திங்கள், 9 ஜூலை, 2012

நான் செய்த புரட்சிகள்


முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.



மறுநாள் மீட்டிங்க்குக்கு பிரதம மந்திரி தவிர ஏறக்குறைய மற்ற எல்லா மந்திரிகளும் ஆஜர். செக்ரடரிகள் எல்லோரும் வந்திருந்தார்கள். நம்ம பெர்சனல் செக்ரடரியையும் ஸ்டெனோவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.

எல்லோரையும் பார்த்து என் சொற்பொழிவை ஆரம்பித்தேன்.

நீங்கள் எல்லோரும்தான் இந்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறவர்கள். இந்திய நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. இப்படியெல்லாம் சொல்லி உங்களை நான் ஏமாற்றப்போவதில்லை. நீங்கள் செய்த சேவைகளினால் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று வெளிநாட்டில் கேட்டால்தான் தெரியும். இனியும் அதே நீலை நீடிக்க நான் அனுமதிக்கப்போவதில்லை.

நான் வகுக்கும் திட்டங்களை நீங்கள் எல்லோரும் முழு மனதுடன் ஒத்துக் கொண்டு செயல் புரிய வேண்டும். அதற்கு விருப்பமில்லாதவர்கள் யாராவது இருந்தால் கைகளைத் தூக்குங்கள் என்றேன்.

யாரும் இதை எதிர்பார்க்காததினால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பே கோச்சிங்க் கிளாஸ் நடத்தினால்தான் அவர்களுக்கு ஏதாவது பேசத் தெரியும். பிரதம மந்திரி வேறு இல்லையா? அவர் இருந்தால் எல்லாவற்றையும் அவர் கவனித்துக்கொள்வார். நாம் பாட்டுக்குத் தூங்கிக்கொண்டிருக்கலாம். இந்த ஆளுக்கு ஓட்டுப்போட்டு ஜனாதிபதி ஆக்கினது தவறோ என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒருவரும் கை தூக்கவில்லை.

முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். உங்களில் யாருடைய பதவிக்கும் ஆபத்தில்லை என்றேன். இதைக்கேட்டவுடன்தான் எல்லோருடைய முகத்திலும் கொஞ்சம் பிரகாசம் தெரிந்தது.

கவனமாகக் கேளுங்கள். நம் இந்திய நாட்டை மற்ற நாட்டவர்கள் கேவலமாகப் பேசுவதற்கு முக்கிய காரணம் நம் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் தங்கள் காலைக் கடன்களை நிறைவேற்றும் முறைதான். இதை மாற்றினாலே நம் நாடு வல்லரசாகும் பாதையில் அடி எடுத்து வைத்துவிட்டது என்று அர்த்தம்.

நமது மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் உடனே தங்கள் தொகுதிக்கு சென்று மக்களுக்கு விழிப்பு உண்டாக்கவேண்டும். உங்களுக்கு மூன்று நாள் அவகாசம் தருகிறேன். நான்காம் நாள் காலையிலிருந்து யாரும் வெட்டவெளியில் காலைக்கடன்களை கழிக்கக்கூடாது. அப்படி யாராவது செய்தால் அவர்களை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் சகாரா பாலைவனத்தில் விடப்படுவார்கள். இந்த வேலையை நம் முப்படைத் தளபதிகளிடம் விடுகிறேன்.

இதற்கான எழுத்து மூலமான உத்திரவுகள் இன்று மாலைக்குள் எல்லோருக்கும் வந்து சேரும். உத்திரவுகளை உடனடியாக நிறைவேற்றத் தவறினால் அதற்கு காரணமானவர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்படுவார்கள். அடுத்த கூட்டம் நாளை இதே நேரத்தில் நடைபெறும். நாளைக் கூட்டத்தில் "லஞ்ச ஒழிப்பு வாரியம்" அன்னா ஹஸாரே தலைமையில் தொடங்கவிருக்கிறேன். மேலும் பல திட்டங்களை அறிவிப்பேன். இந்தக் கூட்டம் முடிந்தது என்று சொல்லிவிட்டு எழுந்து வந்து விட்டேன்.