திங்கள், 6 ஏப்ரல், 2015

An Accident to My Modem

My modem has broken one of its arms and the result is I have no internet connection. The Doctor is busy. Hope to get everything fixed by tomrrow. Till then enjoy yourself.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

வெறும் சாதத்தை சாப்பிடுவது எப்படி?

                                   Image result for வெள்ளை சாதம்

சம்சாரிகள் சில நாட்களில் தாங்களே சமையல் செய்யவேண்டி வரும். இந்தச் சம்பிரதாயத்தை மக்கள் இப்பவும் கடைப் பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. 40 - 50 வருடங்களுக்கு முன் இந்த சம்பிரதாயம் இருந்தது.

அந்தக் காலத்தில் சமையல் தெரியாத ஆண்களுக்கான உத்திகள் இவை. சாப்பாடு மட்டும் வைப்பதில் பெரிய டெக்னிக் ஒன்றுமில்லை. நேரடி இன்ஸ்ட்ரக்ஷனில் இதைச் செய்து விடலாம். அதே மாதிரி தயிர் உறை ஊற்றி வைப்பதிலும் பெரிய கஷ்டம் இல்லை. நான் இப்படித்தான் சமையல் கற்றுக்கொண்டேன்.

இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு திவ்யமாகச் சாப்பிட்டு ஏப்பம் விடலாம். அதற்கான வழிமுறைகள் வருமாறு.

1. வெள்ளைச் சாதம் + ஊறுகாய் + நெய்.
இந்த காம்பினேஷன் பிரமாதமாய் இருக்கும்.

2. ஊறுகாய் ஸ்டாக் இல்லையென்றால் சாதம் + நெய் + அளவான உப்பு கலந்தும் சாப்பிடலாம்.

3. மேற்படி சாதக் கலவையில் சாம்பார் பொடி அல்லது மிளகாய்பொடு அளவாகச் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.

4. சாதம் + இட்லிப் பொடி + நல்லெண்ணை கலவை சாதம் சூப்பராக இருக்கும்.

5. சாதம் + வாழைப் பழம் + சர்க்கரை + நெய்  = இந்தக் கலவை, சாப்பாட்டுக்கு சாப்பாடாகவும் ஸ்வீட்டுக்கு ஸ்வீட்டாகவும் வைத்துக்கொள்ளலாம்.

6. பிறகு தயிருடன் சாப்பிடுவது எல்லோரும் தினந்தோறும் செய்வதே.

இதைத் தவிர வேறு முறைகளும் இருக்கலாம். அன்பர்கள் தெரிவித்தால் மக்களுக்குப் பயன்படும்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

ஆனந்தபவன் ஓட்டலும் இட்லி சாம்பாரும்.

                                     Image result for இட்லி சாம்பார் வகைகள்                           

கோயமுத்தூரில் 1960 களில் இரண்டு மூன்று பெரிய ஓட்டல்கள்தான் இருந்தன. பெரிய கடைவீதியில் இரண்டு - "ரஞ்சித விலாஸ்" மற்றும் "பாம்பே ஆனந்தபவன்".  ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஒன்று - "ராயல் இந்து ரெஸ்டாரென்ட்" சுருக்கமாக ஆர் எச் ஆர் என்று அழைக்கப்பட்டது. அது தவிர "வுட்லேண்ட்ஸ்" என்று ஒரு ஓட்டல் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் எதிரில் இருந்தது. அது பணக்காரர்களுக்கானது. ஏனெனில் அது ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்ததால் சாதாரண ஜனங்கள் அங்கு போகமாட்டார்கள். இது தவிர ஆங்காங்கே பல பெயர் தெரியாத சிறு ஓட்டல்களும் டீக் கடைகளும் இருந்தன.

இந்த மூன்றில் "பாம்பே ஆனந்த பவன்" தான் அதிகப் பிரசித்தம். கடைவீதிக்கு வரும் ஜனங்கள் எல்லோரும் இதற்குத்தான் படையெடுப்பார்கள். எப்போதும் ஜே ஜே என்று இருக்கும். எல்லா உணவுப் பண்டங்களும் தரமாகவும் ருசியாகவும் இருக்கும். குறிப்பாக இட்லி சாம்பார் மிகவும் நன்றாக இருக்கும். காப்பியும் சூப்பராக இருக்கும்.

மாலை வேளைகளில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. அந்தக் காலத்தில் சாப்பிடுவதற்காக மட்டும் என்று ஓட்டலுக்கு போகிறவர்கள் கம்மி. கடைவீதிக்கு ஏதாவது வாங்கப்போனால் பர்சேஸ் முடித்து விட்டு இங்கு சென்று டிபன் சாப்பிட்டு விட்டு வருவார்களே தவிர, டிபன் சாப்பிடுவதற்கென்று ஓட்டலுக்குப் போகிறவர்கள் குறைவு.

நாங்கள் ஆறு பேர் அசிஸ்டென்ட் புரொபசர்கள் இருந்தோம் என்று முன்பே சொல்லியிருந்தேனல்லவா? நாங்கள் இந்த ஓட்டலின் இட்லி சாம்பாரில் மயங்கிப் போனோம். ஆகவே ஏதாவது ஒரு சாக்கை வைத்துக்கொண்டு இங்கு செல்ல ஆரம்பித்தோம். பேச்சு வாக்கில் யாராவது ஏதாவது சொல்லி மாட்டிக்கொண்டால் அன்று ஆனந்தபவன் இட்லி சாம்பார் செலவு அவர் தலையில். வாரத்தில் இரண்டு நாளாவது இப்படிப் போவோம்.

எங்களுக்கென்று முதல் மாடியில் ரோட்டைப் பார்த்தவாறு ஒரு ஸ்பெஷல் உண்டு. அந்த டேபிளில்தான் உட்காருவோம். அடிக்கடி போய்க் கொண்டிருந்தபடியால் அங்குள்ள சர்வர்கள் நன்கு பழக்கமாகி விட்டார்கள். நாங்கள் இட்லி சாம்பார் சாப்பிடும் முறையே அலாதியானது. வழக்கமாக மொத்தம் நான்கு இட்லி சாப்பிடுவோம். ஆனால் அதை ஒன்றாக வாங்க மாட்டோம். இரண்டு இட்லி சாம்பார் என்று முதலில் ஆர்டர் கொடுப்போம். ஒரு தட்டில் இரண்டு இட்லியும்  இட்லி தெரியாத அளவு சாம்பாரும் ஊற்றி ஒரு ஸ்பூனுடன் சர்வர் கொண்டு வந்து வைப்பார். உடனே இட்லியைச் சாப்பிடமாட்டோம். சாம்பாரை மட்டும் ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டு விட்டு சர்வர் அந்தப் பக்கம் மறுபடி வரும்போது திரும்பவும் சாம்பார் கேட்போம். அவர் மறுபடியும் தட்டு நிறைய சாம்பார் ஊற்றுவார்.

அதையும் முன்பு போலவே ஸ்பூனால் குடித்துவிட்டு மறுபடியும் சாம்பார் கேட்போம். சர்வரை நன்றாக கவனித்துக்கொள்வதால் அவர் சாம்பார் ஊற்ற சளைக்கமாட்டார். ஓட்டல் முதலாளி கீழே கல்லாவில் மும்முரமாக இருப்பார். அவர் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார். மூன்றாவது தடவை சாம்பார் வாங்கும்போது இட்லி நன்றாக ஊறி இருக்கும். அந்த கட்டத்தில் சாம்பாருடன் இட்லியையும் சேர்த்து சாப்பிடுவோம்.

பிறகு இன்னும் இரண்டு இட்லிக்கு ஆர்டர் செய்வோம். இட்லி வந்தவுடன் முன்பு செய்த மாதிரியே இரண்டு தடவை சாம்பாரை மட்டும் சாப்பிட்டு விட்டு மூன்றாவது தடவை இட்லியையும் சேர்த்து சாப்பிடுவோம். எப்படியோ நாங்கள் ஆறு பேரும் ஆளுக்கு நாலு நாலு இட்லி சாப்பிடுவதற்குள் ஒரு பக்கெட் சாம்பாரைத் தீர்த்திருப்போம்.

கொஞ்ச நாள் நாங்கள் இப்படி சாம்பாரை மட்டும் குடிப்பதைப் பார்த்த சர்வர்கள் நாங்கள் போய் உட்கார்ந்ததும் முதல் டோஸ் இட்லி கொண்டு வரும்போதே ஒரு பக்கெட் சாம்பாரையும் கொண்டு வந்து எங்கள் டேபிளில் வைத்து விட்டுப் போய்விடுவார். அந்த பக்கெட்டைக் காலி செய்து விட்டுத்தான் நாங்கள்
புறப்படுவோம்.

அப்போதெல்லாம் பருப்பு விலை, காய்கறி விலை எல்லாம் சலீசாக இருந்ததால் நாங்கள் இப்படி சாம்பாரைக் குடித்தும் ஓட்டல் நன்றாக லாபகரமாகவே ஓடிக்கொண்டு இருந்தது. நங்களும் கொஞ்ச வருடங்கள் இப்படிச் சாம்பாரைக் குடித்து வளர்ந்தோம். பின்பு ஒவ்வொருவரும் பல காரணங்களால் பிரிந்து போக, இந்த லீலையைத் தொடர முடியாமல் போனது.

பிறகு அன்னபூர்ணா ஓட்டல் வந்தது. அதன் தாக்கத்திற்கு முன் மற்ற ஓட்டல்கள் சோபிக்க முடியவில்லை. எல்லா ஓட்டல்களும் மங்கிப்போயின. இன்று அந்த பாம்பே ஆனந்தபவன் இருந்த கட்டிடத்தை இடித்து விட்டு ஏதோ காம்ப்ளக்ஸ் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

புதன், 1 ஏப்ரல், 2015

அக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப் - தொடர்ச்சி - 2

                                         
                                            Image result for சீட்டாட்டம்

எங்கள் கிளப்பில் ஒரு குறிப்பிட்ட சில அங்கத்தினர்கள் காசு வைத்து ரம்மி விளையாடுவார்கள். ஒரு பத்து பேர் இருக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அல்லக்கைகள். மாலை 6 மணிக்கு ஜமா சேர்ந்து விடும். கிளப் மூடும் 9 மணி வரைக்கும் விளையாடுவார்கள். ஆட்ட சுவாரஸ்யத்தில் சில சமயம் நேரத்தைப் பற்றி கவலைப்படாமல் விளையாடுவார்கள். அவர்களை வெளியேற்றி கிளப்பை மூடுவதற்கு கிளப் பாய் படாதபாடு படவேண்டியிருக்கும்.

லீவு நாட்களில் கிளப் சட்ட திட்டங்கள் சற்று வளைக்கப்படும். பண்டிகை நாட்களில் இரவில் கிளப்பை மூடவே மாட்டார்கள். கச்சேரி விடிய விடிய கன ஜோராக நடக்கும். ஒரு தடவை வெள்ளிக்கிழமை 1 ம் தேதி. சம்பளநாள். அடுத்து சனிக்கிழமை ஏதோவொரு லீவு. அப்போதெல்லாம் வாரத்தில் ஆறு நாள் வேலை. ஞாயிற்றுக்கிழமை வார லீவு. திங்கட்கிழமை தீபாவளி லீவு.

என் நண்பன் ஒருவன் வெள்ளிக்கிழமை மாலை சம்பளம் மற்றும் தீபாவளி அட்வான்ஸ் (ஏறக்குறைய 300 ரூபாய் - 1960 களில் இது ஒரு பெரிய தொகை, இன்றைய மதிப்பில் ஒரு லட்சம் இருக்கலாம்) வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போகாமல் அப்படியே கிளப்புக்குப் போனான். தீபாவளி மற்றும் லீவு நாட்கள் என்பதால் கச்சேரி வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு, ஞாயிறு பகல், ஞாயிறு இரவு, திங்கள் காலை வரையில் தொடர்ந்து நடந்து, திங்கள் காலை தீபாவளி கங்காஸ்நானம் செய்யவேண்டுமென்பதால் கலைந்தது.

என் நண்பனின் பர்சில் அப்படி கலைந்து போகும்போது ஒரு சில ரூபாய்கள் மட்டுமே இருந்தன. மறு நாள் இந்தச் செய்தி கல்லூரி முழுவதும் பரவிவிட்டது. ஏண்டா இப்படி செய்தாய் என்று நாங்கள் கேட்டதற்கு அவன் முரட்டுத்தனமாக, "அவரவர்கள் அவரவர்கள் வேலையைப் பாருங்கள்" என்று முகத்திலடித்தாற்போல் பதில் சொன்னான். நாங்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டோம். அவன் வருத்தம் அவனுக்கு.

இப்படி விடிய விடிய ஜமா நடக்கும்போது பசிக்குமல்லவா? அதற்கு அந்த ஆபீசர்ஸ் மெஸ் கான்ட்ராக்டர் ஸ்பெஷல் ஐட்டங்கள் அவ்வப்போது சூடாகத் தயார் பண்ணிக் கொடுப்பார். ஆடுபவர்கள் ஆட்டத்திலிருந்து பாதியில் எழுந்து வெளியில் போக முடியாதல்லவா? அதனால் சிறிய ஸ்டூல்கள் தயார் செய்து வைத்திருந்தார்கள். அதைப் பக்கத்தில் போட்டு அதில் அந்த தின்பண்டங்களை வைத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். இடது கையில் சீட்டுகள். வலது கையில் சாப்பிடுவது. ஒரு ஆட்டம் முடிந்து அடுத்த ரவுண்ட் சீட்டு போடும் இடைவெளியில் போய் கை கழுவி விட்டு வந்து விடுவார்கள். இப்படியாக ஆட்டம் தொய்வில்லாமல் நடக்கும்.

சீட்டாடுபவர்களைப் பற்றி ஒரு கதை கேள்விப் பட்டிருப்பீர்கள். அது சும்மா வேடிக்கைக்கு சொல்லப்படுவது என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள் ஆனால் இது நடக்கக்கூடிய சம்பவமே என்பதை சீட்டாட்டத்தில் பழகியவர்கள் அறிவார்கள்.

 கிராமத்தில் ஒருவன் கூட்டத்தோடு ஒரு வீட்டுத் திண்ணையில் சீட்டாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒருவன் வந்து அவனிடம் அவன் பெண்டாட்டி இறந்து விட்டதாகத் தெரிவித்தான். இவன் அப்படியா என்று கேட்டுவிட்டு, சரி, நான் உடனே வந்து என்ன செய்யப் போகிறேன்,  போய் அடக்கம் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு திரும்பவும் சீட்டு விளையாட்டில் மூழ்கி விட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து அவன் திரும்பவும் வந்து எல்லாக் காரியங்களும் ஆகிவிட்டன, நீங்கள் வந்த பிறகு சவத்தைப் பாடையில் வைக்கலாமென்றிருக்கிறோம், வாருங்கள் என்றான். அதுக்கு நான் என்னத்துக்கு, பாடையிலே வச்சு சுடுகாட்டுக்கு இந்த வழியாகத்தானே போவீங்க, அப்ப நான் சேந்துக்கிறேன் என்று சொல்லி அவனை அனுப்பி விட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து சவ ஊர்வலம் அந்த வழியாக வந்தது. சரி. இத்தனையெல்லாம் செய்து விட்டீர்களல்லவா, இனி சுடுகாட்டுக்கு வந்து நான் என்ன செய்யப்போகிறேன், நீங்களே கொண்டு போய் அடக்கம் செய்து விடுங்கள் என்றானாம். எல்லோரும் அவனைக் காறித்துப்பி விட்டு சுடுகாட்டிற்குப் போனார்களாம்.

இது முற்றிலும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் இதில் நிறைய உண்மை இருக்கிறது. இதைப்பற்றி பின்னால் கூறுகிறேன்.

இந்த சீட்டாடும் குரூப் கொஞ்சம் கொஞ்சமாக அதிக ரவுஸ் விட ஆரம்பித்தார்கள். சத்தமாகச் சிரிப்பதும் பேசுவதுமாக கிளப்பை சந்தைக் கடை போல் ஆக்கி விட்டார்கள். எங்கள் தலைவர் பார்த்தார். இவன்களை இப்படியே விட்டால் கிளப்பை நாற அடிச்சு விடுவார்கள். ஏதாச்சும் பண்ணலாம் என்றார். நாங்கள் எல்லோரும் ஒத்துப் பாடினோம். நாங்கள் அதற்குத்தானே இருக்கிறோம்.

அடுத்த நாளே இவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் இடத்திற்குப் பக்கத்திலேயே எங்களுக்கும் ஒரு டேபிள் போட்டோம். நாங்கள் பத்துப் பேர். என்ன ஆட்டம் ஆடலாம் என்று யோசித்து கடைசியில் கழுதை ஆட்டம் ஆடலாம் என்று முடிவு பண்ணி ஆட ஆரம்பித்தோம்.  இந்த ஆட்டம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். யாரிடம் கடைசியில் நிறைய சீட்டு இருக்கிறதோ அவரே கழுதை.

ஒரு ஆட்டம் பத்துப் பதினைந்து நிமிடங்களில் முடிந்து விடும். ஆட்டம் நடக்கும்போதே அதைப்போடாதே, இதைப் போடாதே என்று அல்லக்கைகள் கூக்குரலிடும். ஆட்டம் முடிந்தவுடன் கழுதையானவனைப் பார்த்து ஒரே கத்தல்தான். நாங்கள் போடும் சத்தத்தைப் பார்த்து வழக்கமாக ஆடுபவர்கள் அரண்டு போனார்கள். ரோட்டில் போகிறவர்கள் எல்லாம் நின்று இங்கே என்ன அடிதடி என்று கேட்க ஆரம்பித்தார்கள். நிலவரம் கட்டுக்கடங்காமல் போனது.

கிளப் நிர்வாகம் தலையிட்டு பஞ்சாயத்து பண்ணினார்கள். எங்கள் தரப்பினரின் வாதம், முதலில் சத்தம் போட்டது அவர்கள்தான், அவர்களை அடக்குங்கள், நாங்களும் நிறுத்தி விடுகிறோம் என்றோம். ஒருவாறாக இரு தரப்பினரும் சமாதானமாகி, இனி விளையாடும்போது சத்தம் போடுவதில்லை என்ற ஒப்பந்தத்திற்கு வந்தோம்.

ஆனாலும் எங்கள் கழுதையாட்டம் தொடர்ந்தது. ஆறு மாதம் கழித்து இந்தக் கழுதையாட்டம் சலித்துப்போய்விட்டது. ஆகவே நாங்களும் ரம்மி ஆட ஆரம்பித்தோம். மிகவும் குறைவான தொகையையே பந்தயப்பணமாக வைத்தோம். ஒரு மாலை முழுவதும் ஆடித் தோற்றால் கூட நாலணாத்தான் நஷ்டமாகி இருக்கும். சீட்டு விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் ஆடினோமே தவிர பெரிதாக பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.

ஆனாலும் இப்படி ஆறு மாதம் விளையாடிய பிறகு இந்தச் சீட்டாட்டம் என்னைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. மாலை 5 மணி ஆனாலே மனசுக்குள் ஒரு பதட்டம் வந்து விடும். உள்ளங்கையெல்லாம் அரிக்கும். மாலை 6 மணிக்கு எப்படியும் சீட்டாடப் போயே ஆகவேண்டும் என்ற உந்துதல் வந்து விடும்.

நாளாக நாளாக இந்த சீட்டாட்டம் ஒரு போதையாகி விட்டது. டவுனில் ஏதாவது வேலை இருந்தால் அதைத் தள்ளிப்போடுவேன். அல்லது முன்னாலேயே போய் அந்த வேலையைப் பார்த்து முடித்து விட்டு 6 மணிக்கு கிளப்பிற்கு வந்து விடுவேன். அப்போதுதான் அந்த பெண்டாட்டி செத்த கதை நிஜமாக இருந்தாலும் இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்போது எனக்கு கல்யாணம் ஆகியிருக்கவில்லை.

பிறகு கல்யாணம் ஆன பின்பும் கொஞ்ச நாள் இந்த சீட்டாட்டம் தொடர்ந்தது. சொந்தக்காரர்கள் என்னைப் பார்க்க கிளப்புக்கே வரத்தொடங்கினார்கள். அப்போது எனக்கு பதவி உயர்வு வந்தது. நான் குடியிருந்த குவார்ட்டர்ஸைக் காலி பண்ணவேண்டிய கட்டாயம். என் புது வேலைக்கான குவார்ட்டர்ஸ் காலி இல்லை.

அதனால் வெளியில் வீடு பார்த்து குடி போக வேண்டிய அவசியம் நேரிட்டது. இதனால் கிளப்பிற்கு வர முடியவில்லை. மெதுவாக கையரிப்புக் குறைந்தது. சீட்டாட்டத்தை அடியோடு மறந்தேன்.

என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால் சூதாட்டம் என்பது, சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் தனி மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் வலிமை கொண்டது. ஆனானப்பட்ட தர்ம ராஜாவின் கதையே ஒரு உதாரணம். இளைய சமுதாயம் இந்த வலையில் சிக்காமல் பாதுகாப்பது பெரியவர்களாகிய நம் கடமை.

திங்கள், 30 மார்ச், 2015

அக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப் - தொடர்ச்சி

                                          Image result for hanging portraits

அவர் சொல்ல நினைத்தது - "நானும் ஒரு நாள் பெரிய ஆபீசர் ஆக பிரபலமாகி, என் படமும் ஒரு நாள் இங்கு இதே மாதிரி தொங்கும்" என்பதே. ஆனால் இதை நல்ல ஆங்கிலத்தில் சொல்ல அவருக்குத் தெரியவில்லை. ஏன், பெரும்பாலானவர்களுக்கே கடினமான விஷயம்தான்.

அவர் என்ன சொன்னார் என்றால் - "one day I will hang like this"  இதன் அர்த்தம் என்னவென்றால் "ஒரு நாள் நான் இங்கு இது மாதிரி (தூக்கில்) தொங்குவேன்".

இந்த வாக்கியமானது பல வருடங்கள் பிரபலமாக இருந்தது. இந்த வாக்கியத்தைச் சொன்னவர்தான் எங்களுக்கெல்லாம் அன்அஃபிசியல் தலைவர் அதாவது லீடர். நல்ல தைரியசாலி. இவருடைய தலைமையில்தான் நாங்கள் ஆபீசர்ஸ் கிளப்பில் பல லீலைகள் புரிந்தோம்.

இந்த ஆபீசர்ஸ் கிளப்புக்கென்று ஒரு மெஸ் உண்டு. அதற்கு ஆபீசர்ஸ் மெஸ் என்று பெயர். அதை நடத்த ஒரு கான்ட்ராக்டரிடம் ஒப்பந்தம் போட்டு அவர் நடத்தி வந்தார். நான் கல்லூரியில் படிக்கும்போது சில வகுப்புகள் காலை 6.30 மணிக்கே தொடங்கும். நான் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவில்லை. காரணம் வீடு பக்கத்தில் ஆர்எஸ்புரத்தில் இருந்ததால் 10 நிமிடத்தில் கல்லூரிக்கு வந்து விடலாம்.

இப்படி 6.30 மணி வகுப்பிற்கு வரும்போது வீட்டில் டிபன் ரெடியாகி இருக்காது. அதனால் இந்த ஆபீசர்ஸ் மெஸ்சில்தான் டிபன் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்குப் போவேன். நான் வழக்கமாகச் சாப்பிடுவது - இரண்டு இட்லி (ஒரு அணா), ஒரு தோசை (ஒன்றரை அணா) ஒரு காப்பி (ஒன்றரை அணா), ஆக மொத்தம் நான்கு அணா அதாவது 25 நயா பைசா.

அன்று இருந்த விலைவாசி நிலவரம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியட்டும் என்றுதான் இவ்வளவு விவரம் கொடுத்தேன். இன்று அந்த 25 பைசாவே இல்லை.

இந்த ஆபீசர்ஸ் கிளப்பின் அங்கத்தினர்கள் எல்லோருக்கும் இந்த மெஸ்சில் கணக்கு உண்டு. எது வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு கணக்கில் எழுதச் சொல்லி விட்டு வந்து விடலாம். மாதக் கடைசியில் ஒவ்வொருவரும் சாப்பிட்ட கணக்குகளை ஒன்று சேர்த்து மெஸ் பில் தயாரித்து நோட்டீஸ் போர்டில் போடுவார்கள். 10 தேதிக்குள் அங்கத்தினர்கள் பில்லைக் கட்ட வேண்டும். அவர்களில் ஒரு சிலர் கட்டாவிட்டாலும் கிளப்பிலிருந்து மெஸ் கான்ட்ராக்டருக்கு 10 ம் தேதி பணம் கொடுக்கப்பட்டு விடும்.

இந்த வழக்கம் எல்லாம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வழக்கங்கள். இங்கிலீஷ்காரன் ஆண்டு கொண்டு இருக்கும் வரையில் எல்லாம் ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தது. அவனைக் கப்பல் ஏற்றி அனுப்பியவுடன் அவன் கற்பித்த ஒழுங்கு முறைகளையெல்லாம் நம்மவர்கள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.

பல அங்கத்தினர்கள் இந்த மெஸ் பில்லை ஒழுங்காகக் கட்டாததினால் ஆபீசர்ஸ் கிளப் திவாலாகும் நிலமைக்கு வந்து விட்டது. கிளப் நிர்வாகத்திற்கு வேறு வழி தெரியவில்லை. ஆகவே இந்த கடனில் சாப்பிடும் முறையை ஒழித்துக் கட்டினார்கள். பழைய பாக்கிகளை முடிந்தவரை வசூல் செய்தார்கள். பலர் பாக்கிகளை ஏப்பம் விட்டு விட்டார்கள்.

இந்தக்கால கட்டத்தில்தான் நாங்கள் முதுகலைப் படிப்பு முடிந்து எல்லோரும் வேலையில் சேர்ந்திருந்தோம். எங்கள் எல்லோருக்கும் அப்போது நான்-கெஜட்டெட் ஆபீசர்ஸ் என்று பெயர். எப்படியோ நாங்களும் ஆபீசர்ஸ் ஆகிவிட்டோம். அந்த ஜபர்தஸ்தைக் காட்டவேண்டாமா? ஆகவே ஆபீசர்ஸ் கிளப்பில் மெம்பர்களானோம்.

இந்தக் கிளப்பில் பெரிய ஆபீசர்கள், சின்ன ஆபீசர்கள், எங்களைப் போன்ற கத்துக்குட்டி ஆபீசர்க்ள எல்லோரும் மெம்பர்களாக இருந்தோம். ஆபீஸில் காட்டும் பந்தா, தோரணை எல்லாம் இங்கு இல்லை. எல்லோரும் சமமாகப் பழகுவார்கள்.

கிளப்பில் சில தினப் பத்திரிக்கைகள், வார, மாதப் பத்திரிக்கைகள் வாங்கி அங்கத்தினர்கள் படிப்பதற்காகப் போட்டிருப்பார்கள். கேரம்போர்டு, டேபிள் டென்னிஸ், செஸ் ஆகிய உள்ளே விளையாடும் விளையாட்டுகளும், வெளியில் விளையாடும் டென்னிஸ் ஆகியவை உண்டு. நாங்கள் எல்லாம் புது அங்கத்தினர்களானதால் மிகவும் பவ்யமாக பேப்பர் படித்துக்கொண்டு மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம்.

முக்கியமான விளையாட்டு ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன். அதுதான் சீட்டாட்டம். அதில் காசு வைத்துத்தான் ஆடுவார்கள். காசு இல்லாவிட்டால் அதில் சுவாரஸ்யம் ஏது? ஆனால் காசை வெளிப்படையாக டேபிளில் வைத்து விளையாடக் கூடாதல்லவா? அதனால் பல வர்ணங்களில் டோகன்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பு. ரொம்ப அதிகப் பணம் வைத்து ஆடமாட்டார்கள். ஆனாலும் ஒரு நாளைக்கு ஐம்பது, நூறு என்று வரும்,  போகும்.

கொஞ்ச நாள் ஆனதும் நாங்களும் டேபிள் டென்னிஸ், கேரம் ஆகிய விளையாட்டுகள் விளையாட ஆரம்பித்தோம். நான் கேரத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றேன். நாங்கள் ஒரு நாலு பேர் ஒரு டீமாகச் சேர்ந்தோம். ஒரு டீம் கேரம் விளையாட ஆரம்பித்தால் அவர்க்ள ஒரு முழுமையான கேம் விளையாடி முடிக்கும் வரை அடுத்தவர்கள் கேரம் விளையாட உரிமை கோர முடியாது. அப்படி ஒரு எழுதப்படாத சட்டம் எங்கள் கிளப்பில் அமுலில் இருந்தது.

                                           Image result for carrom board

கேரம் விளையாட்டு ஆடினவர்களுக்குத் தெரியும். எந்த டீம் முதலில் 29 பாய்ன்ட் எடுக்கிறதோ அந்த டீம்தான் வென்றதாக கருதப்படும். நாங்கள் நால்வரும் மாலை ஆறு மணிக்கே போய் கேரம் போர்டைப் பிடித்துக் கொள்வோம். முதலில் ஒழுங்காக அவரவர் சாமர்த்தியத்திற்கு ஏற்ப விளையாடுவோம். ஏதாவது ஒரு டீம் 25 அல்லது 26 பாய்ன்ட் எடுத்த பிறகு அந்த டீம் அதற்குப் பிறகு வேண்டுமென்றே அடுத்த டீமுக்கு பாய்ன்ட் ஏறும்படியாக விளையாடும்.

இப்படி விளையாடி இரண்டு டீமும் தலா 28 பாய்ன்ட் எடுத்து விடும். அதற்குள் ஏறக்குறைய இரவு 8.45 மணி ஆகிவிடும். அதற்குப் பிறகுதான் கடைசி ஆட்டம். இரு டீமும் போட்டி போட்டுக் கொண்டு ஆடும். ஏதாவதொரு டீம் ஜெயிக்கும். இதற்குள் மணி 9 ஆகியிருக்கும். 9 கணிக்கு கிளப் மூடும் டைம். ஆகவே அன்று வேறு யாரும் கேரம் விளையாட முடியாது.

மறுநாளும் இப்படியே. இப்படியாக இரண்டு வருடம் நாங்கள் மட்டும்தான் கேரம் விளையாட்டை ஏகபோக உரிமையாக்கி விளையாடினோம். வேறு மெம்பர்கள் ஆட்சேபணை தெரிவித்தால் எங்கள் தலைவர் அடாவடியாகப் பேசி அவர்களை அடக்கி விடுவார். "நீங்களும் நேரத்தோடு வந்து கேரம் விளையாட்டை ஆரம்பிக்கவேண்டியதுதானே? இப்போது இவர்கள் நேரத்தோடு வந்து விளையாட்டை ஆரம்பித்து விட்டார்கள். இந்த கேம் முடியட்டும், அடுத்த கேம் நீங்கள் விளையாடலாம்" என்று பேசி அவர்களை அடக்கி விடுவார்.

நாங்கள்தான் எங்கள் டெக்னிக் பிரகாரம் ஆடி கிளப் மூடும் சமயத்தில்தான் கேமை முடிப்பதாச்சே? அப்புறம் எங்கே மற்றவர்கள் விளையாடுவது? இப்படியாக அந்த இரண்டு வருடமும் வேறு யாரும் எங்கள் கிளப்பில் கேரம் விளையாட நாங்கள் விடவில்லை.

இப்படியாக நாங்கள் அட்டுழியம் பண்ணிக்கொண்டு இருக்கும்போது இந்த சீட்டாட்டக்காரர்களுடன் ஒரு மோதல் ஏற்பட்டது. அது என்னவென்று அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.



சனி, 28 மார்ச், 2015

என் அந்தப்புரத்தில் இன்னும் ஒரு ராணி

என் அந்தப்புரத்தில் ஏற்கெனவே பல ராணிகள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். வயதாகி விட்டதால் அவர்களின் எண்ணிக்கை சட்டென்று நினைவிற்கு வருவதில்லை. லேட்டஸ்டாக இப்போது ஒரு ராணி வந்திருக்கிறார்கள்.

ஒல்லியான உருவம். நல்ல வெள்ளை நிறம். பார்க்க துடைத்து வைத்த குத்து விளக்கு போல் இருக்கிறாள். என் மனதிற்கு மிகவும் பிடித்துப் போனது.
                                Image result for Samsung Galaxy tab 4
அவள்தான் சாம்சங்க் கேலக்சி டேப் 4 எனப்படும் அழகி. என் நண்பர் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்து அன்பளிப்பாகக் கொடுத்தார். விலை கேட்டேன்.. சொல்ல மறுத்து விட்டார். அநேகமாக 20000 ரூபாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏறக்குறைய கம்ப்யூட்டரில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இதில் இருக்கின்றன. சின்ன வயசுப் பையன்களுக்கு விளையாட, பொழுது போக்க நல்ல கருவி. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

வெள்ளி, 27 மார்ச், 2015

அக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப்.

                                   Image result for Coimbatore Agricultural College
இங்கிலாந்து நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் எல்லாம் பொழுதுபோக்கு கிளப்கள் இருப்பது பிரசித்தம். மேஜரான ஒவ்வொரு ஆங்கிலேயனும் ஏதாவதொரு கிளப்பில் அங்கத்தினராக இருக்கவேண்டும். இல்லாவிடில் அவனை ஒரு கனவானாக யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். இந்தப் பழக்கம் அனைவரும் அறிந்ததே.

ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றி 200 வருடங்களுக்கு மேலாக ஆண்டு வந்ததை சரித்திரம் கூறும். அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் பெரிய பதவிகளில் எல்லாம் ஆங்கிலேயர்கள்தான் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆகவே அனைத்துப் பெரிய ஊர்களிலும் கணிசமான அளவு ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்.

அவர்கள் தங்கள் கலாச்சாரச் சின்னமான கிளப் கலாச்சாரத்தையும் அவர்கள்இருக்கும் இடங்களில் நிறுவினார்கள். இங்கிலாந்தில் உள்ள இப்படிப்பட்ட கிளப்களைப் பற்றி நான் படித்தவற்றில் இருந்து சில குறிப்புகள் கொடுக்கிறேன். நான் இங்கிலாந்து போனதில்லையானதால் இவைகளைப் பற்றிய நேரடி வர்ணனை கொடுக்க இயலாததற்கு மன்னிக்கவும்.

இந்தக் கிளப்புகளில் பொதுவாக சுகஜீவனம் நடத்தும் இங்கிலாந்து பிரமச்சாரி கனவான்களுக்கு ( Bachelor Gentlemen with independent income - இது தமிழ் தெரியாத இந்தியக் கனவான்களுக்கான மொழி பெயர்ப்பு) ஒரு நல்ல புகலிடம். இங்கு அவர்கள் நாட்கணக்கில் தங்கிக்கொள்ளலாம். இந்தக்கிளப்புகளில் கூடவே மெஸ்சும் இருக்கும். ஆகவே உணவுப்பிரச்சினை இல்லை. செய்தித்தாள்கள், வார, மாத சஞ்சிகைகள் எல்லாம் வரவழைக்கப்பட்டு அங்கத்தினர்கள் படிப்பதற்காக இருக்கும். உடம்புக்கு வருத்தம் தராத விளையாட்டுகள் இருக்கும்.

(உடம்புக்கு வருத்தம் தராத விளையாட்டு - சீட்டாட்டம்தான். அதுவும் பெரிய மனிதர்கள் ஆடுவது "பிரிட்ஜ்" என்று சொல்லப் படுவதுதான். நம்ம ஊர் கனவான்கள் ஆடுவது "ரம்மி" எனப்படுவதாகும். நம்ம ஊர் சேரிக் கனவான்கள் ஆடுவது "மூன்று சீட்டு" அல்லது "மங்காத்தா" எனப்படும் ஆட்டங்கள்)

இப்படியான ஒரு கலாச்சாரத்தில் வளர்ந்த ஆங்கிலேயர்கள் தாங்கள் ஆண்ட இந்தியாவிலும் இந்தக் கலாச்சாரத்தைப் புகுத்தினார்கள். அந்தக் காலத்தில், அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்திய காலத்தில், விவசாயக் கல்லூரியில் நிறைய ஆங்கிலேயர்கள் பணிபுரிந்து வந்தார்கள். அவர்களில் பலரின் உருவப்படங்கள் இன்றைக்கும் கல்லூரியில் "பிரீமேன் ஹால்" என்று அழைக்கப்படும் ஹாலில் தொங்குகின்றன.

                                     Image result for Coimbatore Agricultural College

முன்பு அந்த ஹாலில் கல்லூரி வகுப்புகள் நடக்கும். அதில் வகுப்பு நடத்திய ஒரு பேராசிரிய நண்பருக்கு ஆங்கிலம் சற்றுத் தடுமாற்றம். அவர் மாணவர்களுக்கு அந்தப் படங்களைக் காண்பித்து அவர்களின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, தானும் அது மாதிரி ஒரு நாள் வருவேன் என்று ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது காட்டுத்தீ போல கல்லூரி முழுவதும் ஒரே நாளில் பரவி அது ஒரு பெரிய நகைச்சுவை ஜோக் ஆகி விட்டது.

அவர் என்ன சொன்னார் என்பதை அடுத்த பதிவில் பாருங்கள்.

புதன், 25 மார்ச், 2015

கீரை வடையும் அன்னபூர்ணா ஹோட்டலும்.

                                        Image result for கோவை அன்னபூர்ணா ஓட்டல்
இது ஐம்பது வருடத்திற்கு முந்திய கதை. நான் 1960 களில் விவசாயக் கல்லூரியில் உதவி ஆசிரியனாகப் பணி புரிந்த காலம். நாங்கள் மொத்தம் 6 பேர். இளநிலை விவசாயப் படிப்பு அப்போது 4 வருடத்துப் படிப்பாகும். இப்போதும் அப்படித்தான்.

ஒவ்வொரு வருடத்திலும் 162 மாணவர்கள். இவர்களுக்கு வேதியல் பாடத்தில் செய்முறை வகுப்புகள் எடுப்பதுதான் எங்கள் வேலை. செய்முறை வகுப்புகள் அநேகமாக காலை வேளைகளில்தான் இருக்கும். காலை 7 மணிக்கே வகுப்புகள் ஆரம்பமாகும். 9 மணிக்கு ஒரு பேட்ச் முடிந்து 9.30 க்கு அடுத்த பேட்ச் வரும். இந்த பேட்ச் 11.30 க்கு முடியும். ஒவ்வொரு பேட்சிற்கும் மூன்று ஆசிரியர்கள் வேண்டும்.

இந்த வேலையை நாங்கள் முறை வைத்துக் கொண்டு நிறைவேற்றுவோம். தினமும் வகுப்புகள் உண்டு. காலையில் வகுப்புகள் முடிந்து விடும். பிறகு வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டுத் தூங்கி எழுந்து மாலையில் மூன்று மணிக்குத்தான் ஆபீசுக்கு வருவோம். எல்லோரும் பக்கத்தில் குவாட்டர்சில்தான் இருந்தோம்.

மாலையில் என்ன வேலை என்றால் பசங்களுடைய ரிக்கார்டு நோட்டுகளைத் திருத்துவதுதான். இதை அப்படியே அரட்டை அடித்துக்கொண்டே செய்யும்போது மாலை 4 மணி ஆனால் வயிற்றுக்குள் ஒரு மணி அடிக்கும். அதாவது அதற்கு ஏதாவது சிறுதீனி வேண்டும் என்று அர்த்தம்.

அப்போதுதான் வடகோவையில் சென்ட்ரல் தியேட்டர் என்று ஒன்று புதிதாகக் கட்டியிருந்தார்கள். அங்கு நடந்து கொண்டிருந்த கேன்டீனில் கீரைவடை என்று ஒன்று போடுவார்கள். சாதாரணப் பருப்பு வடை மாவில் ஏதாவது ஒரு கீரையை நன்றாக சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு பிசைந்து வடை சுடுவார்கள். வடை மொறுமொறுவென்று அவ்வளவு ருசியாக இருக்கும்.
விலை கொஞ்சம் ஜாஸ்தி.ஒரு வடை அரை அணா  என்று நினைவு.

ஆறு பேருக்கு ஆளுக்கு நாலு வடை வீதம் 24 வடைக்கு எவ்வளவு ஆகும் பாருங்கள்? 12 அணா, சுளையாக முக்கால் ரூபாய். எங்களுக்கு அப்போது சம்பளமே மாதத்திற்கு 150 ரூபாய்தான். ஆனாலும் இது அத்தியாவசியச் செலவு என்பதால் முறை வைத்துக் கொண்டு (ஆளுக்கு ஒரு நாள்- வாரத்தில் ஆறு நாள்) செய்தோம். இது தவிர ஆறு பேருக்குக் காப்பி. ஒரு காப்பி விலை ஒன்றரை அணா. ஆறு காப்பிக்கு 9 அணா. 24 வடைக்கு 12 அணா. ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 21 ஆணா. அதாவது ஒரு முழு ரூபாயும் ஐந்து அணாவும். அதாவது இன்றைய கணக்கில் ஒரு ரூபாய் முப்பது பைசா.

தினம் ஒருவர் முறை வைத்துச் செலவு செய்வதால் ஒருவருக்கு வாரம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் ஐந்தணா அவ்வளவு பெரிய செலவாகத் தோன்றவில்லை. இது தவிர அவ்வப்போது பெரிய கடை வீதியில் உள்ள "பாம்பே ஆனந்த பவன்" ஓட்டலுக்குப் போகவேண்டி வரும். யாராவது ஒருவர் ஏதாவது ஒரு வாக்குவாதத்தில் சிக்கித் தோற்றுப்போனால் அவர் அன்று மற்றவர்களுக்கு அந்த ஒட்டலில் இட்லி சாம்பார் வாங்கித்தரவேண்டும். எப்படியும் இந்த வைபவம் வாரத்திற்கு ஒரு முறையாவது நடக்கும். அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

 எங்களுக்கு செய்முறை வகுப்புகளில் உதவி செய்வதற்காக "லேப் பாய்" என்று ஒரு கடைநிலை ஊழியர்கள் ஐந்தாறு பேர் உண்டு. மாலையில் இவர்களுக்கும் வகுப்புகள் இல்லாததால் வேறு வேலை இல்லை. இவர்களில் ஒருவனைப் பிடித்து கீரைவடை வாங்கவும் இன்னொருவனைப் பிடித்து காப்பி வாங்கவும் அனுப்புவோம். நான்கு மணிக்கு இவை இரண்டும் வந்து விடும். இவைகளைச் சாப்பிட்டு முடிக்கும் போது ஐந்து மணி ஆகிவிடும். அவ்வளவுதான். கடையைக் கட்டிவிட்டு வீட்டுக்குப் போய் கைகால் கழுவிவிட்டு 6 மணிக்கு ஆபீசர்ஸ் கிளப் போவோம். அந்தக் கதையை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இப்போ இந்தக் கீரைவடையின் மூலத்திற்கு வருவோம். அந்தக் காலத்தில் கோயமுத்தூரில் நூற்பாலைகள் அதிகம். அவைகளைப் போதுவாக நூல்மில்கள் என்று அழைத்துப் பிறகு வெறும் மில் என்றாலே நூல்மில் என்று ஆகிப்போனது. அதிகம் படிக்காத உள்ளூர் பசங்கள் எல்லாம் மில் வேலைக்குத்தான் போவார்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம். நாங்கள் 18 வருடம் படித்து எம்எஸ்சி பட்டம் வாங்கி பெரிய அரசாங்க உத்தியோகம் என்ற பெயரில் வேலை பார்க்க சம்பளம் 150 ரூபாய். ஸ்கூலுக்கே போகாமல் குண்டு விளையாடிக்கொண்டிருந்து விட்டு மில் வேலைக்குப் போகிறவர்களுக்கும் அதே 150 ரூபாய் சம்பளம். அது தவிர தீபாவளிக்கு 6 மாத சம்பளம் போனஸ் தருவார்கள்.

அன்றைக்கு இருந்த பொருளாதார நிலை அப்படி. இன்றைய நிலை எப்படி என்று சொன்னால் எல்லோருடைய வாயும் வயிறும் வெந்து விடும். வேண்டாம், அந்தப் பாவம் எனக்கு வேண்டாம். ஆனாலும் அப்படி மில் வேலைக்கு போய்கொண்டிருந்த சிலர் தாங்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற குறிக்கோளுடன் பற்பல தொழில்கள் செய்து முன்னேறியிருக்கிறார்கள்.

அந்த மாதிரி நாலு பேர் சேர்ந்துதான் இந்த சென்ட்ரல் தியேட்டர் கேன்டீனை குத்தகைக்கு எடுத்து நடத்தினார்கள். அவர்களுடைய அம்மாவிற்கு சமையலில் கைப் பக்குவம் அதிகம். அவர்கள் வழிகாட்டுதலில் இந்தக் கேன்டீன் ஜேஜேவென்று ஓடியது. அவர்கள் போட்ட கீரை வடை கோயமுத்தூர் ஜில்லா முழுவதும் பெயர் பெற்றது.

இப்படியாக அனுபவம் பெற்ற அவர்கள் ஆர்எஸ்புரம் திவான் பகதூர் ரோட்டில் ஒரு கடை வாடகைக்கு எடுத்து சிறியதாக ஒரு ஓட்டல் ஆரம்பித்தார்கள். அவர்களின் முழு கவனமும் விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் தரமாகவும் ருசியாகவும் விலை அதிகமில்லாமலும் இருக்கவேண்டுமென்பதில்தான் இருந்தது. இப்படி ஒரு ஓட்டல் நடந்தால் அது வளர்வதற்குத் தடை ஏது?

அந்த நாலு பேரும் அல்லும் பகலும் உழைத்தார்கள். அந்த ஓட்டல் வளர்ந்தது. சொந்தமாக இடம் வாங்கினார்கள். உள்ளூரில் கிளைகள் போட்டார்கள். எல்லாக் கிளைகளிலும் வியாபாரம் அமோகமாக நடந்தது. வெளியூரிலும் கிளைகள் ஆரம்பித்தார்கள். கோயமுத்தூர் வரும் வெளியூர் ஆட்கள் இந்த ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டால்தான் கௌரவம் என்ற அளவிற்கு இந்த ஓட்டல் பெயர் பெற்றது.

அந்த ஓட்டல்தான் இன்று கோவையில் கோலோச்சி வரும் அன்னபூர்ணா-கௌரிசங்கர் குரூப் ஓட்டல்கள்.
                                  Image result for அன்னபூர்ணா ஓட்டல்