ஞாயிறு, 2 டிசம்பர், 2012

சிந்தனைத் தெளிவு


நாம் நம் வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெறுகிறோம். பல நூல்களைக் கற்கிறோம். பலருடன் கலந்து பழகுகிறோம். அறிஞர்களின் பேச்சைக் கேட்கிறோம். மதத் தலைவர்களின் அறிவுரைகளைக் கேட்கிறோம். இவைகளினால் நம் மூளையில் ஏகப்பட்ட செய்திகள் சேர்ந்திருக்கின்றன.

இத்தனை செய்திகளையும் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கையை வாழ உபயோகப்படுத்துகிறோம். ஆனாலும் ஒரு வகைக் குழப்பத்தோடுதான் பெரும்பாலானவர்கள் வாழ்கிறார்கள். ஏன் என்றால், நாம் செய்வது சரிதானா இல்லையா என்ற குழப்பம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் நாம் பல செய்திகளைச் சேகரித்தோமே தவிர, அவைகளைப் பற்றி சிந்திக்கத் தவறி விட்டோம்.

செய்திகளினால் எப்போது பயன் ஏற்படும் என்றால், அந்தச் செய்திகளிலிருந்து நம் வாழ்க்கைக்குப் பயன்படும் குறிக்கோள்கள், நெறிமுறைகள் ஆகியவற்றை நாம் சிந்தித்து, உணர்ந்து, அவைகளைக் கடைப்பிடித்தால்தான் ஏற்படும். இந்த சிந்தனை ஒவ்வொருவரும் தனித் தனியாகத்தான் செய்யவேண்டும். உங்களுக்காக நான் சிந்திக்க முடியாது. அப்படி சிந்தித்து வழ்க்கையைப் பற்றி, எப்படி வாழ வேண்டும் என்ற கொள்கையைப் பற்றிய தெளிவு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதுதான் “தன்னையறிதல் அல்லது மெய்ஞ்ஞானம் பெறுதல்” என்று கூறப்படுகிறது. இந்த சிந்தனைத் தெளிவு ஏற்பட்டால்தான் மனதில் அமைதி உண்டாகும். உங்கள் வாழ்க்கையை செம்மையாக வாழ முடியும். நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று வேறு யாரும் சொல்லிக்கொடுக்க முடியாது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கை. நீங்களாக ஒரு தெளிவு பெற்று வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது உங்களால் சிந்தித்து ஒரு தீர்வு காண முடியும்.

இந்தத் தெளிவு இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் சிக்கல்கள் தோன்றும்போது அறிவுரைக்காக யாரையாவது தேடிக்கொண்டு போவீர்கள். பொதுவாகப் பலரும் இந்த நிலையில் தேடிப்போவது ஜோசியரைத்தான். அவர் சில பரிகாரங்கள் சொல்லுவார் அல்லது கோவில்களுக்குப் போகச்சொல்வார். இது சாதாரண மனோதத்துவ ஆலோசனைதான். நீங்களே இந்த யோசனையை அடுத்தவர்களுக்கு சொல்வீர்கள். ஆனால் உங்களுக்கு என்று வரும்போது மனது சஞ்சலப்படுகிறது. வெளியிலிருந்து ஆலோசனை உங்களுக்குத் தேவைப்படுகிறது.

இந்த முறையில் நீங்கள் உங்கள் மனதைப் பழக்கப்படுத்தி விட்டால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஜோசியரையோ அல்லது கடவுளையோ நாடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனென்றால் உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையில்லை. வெளியிலிருந்து ஒரு ஆதரவு தேவைப்படுகிறது. அதை ஜோசியரிடமும் கடவுளிடமும் தேடுகிறீர்கள்.

இது அவ்வளவு நல்ல வழி அல்ல. இந்த முறையினால் உங்களுக்கு எப்பொழுதும் மனத்திருப்தி ஏற்படாது. ஜோசியர்களை மாற்றுவீர்கள். கடவுள்களை மாற்றுவீர்கள். இதனாலெல்லாம் நீங்கள் விரும்பும் நிலை ஏற்படாவிட்டால் மனச்சோர்வு அடைவீர்கள். உங்கள் வாழ்க்கை சுக்கானில்லாத கப்பல் போல் ஆகும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு சிந்தனைத் தெளிவுதான். நன்றாக சிந்தியுங்கள். சிந்தித்து தெளிவு பெறுங்கள். குழப்பங்களை அகற்றுங்கள். வாழ்க்கையை எளிமைப்படுத்துங்கள். ஆனந்தம் உங்களைத்தேடி வரும்.

7 கருத்துகள்:

  1. தெளிவான சிந்தனைக்கான பகிர்வு நன்றி..தம2

    பதிலளிநீக்கு
  2. தன்னுடைய பிரச்னைகளுக்கு அடுத்தவர்களிடம் அறிவுரை கேட்டுப் போகும் பழக்கமுடையவர்கள் அந்த அறிவுரைகளைக் கூடக் கேட்க மாட்டார்கள்! ஏகப்பட்ட அறிவுரைகளைக் கேட்டாலும் கடைசியில் தான் என்ன நினைத்தார்களோ அதைத்தான் செய்வார்கள்! :)))

    பதிலளிநீக்கு
  3. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை அறிந்து கொண்டால் மட்டும் போதும்...

    அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை, அறிந்து தெரிந்து கொண்டால் மட்டும் போதும்...

    அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை, அறிந்து தெரிந்து புரிந்து கொண்டால் மட்டும் போதும்...

    போதும் போதும் போதும் - இதுவே போதும்... இதுவும் கடந்து போகும்... ஹிஹி...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு. ஆனால் நம்மில் பலர் அதிகம் சிந்தித்தால் குழம்பிவிடுவோமோ(?) என்றுதான் சிந்திப்பதில்லையோ என நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. Rinash Khan has left a new comment on your post "சிந்தனைத் தெளிவு":

    நம்முடைய மன அமைதி .அது நம் கையில் ..நம்முடைய நல்ல சிந்தனையின் மூலம் நம் வாழ்வு வளம் பெறுகிறது ...
    இடுகைத்தலைப்பு:
    சிந்தனைத் தெளிவு

    உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

    பதிலளிநீக்கு
  6. சிந்தனைத் தெளிவு ஏற்பட்டால்தான் மனதில் அமைதி உண்டாகும்.

    சிறப்பான சிந்தனைப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு