செவ்வாய், 18 டிசம்பர், 2012

புரதச்சத்தின் அவசியமும் மருந்துக் கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகளும்

மனிதன் உயிர் வாழ உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பதை அனைவரும் அறிவோம். இந்த மூன்றில் நீரும் காற்றும் இயற்கை அன்னை நமக்கு இலவசமாகக் கொடுக்கிறது என்பதையும் அறிவோம். இலவசமாகக் கிடைக்கும் எதையும் மனித இனம் எப்படி பயன்படுத்தும் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

காசு கொடுத்து வாங்கும் உணவில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்பதை முன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இருந்தாலும் நினைவுக்காக இன்னொரு முறை கூறுவதில் தவறு இல்லை.

1. கார்போஹைட்ரேட்ஸ்
2. புரதச்சத்து
3. கொழுப்புச் சத்து
4. வைட்டமின்ஸ் மற்றும் ஹார்மோன்கள்
5. கனிமச்சத்துகள்.

இதில் புரதச்சத்து சம்பந்தமாக சில உண்மைகளை ஆராய்வோம். புரதச் சத்து என்பது நைட்ரஜன் சேர்ந்த ஒரு கூட்டுப்பொருள்.

மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள்ளும் "ந்யூக்ளியஸ்" என்றொரு பாகம் இருக்கிறது. இது முற்றிலும் புரதச்சத்தினால் ஆனது. மனிதனின் செல்களின் ஆயுள் காலம் 15 முதல் 25 நாட்கள் மட்டுமே. ஏறக்குறைய 25 நாட்களுக்கு ஒரு முறை நாம் புது மனிதனாக மாறுகிறோம். ஆனால் எப்படி அதே பழைய விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன என்பதுதான் நம்மைப் படைத்தவன் நிகழ்த்தும் அதிசயம்.

இப்படி இந்தப் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும்போது ஏற்படும் மாற்றங்களைப் பார்ப்போம். பழைய செல்கள் அழியும்போது அதன்  "ந்யூக்ளியஸ்" ல் உள்ள புரதங்கள் அழிந்து யூரியாவாக மாறுகிறது. இது ரத்தத்தில் கலந்து கிட்னிக்குப் போகும்போது பிரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. விவசாயத்தில் பயிர் வளர்ச்சிக்காக "யூரியா" என்ற உரம் போடுவது உங்களுக்குத் தெரியும். பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜனை இந்த யூரியாதான் கொடுக்கிறது.

அழிந்து போன செல்களுக்குப் பதிலாக புதிய செல்கள் உருவாகும்போது அவைகளுக்கு  புரதச்சத்து தேவைப்படுகிறது. மனித உடம்பின் ஒரு கிலோ எடைக்கு அரை கிராம் புரதம் தினந்தோறும் தேவை. அறுபது (60) கிலோ எடையுள்ள ஒரு மனிதனுக்கு தினந்தோறும் 30 கிராம் புரதம் தேவை.

நாம் சாப்பிடும் முக்கிய உணவுகளில் இருக்கும் புரதச்சத்தின் அளவுகள் வருமாறு.

பருப்பு - 40 %
பால்     -  6%
அரிசி   -   3%
மட்டன், மீன் - 30%
முட்டை -  30%
காய்கறிகள் - 1 அல்லது 2%

நாம் சாப்பிடும் இந்த உணவுகளில் இருக்கும் புரதச்சத்து முழுவதும் அப்படியே உடலுக்குக் கிடைப்பதில்லை. 50 லிருந்து 60 சதம் மட்டுமே உடலுக்கு கிடைக்கிறது. ஆகவே ஒரு மனிதன் கிட்டத்தட்ட 100 கிராம் புரதம் ஒரு நாளில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

சில மருந்துக் கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகள்:

இவைகளை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இந்தப் பதிவு.

சில கடல் தாவரங்களில் புரதச்சத்து 50 % வரை இருக்கிறது. தவிர இந்தப் புரதச்சத்துகள் 50 -60 % வரை உடல் எடுத்துக்கொள்கிறது. இந்த வகையில் இவை மிகவும் நல்ல உணவுதான். சந்தேகமே இல்லை. ஆனால் மனிதனுக்கு தினமும் வேண்டிய 100 கிராம் புரதச்சத்தை இத்தகைய உணவுகளின் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாமே என்று தோன்றினால் அது தவறு. முதல் காரணம் அவைகளின் கிடைக்கும் அளவு. எல்லோருக்கும் வேண்டிய அளவு கடல் தாவரங்களை சந்தைப்படுத்த முடியாது. கடலில் அவ்வளவு தாவரங்கள் இல்லை.

இரண்டாவது மனிதன் ஒரே வகையான உணவை தினந்தோறும் சாப்பிடமுடியாது. ருசியைத் தவிர ஒரே வகை உணவைச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெடும்.

மூன்றாவது அவைகளின் விலை. அதிகமாக கிடைக்காததால் அவற்றின் விலை அதிகமாக இருக்கும். சாதாரண ஜனங்களால் வாங்கி உபயோகப்படுத்த முடியாது.

"ஸ்பிருலினா" என்பது இத்தகைய தாவரங்களில் ஒன்று. இயற்கையாக இவை கடலில் வளர்கின்றன. ஆனால் செயற்கையாக இவைகளை உள்நாட்டிலும் வளர்க்க முடியும். இவைகளில் உள்ள புரதம் மிகவும் நல்ல வகையைச் சேர்ந்தது. ஆகவே சில பரிசோதன்களில் மனித உடலுக்கு இது நல்லது என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்தார்கள்.

இந்த முடிவை சில மருந்துக் கம்பெனிகள் ஆதாரமாக வைத்துக்கொண்டு "ஸ்பிருலினா" மாத்திரைகள் மற்றும் கேப்சூல்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தார்கள். டாக்டர்களும் இந்த மாத்திரைகளைப் பரிந்துரைத்தார்கள். இதில் எல்லாம் ஒன்றும் ஏமாற்று வித்தைகள் இல்லை.

ஆனால் இந்த மாத்திரைகளை என்ன விலைக்கு விற்றார்கள், அதில் எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதுதான் நாம் அறிந்து கொள்ளவேண்டிய செய்தி.

ஒரு "ஸ்பிருலினா" கேப்ஸ்யூலில்" ஐந்நூறு (500) மில்லி கிராம், அதாவது அரை கிராம் ஸ்பிருலினா எக்ஸ்ட்ராக்ட் இருக்கிறது. அதில் ஒரு 300 மில்லிகிராம் புரதம் இருக்கும். தினம் 3 அல்லது 4 கேப்ஸ்யூல் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு மனிதனின் அன்றாட புரதத் தேவையில் ஏறக்குறைய நூற்றில் ஒரு பங்கு ஆகும். இதற்கு செலவு, ஒரு கேப்ஸ்யூல் 5 ரூபாய் வீதம் 15 அல்லது 20 ரூபாய் ஆகும்.

மக்களே, யோசித்துப் பாருங்கள்.

சுமார் 5 கிராம் (இன்றைய விலையில் 50 பைசா)  துவரம் பருப்பிலிருந்து கிடைக்கக் கூடிய புரதச்சத்திற்கு 20 ரூபாய் விலை வைத்து மருந்துக் கம்பெனிகள் விற்கின்றன. நம் உணவில் கிடைக்காத. நோய் தீர்க்கும் மருந்துகளுக்கு நாம் அதிக விலை கொடுக்கிறோம். அதிலாவது ஓரளவு நியாயம் இருக்கிறது.

நம் அன்றாட உணவில் கிடைக்கக் கூடிய புரதச்சத்திற்கு இவ்வளவு விலை வைத்து விற்கிறார்களே, இதில் உள்ள உள்வயணம் தெரியாமல் நம் மக்களும் வாங்கிச் சாப்பிடுகிறார்களே, இந்தக் கொள்ளைக்கு சில டாக்டர்களும் துணை போகிறார்களே என்று நினைக்கும்போது என் வயிறு பற்றியெரிகிறது. தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் அதில் இந்த மாத்திரைகளில் இருப்பதைவிட பல மடங்கு புரதம் கிடைக்கும். (10 -15 கிராம்). முட்டை சாப்பிடாதவர்கள் தினம் 50 கிராம் "சோயா மீல்மேக்கர்" எடுத்துக்கொண்டால் அதில் 15 -20 கிராம் புரதம் கிடைக்கும். அது எல்லாம் வேண்டாம், தினம் ஒரு 20 கிராம் (உள்ளங்கை அளவு) பொட்டுக்கடலையை எடுத்து சாப்பிட்டால் அதில் 10 கிராம் புரதம் கிடைத்துவிடும்.

ஜனங்கள் 500 மில்லி கிராம் என்றால் ஏதோ பெரிய அளவு என்று நினைக்கக் கூடும்.. சிறிது யோசித்தால் 500 மில்லி கிராம் என்பது 1/2 கிராம்தான் என்று  புரியும். அரை கிராம் தங்கம் வேண்டுமானால் 1500 ரூபாயாக இருக்கலாம். அரை கிராம் கடல் பாசிக்கு 5 ரூபாய் கொடுப்பது அநியாயத்திலும் அநியாயம்.


20 கருத்துகள்:

  1. அருமையான, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. மருந்து நிறுவனங்களும் சில மருத்துவர்களும் கூட்டு சேர்ந்து மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதை அரசு இயந்திரம் தான் தடுக்கவேண்டும். அதற்காக காத்திராமல் நாமே அவைகளை இனம் கண்டு ஒதுக்குவது நல்லது.

    பதிலளிநீக்கு
  2. நான் இதை நினைத்துப்பார்த்த்தில்லை. நல்ல விஷயத்தை எழுதியிருக்கிறீர்கள். ஒரு சந்தேகம்- புரோட்டீன் உணவுகள் (பருப்பு, கறி, புரோடீன் பானங்கள் உட்பட) விலை அதிகமாக இருப்பது ஏன்? கார்போஹைட்ரேடை விட புரோடீனை விளைவிப்பது செலவு அதிகமாக இருப்பது ஏன்? ஆம்வே நியூட்ரிலைட் பானம் 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்குமேல். அதில் பலன் உண்டா?


    மீன் எண்ணெய் இல்லாத தாவர ஒமேகா-3 வெஜிடபிள் ஆயில் பத்தி எழுதுங்களேன். அது நல்லதா?

    அடுத்து எந்த சமையல் எண்ணெய்கள் நல்லது? இது பற்றி ஆங்கிலப் பத்திரிகைகள் மாற்றி மாற்றி எழுதுவதால் குழப்பமாக இருக்கிறது. இதையும் ஒரு பதிவிடுங்கள்!

    சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவிற்கு டாபிக் கொடுத்ததிற்கு நன்றி, சரவணன். புது வருடப் பதிவாகப் போட்டுடலாம்.

      நீக்கு
  3. கடல்பாசியை இவனுங்க தின்னுட்டா அதை நம்பியிருக்கும் ஜீவனுங்க எங்கே போகுமோ தெரியலையே? ஒண்ணுத்தையும் விட்டு வைக்க மாட்டானுங்க போலிருக்கே..........

    பதிலளிநீக்கு
  4. நல்ல விழிப்புணர்வு கட்டுரை.
    மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவை அளவோடும் ,சத்துள்ளதாக சாப்பிட்டலே போதும் இல்லையா சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க. பல வகையான உணவுகளை அளவறிந்து சாப்பிட்டால் போதும்.

      நீக்கு
  5. மிக அருமையான பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. என்னமோ அரசியல் கோஷம் மாதிரி இருக்குதே!!!!!நன்றி, ஆரிஃப்.

      நீக்கு
  7. நல்ல பகிர்வு.

    நீங்கள் கூறியதுபோல உணவுகளை தெரிவுசெய்து உண்ண வேண்டும். உணவுகளிலிருந்து நேரடியாகக் கிடைக்கின்ற சத்துக்களே சாதாரணமானவர்களின் உடலுக்குப் போதுமானவை.

    பதிலளிநீக்கு
  8. ஸ்பைரூலினா பற்றி பல பதிவுகள் ஓகோ என்று இருந்ததால் நானும் ஸ்பைரூலினா எங்கு கிடைக்கும் என்று தேடினேன். விலையை அறிந்ததும் பின்வாங்கினேன். உங்களது கட்டுரை அருமை. அதிகப்படியான் புரதம் உண்பதும் உடலுக்கு கேடுதான். மனிதர்களின் பலவீனங்களை அடிப்படையாக கொண்ட வியாபார தந்திரமே இன்றைய மல்டி லெவல் மார்கட்டிங் மந்திரம்...... அப்படி பேசுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணத்தை வீணாக்காதீர்கள். தினம் சிறிது வெல்லத்துடன் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் போதும். அதுவே புரோட்டீன் பற்றாக்குறை ஏதாவது இருந்தால் சரி செய்துவிடும்.

      நீக்கு
  9. பயனுள்ள எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. நல்ல அலசல், பல விபரங்களை தெரிந்து கொண்டேன் .மருத்துவ நிறுவனகளின் முகமுடியை கிழித்து இருக்கிறீர்கள் .அரசு தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  11. தள வடிவமைப்பில் ஏதோவொரு தவறு என்று காட்டுகிறது .பார்க்கவும்.

    பதிலளிநீக்கு