புதன், 26 ஜனவரி, 2011

நான் பார்த்த அரசு தலைமை ஆபீஸ்.



(இந்தப் பதிவு நான் அன்று பார்த்த ஆபீஸ் பற்றியது. இன்று நிலைமை எப்படி என்று தெரியாது)

பல வருடங்களுக்கு முன் சென்னையில் (அன்றைய மெட்ராஸ்) ஒரு தலைமை ஆபீஸுக்குப் போகவேண்டிய வேலை ஒன்று வந்தது. நானும் என்னுடைய அரசு ஊழியன் என்ற பதவி தந்த தைரியத்தில் சென்னைக்கு கிளம்பிப் போனேன். ரூம் எடுத்து காலைக்கடன்களை முடித்து டிபன் சாப்பிட்டு விட்டு சுமார் 9.30 மணிக்கு அந்த ஆபீஸுக்குப் போனேன்.

சென்னையில் கடற்கரை சாலையில் இரண்டு முக்கியமான அரசு வளாகங்கள் உண்டு. ஒன்று கோட்டை. இதுதான் அரசின் கேந்திரஸ்தானம். உள்ளே நுழைவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு. அடுத்தது சேப்பாக்கம். இங்குதான் அரசின் செயல்பாடுகளைச் செய்யும் துறைவாரியான தலைமை அலுவலகங்கள் இருக்கின்றன. இதில் ஒன்றில்தான் எனக்கு ஒரு வேலை இருந்தது.
அன்றைய அரசு அலுவலகங்களின் வேலை நேரம் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை. மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை ஒரு அரை மணி நேரம் லஞ்ச் சாப்பிட எடுத்துக்கொள்ளலாம். இதுதான் ரூல்ஸ். நானும் அரசு ஊழியன் என்பதால் இந்த விபரங்கள் நன்றாகத் தெரியும். ஆகவே அந்த ஆபீசுக்கு 9.30 மணிக்கு கரெக்ட்டாகப் போனேன். ஆபீஸ் திறந்திருந்தது. ஆனால் ஒருவரையும் காணவில்லை. எனக்கு சந்தேகமாகப் போய் விட்டது. இன்றைக்கு ஏதாவது விடுமுறை அறிவித்து விட்டார்களோ என்று. அங்கு அப்போது வந்த ஒருவரைக் கேட்டபோது அப்படியெல்லாம் இன்று விடுமுறை ஒன்றும் இல்லை, எல்லோரும் வருவார்கள், நீங்கள் இப்படி ஒரமாக உட்காருங்கள் என்று சொன்னார்.

நானும் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். 9.30 மணிக்கு கரெக்ட்டாக வந்தவர்கள் ஒருவருமில்லை. 10.00 மணிக்குள் ஒரு 20 பர்சென்ட் ஊழியர்கள், ஏறக்குறைய ரிடைர்டு ஆகப்போகிறவர்கள் வந்தார்கள். 10 மணியிலிருந்து 10.30 மணி வரை இன்னும் ஒரு 20 பர்சென்ட் வந்தார்கள். 10.30 க்கு மேல் 11.30 வரைக்கும் இன்னும் ஒரு 30 பர்சென்ட் வந்தார்கள். இந்த சமயத்தில் 10.30 மணிக்கு முன்னால் வந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் எழுந்து டீ குடிக்க கேன்டீன் போனார்கள். அவர்கள் திரும்பின பிறகு மற்றவர்கள் டீ குடிக்கப் போனார்கள். முதலில் டீ குடித்துவிட்டு வந்தவர்கள் 1 மணிக்கு லஞ்ச் சாப்பிடப்போனார்கள். அவர்கள் போய் அரை மணி நேரம் கழித்து மற்றவர்களும் லஞ்ச்சுக்கு கிளம்பிப்போனார்கள். இப்படியே ஒரு சமயத்திலாவது எல்லோரையும் அவரவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து நான் பார்க்கவில்லை.

இந்த சமயத்தில் நான் பார்க்க வேண்டிய ஆசாமியும் வந்து சேர்ந்தார். அவர் வந்த நேரம் 12 மணி. என்னய்யா இது, 9.30 மணிக்கு வரவேண்டிய ஆபீசுக்கு 12 மணிக்கு வர்ரயே, ஒருத்தரும் கேட்கமாட்டார்களா என்று கேட்டேன். அதற்கு அவர் நான் 9.30 மணிக்கே நேரே கோட்டைக்குப் போய் அங்கு ஒரு பைஃலைப் பார்த்து விட்டு இங்கு வருகிறேன் என்றார். சரி, மற்றவர்கள் எல்லாம் வருவதும் போவதுமாகவே இருக்கிறார்களே, எப்போது சீட்டில் உட்கார்ந்து வேலை பார்ப்பார்கள் என்றேன். உனக்கு சென்னை ஆபீஸ்களின் நடைமுறை தெரியாது. இங்கு யாரும் எப்போ வேண்டுமென்றாலும் வரலாம் போகலாம்யாரும் ஒன்றும் கேட்க முடியாது என்றார்.

அது ஏன் அப்படி என்று கேட்டதற்கு அவர் சொன்ன விளக்கங்கள் எனக்கு மயக்கம் வராத குறைதான். அவர் சொன்னதாவது:

1.   ஆபீஸ் 9.30 க்கு என்றாலும் ஒரு அரை மணி நேரம் லேட்டாய் வரலாம். யாராவது கேட்டால் அந்த ரோட்டில் பந்த், அதனால் பஸ் வேறு சுற்று வழியில் வந்ததால் லேட்டாகி விட்டது என்று சொல்லிவிடலாம். இது சென்னையில் தினசரி மாமூல் ஆதலால் யாரும் ஒன்றும் சொல்லமுடியாது.

2.   ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் லேட்டாய் வருபவர்கள் சொல்வது, “நான் இன்றைக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன்.” அதாவது அரசு ஊழியர்களுக்கு ஏதாவது அவசர வேலை இருந்தால் மேலதிகாரியின் அனுமதி பெற்று, ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம். இந்த சலுகையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

3.   டீ குடிக்க, லஞ்ச் சாப்பிட போவது இந்த இரண்டும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் இந்திய அரசியல் சட்டம் கொடுத்துள்ள பிறப்புரிமை. இதை தட்டிக்கேட்க எந்த மேலதிகாரிக்கும் அதிகாரம் இல்லை. எங்கு சென்றாலும் கேன்டீனுக்குப் போயிருந்தேன் என்று சொல்லி விட்டால் அதற்கு அப்பீலே கிடையாது.

4.   அரைநாள் கழித்து ஆபீஸ் வந்தால் கோட்டையில் ஒரு பைஃலைப் பார்க்கப் போனேன் என்று சொன்னால் அதை யாரும் தட்டிக்கேட்க மாட்டார்கள்.

5.   மாலையில் இப்படி ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுவிட்டு ஒன்றரை மணி முன்பாகவே புறப்பட்டு விடலாம்.

6.   இது எல்லாவற்றிற்கும் மசியவில்லை என்றால் ஒரு காகிதத்தை எடுத்து  அரை நாள் லீவு என்று எழுதிக் கொடுத்து விட்டால் இந்திய ஜனாதிபதியே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இப்படி நிறையச் சொன்னார். இடம் இல்லாததால் எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. அப்புறம் நான் ஒரு கேள்வி கேட்டேன். ஆமாம், எல்லோரும் இப்படியே வரவும் போகவுமாக இருந்தால் வேலை எப்படி நடக்கும் என்றேன். அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்து நீ அரசு ஊழியனாக இருக்க லாயக்கற்றவன். மாலை 5 மணிக்கு மேல் வந்து பார். வேலை எப்படி நடக்கிறது என்று தெரியும் என்றார். எனக்கு ஊர் திரும்ப வேண்டியிருந்ததால் அவர் சொன்ன மாதிரி 5 மணிக்கு மேல் இருந்து அங்கு வேலைகள் எப்படி நடக்கிறது என்று பார்க்க இயலவில்லை.

அப்புறம் ஊர் திரும்பிய பிறகு, விஷயம் தெரிந்த ஒருவரை அணுகி இதைப்பற்றிக் கேட்டேன். அவர் அது அரசாங்க ரகசியம். யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார். உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் எனக்கு மட்டும் மெயில் அனுப்பவும்.

16 கருத்துகள்:

  1. அந்த ரகசியம் எனக்கு தெரியும்....ஆனா சொல்ல மாட்டேன்.
    பேசாம அரசாங்கத்தையே தனியார் துறையிடம் கொடுத்துவிடலாம். :-)

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கே தெரியல எங்களுக்கு எப்படி தெரியும் ??

    பதிலளிநீக்கு
  3. வடுவூர் குமார் said...

    //அந்த ரகசியம் எனக்கு தெரியும்....ஆனா சொல்ல மாட்டேன்.
    பேசாம அரசாங்கத்தையே தனியார் துறையிடம் கொடுத்துவிடலாம். :-)//

    அப்ப இந்த ரகசியமும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே. இப்ப அரசாங்கத்த யார் நடத்துறாங்கன்னு நெனக்கறீங்க, தனியார்தானுங்க.

    பதிலளிநீக்கு
  4. எல் கே said...

    //உங்களுக்கே தெரியல எங்களுக்கு எப்படி தெரியும் ??//

    பால் குடிக்கிற பாப்பா, பாலை மறக்கறப்போதான் இதெல்லாம் தெரியும்?

    பதிலளிநீக்கு
  5. உங்கள் நாட்டுக்கு மட்டுமல்ல,எங்கள் நாட்டுக்கும் இந்தப் பதிவு பொருந்தும், தற்சமயம் கொஞ்சம் மாத்திக்கணும்,முன்
    அறிவித்தல் கொடுத்து விட்டு,இவை எல்லாவற்றையும்,செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  6. இததைத்தான், இதுபோன்ற உண்மைகளைத்தான் சொல்ல இங்கு நீங்கள் எழுதவேண்டும் என்பது. நிறைய பேருக்கு அரசாங்க அலுவலகங்களில் அதுவும் சென்னை போன்ற தலைமை இடங்களில் அரசு அலுவலர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்ற உண்மை நிலை தெரிய வாய்ப்பில்லை. உண்மையில் சென்னையில் இருப்பவருக்கே தெரியாது. நாம் வெறும் அரசியல் வாதிகளை மட்டுமே குற்றம் சொல்லுகிறோம் . அரசு அலுவலர்கள் எப்படி அரசின் வருவாயை சுரண்டி /லஞ்சம்மும் வாங்கி எப்படி தங்களை வளபடுத்திக்கொண்டு வாழ்கிறார்கள் என்பது அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது.பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. இந்த‌க் க‌ல்ச‌ர் எப்ப‌த் தொட‌ங்கிய‌து?
    திமுக‌வுக்கு முன் அல்ல‌து பின்?
    க‌லைஞர் வ‌ந்த‌தும் க‌ட்சி அனுதாபிக‌ளுக்கு
    அதிக இட‌ம் கொடுத்தார் என்ப‌து ஒரு ப‌ழைய‌ செய்தி.

    பதிலளிநீக்கு
  8. //உங்களுக்கே தெரியல எங்களுக்கு எப்படி தெரியும் ?? //

    அதானே...
    அப்ப ஆரம்பிச்சவங்க இன்னும் அப்படியேதான் இருக்காங்க... என்னத்தை சொல்றது.

    பதிலளிநீக்கு
  9. அதெல்லாம் இருக்கட்டும்..அந்த ஆஃபீஸ் அட்ரஸ் குடுங்க.. எனக்கு எதாவது வேலை கிடைக்குதான்னு பார்கக்றேன்..எனக்கு ஒரு ஸ்டூல் குடுத்தாக் கூட போதும்! சமாளிச்சிண்டுடுவேன்!!

    பதிலளிநீக்கு
  10. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    //அதெல்லாம் இருக்கட்டும்..அந்த ஆஃபீஸ் அட்ரஸ் குடுங்க.. எனக்கு எதாவது வேலை கிடைக்குதான்னு பார்கக்றேன்..எனக்கு ஒரு ஸ்டூல் குடுத்தாக் கூட போதும்! சமாளிச்சிண்டுடுவேன்!!//

    அதுக்கெல்லாம் பூர்வ ஜன்மத்துல நெறய புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும். சும்மா கெடைக்குமா சொர்க்கம்?

    பதிலளிநீக்கு
  11. பெரும்பாலான அலுவலங்களில்மாலை ஐந்து மணிக்கும மேல்தான் எந்த குறுக்கீடும் இல்லாமல் வேலை நடக்கும்

    பதிலளிநீக்கு
  12. இது தான் நம் மக்களின் எத்திக்ஸின் அளவு! நாம் இப்படி இருக்கும் வரையில் அரசியல் வாதிகளை சொல்ல நமக்கு எந்த யோக்யதையும் இல்லை! தி மு க வின் பங்கு இதில் அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன். நான் பார்த்தவரையில், பீகார், வெஸ்ட் பெங்காலிலும் இதே லக்ஷணம்தான்!

    பதிலளிநீக்கு
  13. ஏதோ ஒரு காமெடியில படிச்சேன்

    ஒசாமா பின்லேடன் சரியா 10.00 to 11.00 மணிக்கு இந்தியாவில ஒரு அரசு அலுவலகத்தில குண்டு போட்டிருந்தால் உயிர்ச்சேதமே இருந்திருக்காது ஏமாந்து போயிருப்பான்னு

    அது காமெடியெல்லாம் இல்லை உண்மைதான்னு உங்க பதிவு நிருபிச்சிருச்சுங்க

    பதிலளிநீக்கு
  14. அந்த ரகசியம் ஒன்றுமில்லை.. அரசு வேலைக்கு சேருவதே அதற்கு தானே.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு