வியாழன், 19 ஜனவரி, 2012

பதிவுலகத்தின் சமீபத்திய சாபக்கேடு



பதிவுலகத்திற்குள் காலடி எடுத்துவைக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் ஒருவித எதிர்பார்ப்புடன் வருகிறார்கள். தங்கள் எழுத்துக்கு உண்டான ஒரு கௌரவம் கிடைக்கும் என்று நம்பி வருகிறார்கள். ஆனால் நடப்பதென்னவோ அவர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறது.

பொதுவாக பதிவர்கள் எழுதும் சமாசாரங்கள் அவரவர்களுடைய தினசரி வாழ்க்கையை ஒட்டியேதான் இருக்கும். ஆன்மீகம், சினிமா, வாழ்க்கைச் சம்பவங்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாக அமைகின்றன. சிலர் கவிதை ஒன்றே எழுதுவார்கள். இந்தக் கவிதைகளில் பெரும்பாலும் உரைநடையை கவிதை மாதிரி சந்தி பிரித்துப் போடுவதுதான் நடக்கிறது. கவிதை நயத்தோடு இருக்கும் கவிதைகள் அரிது.  ஈழப்பதிவர்களுக்கு வன்னிப் போராட்டமே முக்கிய கருப்பொருள்.


அபூர்வமாக அரசியல் அல்லது சமுதாயப் பிரச்சினைகள் பற்றி ஒரு சிலர் ஆழமாக எழுதுவது உண்டு. ஆனால் அவை மிகவும் நீளமாக இருந்து விடுவதால் படிப்பவர்கள் குறைவு. மற்ற பதிவுகளையும் படிப்பவர்கள் பல காரணங்களினால் குறைந்துகொண்டே வருகிறார்கள். காரணம் என்னவென்று பார்த்தால், நல்ல கருத்துகளைக் கொண்ட பதிவுகள் குறைந்துகொண்டே போகின்றன.


இதைப் பற்றி நான் யோசித்ததில் சில உண்மைகள் புலனாகின. நல்ல பதிவுகள் எழுதிய சீனியர் பதிவர்கள் இன்று பதிவு எழுதுவதில்லை. பதிவுலகை விட்டே ஏறக்குறைய விலகி விட்ட நிலையில் இருக்கிறார்கள். புதிய பதிவர்களும் சில மாதங்கள் பதிவு எழுதிய பின் பதிவுலகம் சலிப்பூட்டுகிறது. அதனால் பதிவுலகத்தை விட்டு விலகி விடுகிறார்கள். இதற்கு பல காரணங்களைக் கூறலாம்.


முதல் காரணம் நல்ல எழுத்துகளுக்கு ஆதரவு இல்லை. பின்னூட்டம் இடுபவர்கள் பதிவின் நல்ல கருத்துகளுக்காகவோ அல்லது விவாதிக்கும்  பொருளுக்காகவோ பின்னூட்டம் இடுவது இல்லை. தங்களுக்குப் பிடித்த பதிவுகளுக்கே/பதிவர்களுக்கே பின்னூட்டமிடுகிறார்கள். மொக்கைப் பதிவு என்று சொல்லப்படுபவைகளுக்கு பதிவு இட்டு சில மணி நேரத்திலேயே நூறு பின்னூட்டங்களுக்கு மேல் இடப்படுகின்றன. அவைகளே திரட்டிகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றன.


இத்தகைய நிலை தொடர்வதால் புதிய, பழைய பதிவர்களின் ஆர்வம் குறைந்து போகின்றது. வருங்காலத்தில் பதிவுலகம் ஆதரவு இல்லாமல் மங்கிப்போகும். இது காலத்தின் கோலம். மாற்று வழிகள் ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
முகநூல், டிவிட்டர் போன்றவை பதிவுலகத்தைவிட சுவையாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். எனக்கு நேரடி அனுபவம் இல்லை. பல பதிவர்கள் அந்த மாதிரி தளங்களுக்குப் போய்விட்டதாக ஒரு தகவல்.


பின்னூட்டங்கள், திரட்டிகளின் ரேங்க்குகள் இவைகளை மட்டும் நினைத்து பதிவு போடுபவர்களுக்கு இனி இங்கு இடம் இருக்காது. அப்படி பின்னூட்டங்கள், ரேங்குகள் கிடைக்கும் பதிவர்கள் மட்டும்தான் இனிமேல் பதிவுலகில் இருப்பார்கள். அவர்களின் பதிவுகளும் மொக்கையாகத்தான் இருக்கும். நானும் இந்த கால சுழற்சியில் விதிவிலக்கல்ல.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

நம் எஜமானன் யார்? நம் மனதா அல்லது உடலா?


இந்தக் கேள்வி அபத்தமானது என்று பலரும் நினைக்கக் கூடும். குறிப்பாக இளைஞர்கள் அவ்வாறு நினைப்பார்கள். வயதானவர்கள் கூட மனது சரியாக இருந்தால் போதும், உடல் அதனுடன் ஒத்துழைக்கும் என்று கூறிக்கொண்டு தங்கள் வயதுக்கு ஒவ்வாத செயல்களை செய்வார்கள்.

நான் என் அனுபவத்தில் கண்டது என்னவென்றால், மனிதனின் உடல் இரும்பால் ஆனது இல்லை. இரும்பிற்கே ஒரு காலத்திற்குப் பிறகு சோர்வு வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். Metal fatique பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அப்படியிருக்க உடல் அங்ககப் பொருட்களால் ஆனது. அது வயதினால் மூப்படைவது இயற்கையே. ஆனால் பலர் இதைத் தடுக்கலாம், ஒழுங்கான பழக்கங்களினாலும் யோகாசனம் காயகல்பம் போன்ற உடல் பயிற்சியினாலும், உடல் மூப்படைவதை தள்ளிப்போடலாம் என்று சொல்கிறார்கள்.

என்ன செய்தாலும் ஒரு கால கட்டத்தில் உடல் சோர்வு அடையத்தான் செய்யும். ஆனால் மனதோ இன்னும் இளமையாக இருக்கும். நான் 80 வயது இளைஞன் என்று சிலர் சொல்லிக் கொள்வார்கள். வயதானவர்களுக்கு இயற்கையாக வரும் சலிப்பையும் சோர்வையும் போக்க இவ்வாறான கூற்றுகள் பலராலும் சொல்லப்படுகின்றன.

ஆனால் உண்மை வேறுவிதமானது. வயதானபிறகு உடலின் இயக்கங்கள் முறைந்து போகின்றன. நம்மை நாமே எவ்வளவு நாட்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியும்? நம் உடல் நிலையை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நம் செயல்களைச் செய்வோமேயானால் உடல் அதற்கு ஒத்துழைக்கும்.

நாம் சிறு வயதில் செய்த செயல்களை மனதில் வைத்துக்கொண்டு என்னால் செய்ய முடியும் என்று வீம்புக்காக செயல்களை செய்யும்போது உடல் ஒத்துழைக்காது. உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ மனைக்குப் போக நேரிடும்.

என் நண்பர் ஒருவர் இருதய பை-பாஸ் ஆபரேஷன் செய்தவர் தன் காரில் தானே ஓட்டிக்கொண்டு 300 கி.மீ. தூரத்திலுள்ள நன் சொந்த ஊருக்கப் போனார். இவ்வாறு அவர் பல முறை சென்றிருக்கிறார். ஆனால் இந்த முறை உடல் தலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேரவேண்டியதாகி விட்டது. எல்லா பரிசோதனைகளும் முடிந்து டாக்டர்கள் சொன்னது அவர் தன் வயதிற்கு மீறிய செயல் செய்ததுதான் இந்த உடல் நலக்குறைவுக்கு காரணம்.

நாம் தமக்கு வயதாகிவிட்டது என்பதை மறக்கிறோம் அல்லது மறந்துவிட ஆசைப்படுகிறோம். மற்றவர்கள் முன்னால் நாம் இளமையாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம். இந்த ஆசை தேவையற்றது. பல சமயங்களில் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது.

இதை மூத்தவர்கள் உணர்ந்து அதற்குத் தக்கவாறு நடந்து கொண்டால் இன்னும் பல ஆண்டுகள் நலமாக வாழலாம்.




சனி, 14 ஜனவரி, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கங்கள்.


நிஜமா நாளைக்குத்தான் பொங்கல். இன்றைக்கு போகி. இது தமிழர் பண்டிகையா இல்லையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். இன்று சங்கராந்திப் பொங்கல் என்று ஒன்று வைப்பார்கள். மேல் விபரம் வேண்டுபவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரியின் தளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.

நான் சொல்ல வந்தது என்னவென்றால் இன்று கிராமங்களில் ஊருக்கு வெளியே சொக்கப்பனை கொளுத்துவார்கள். இது என்னவோ சிறுவர்களின் விளையாட்டு என்று பலர் கருதினாலும் இதில் உள்ள தத்துவத்தை எல்லோரும் புரிந்து கொண்டால் நன்மை பயக்கும்.

சொக்கப்பனையில் வேண்டாத பொருட்களை எல்லாம் போட்டு எரிப்பார்கள். இது ஒருவகையில் வீட்டை சுத்தம் செய்யும் காரியம். இதனுடன் கூடவே மனிதர்கள் தங்கள் மனதில் சேர்ந்திருக்கும் வேண்டாத எண்ணங்களையும் அந்த சொக்கப்பனையில் போட்டு எரித்து விட்டால் நாடு நலம் பெறும்.

என்னுடைய ஆசைக் கனவு இது.


வெள்ளி, 13 ஜனவரி, 2012

பாதி கிணறு தாண்டினால் போதுமா?



சிலரிடம் ஏதாவது ஒரு பொறுப்பான வேலையை ஒப்படைத்துவிட்டு சிலநாள் கழித்து அதைப் பற்றிக் கேட்டால்முக்கால்வாசி முடிஞ்சிட்டுதுங்கஎன்ற பதில் வரும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர் அந்த வேலையைப் பற்றி இதுவரையிலும் எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம்.

அந்த வேலை நடக்கவேண்டுமென்றால் அதை நீங்களே செய்து முடிப்பது உத்தமம். ஒரு வேலை செய்ய ஆரம்பித்தால் அதை முழுவதும் செய்து முடிப்பவனே செயல் வீரன். முக்கால்வாசி முடிந்தது, முக்காலே மூணு வீசம் முடிந்தது என்று சொல்வதெல்லாம் கவைக்குதவாது.

கிணற்றை தாண்டுவதென்றால் முழுவதும் தாண்டினால்தான் கிணறு தாண்டியதாக அர்த்தம். 99 % தாண்டிவிட்டேன் என்றாலும் கூட அதனால் பலன் இல்லை. கிணற்றுக்குள்தான் விழவேண்டிவரும். ஆகவே எந்த வேலை செய்தாலும் அதை முழுமையாக செய்து முடித்தால்தான் விரும்பிய பலன் கிடைக்கும்


புதன், 11 ஜனவரி, 2012

குட்டையர்களே அழகானவர்கள்


மனிதர்களில் எப்படியோ, மரங்களில் குட்டை மரங்கள் எப்போதும் கவனத்தை ஈர்க்கும். இந்த மாதம் 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை கோயமுத்தூர் வேளாண்மைப் பல்கலைக் கழக தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த குட்டை மரங்களைப் பாருங்கள்.








































இந்த மாதிரி மரங்களை சித்திரவதை செய்யலாமா? அது 
கொடுமையல்லவா? என்று சிலர் சிந்திக்கக் கூடும்.


அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது.


1. பச்சிளம் பாலகர்களை படிப்பு என்கிற போர்வையில் சித்திரவதை 
நடக்கிறதல்லவா?


2. வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து அவர்களை 
தனிமைப் படுத்துவது கொடுமையல்லவா?


3. ஒரு பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டு வந்த பிறகு
வரதட்சிணை, சீர் வரிசைகளுக்காக கொடுமைப் படுத்தவில்லையா?


4. நம் உணவிற்காக எத்தனை உயிர்களைக் கதறக் கதறக் 
கொல்லுகிறோம். அது சித்திரவதையல்லவா?


செடி கொடிகளுக்கு ஒரு உணர்வு மட்டுமே இருக்கிறது. அதனால்தான் 
அவைகளை நாம் நம் உணவுக்காக பயிர் செய்து பின்பு அவைகளைக் 
கொன்று உண்ணுகிறோம்.


இது வெறும் வீண் விவாதத்திற்காக சொல்வது என்று நீங்கள்
கருதினாலும் அதை நான் தவறென்று கொள்ளமாட்டேன். உங்கள் 
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.  





செவ்வாய், 10 ஜனவரி, 2012

அதிசயம் ஆனால் உண்மை

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரூ. 5 1/2 கோடி பரிசு விழுந்ததாகக் கூறி நூதன மோசடி. என்ஜினீயரிங்க் மாணவர் ரூ.5 லட்சம் பறி கொடுத்தார். தினத்தந்தி செய்தி 10-1-2012.

இதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய ஒரு திட்டம். அதன் விளம்பரத்தை தொடர்ந்து பார்க்கவும்.

அதிசயம் ஆனால் உண்மை.

தமிழ் நாட்டின் செல்போன் உபயோகிப்பாளர்களே. அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக்கதவை தட்டுகிறது. விட்டு விடாதீர்கள்.

ஒரு தென் ஆப்பிரிக்க வைர சுரங்க அதிபர் தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களை தமிழ்நாட்டு செல்போன் உபயோகிப்பாளர்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.

உங்கள் செல்பொன் நம்பரில் இரண்டு தடவை பூஜ்யம் இருக்கிறதா? நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு 10 லட்சம் பரிசு காத்திருக்கிறது.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இதுதான். உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பர் மற்றும் உங்கள் ரேசன் கார்டு காப்பியுடன் வருகிற 11-1-11 ந் தேதி சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வெயிட்டிங்க் ஹாலில் காத்திருக்கவும். உங்களை அடையாளம் காண்பதற்காக கருப்புச் சட்டையும் வெள்ளை பேன்ட்டும் போட்டுக்கொண்டு வரவும்.

உங்கள் பரிசுத்தொகை அங்கேயே ரொக்கமாக கொடுக்கப்படும். அதை கொண்டு போகத் தேவையான அளவு பைகளை நீங்களே கொண்டு வரவும். கம்பெனியின் நிர்வாகச் செலவுகளுக்காக ஒரு 10000 ரூபாய் கொடுக்க வேண்டும்.

முந்துங்கள். அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் கதவைத் தட்டும். தவறவிடாதீர்கள்.

இந்தக் கம்பெனியில் கூட்டு சேர விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.



திங்கள், 9 ஜனவரி, 2012

நிறைவேற முடியாத இரண்டு கனவுகள்.



சிறு வயதிலிருந்தே புது இடங்களுக்கு டூர் போக எனக்கு மிகுந்த ஆசை இருந்து வந்திருக்கிறது. அப்போது வசதி இல்லை. பின்பு படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின், பல இடங்களைப் பார்த்தும் ஆகிவிட்டது. இருந்தாலும் ஊர் சுற்றும் ஆசை இன்னும் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன் மனைவியுடன் மலேசியா, சிங்கப்பூர் போய் வந்து ஒரு நாலைந்து பதிவுகள் தேத்தினேன்.

அப்போது சில சங்கடங்களை அனுபவித்தேன். அந்த அனுபவத்தினால்தான் இந்த இரண்டு கனவுகளும் (நிறைவேற வாய்ப்பு 100 % இல்லாத, இரண்டு ஆசைகள்) தோன்றின.

ஆசை ஒன்று
இரண்டு செட் காவி டிரெஸ். ஒன்று போட்டுக்கொள்ள. இரண்டாவது மாற்றிக்கொள்ள. தலையை மொட்டை அடித்து, அதற்கு ஒரு காவித்துணியை பித்துக்குளி முருகதாஸ் ஸ்டைலில் கட்டிக் கொள்ளவேண்டியது. தோளில் ஒரு ஜோல்னாப்பை. அதற்குள் மாற்று டிரெஸ். ஒரு போர்வை. வேறு பணம் காசு, ஒன்றும் எடுத்துக்கொள்ளக் கூடாது. பயணங்கள் முழுவதும் ஓசி. சாப்பாடும் ஓசி. திண்ணை கண்ட இடத்தில் தூக்கம். தண்ணி கண்ட இடத்தில் நித்திய கடமைகள்.
இப்படி ஒரு ஆறு மாதம் இந்தியா முழுவதும் சுற்றி வரவேண்டியது. இந்த ஆசை எந்த ஜன்மத்திலாவது நிறைவேறும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது ஆசை
இதிலும் முதல் ஆசை போலவே கையில் காசு, பணம் ஒன்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வித்தியாசம். ஒரு உதவியாளர் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்ளுவார். டூர் ஏற்பாடுகள் அனைத்தும் பக்காவாக முதலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். வீட்டு வாசலில் டாக்சி வந்து நின்றவுடன் ஐயா ஏறிக்கொள்வார். ஐயா ஒரு சாமானையும் கையில் தொடமாட்டார். எல்லாம் உதவியாளர் பார்த்துக்கொள்வார். ரயிலோ, பிளேனோ, உதவியாளர் பின்தொடர பயணம் நடக்கும்.

சேரவேண்டிய இடத்தில் வாகனவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஓட்டலுக்குப் போய் தினசரி கடமைகளை முடித்துவிட்டு, அன்று போடவேண்டிய டிரஸ்களை உதவியாளர் எடுத்துக் கொடுக்க, வெளிவேலைகள் தொடங்கும். இப்படியாக பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து முடித்து விட்டு, அடுத்த ஊர் போகவேண்டியது.
இந்த மாதிரி டூர் போக அம்பானி அளவு சொத்து இருந்தால் போதும் என்று கருதுகிறேன். அடுத்த ஜன்மத்திலாவது அந்த பாக்கியத்தை அருளுமாறு பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்