திங்கள், 27 நவம்பர், 2017

27 - தற்கொலை செய்வது எப்படி?

                                                         Image result for தற்கொலை செய்து கொள்வது எப்படி
தற்சமயம் செய்தித் தாள்களில் தற்கொலைச் செய்திகள் அதிகமாக வருகின்றன. சாதாரண, அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஒரு ஆசிரியை மாணவிகளைத் திட்டினார் என்பதற்காக நான்கு மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கிறார்கள். புருஷனுடன் சண்டை போட்டு விட்டு குழந்தைகளுடன் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பெற்றோர் செலவிற்கு காசு கொடுக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம். தான் விரும்பிய படிப்பில் சேர்க்கவில்லை என்பதற்காக என் உறவினர் பையன் உயிரை மாய்த்துக்கொண்டான்.

ஏன் இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரணப் பிரச்சினைகளுக்கு மனமொடிந்து போகிறார்கள் என்று புரியவில்லை. இவர்களின் வளர்ப்பு முறையில் ஏதாவது கோளாறு இருக்கிறதா? அல்லது இவர்கள் வாழும் சமுதாய சூழ்நிலை இவர்களைப் புறக்கணிக்கிறதா?

எனக்கு ஒன்று புலனாகிறது. அதாவது இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கும் வளர்ந்தவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி உண்டாகியிருக்கிறது. இன்றைய குடும்பம் ஒரு தாய் தகப்பன் ஒரு பிள்ளை என்பதாக இருக்கிறது. வளரும் பிள்ளைகளுக்கு வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவ பெற்றோர்களுக்கு நேரமில்லை.

எந்நேரமும் டிவி, சினிமாக்களைப் பார்த்துக்கொண்டு குழந்தைகளின் வளர்ப்பில் அக்கறை காட்டுவதில்லை. பணக்காரர்களின் வீட்டில் மட்டுமல்ல, நடுத்தர மக்களின் வீட்டிலும் இப்படித்தான் நடக்கிறது. வாழ்க்கையைச் சந்திக்க வேண்டிய மன தைரியத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையிலிருந்து பெற்றோர்கள் தவறி விடுகிறார்கள் என்று படுகிறது.

படிப்பு என்பது வாழ்க்கையைப் புரிந்து கொள்வது என்பது போய் மார்க் வாங்குவதற்கு மட்டும் என்று ஆகிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு நல்ல மார்க் வாங்குவதுதான் வாழ்க்கை என்று ஆகி விட்டது.  அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவதோ பழகுவதோ அரிதாகி விட்டது. உலகம் என்றால் படிப்பும் மார்க்கும் என்று ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய மனத்துணிவு இல்லை.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்தப் பிரச்சினையை ஆழ்ந்து சிந்தித்து தீர்வு காணாவிட்டால் எதிர்கால சமுதாயம் மனத்துணிவற்ற ஒரு சமுதாயமாக மாறிவிடும்.

8 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு ஐயா இன்றைய உண்மை நிலை.

    பதிலளிநீக்கு
  2. சார்.. இதுக்கு ரெண்டு காரணம்தான் எனக்குத் தோணுது.
    1. பெற்றோர்கள் ஓரளவு சுயநலமாயிட்டாங்க. ஆபீஸ் போயிட்டு வந்தால் வீட்டுச் செய்திகளைக் கேட்க மனம் இல்லை. தொலைக்காட்சியில் தங்கள் டென்ஷனைக் குறைக்க நினைக்கிறார்கள். அதுனால அவங்க, பசங்க தங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்னு நினைக்கறாங்க.
    2. பசங்க.. உறவு முறைகளை விட, இணையத்தை (ஸ்மார்ட் போன் போன்றவை) மிகவும் மதித்து நேரத்தைச் செலவழிக்கிறார்கள். கற்பனை உலகத்தில் இருக்காங்க.

    'தற்கொலை' என்பது என்ன? பிரச்சனையை FACE பண்ண முடியாத கோழைகள் எடுக்கின்ற முடிவு. பெற்றோர், ஆசிரியர்களுடன் உறவைப் பேணி, பசங்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்தக் காலத்தில் நேரம் செலவழிக்கறதில்லை. வெறும்ன காசைக் கட்டிட்டோம், அவங்களா, ஒலிம்பிக் லெவலுக்கு வந்துடுவாங்கன்னு பெற்றோர்கள் நினைப்பதுதான் பிரச்சனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாய்ன்டப் புடிச்சிட்டீங்க. நீங்க சொல்றதுதான் நடக்குது.

      நீக்கு
  3. தூங்கினாய் கனாக் கண்டாய் வாழ்க்கை இன்பமயமாயிருந்தது விழித்துக் கொண்டாய் அதுவே ஒருகடமைக் கடலாகத் தெரிந்தது எப்போதோ படித்ததுஇப்போது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  4. தமிழகத்தில் முக்கியம் கொண்ட ஒரு பிரச்சனை பற்றி எழுதியுள்ளீர்கள்.
    படிப்பு என்பது வாழ்க்கையைப் புரிந்து கொள்வது என்பது போய் மார்க் வாங்குவதற்கு மட்டும் என்று ஆகிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு நல்ல மார்க் வாங்குவதுதான் வாழ்க்கை என்று ஆகி விட்டது.
    உண்மை.சரியான பதிலையே நீங்க தெரிவித்துள்ளீர்கள்.
    பிள்ளைகளை உசுப்பேத்தி விடுகிறார்கள் தமிழக பெற்றோர், பிள்ளைகளோ பாதிக்கபட்ட அப்பாவிகள்.

    பதிலளிநீக்கு
  5. உண்மை முடிவு காண வேண்டிய நிலையில் தான் இன்று உள்ளோம்

    பதிலளிநீக்கு
  6. முன்போல பெற்றோரும் கவனிப்பதில்லை. ஆசிரியர்களின் நிலையும் அப்படியே. மாணவர்கள் நெறிப்படுத்த இயலா நிலைக்கு தம்மை ஆட்படுத்திக்கொள்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  7. குழந்தைகளுக்கு வெற்றியைப் பற்றி மட்டுமே போதிக்காமல் தோல்வியைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தால் நல்லது. குழந்தைகள் தோல்வியைச் சந்திக்க பயப்படுகிறார்கள்.

    பதிலளிநீக்கு