ஞாயிறு, 12 மே, 2019

காதல் விபத்துகள்


காலையில் பேப்பரைத் திறந்தால் கொலைச்செய்திகள்தான் முதலில் கண்ணில் படுகின்றன. அவைகளில்  பெரும்பாலானவை காதல் சம்பந்தப்பட்டதாக இருப்பது வருத்தத்குரியது. அதிலும் குறிப்பாக எங்கள் மாவட்டம் அதில் முன்னிலை வகிப்பதைக் கண்டு தலை குனிகிறேன்.


தற்காலத்தில் காதல் கல்யாணங்கள் அதிகமாக நடப்பதாக நான் நினைக்கிறேன். அவைகளில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவுகின்றன என்பது ஒரு பரிதாபம்.

ஏன் காதல் கல்யாணங்கள் தோல்வியில் முடிகின்றன என்று பார்த்தால், சில காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

கல்யாணம் என்றால் என்ன, கல்யாணம் செய்துகொண்ட பிறகு அந்தக் கணவன் மனைவிக்கு உண்டான பொறுப்புகள் என்னென்ன, இவைகளைப் பற்றி இன்றைய காதலர்கள் சிந்திப்பதாகவே தெரியவில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பம் அமைப்பது என்பது விளையாட்டுக் காரியம் அல்ல. ஆனால் 21 அல்லது 22 வயது வேலையில்லாத ஒருவன் 18 வயது கல்லூரியில் படிக்கும் பெண்ணைக் காதல் கல்யாணம் செய்தால், அவனுக்கு குடும்பப் பொறுப்புகள் என்ன என்று தெரியுமா?

அதிலும் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடைபெறும் கல்யாணங்களில் அவர்கள் தங்கள் சுய காலிலேயே நிற்க வேண்டும் என்றால் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா?

உலகம் போற போக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வியாழன், 4 ஏப்ரல், 2019

ஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்?

கொஞ்ச நாளா பதிவுலகப் பக்கம் வரவில்லை. கொஞ்ச நாள் என்ன? ரொம்ப நாள் ஆச்சு. சரி, இப்ப என்ன திடீரென்று இந்தப் பக்கம் என்று சிலர் கேட்கக்கூடும். அதற்காக முன்னெச்சரிக்கையாக இதோ பதில்.

எனக்கு அதிகார பூர்வ வயசு 85. ஜாதக பூர்வமாக வயசு 84. இது எப்படி நேர்ந்தது என்பதை வேறொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன். இப்ப விஷயத்திற்கு வருவோம். இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவனும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த விதி எனக்குப் பொருந்தாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் நானும் இந்த விதிக்குள்தான் வருவேன் போலத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. உடலில் சிலபல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நெஞ்சில் லேசாக வலி தோன்றியது. என் டாக்டர் பெண்ணிடம் கூறினேன். அவள் உடனடியாக என்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் அங்குள்ள இருதய நோய் நிபுணரிடம் விட்டாள்.


அவர் வழக்கமாகச் செய்யும் ECG, Echo Cardiogram எல்லாம் செய்து விட்டு, ஒரு  Angiogram செய்து பார்த்துடலாமே என்றார். என் பெண் அப்படியே செய்யுங்கள் என்று கூறி விட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை இப்படி ஒரு சூழ்நிலையில் ஏன்ஜியோ செய்கிறேன் என்று டாக்டர் சொன்னபோது நான் சொன்னேன். இப்படி முதலில் ஏன்ஜியோ செய்கிறேன் என்பீர்கள், அப்புறம் இரண்டு அடைப்பு இருக்கிறது, ஒரு சின்ன (?) ஆபரேஷன் செய்தால் சரியாகி விடும் என்பீர்கள். எனக்கு இந்த வித்தை எல்லாம் வேண்டாம், ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்து அனுப்புங்கள் என்று கறாராகச் சொல்லி மருந்துகள் வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண்ணோ பட்டு லேசாக நெஞ்சில் அவ்வப்போது வலி வர ஆரம்பித்தது. எனக்கும் வயதாகி விட்டபடியால், சரி உடல்நிலை எப்படியிருக்கிறது, இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்போம் என்று தெரிந்து கொள்ளலாம் என்ற ஆசை வந்தது. அதனால்தான் என் பெண்ணிடம் கூறி இப்படி இந்த டாக்டரிடம் செல்ல வேண்டியதாகப் போயிற்று.

சரி, அதையும் பார்த்து விடுங்கள் என்றேன். ஒரு இரண்டு மணி நேரம் என்னென்னமோ செய்து ஒரு வழியாக ஏன்ஜியோ செய்து முடித்தார்கள். என்னைக் கொண்டு போய் தனியாகப் படுக்க வைத்தார்கள். மூன்று மணி நேரம் கழித்து ஒரு ரூம் கொடுத்து இன்று இரவு இங்குதான் தங்க வேண்டும் என்றார்கள். பேய்க்கு வாழ்க்கைப் பட்டு விட்டுப் புளிய மரத்திற்குப் பயப்பட முடியுமா? எல்லாவற்றிற்கும் தலையாட்டினேன்.

மறுநாள் காலையில் என் பெண்ணும் வந்த பிறகு டாக்டர் அறையில் ஏன்ஜியோ ரிசல்டைப் பரிசீலித்தோம், இருதயத்திலுள்ள முக்கிய மூன்று இரத்தக் குழாய்களில் இரண்டில் 90 சத அடைப்பு இருக்கிறது. மீதி ஒரு ரத்தக்குழாயினாலும் புதிதாக உண்டான subsidiary ரத்தக்குழாய்களினாலும் இருதயம் ஓரளவு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதுதான் இப்போதைய நிலை என்று டாக்டர் சொன்னார்.

இந்த நிலையில் என்ன செய்யலாம் என்று மகள் கேட்டாள். ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யலாம், ஆனால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கிறது என்றார். அப்படி சர்ஜரி செய்தால் எவ்வளவு முன்னேற்றம் இருக்கும் என்று கேட்டதற்கு அவர் சுமார் 10 % முன்னேற்றம் இருக்கும் என்றார்.

இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்த நான் சொன்னேன். டாக்டர், எனக்கு 84 வயது ஆகிவிட்டது, இந்த ஆபரேஷனில் ரிஸ்க் அதிகம் என்று நீங்களே சொல்லுகிறீர்கள், தவிர ஆபரேஷனுக்குப் பிறகு வரும் முன்னேற்றமும் கணிசமாக இல்லை. இந்த நிலையில் இந்த ஆபரேஷனைத் தவிர்த்து மருந்து மாத்திரைகளினால் நான் சிரமப்படாத அளவிற்கு என்னைத் தயார் செய்தால் போதும், நானும் அதிகமாக அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுகிறேனே என்று சொன்னேன்.

டாக்டர் அதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டார். உங்கள் நிலையில் நீங்கள் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்று ஒரு சர்டிபிகேட்டும் கொடுத்து விட்டார். ஆகவே மக்களே, டாக்டர்கள் சொல்லுகிறார்களே என்று எந்த ஆபரேஷனுக்கும் சம்மதித்து விடாதீர்கள். அந்த ஆபரேஷன் உங்களுக்கு அவசியம்தானா, அதனால் உங்கள் உடல்நிலை மேம்படுமா என்பதையெல்லாம் தீர யோசித்து அப்புறம் முடிவு எடுங்கள்.

மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது உடல்நிலையில் எந்த பின்னடைவும் இல்லை.

வெள்ளி, 15 மார்ச், 2019

38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்

                                 
                                   

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வக்கிரங்களைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதாயம் தேடுகின்றன. பத்திரிக்கைகள் கல்லா கட்டுகின்றன.

ஆனால் யாராவது இந்த அக்கிரமங்கள் நடப்பதற்கு அடிப்படைக் காரணங்களைப் பற்றி எள்ளளவாவது  சிந்திக்கிறார்களா என்றால், ஒருவரையும் காணோம். இந்த அக்கிரமக்காரர்கள் எந்தப் பெண்ணையும் பலாத்காரமாகவோ, மயக்க மருந்து கொடுத்தோ தூக்கிக் கொண்டு போனதாக எந்தச் செய்தியும் இது வரை இல்லை.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் தங்களுடைய பூரண நினைவுடனேயே தங்களுடைய பரிபூர்ண சம்மதத்துடனேயே சென்றிருக்கின்றார்கள். கூட்டிக்கொண்டு போனவர்கள் அந்தப்பெண்களை சீரழித்தது ஒரு வகையில் காட்டுமிராண்டித்தனம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்தப் பெண்கள் அவர்களுடன் போனது அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியுமா? பெற்றோர்களின் அனுமதியுடன்தான் அவர்கள் சென்றார்களா?

மனிதனாகப் பிறந்தவன் ஒவ்வொருவனுக்கும் இயற்கை சில பயங்களைக் கொடுத்திருக்கிறது. இருட்டு பயம், புது இடம், புது மனிதர்கள், புது சூழ்நிலை இவைகளைக் கண்டு பயம், எதிர்பாலரிடம் பேச. பழக பயம். இப்படி “தெனாலி” படத்தில் கமலஹாசன் லிஸ்ட் போடுவாரே அந்த மாதிரி நிறைய பயங்கள் இயற்கை நம்மிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கள் எல்லாம் நம்முடைய பாதுகாப்புக்குத் தானே ஒழிய சும்மா விளையாட்டுக்கல்ல.

அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பல எச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும். அதில் முக்கியமாக பெரியவர்கள் (பெற்றோர்களும் இதில் அடங்கும்) சொல்லும் அறிவுறைளைக் கேட்டு நடக்கவேண்டும். பெற்றோர்களிடத்தில் உண்மையை பேச வேண்டும். இப்படியெல்லாம் சில பழக்க வழக்கங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய இளைய சமுதாயம் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. தாங்கள் நினைப்பதுதான் சரி, தங்கள் நண்பர்கள் செலவதுதான் வேதவாக்கு. இப்படியாக அவர்களுடைய போக்கு இருக்கிறது. ஆணுக்குப் போட்டியாக பெண்களும் இப்படியான கலாச்சாரத்தைக் கடைப் பிடிக்கிறார்கள்.

பாய் பிரண்ட் இல்லையென்றால் அது மகா கேவலம் என்ற எண்ணம் பொதுவாக எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. பாய் பிரண்டுடன் ஊர் சுற்றுவது ஒரு கட்டாயம் என்ற நிலைக்கு இன்றைய கல்லூரிப் பெண்கள் வந்திருக்கிறார்கள். இந்த மாதிரி சுற்றுவதற்கு பல பொய்க் காரணங்களை
வீட்டில் சொல்லி நம்ப வைக்கிறார்கள்.

இந்த மனப்பாங்கை இன்றைய கயவர்கள் நன்கு புரிந்து கொண்டு பல அக்கிரமங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த பொள்ளாச்சி விவகாரமும். அடிப்படைக் காரணத்தை அலசாமல் நடந்த நிகழ்வுகளை மட்டும்  ஆராய்வதில் எந்தப் பலனும் இல்லை.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு

                                              Image result for ரூபாய்
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும் வாயில் ஈ போவது தெரியாமல் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கையில் காலுக்கடியில் ஒரு சுண்டெலி ஓடிப்போய் விட்டது.

ஸ்டேண்டர்டு டிடக்ஷன் என்று ஒன்று ஒரு காலத்தில் இருந்ததை சம்பளதாரர்கள் ஏறக்குறைய மறந்தே போய்விட்ட நிலையில் அருண் ஜேட்லி அவர்கள் அதை இப்போது நினைவூட்டியிருக்கிறார்.

சரி, சம்பளம் வாங்குறவனுக்கு என்னதான் மிச்சம் என்று கேட்பவர்களுக்கு-
நான் பென்சன்தான் வாங்குகிறேன். எனக்கு என்ன மிச்சமாகும் என்பதுதான் எனக்குத் தெரிகிறது. நான் வாங்கும் பென்சனில் சுளையாக நாற்பது ஆயிரம் ரூபாய்க்கு இன்கம்டாக்ஸ் கட்ட வேண்டியதில்லை. இப்போது 20 சதம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆகவே எட்டு ஆயிரம் ரூபாய் மிச்சம். ஆனால் இன்னொரு ஆப்பை அருண் ஜேட்லி வைத்திருக்கிறார்.

எஜுகேசன் செஸ் 3 % ஆக இருந்ததை இப்போது 4 % ஆக உயர்த்தி இருக்கிறார். அதில் ஒரு ஆயிரம் ரூபாய் போய்விடும். ஆக மொத்தம் ஏழு ஆயிரம் ரூபாய் மிச்சமாகும். வந்தது லாபம் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

செவ்வாய், 30 ஜனவரி, 2018

36. யூட்யூப் விடியோ டவுன்லோடெர்

Youtube Downloader என்று ஒரு புரொக்ராம் யூட்யூபிலிருந்து விடியோக்களை டவுன்லோடு செய்ய மிகவும் உபயோகமாக இருந்தது. நான் அதை உபயோகித்து பல பாடல்களை டவுன்லோடு செய்து சேகரித்து வைத்திருக்கிறேன்.

இரண்டு நாட்களாக இந்த புரொக்ராம் சரியாக வேலை செய்வதில்லை. யாருக்காவது விபரம் தெரிந்தால் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திங்கள், 15 ஜனவரி, 2018

34. தற்கால சங்கீத வித்வான்கள்

நான் கொஞ்சம் கர்னாடக இசைப் பிரியன். இந்த சங்கீதத்தின் கணக்கு வழக்கெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. நல்ல இசையென்றால் கேட்டு ரசிப்பேன் அவ்வளவுதான்.

இங்கே நான் பதிவு செய்திருக்கும் பாட்டும் பாடகியும் சங்கீத உலகில் பிரபலமானவர்கள். முதலில் அதைக் கேளுங்கள். பிறகு நான் என் சந்தேகத்தைச் சொல்லுகிறேன்.




இந்தப் பாடகிக்கு முன் ஒரு லேப்டாப் வைத்திருக்கிறார்கள் அல்லவா? இது எதற்கு என்று  நான் ரொம்ப நாளாய் என் மூளையைக் குழப்பிக்கொண்டு இருந்தேன். (எப்படி, சந்தடி சாக்கில் எனக்கும் மூளை இருக்கும் சமாச்சாரத்தை உங்களுக்கு சொல்லிவிட்டேன் பார்த்தீர்களா?)

இன்றைக்குத்தான் இந்த ரகசியத்தை எப்படியும் கண்டு பிடித்து விடுவது என்று கூகிளாரை வினவினேன். அவர் சொல்கிறார் - இது ஒரு டெலிபிராம்ப்டராம் - பாடகர்களுக்கு பாட்டின் வரிகள் மறக்காமலிருக்க அந்த வரிகள் இந்த லேப்டாப்பில் நகர்ந்து கொண்டு இருக்குமாம். அதைப் பார்த்து பாடகர்கள் பாடுவார்கள் என்று கூகுளார் சொன்னார்.

டிவி வந்த புதிதில் செய்தி வாசிப்பாளர்கள் இந்த மாதிரி டெலிபிராம்ப்டர்கள் உபயோகப்படுத்துவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது மேடைப் பாடகர்களும் இந்த யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு புரட்சிதான்.

சில பாடகர்கள் பாட்டை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டு அதைப் பார்த்துப் பாடுவதைப் பார்த்திருக்கிறேன். பரவாயில்லை, தொழில் நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது பாருங்கள். அநேகமாக இன்னும் சில வருடங்களில் பாட்டை முன்பே பதிவு செய்து கொண்டு வந்து மேடையில் பக்க வாத்தியக்காரர்களும் பாடகரும் அந்த இசைக்கு ஏற்றபடி வாயையும் கையையும் அசைப்பார்கள் என்று யூகிக்கிறேன்.

என் சிறு வயதில் பிரபல பாடகர்கள் நான்கு ஐந்து மணி நேரக் கச்சேரிகளில் இந்த மாதிரி எந்த யுக்தியும் இல்லாமல் எப்படிப் பாடினார்கள் என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.