செவ்வாய், 16 ஏப்ரல், 2013

என்னைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்கலாமா?

"ஆமாம். ..இப்போது உங்களுக்கு கோந்து எதற்கு.?"

என்னுடைய கோந்து பதிவின் பின்னூட்டத்தில் என் நெருங்கிய நண்பர் இந்த மாதிரி கேட்டு விட்டார். அவர் என்னை இந்தக் கேள்வி கேட்டதில் வருத்தமில்லை. ஆனால் அவர் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் இந்தப் பதிவு எழுதுகிறேன்.

மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்று உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றைச் சொல்லுவார்கள். ஆனால் மனிதனுக்கு இந்த அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாலும் சில தேவைகள் இருக்கின்றன என்பதை அறிவாளிகள் அறிவார்கள். (நான் ஒரு அறிவாளி என்பதை எப்படி சூசகமாகச் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.) அவைகள்தான் வாழ்க்கையை முழுமையாக்குகின்றன.

 மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது,  ஆனால் எனக்கு கீழ்க்கண்ட ஐட்டங்கள் எனது டேபிளில் இல்லாவிட்டால் என்னால் உயிர் வாழ முடியாது. அதில் முக்கியமானது கோந்து. மற்றவை பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் அந்தப் பதிவை என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அந்த லிஸ்ட்டை கடைசியில் கொடுத்திருக்கிறேன்.

கோந்து வேண்டியதற்கான காரணங்களை ஒரு பதிவில் சொல்லி முடியாது. ஆனாலும் முயற்சிக்கிறேன்.

மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவன் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களே. கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கையே ஒழுக்கமான வாழ்க்கை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்கள் மேஜையில் நீங்கள் வைத்த பொருட்கள் அப்படி அப்படியே, நீங்கள் வைத்த மாதிரியே இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? நீங்கள்தான் ஒழுக்கத்தின் சிகரம்.

மேஜையில் நேற்று ஆபீசிலிருந்து வந்தவுடன் வைத்த சாவியை, மறுநாள் காலை வீடு முழுவதும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தேடுகிறீர்களா, நீங்கள் கொஞ்சம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் திருத்தவேண்டும்.

நிற்க, கோந்துவிற்கு வருவோம். நீங்கள் ஒரு விடுமுறை நாளில் வீட்டில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் புத்தகம் ஒன்றைப் படிக்க எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கம் பைண்டிங் விட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலானவர்கள் என்ன செய்வார்கள். அந்த குறையைக் கண்டுகொள்ளாமல் படிப்பார்கள்.

என்னால் அப்படி இருக்க முடியாது. அந்த விட்டுப்போன பைண்டிங்கை கோந்து போட்டு ஒட்டி, அது காய்ந்த பிறகுதான் அந்தப் புத்தகத்தைப் படிப்பேன். இது கொஞ்சம் ஓவராகத் தெரிந்தால், நீங்கள் இத்துடன் நிறுத்தி விட்டு வேறு பதிவைப் பார்க்கப் போகலாம்.

அடுத்து நீங்கள் டைரி எழுதும் பழக்கம் உள்ளவரானால் இந்த அனுபவம் உங்களுக்கு வந்திருக்கும். அதாவது ஒரு தேதியில் உங்கள் மனைவி பேரில் உள்ள கோபத்தை நேரில் காட்ட முடியாதாகையால், டைரியில் எழுதி வைப்பீர்கள். அந்தக்கோபம் இரண்டோரு நாளில் தணிந்த பிறகு அந்தப் பக்கத்தை மறைக்க வேண்டி வரும். இல்லாவிட்டால் அது டைம்பாம்ப் மாதிரி என்றைக்காவது ஒரு நாள் உங்கள் சகதர்மிணியில் கண்ணில் பட்டு வெடித்தால் உங்களால் அதை எதிர்கொள்ள முடியாது.

என்ன செய்யலாம்? அந்தப் பக்கத்தை கிழித்தீர்களானால் டைரியின் பைண்டிங்க் நெகிழ்ந்து விடும். இங்குதான் கோந்தின் அவசியம் தெரியும். அந்த வேண்டாத பக்கத்தில் கோந்தைத் தடவி, டைரியை மூடி வைத்து விட்டீர்களானால் இரண்டு நாட்களில் அந்தப் பக்கம் காணாமல் போய்விடும். நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.

தபால் எழுதினால் அந்தக் கவரை ஒட்ட, பிறகு ஸ்டாம்ப் ஒட்ட பலர் சமையலறை நோக்கிப் போவதைப் பார்த்திருக்கிறேன். எதற்கு? நாலு சோற்றுப் பருக்கை வாங்கிக்கொண்டு வந்து கவரையும் ஸ்டாம்ப்பையும் ஒட்டத்தான். இதுவாவது பரவாயில்லை. பலர் அந்தக் கவரையும் ஸ்டாம்ப்பையும் நாக்கால் எச்சில்படுத்தி ஒட்டுவார்கள். அவர்களுக்கெல்லாம் சித்திரகுப்தன் தனி தண்டனை வைத்திருக்கிறான்.

எல்லோரும் கேஸ் உபயோகிக்கிறோம். ஒரு சிலிண்டர் எத்தனை நாள் உபயோகித்தோம் என்பதில் அந்த சிலிண்டரை மாற்றும்போது ஒரு வாக்குவாதம் நடக்கும். புது சிலிண்டரை மாற்றும்பொழுது தினக் கேலண்டரில் இருந்து அன்றைய தேதி தாளைக் கிழித்து சிலிண்டரில் கோந்து போட்டு ஒட்டிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது.

கடிகாரங்களில் செல் மாற்றும்போது, இப்போதுதானே மாற்றினேன், அதற்குள் தீர்ந்துவிட்டதா என்று புலம்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். புது செல் போடும்போது ஒரு சிறிய பேப்பரில் அந்த தேதியை எழுதி அந்த செல்லில் ஒட்டிவிட்டால் போதுமே. எவ்வளவு நாள் உழைத்தது என்று செல் மாற்றும்போது சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

லைப்ரரியில் இருந்து லவட்டிக்கொண்டு வந்த புத்தகம், நண்பர்களிடமிருந்து வாங்கி வந்த புத்தகம் இவை எல்லாம் நம்முடையதே. இருந்தாலும் அதில் லைப்ரரி சீல் அல்லது நண்பர்களின் கையெழுத்து இருக்கும். அவற்றின் மேல் உங்கள் பெயர் எழுதின ஒரு துண்டுக் காகிதத்தை கோந்து போட்டு ஒட்டி விட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் உங்கள் நணபர் எப்பொழுதாவது உங்கள் வீட்டுக்கு வந்து அந்தப் புத்தகங்களைப் பார்த்தால் திருப்பி எடுத்துக்கொண்டு போய்விடுவார்.

இப்படி எவ்வளவோ விஷயங்களுக்கு உபயோகப்படும் கோந்தை என் நண்பர் துச்சமாக எடை போட்டுவிட்டாரே என்று நினைக்கும்போது நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது. கோந்து இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கக் கூட என்னால் இயலவில்லை.

ஒருவர் வாழ்க்கையில் இன்றியமையாதவை:

பென்சில்
பென்சில் ஷார்ப்னர்
ரப்பர்
குண்டூசி
ஜெம் கிளிப்
பரீட்சை கிளிப்
செல்லோடேப் + டிஸ்பென்சர்
கலர் பென்சில்கள்
துண்டுக் காகித பேட்கள்
டபுள் பன்ச்
சிங்கிள் பன்ஞ்
பேப்பர் கத்தி
சாதா கத்தி
கத்தரிக்கோல்
டாகுமென்ட் பைல்கள்
பல கலர்களில் பால்பாயின்ட் பேனா
பவுன்டன் பேனா
பவுன்டன் பேனா இங்க்
ரப்பர் ஸ்டாம்ப் பேட்
   "              "  "         இங்க்
ஊசி, நூல் - பல சைஸ்களில்
ரப்பர் பேண்ட்
காது குடையும் பட்

16 கருத்துகள்:

  1. உண்மைங்க அய்யா எல்லாமே அவசியமானதுதான்

    பதிலளிநீக்கு
  2. இன்ட்லி, தமிழ் 10 போன்றவற்றில் இருந்த பிரச்னை தீர்ந்து விட்டதா?

    டைரியை அப்படி ஓட்டினால் என் டைரி எல்லாப் பக்கமும் ஒட்டித்தான் இருக்கும்! அதனால்தான் நான் எழுதுவதே இல்லை! :))

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. எத்தனை பயன்கள்...!!!

    சூசகமாக சொல்வதில் மட்டுமில்லை... பகிர்ந்து கொள்வதிலும்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  5. கோந்துவின் முழு உபயோகத்தை மிக அருமையான விளக்கியுள்ளீர்கள். நீங்கள் இன்றியமையாதவை எனக் குறிப்பிட்டுள்ளவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனிப் பதிவு போடலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பத்தான் இந்தப் பதிவை நாலு பேர் பார்க்கிறார்கள். எல்லவற்றையும் பற்றி எழுதினால் அந்த நாலு பேரும் ஓடி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

      நீக்கு

  6. ஏதோ யதார்த்தமாக ஒரு கேள்வி கேட்கப் போனது ஒரு பதிவுக்கு விஷய தானமாகி விட்டது. எல்லாவற்றையும்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் சில நேரங்களில் வாழ்வை ரசிக்க முடியாமல் போகலாம். ஐயா இதுவும் ஒரு யதார்த்தமான பகிர்வே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிற்கு விஷயம் கிடைப்பதில் உள்ள கஷடங்கள் பதிவராகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். எப்படியோ உங்கள் புண்ணியத்தில் ஒரு பதிவு தேற்றி விட்டேன். மிக்க நன்றி.

      நீக்கு
  7. அன்றாட் உபயோகத்தை கோந்துபோட்டு ஒட்டிவிட்டதற்கு பாராட்டுக்கள்..

    இனி கோந்து எடுக்கும் போதெல்லாம் இந்தப்திவு நினைவில் ஒட்டிக்கொள்ளும் ..

    பதிலளிநீக்கு
  8. பயங்கரமான ஆயுதங்களா இருக்கு! யாருப்பா அங்க போலீசுக்கு போன் போடு.

    பதிலளிநீக்கு
  9. அந்த வேண்டாத பக்கத்தில் கோந்தைத் தடவி, டைரியை மூடி வைத்து விட்டீர்களானால் இரண்டு நாட்களில் அந்தப் பக்கம் காணாமல் போய்விடும்.\\ இவ்வளவு கஷ்டம் ஏன்சார்?!! நண்பன் படத்தில சொன்ன மாதிரி இந்த மாதிரி வேண்டாததை மட்டும் பென்சிலில் எழுதுங்க, எப்ப வேணுமினாலும் ரப்பர் வச்சு அழிச்சுக்கலாம்!!

    கடன் வாங்கின புக்கை மறக்காம திருப்பி குடுங்கன்னு எங்களுக்கு அறிவுரை சொல்லி திருத்துவீங்கன்னு எதிர் பார்த்தேன்...:(( நானும் புக்கை அடிக்கலாம் என நினைப்பேன். நமக்கு முன்னா அந்த புத்தகத்தை லைப்ரரியில் இருந்து எடுத்தவர் நினைத்திருந்தால் இன்றைக்கு அந்த நல்ல புத்தகம் எனக்கு படிக்க கிடைத்திருக்குமா?- என்று நினைப்பு வந்து அதை தடுத்துவிடும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா ஒரு தமாசுக்காக எழுதினதுதானுங்க அது. இருந்தாலும் தவறுதான். மன்னிக்கவேண்டுகிறேன்.

      நீக்கு
  10. /ஒருவர் வாழ்க்கையில் இன்றியமையாதவை:/
    இவற்றை விட்டுவிட்டீர்களே
    stapler and staples
    (Self adhesive)Computer address Labels (different sizes)
    PostIt Pads
    Marker Pens
    Highlighters

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்க, இவ்வளவு முக்கியமானவற்றையெல்லாம் தவறவிட்டுவிட்டேன். கோந்தப் பற்றியே மனம் சிந்தித்துக்கொண்டிருந்ததால் மற்றவை கவனத்திற்கு வரவில்லை. இந்த ஐட்டங்களெல்லாம் கண் முன்னாலேயே இருக்கின்றன. ஆனால் நினவிற்கு வரவில்லை.

      நீக்கு