புதன், 16 ஜூலை, 2014

அத்தியாவசிய உணவு பகுப்புகளும் அவற்றிலுள்ள உண்மைகளும்.


இது ஒரு தொடர் பதிவு. நாம் உண்ணும் உணவில் உள்ள தத்துவங்களை எளிமையாக விளக்க முனைகிறேன். விளக்கம் வேண்டுபவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் விளக்குகிறேன்.

மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். அவனுடைய உடல் பராமரிப்புக்கும் அவன் வேலை செய்ய சக்தி கிடைக்கவும் உணவு பயன்படுகிறது. ஆனால் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவைகளின் வகைகள் யாவை என்று உணர்ந்து நாம் சாப்பிடுவதில்லை. வயிறு நிறைந்து பசி தீரவேண்டும் என்பதே சாப்பிடுபவரின் குறிக்கோளாக இருக்கிறது.

அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. விளம்பரங்களில் சொல்லப்படும் உணவுக் கருத்துகள் யாவும் வியாபாரத்திற்காக சொல்லப் படுபவை. அவைகளில் உண்மை இருக்கிறது. ஆனால் உண்மையின் அளவு 1 சதம் இருக்கலாம். யாராவது கேஸ் போட்டால் கோர்ட்டில் சொல்வதற்காக இதை வைத்திருக்கிறார்கள். ஆகவே விளம்பரங்களை முழுமையாக நம்பாதீர்கள்.

உணவுகளில் மனிதனுக்குத் தேவைப்பட்ட அத்தியாவசியச் சத்துகள் எவையென்றால்:

1. மாவுச்சத்து. 

இதுதான் மனிதனுக்கு வேலை செய்வதற்கான சக்தியைக் கொடுக்கிறது.

உதாரணங்கள்:

 *  அரிசி  * கோதுமை  *  ராகி  * சோளம் முதலானவை.

இவைகளில் இரண்டு வகை இருக்கிறது.

ஒன்று - மென்மையானவை.

இரண்டு - மென்மையில்லாதவை.

அரிசியில் கைக்குத்தலரிசி மென்மையில்லாதது. ஆனால் அதில் மனிதனுக்கு தேவையான சத்துகள் வீணாகாமல் அப்படியே இருக்கின்றன. அதை இயந்திரத்தில் கொடுத்து பல முறை மேல் தோலை உரித்து (தோல் உரிப்பது என்பது இதுதான்) வெறும் சக்கையான உள்புற அரிசியாக்கி கிடைப்பது மென்மையான அரிசி.

கடைகளில் அரிசி வாங்கும்போது நன்கு வெண்மையாக இருப்பதைத்தான் வாங்குகிறோமே தவிர அதன் சத்துகளின் தரத்தை நாம் பார்ப்பதில்லை. இன்றைய நாட்களில் சிறுவர்களுக்குக் கூட நீரிழிவு நோய் வருவது இதனால்தான்.

காரணம் என்னவென்றால் இத்தகைய வெண்மைப்படுத்தப்பட்ட அரிசி ரகங்களில் மாவுச்சத்தைத் தவிர மற்ற சத்துக்கள் எதுவும் இல்லை. இத்தகைய அரிசி உணவு எளிதாக ஜீரணம் ஆகி விடும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு இதுதான். ஆனால் கடின உடல் உழைப்பாளிகளுக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கும் இது தீமையே விளைவிக்கும்.

அதே போல் நன்கு சுத்தம் செய்யப்பட்ட கோதுமை மாவு, மைதா மாவு ஆகியவைகளும் தரம் குறைந்தவைகளே. ஆனால் விளம்பரங்களில் இத்தகைய சுத்தம் செய்து, நல்ல சத்துக்களை நீக்கிய, பொருட்களுக்கு அதிக விளம்பரம் செய்து அதன் விலையை ஏற்றுகிறார்கள். சரி, இனி நாம் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு நிச்சயம் போக முடியாது. இப்போது இந்த சிக்கலிலிருந்து விடுபடுவதைப் பற்றி யோசிப்போம்.

இந்த மாவுச்சத்துதான் மனித உழைப்பிற்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. அதனால் இதைத் தவிர்க்க முடியாது. ஒரு கிராம் மாவுச்சத்து நான்கு கலோரி சக்தியைக் கொடுக்கிறது. ஒரு கிலோ அரிசி 50 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு கிராம் அரிசி  ஐந்து பைசாதான் ஆகிறது. ஐந்து பைசாவில் நான்கு கலோரி சக்தி கிடைக்கிறது. ஏறக்குறைய ஒரு கலோரிக்கு ஒரு பைசாதன் ஆகிறது. மனிதனின் உணவில் மிகவும் சலீசான உணவு இதுதான். அதனால்தான் இத்தகைய உணவுகளை வசதி குறைந்தவர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள்.

இந்த மாவுச் சத்து உடலுக்குள் போய் எப்படி சக்தியாக மாற்றமடைகிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

9 கருத்துகள்:

  1. // (தோல் உரிப்பது என்பது இதுதான்)//
    கருத்தார்ந்த தலைப்பில் பதிவிடும்போது கூட நகைச்சுவையாக எழுத உங்களால்தான் முடியும். நிச்சயம் வேளாண் வேதியல் பாடம் நடத்தும்போது நகைச்சுவையாக பாடம் எடுத்திருப்பீர்கள். தங்களிடம் படித்த மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

    பதிலளிநீக்கு
  2. ஒரு நீண்ட வகுப்புக்குத் தயார்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பயனுள்ள தகவல்கள் ஐயா அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    அறிமுகம் செய்தவர்-காவியகவி


    பார்வையிடமுகவரி-வலைச்சரம்


    அறிமுகம் செய்த திகதி-25.07.2014

    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    பதிலளிநீக்கு