என்பதே அதன் கருத்து.

நடைமுறைக்கு பெரிதும் உதவும் எளிமையான இன்னும் ஒரு வழியைச்  சொல்கிறேன் கேளுங்கள். "சாமியின் மன அலைகள்" என்றொரு வலைத்தளம் இருக்கிறது. அதைத் தவறாமல் படித்து வந்தால் வாழ்க்கையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க அந்த தளத்தில் வழி சொல்லப்பட்டிருக்கும்.

எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.

சனி, 6 ஜூன், 2015

தள்ளிப்போடுதல்

                                           Image result for thinking man image
தள்ளிப் போடுதல் - ஆங்கிலத்தில் சொன்னால் தமிழர்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். அதாவது Procrastination. ஒரு வேலையை உடனே செய்து முடிக்காமல் அப்புறம் செய்யலாம் என்று ஒத்திப்போடுவது. இது எல்லோருக்கும் பொதுவான இயல்பு. அதனால்தான் அனைத்து மேலாண்மைப் படிப்புகளிலும் இந்தக் குணத்தை மாற்றுவதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இன்று செய்யவேண்டியதை நாளைக்கு என்று ஒத்திப்போடாதே என்பதுதான் இந்த மேலாண்மை நிபுணர்களின் தாரக மந்திரம். இது மகாத் தவறு. மேலே படியுங்கள்.

ஆனால் இது அரசுத் துறைகளுக்குப் பொருந்தாது. இன்றைக்கு இருக்கும் வேலைகளை இன்றே முடித்து விட்டால் நாளைக்கு என்ன செய்வது என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிடும். தவிர ஒவ்வொரு அரசு ஊழியனும் நினைப்பது என்னவென்றால், இன்றைக்கு உண்டான வேலைகளை எல்லாம் இன்றே முடித்து விட்டால், நாளைக்கு இதைவிடக் கடினமாக வேலைகளை நம் மீது சுமத்துவார்கள். அப்படியே கொடுக்கும் வேலைகளை எல்லாம் அன்றன்றே முடித்துக் கொண்டிருந்தால் நாளாவட்டத்தில் நம்மை இந்த ஆபீசின் சுமைதாங்கியாக்கி விடுவார்கள். அப்புறம் நாம்தான் இந்த ஆபீசின் முதன்மை இளிச்சவாயனாகி விடுவோம், என்று சிந்தனைகள் ஓடும். இதுதான் அரசு ஆபீஸ்களில் வேலைகள் தாமதமாக நடப்பதற்கு முக்கிய காரணம்.

இவர்கள் கடைப்பிடிப்பது நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிப் போன மேலாண்மைத் தத்துவத்தையே.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை - குறள் (672)

இந்தக் குறளுக்கு பதவுரை, பொருளுரை எல்லாம் வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

இந்த தள்ளிப் போடும் குணத்தினால் பல நன்மைகள் உண்டு என்பது பலர் அறியாத ஒன்று. பல சமயங்களில் அந்த வேலைக்கே அவசியமில்லாமல் போகும். உதாரணத்திற்கு, ஒருவரைப் பார்க்க தூரத்து ஊருக்குப் போகவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வேலையைத் தள்ளிப் போட்டால் நீங்கள் பார்க்கவேண்டியவரே உங்களைத் தேடி வரலாம். அலைச்சலும் பணமும் மிச்சம்.

அரசு அலுவலகங்களில் நீங்கள் தள்ளிப் போடுபவராக இருந்தால் இவனிடம் எந்த வேலை கொடுத்தாலும் தள்ளிப் போடுவான். ஆகவே இவனிடம் இந்த வேலையைக் கொடுக்கவேண்டாம் என்று பல வேலைகள் அடுத்தவர்களுக்குப் போய்விடும். ஆனால் நீங்கள் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பிரமோஷன் பாதிக்காதபடி மேல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும்.  இதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள என்னிடம் தனியாக ட்யூஷன் எடுத்துக் கொள்ளலாம். பதிவர்களுக்கு கட்டண சலுகை உண்டு.

வீட்டில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் உடனே டாக்டரிடம் போய் விடக்கூடாது. இரண்டு நாள் தள்ளிப்போட்டால் அந்த சீக்கு தானாகவே சரியாகி விடக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படியும் சரியாகவில்லை என்றால் மட்டும் டாக்டரிடம் போனால் போதும். அப்போதுதான் டாக்டருக்கும் சீக்கின் தன்மை நன்றாகப் புரிந்து ஒழுங்கான வைத்தியம் செய்வார். சீக்கின் முதல் அறிகுறிகள் தெரிந்தவுடனேயே டாக்டரிடம் ஓடியிருந்தால் டாக்டரால் என்ன சீக்கு என்று சரியாகக் கண்டு பிடிக்க முடியாமல் பொதுவாக ஏதோ மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி விடுவார். நமக்கு அனாவசியச் செலவு.

நமது தேச ரயில்கள் ஏன் எப்போதும் லேட்டாகவே ஓடுகின்றன என்பதின் ரகசியம் என்ன தெரியுமா? மக்களின் இந்தத் தள்ளிப்போடும் குணத்தினால்தான். ரயில்கள் அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்திற்கே புறப்பட்டு விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். நம் மாதிரி மக்களின் கதி என்ன ஆவது? ரயில் எப்படியும் அரை மணி நேரம் தாமதமாகத்தான் புறப்படும் என்று நாம் அரை மணி நேரம் கழித்து ஸ்டேஷனுக்கு வந்தால் ரயில் புறப்பட்டுப் போயிருந்தால் நம் கதி என்னாவது?

நம்மை விடுங்கள். ரயில்வே துறைக்கு எவ்வளவு நஷ்டம்? இதே மாதிரி பிளேன்கள், பஸ்கள் எல்லாம் சரியான நேரத்திற்கு புறப்பட்டு விட்டால் இந்தத் துறைகளுக்கெல்லாம் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்று யோசியுங்கள்? அதனால்தான் "இண்டியன் பங்க்சுவாலிடி" என்று ஒரு புது வார்த்தையையே இங்கிலீஷ்காரன் உருவாக்கினான்.

இந்த தள்ளிப்போடும் குணத்தினால் உங்கள் பொருளாதார நிலமை முன்னேறும். எப்படியென்றால், உங்கள் மனைவி ஒரு புதுப்புடவை கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே வாங்கிக்கொடுத்து விட்டீர்களானால் அடுத்த புடவைக்கான கோரிக்கை சீக்கிரமே வந்து விடும். முதல் புடவைக்கே நீங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டு இருந்தீர்களானால் அடுத்த புடவைக்கான கோரிக்கையைத் தவிர்க்கலாம். ஆனால் வீட்டிலிருக்கும்போதே தலைக்கு ஹெல்மெட் போடுவது அவசியம். பூரிக்கட்டைக்கு தப்பிக்கவேண்டுமல்லவா?

அதே மாதிரி பிறந்த வீட்டுக்குப் போக மனைவி போடும் திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால் என்ன நடக்கும் என்று சம்சாரிகளுக்கு நன்கு தெரியும். உங்கள் கையிருப்பு முழுவதும் காலியாகி, அடுத்த சில மாதங்களுக்கான் சேமிப்பும் காலியாகும். இந்த மாதிரி திட்டங்களுக்கு சாமர்த்தியமாக, ஆபீசில் இன்ஸ்பெக்ஷ்ன், ஆடிட், இந்த மாதிரி ஏதாவது சால்ஜாப்பு சொல்லி தள்ளுப்போடுங்கள். இதற்கும் என்னிடம் ட்யூஷன் கிளாஸ் உண்டு. சம்சாரிகளுக்கு கட்டணம் இல்லை.

ஆக மொத்தம் தள்ளிப்போடுதலில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டீர்கள் அல்லவா? நான் சொன்னவைகளை நன்கு மனதில் பதித்து புத்தியாய் பிழைத்துக் கொள்ளுங்கள்.



வியாழன், 4 ஜூன், 2015

தாமரை இலைத் தண்ணீர்

                                     Image result for lotus leaf
வாழ்வில் என்றும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்று சில நாட்களுக்கு முன் பார்த்தோம். சுகதுக்கங்களை சமமாகப் பாவிக்கவேண்டும் என்று அதில் சொல்லியிருந்தேன். அப்போதுதான் மனது அமைதியாக இருக்கும். அதுதான் ஆனந்தம் என்று சொல்லியிருந்தேன்.

அது எப்படி சுக துக்கங்களால் பாதிக்காமல் இருக்க முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். நல்ல கேள்விதான். பதில் சொல்வது கொஞ்சம் சிரமம்தான்.

ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன். ஒருவனுடைய அருமை மனைவி இறந்து விட்டாள். அவள் புருஷன் "ஐயோ, நான் என் ஆசை மனைவியைப் பிரிந்து எப்படி வாழ்வேன், நானும் அவளுடனேயே இறந்து போகிறேன்" என்று பிரலாபிக்கிறான். உறவினர்கள் எப்படியோ அவனைச் சமாதானம் செய்து மனைவியின் ஈமக்கடன்களைச் செய்ய வைக்கிறார்கள்.

ஒரு வருடம் சென்றது. அவன் ஒரு அழைப்பிதழோடு உறவினர்களைப் பார்க்கப் போகிறான். என்ன அழைப்பிதழ் என்று நினைக்கிறீர்கள்? அவனுடைய இரண்டாம் கல்யாணத்திற்கான  அழைப்பிதழ்தான் அது. அழைப்பிதழைப் பெற்ற உறவினர்கள் நினைக்கிறார்கள் "இதுதான் உலகம்" என்று. இது எப்படி நடந்தது.

காலம் செய்யும் மாயம் இது. எப்படிப்பட்ட துக்கத்தையும் நாளாவட்டத்தில் மனிதன் மறக்கிறான். இந்த இயல்பு இயற்கை மனிதனுக்குக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும். அப்படி மறக்கும் இயல்பு இல்லாவிட்டால் மனிதன் நொறுங்கிப் போய்விடுவான். துக்கத்திலேயே மூழ்கிக்கிடந்தால் அவன் வாழ்வு என்ன ஆகும்?

இந்த இயற்கை நியதி எல்லோரும் அறிந்ததே. எப்படி சில காலம் சென்ற பிறகு அந்த துக்கத்தை மறக்கிறானோ, அது போல அந்த துக்கம் நிகழ்கிறபோதும் ஒரு சாட்சியாக நின்று அதைப் பார்க்க முடியுமா? இது ஒரு பெரிய ஆன்மீகப் புதிர். இதைத் தான் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்வது என்கிறார்கள். தண்ணீர் தாமரை இலையில்தான் இருக்கிறது. ஆனால் அதனுடன் ஒட்டவில்லை.

ஒவ்வொருவரும் வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் அதன் நிகழ்வுகளில் அதீத ஒட்டுதல் இருக்கக் கூடாது. இந்த பண்பு இளம் வயதில் வருவது கடினம். ஆனால் வயது ஆன பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் பட்ட சுக துக்கங்கள் காரணமாக, வாழ்க்கையில் எதுவும் நிலையில்லாதது என்று உணர்கிறார்கள். அப்போது வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் அவர்களுக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இந்த நிலையை அடைந்த ஒருவன் சுகதுக்கங்களை ஒன்றாகவே ஏற்றுக்கொள்வான்.

செவ்வாய், 2 ஜூன், 2015

தீண்டாமையை வளர்ப்பது யார்?

                                 Image result for dalit colony
இந்தப் பொருளில் எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பதைப் போன்றது. கருத்துகளையும் வார்த்தைகளையும் பல முறை யோசித்து எழுத வேண்டும். இல்லாவிட்டால் கத்தி கழுத்தின் மேல் விழும். இதற்கு முன்னால் பல முறை என் கழுத்தின் மேல் கத்தி விழுந்திருக்கிறது. சாதாரணக் காயத்துடன் போய்விட்டது. அந்தக் காயங்கள் ஆறிவிட்டபடியால் இப்போது மீண்டும் கழுத்தை நீட்டுகிறேன். எத்தனை பட்டாலும் இந்த ஆளுக்கு புத்தி வர மாட்டேங்குதே என்று ஆதங்கப் படுபவர்களுக்கு ஒரு இனிமையான செய்தி. இந்த டாபிக்கில் இதுதான் என் கடைசிப் பதிவு. இனிமேல் இந்த டாபிக்கில் எழுத மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

சமீபத்தில் சென்னை ஐஐடியில் ஏற்பட்டுள்ள ஒரு நிகழ்வைப் பற்றி ஏறக்குறைய அனைத்து முன்னணிப் பதிவர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு விட்டார்கள். இந்த நிலையில் முன்னணி முதல் வரிசைப் பதிவரான நான் (சுயப் பிரதாபத்தை பொறுத்தருளவும்) என் கருத்துகளை இங்கு பதிவு செய்யாவிடில் எதிர்காலம் என்னை மன்னிக்காது. அது காரணம் பற்றியே இந்தப் பதிவு போடுகிறேன்.

தீண்டாமையைத் தோற்றுவித்தவர்கள் யார்? அதை மறையாமல் வளர்த்துக் கொண்டிருப்பவர் யார்? இவைகள் முக்கியமான கேள்விகள். இங்கு நான் என் அனுபவங்களின் மூலமாகத் தெரிந்து கொண்டவைகளை மட்டுமே பதிகிறேன். அவை என் சொந்தக் கருத்துகள். இந்தக் கருத்துகள் மேலும் சிந்தனையைத் தூண்டினால் மகிழ்ச்சி. என்னை இகழ்தலும் ஒரு வகை சிந்தனைத் தூண்டுதல் என்றே கருதுகிறேன்.

தீண்டாமை எப்படித் தோன்றியது என்று ஆதார பூர்வமாகத் தகவல்கள் இல்லை. ஆனால் இந்தியாவில் இந்த பாகுபாடு பல நூற்றாண்டுகளாக இருக்கிறது என்று தெரிகிறது. இந்த மாதிரி சாதி பாகுபாடுகளைப்பற்றிக் கூறும்போது பிராமணர்களைச் சுட்டிக்காட்டுவதுதான் வழக்கம். அவர்கள்தான் மனுதர்ம சாஸ்திரப்படி நான்கு வர்ணங்களை வகைப்படுத்தினார்கள் என்றும் இதற்கு அப்பால் பஞ்சமர்கள் என்று ஒரு சாராரை வகைப் படுத்தினார்கள் என்றும் கூறுகிறார்கள்.

பிராமணர்கள் நான்காவது வகுப்பாகிய சூத்திரர்களையும் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை, ஏறக்குறைய பஞ்சமர்கள் மாதிரித்தான் வைத்திருந்தார்கள் என்பது பலருக்கு மறந்து போய் இருக்கலாம். ஈ.வே.ரா. என்னும் பெரியார் பிராமணீயத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கவில்லை என்றால் இன்றும் அதே நிலைமை தொடர்ந்திருக்கும். (என் பிராமண நண்பர்கள், நான் இந்த மாதிரி சில கருத்துகளைக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவேண்டும்). இந்தப் பதிவு சில பொது சமூகப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதற்கான பதிவு. இதில் தனிப்பட்ட உறவுகள் பாதிக்கப்படக்கூடாது.

பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று யார் எப்பொழுது வகைப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் காலங்காலமாக அவர்களை இவ்வாறு மற்ற வர்ணத்தவர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். சாஸ்திரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால் பிராமணர்கள் பிரம்மாவின் தலையிலிருந்து உற்பத்தியானார்கள். க்ஷத்திரியர்கள் பிரம்மாவின் மார்பிலிருந்தும் வைசியர்கள் பிரம்மாவின் தொடையிலிருந்தும் சூத்திரர்கள் பிரம்மாவின் பாதத்திலிருந்தும் உற்பத்தியானார்கள்  என்று கூறப்படுகிறது.

இன்று  மனுதர்மத்தை ஆதரிப்பவர்கள் இதை மாற்றிச் சொல்லுகிறார்கள். வர்ணாசிரமப் பாகுபாடுகள் அவரவர்கள் செய்யும் தொழிலை வைத்துத்தான் ஏற்படுத்தப் பட்டது. வேதம் ஓதுகிறவர்கள் பிராமணன் என்று அழைக்கப்பட்டான். யுத்தம் செய்கிறவன் க்ஷத்திரியன் எனப்பட்டான். வியாபாரம் செய்கிறவன் வைசியன் எனப்பட்டான். விவசாயம், மற்ற உற்பத்தித் தொழில்களைச் செய்தவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் இந்த மனுதர்ம சாஸ்திரப்படி பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் ஐந்தாவது வர்ணத்தவர் எப்படி உற்பத்தியானார்கள், அவர்களின் தொழில் என்ன, என்று சொல்லப்படவில்லை.

பிறப்பினால் யாருடைய வர்ணமும் நிர்ணயிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த நிலைமை மாறி, ஒருவனுடைய வர்ணம் அவனுடைய பிறப்பினால் நிர்ணயிக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு யார் காரணம் என்று சொல்ல முடியாது என்கிறார்கள்.

இன்று இந்த ஐந்து வர்ணங்கிடையே பல சாதிகள் உருவாகி உள்ளன. அவை எவ்வாறு உருவாகின என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த வர்ண, சாதி வேறுபாடுகள் இந்து மதத்தினரிடையே மிக ஆழமாக வேறூன்றி இருக்கிறது. அது போக, பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று மற்ற நான்கு வர்ணத்தாரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சூத்திரர்களும் ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களாகத்தான் பிராமணர்களால் நடத்தப்பட்டார்கள் என்பதை சூத்திரர்கள் மறந்து விட்டு அவர்களும் பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொல்வதுதான்.

ஆக மொத்தம் தீண்டாமையை உண்டு பண்ணி அதை வளர்ப்பது இந்த நான்கு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் மனம் மாறி தீண்டாமையை ஒழிப்பார்கள் என்பது வெறும் கனவேயாகும். தீண்டாதவர்களின் பிரச்சினையைப் பற்றி எழுதலாம் என்றுதான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். ஆனால் என் சிந்தனை என்னை வேறு ஒரு பாதையில் இழுத்துச் சென்று விட்டது. இன்றைய ஐஐடியின் பிரச்சினை தீண்டாமையின் ஒரு அங்கமே என்று கூறி என் பதிவை முடிக்கிறேன்.

ஞாயிறு, 31 மே, 2015

அந்தக் காலத்து சினிமாத் தியேட்டர்கள்.

                                                      Image result for விஸ்வாமித்திரர் மேனகை

முன்னொரு காலத்தில் சினிமா மட்டுமே மக்களின் முழுமையான பொழுது போக்கும் வழியாக இருத்தது. வேறு பொழுது போக்கும் வழிகள் கிளப்பில் சீட்டாடுவது அல்லது கிளப்பில் ஏதாவது விளையாட்டுகள் விளையாடுவது, வீட்டிலுள்ள பெண்கள் தாயக்கட்டம், அல்லது பல்லாங்குழி விளையாடுவது உண்டு.

ஆனாலும் சினிமா பார்ப்பது மட்டுமே அதிகமாக பயன்பாட்டில் இருந்தது. இந்தப் பொழுது போக்குகளின் முக்கிய அம்சம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியோன்னியமாகப் பேசிப் பழகிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரின் மனப்போக்கு என்னவென்று கூடப் பழகுபவர்களுக்குத் தெரியும்.

இன்று தங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்று தந்தைக்குத் தெரியாது. அவன் என்னமோ கம்ப்யூட்டரில் விளையாடுகிறான் என்ற அளவிற்குத்தான் தெரியும். இது காலத்தின் கட்டாயம். குடும்பத்துடன் ஒரு சினிமா பார்த்துவிட்டு ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு வரும் அனுபவம் குடும்ப அங்கத்தினர்களிடையே ஒரு புரிதலையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.

அந்தக்காலத்தில் சினிமா தியேட்டர்கள் புதிதாக கட்டும்போது அந்த ஊரில் இருக்கும் தியேட்டர்களைவிட நூதனமாக இருக்கவேண்டும் என்று பல உத்திகளைக் கையாண்டார்கள். கோயமுத்தூரில் திரைப்படத்துறையில் முன்னோடியாக விளங்கிய பிரபல சினிமா புள்ளி திரு. சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார். நகரத்தின் மையத்தில் வெரைட்டி ஹால் என்று ஒரு தியேட்டர் கட்டி வெற்றிகரமாக நடத்தினார். இந்த தியேட்டர்தான் அந்தக்காலத்தில் தென்னிந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் தியேட்டர் என்று சொல்லப்படுகிறது. இங்கு முதலில் ஊமைப் படங்கள்தான் திரையிடப் பட்டிருக்கின்றன. அந்த தியேட்டர் இருந்த ரோடுக்கே வெரைட்டி ஹால் ரோடு என்று பெயர் நிலைத்து விட்டது.

அவர்  ஆர்.எஸ். புரம் பகுதியில் புதிதாக வின்சென்ட் லைட்ஹவுஸ் என்ற பெயரில் 1945-46 ல் ஒரு தியேட்டர் கட்டினார். அதில் பல கலை நுட்ப அலங்காரங்களைப் பயன் படுத்தியிருந்தார். சுவர்களில் பல ஓவியங்கள் வரையப் பட்டிருந்தன. விஸ்வாமித்திரர் மேனகையுடன் சல்லாபித்து பிறந்த குழந்தையை நிராகரிக்கும் காட்சி தத்ரூபமாக திரைக்கு ஒரு பக்கம் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது. அலங்கின் பின் சுவற்றில் சாகுந்தலத்திலிருந்து பல காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தன.

இதில் முதல் படமாக நாகையா நடித்த "தியாகையா" என்ற தெலுங்கு படம் திரையிடப்பட்டது. அப்போது எனக்கு 12 வயது. அடுத்த படமாக மிஸ்ஸியம்மா திரையிடப்பட்டது. அதை நான் என் அத்தையுடன் பார்த்தேன். தியேட்டரின் அமைப்பும் அலங்காரங்களும் பிரமிப்பூட்டுவதாக இருந்தன. படமும் மிகவும் உணர்ச்சி வசமான காட்சிகள் நிறைந்த படம். "வாராயோ வெண்ணிலாவே" என்ற பாட்டு இன்றும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாத ஒரு பாட்டு.

அந்தக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சினிமா பார்த்த பிறகு ஏற்படும் ஒரு மன நிறைவு இன்று வெளியாகும் பெரும்பாலான படங்களில் கிடைப்பதில்லை என்பது ஒரு சோகமே.                        



அப்போது கோயமுத்தூரில் 9 தியேட்டர்கள்தான் இருந்தன. அவைகள் ஒவ்வொன்றிலும் வழக்கமாக சில பேனர் படங்கள் மட்டுமே திரையிடப்படும். ஜெமினி படங்கள் ராயல் தியேட்டரிலும் ஏவிஎம் படங்கள் கர்னாடிக் தியேட்டரிலும் வழக்கமாக வெளியாகும். அந்தக் காலத்து சினிமா வியாபாரம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் ஒவ்வொரு பேனர் படங்களுக்கும் வழக்கமாக ஒரே விநியோகஸ்தர்தான் இருப்பார். புரோடியூசர், டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர்காரர், இந்த மூன்று பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது.

வியாபாரத்தில் எந்த சிக்கலும் வந்த மாதிரி எனக்கு நினைவில்லை. அந்தக் காலத்தில் படம் வெளியாகும் தினத்தன்று எல்லா முக்கிய செய்தித் தாள்களிலும் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரம் வெளியாகும். அதுபோக நகரத்தின் முக்கிய பகுதிகளில் விளம்ப பேனர்கள் வைப்பார்கள். இது தவிர முக்கிய வியாபார ஸ்தலங்களில் மூன்றடிக்கு இரண்டடி சைசில் தட்டி பேனர்கள் வைப்பார்கள். இதற்காக அந்த கடைக்காரர்களுக்கு ஒரு ஷோ சினிமா பார்க்க ஒரு பாஸ் கொடுப்பார்கள். அதற்கு "தட்டிப் பாஸ்" என்றே பெயர்.

இது தவிர நான்கைந்து சிறுவர்களை வைத்து ஒரு தள்ளு வண்டி, முக்கோண வடிவில் இருக்கும், அதில் சினிமா போஸ்டர்களை ஒட்டி கோஷம் போட்டுக்கொண்டு முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள். அவர் போடும் கோஷமே அலாதியானது. ஒருவன் கேள்வி கேட்பான். மற்றவர்கள் கோரஸாக அதற்குப் பதில் சொல்லுவார்கள்.

என் நினைவில் இருக்கும் கோஷங்களைக் கூறுகிறேன்.

கேள்வி: கோபாலா
பதில்: ஏன் சார்?

கே: எங்கே போற?
ப:  சினிமாவுக்குப் போறேன்.

கே: என்ன சினிமா?
ப:    மிஸ்ஸியம்மா சினிமா

கே:   எந்த தியேட்டர்ல?
ப:  வின்சென்ட் லேட்ஹவுஸ் தியேட்டர்ல

கே: யாரு நடிக்கிறாங்க
ப:  ஜெமினி கணேசனும் சாவித்திரியும்.

இப்படியாக கோஷம் போட்டுக்கொண்டே அந்த சிறுவர்கள் வீதி வீதியாகப் போவார்கள்.

அப்போது டிக்கட்டுகள் நான்கு வகையாக இருக்கும். தரை, பெஞ்சு, சேர், பாலகனி. அவ்வளவுதான். வின்சென்ட் லைட் ஹவுசில் பாக்ஸ் என்று ஒரு அமைப்பு உருவாக்கியிருந்தார்கள். நான்கு பேர் உட்கார்ந்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இது மாதிரி அப்போது எங்கும் இல்லை. ஊர் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.

பிற்காலத்தில் ஊர் ஊருக்கு இந்த மாதிரி புது தினுசுகளில் தியேட்டர்கள் வர ஆரம்பித்தன. மதுரை தங்கம் தியேட்டர் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. தூத்துக்குடியில் சார்லஸ் தியேட்டரும் அது போலவே பிரபலமானது.

இப்படியாக தியேட்டர்களும் சினிமாக்களும் வளர்ந்து இன்றைக்கு சினிமாத் தொழில் படு கேவலமாக ஆகி வருவதைப் பார்த்தால்  காலத்தின் தாக்கம் புரிகிறது.

வெள்ளி, 29 மே, 2015

போட்டி உலகில் ஓடியே ஆகவேண்டும்.

                                    
வியாபாரத்திலும் தொழில்துறையிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அடிக்கடி சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் - நீ ஆரம்பத்தில் போட்டிகளைச் சமாளித்து முன்னேற ஓடியிருப்பாய். ஓரளவு முன்னேறிய பிறகு, போதும் இந்த ஓட்டம், இனி கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்று நினைப்பாய். அங்குதான் நீ தவறிழைக்கிறாய்.

இந்தத் துறைகளில் மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஓரளவு முன்னேறிய பிறகு நீ அடைந்த இடத்திலேயே இருப்பதற்கே ஓடித்தான் ஆகவேண்டும். நீ ஓய்வெடுத்தால் உன் போட்டியாளர்கள் வேகமாக ஓடி உன்னை விட முன்னேறி விடுவார்கள். நீ பின்னுக்குத் தள்ளப்படுவாய்.

இந்த உபதேசம் தொழில் துறை, வியாபாரத்துறைக்காரர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்குமே பொருந்தும். அவ்வாறு ஓட முடியாதவர்கள் போட்டியில் பின்தங்கித் தோற்றுப் போவார்கள். இதை நாம் பலவகைகளில் அன்றாடம் பார்க்கிறோம். ஆரம்பத்தில் வெகு ஆடம்பரமாக ஆரம்பித்த நிறுவனங்கள் நாளாக நாளாக அதன் பளபளப்பு குன்றி விடுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

இதை நான் இப்போது இங்கு ஏன் சொல்லுகின்றேன் என்றால் நானும் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். எதைச் சொல்லுகிறேன் என்று புரியும் என்று நம்புகிறேன். தமிழ்மணம் ரேங்க் ஒன்றை அடையவேண்டும் என்று நினைக்கிறேன். அது எங்கே என் கண்ணுக்கே தெரியவில்லை (படத்தைப் பார்க்கவும்). முதல் ரேங்க்கை கட்டாயம் அடைந்துதான் ஆகவேண்டும் என்ற கொள்கை ஒன்றுமில்லை. முடியுமா என்று பார்ப்போம் என்பதுதான் என் எண்ணம்.

இப்போது ஐந்தாவது ரேங்கில் என் தளம் இருக்கிறது. இதற்காக ஓடினது அதிகம். மூளையைக் கசக்கிப் பதிவுகள் போட்டதில் இப்போது மூளை இருக்குமிடமே தெரியாமல் போய்விட்டது. மண் சுவரில் மோதினால் ஏதாவது கொஞ்சம் உடையும். ஆனால் கருங்கல் சுவற்றில் மோதினால் என்ன நடக்கும்? மண்டைதான் உடையும். என்னுடைய தளத்திற்கு மேலே இருப்பவர்களெல்லாம் கருங்கல் சுவர்கள்.

இது வரை எனக்கு ஆதரவு கொடுத்த பதிவர்களுக்கு மிக்க நன்றி.