வெள்ளி, 28 டிசம்பர், 2012

பெருகி வரும் வன்முறைகளும் போராட்டங்களும்



நாடெங்கிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ஆள் கடத்தல், வழிப்பறி, சாலை விபத்துகள் ஆகியவை அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்தில் இத்தகைய நிகழ்வுகள் அந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைகிறது.

நாட்டிலுள்ள மக்கள் இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். இத்தகைய போராட்டங்களினால் என்ன பயன் விளையும் என்று எனக்குத் தெரியவில்லை. தனி மனிதன் தன்னை மாற்றிக்கொண்டால் தவிர, இத்தகைய குற்றங்களை எவ்வாறு தடுக்க முடியும்?

அவன் எப்போது மாறுவான்? அப்படி மாறுவானா என்பதே ஒரு கேள்விக்குறியாக அல்லவா இருக்கிறது. போராட்டங்களை முன்னின்று நடத்தும் பல்வேறு அமைப்புகள் இந்த முயற்சியில் என்றும் ஈடுபடுவதில்லை. போராட்டம் நடத்த எங்கு என்ன காரணம் கிடைக்கும் என்று கழுகு போல் காத்திருக்கிறார்கள். அந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தால் போதும், அதற்காக போராட்டம் ஆரம்பித்து விடுவார்கள்.

பலருக்கு போராட்டங்கள் அவர்களின் அடங்கிக்கிடந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் அமைகிறது. இத்தகைய போராட்டங்களில் அவர்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்பதில்லை. பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், கடைகளைச் சூறையாடுதல், பொது வாழ்வைச் சீர்குலைத்தல் ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இத்தகையோர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

இத்தகைய போராட்டங்கள் ஓரிரு நாட்கள் நடந்து பின்பு முடிந்து விடும். அதன் பிறகு இந்த மாதிரியான இன்னொரு சம்பவம் நடந்தால் அதற்கு ஒரு போராட்டம் ஆரம்பிக்கும். இந்த தொடர்கதை நடந்து கொண்டேதான் இருக்கிறது. போராட்டம் முடிந்தவுடன் அனைவரும் அந்த சம்பவத்தை மறந்து விட்டு தங்கள் வழக்கமான வேலையைக் கவனிக்கப் போய்விடுகிறார்கள்.

இந்தப் போராட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் போராடும் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பது சந்தேகமே. உதாரணத்திற்கு டில்லியில் இப்போது போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் மாணவர்கள், குற்றவாளிகளை உடனே தூக்கில் போடுங்கள் என்று கேட்கிறார்கள். இதே மாணவர்கள் செய்யும் ரேக்கிங்கில் ஒரு மாணவர் உயிரிழந்தால், உடனே அதில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தூக்கில் போட உடன்படுவார்களா?

வட இந்தியப் பெண்கள் தங்கள் கழுத்தில் அரை பவுனில், கண்ணுக்குத் தெரியாமல் ஒரு செயின் போட்டிருப்பார்கள். தமிழ் நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது ஒரு ஐம்பது பவுனாவது போட்டுக்கொண்டுதான் விசேஷங்களுக்குப் போகிறார்கள். ஐம்பது பவுன் நகை இன்றைக்கு தங்கம் விற்கும் விலையில் ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகிறது. இதைப் பார்க்கும் ஒரு சாதாரண குற்றவாளி கூட கொலை செய்யும் அளவிற்குத் துணிந்து விடுகிறான்.

வீட்டில் லட்சக் கணக்கில் பணத்தைப் பீரோவில் வைத்து விட்டு அவன் ஊருக்குப் போய்விடுகிறான். பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து திருடுபவர்கள் இன்று பெருகிப்போய் விட்டார்கள். இந்தப் பணம் அன்று இரவே திருட்டுப் போய்விடுகிறது.

இதை எவ்வாறு மாற்ற முடியும் என்று மக்கள் யோசிக்கவேண்டும். வெறும் போராட்டங்களினால் எந்தப் பயனும் ஏற்படாது என்பதை மக்கள் என்று உணர்வார்களோ அன்றுதான் நம் நாடு முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்கும்.

9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஏதோ சொல்ல வந்து நிறுத்தி விட்டீர்கள் போல இருக்குதே? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். மகிழ்வுடன் பிரசுரிக்கிறேன். என்னைத் தாக்காமல் என் கருத்தைத் தாக்குங்கள்.

      நீக்கு

  2. ஐயா , உங்கள் வலையில் இப்பதிவைப் பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். பலரும் போராட முன் வருகிறார்கள் என்றால் அவர்கள் அந்த நிகழ்ச்சிகளால் மிகவும் பாதிப்படைந்திருக்க வேண்டும் இல்லை, அவர்கள் வேறு வேலையில்லாமல் வெட்டியாக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இம்மாதிரி வேலை அற்றவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்வதும் ஆதாயம் தேடுவதும்தானே பல கட்சிகள் அல்லது தலைவர்களின் நோக்கம்.வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாமல், குறிக்கோள் கொள்ளவும் வழியில்லாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கும் உணர்வுகளின் குவியலே தற்கால இளைஞன். என்னுடைய( நம்முடைய )இளமைப் பருவத்தில் இத்தகைய நிகழ்வுகள் அங்கும் இங்கும் என எங்காவதுதான் இருக்கும். காரணங்களை என் பதிவுகளில் பலமுறை பலவாறாகப் பகிர்ந்து கொண்டுள்ளேன். மூத்தபதிவர் நீங்களும் இப்போது எழுதுகிறீர்கள். பார்ப்போம். எங்காவது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று. பாராட்டல்களுடன்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. உங்களுக்கு வேறு ஏதோ கருத்து இருப்பது போல் தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும் சொல்லுங்களேன். ஒரு நல்ல விவாதத்தின் மூலம் ஏதாவது வழி தோன்றினால் எல்லோருக்கும் நல்லதுதானே.

      நீக்கு
  4. ‘வெறும் போராட்டங்களினால் எந்தப் பயனும் ஏற்படாது’ என்ற உங்கள் கருத்தே என்னுடையதும்.

    பதிலளிநீக்கு
  5. போராட்டம் இல்லை என்றால் நாம் அடிமைகள் ஆக்கப்படுவோம் என்பது என் கருத்து.எதற்கு போராடுகிறோம்,எந்த வழியில் போராடுகிறோம் என்பதே முக்கியமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரி. எதற்குப் போராடுகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

      நீக்கு
  6. போராட்டம் ஒன்று இல்லை என்றால் நம் நாட்டில் இப்போது கொஞ்ச நெஞ்ச கிடைக்கிற நீதியும் கிடைக்காமல் போய்விடும்.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    பதிலளிநீக்கு