வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

பதிவுகளில் பக்கங்களை அமைப்பது


                                 Image result for a typical printed page

நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது கடிதங்கள் எழுதுவது பற்றி சில சட்டங்கள் இருந்தன. ஒரு காகிதத்தை எடுத்தால் அதில் உள்ள எல்லா வெற்றிடத்திலும் காலி விடாமல் எழுதக் கூடாது என்பது முதல் பாடம்.

மேலும் கீழும் போதுமான இடம் விடவேண்டும். இடது பக்கம் இரண்டு விரற்கடை அளவு "மார்ஜின்" (Margin) விடவேண்டும். வலது பக்கத்திலும் குறைந்தது ஒரு விரற்கடை அளவாவது இடம் விடவேண்டும். இவையெல்லாம் அந்த கடிதத்தை சிரமமில்லாமல் படிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை.

பள்ளிக்குழந்தைகளுக்கு இந்த தத்துவத்தை மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவேதான் அவர்களின் நோட்டுப் புத்தகங்களில் மார்ஜின் கோடுகள் போடப்படுகின்றன. தட்டச்சு இயந்திரங்களில் தட்டச்சு செய்தாலும், கணினியில் தட்டச்சு செய்தாலும் ஒரு அச்சிட்ட பக்கத்தில் மேல், கீழ், இடது, வலது ஆகிய நான்கு பக்கங்களிலும் போதுமான இடம் வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

புத்தகங்கள் அச்சிடும்போதும் இதே விதிகள் கடைப் பிடிக்கப்படுகின்றன. நான் முதுகலைப் படிப்பு படிக்கும்போது எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இந்த விதி கடுமையாக கவனிக்கப்படும். இந்த விதிகளுக்குப் புறம்பாக இருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.

அதே போல் வரிகளுக்கிடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும். இவையெல்லாம் படிப்பவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதிகள். ஒரு வரி இவ்வளவு அகலம்தான் இருக்கலாம் என்றும் கணக்குண்டு. ஏனெனில் ஒரு வரியைப் படித்த பின் அடுத்த வரிக்கு வரும்போது வரிகளைத் தெளிவாக அறியும்படி இருக்கவேண்டும்.

பதிவுலகில் எழுதும் பதிவர்கள் தாங்கள் மட்டுமே படிப்பதற்காக எழுதுவதில்லை என்று நம்புகிறேன். அப்படி இல்லாமல் மற்றவர்களும் படிக்கவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்களாயின் இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கடைப்பிடித்தால் படிப்பவர்கள் சிரமமில்லாமல் படிப்பார்கள்.

இந்தப்படத்தைப் பார்க்கவும்.



இப்படிக் கொச கொசவென்று எழுதினால் படிப்பதற்குள் கண் வலி வந்து விடும்.

இன்னொரு தளம் பாருங்கள்.




ஒரு வரியைப் படித்து விட்டு அடுத்த வரி வருவதற்குள் வரி மாறி விடுகிறது. கொஞ்சம் அகலத்தைக் குறைத்தால் என்ன? கூகுள்காரன் இலவசமாக இடம் கொடுக்கிறான் அதில் கொஞ்சம் தாராளம் காட்டினால் என்ன?

தளம் முழுவதும் இடமிருந்து வலமாக முழு கணினி திரையையும் நிரப்பவேண்டுமா, என்ன?

நான் ஒரு பழமைவாதி. என்னால் இந்த மாதிரி விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

புதன், 18 பிப்ரவரி, 2015

ஒரு அசாதாரண நிகழ்ச்சி

இங்கே கொடுத்திருக்கும் ஒரு விடியோ தொடர்பை சொடுக்கிப் பார்க்கவும். இது ஒரு வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். எனக்கு தற்காலத்திய சினிமாக்கள் அதிகம் பரிச்சயம் இல்லாத தினால் இது எந்தப் படத்தில் வந்தது என்று சொல்லத் தெரியவில்லை.

       

இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் அந்த ஊரில் இந்த படப்பிடிப்பை ஒரு பெரிய விஷயமாகக் கருதி எந்த விதமான கூட்டமும் சேரவில்லை என்பதுதான். நம் ஊரில் இப்படி ஒரு படப்பிடிப்பு நடத்த முடியுமா?

நேற்று நான் ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தேன். விழா ஒரு பிரபல ஓட்டலில் நடை பெற்றது. பிறந்த நாள் கேக் வெட்டியபிறகு விருந்து நடைபெற்றது. விருந்து தாங்களே எடுத்துக்கொள்ளும் ரகம். இம்மாதிரி விருந்துகளில் உணவை எடுத்துக்கொண்ட பிறகு அந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளிப்போய் நின்று சாப்பிடவேண்டும். அப்போதுதான் அடுத்து வருபவர்கள் உணவை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

இந்த அடிப்படைத் தத்துவத்தைக் கூட நம் ஆட்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. உணவு மேஜைகளைச் சுற்றியே பெருங்கூட்டமாக நின்று கொண்டு அடுத்து வருபவர்களுக்கு பெரும் இடைஞ்சல் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் எப்போது பண்பைக் கற்றுக்கொள்வார்கள்?

                                          Image result for buffet dinner party

திங்கள், 16 பிப்ரவரி, 2015

எங்க ஊர் பைரவ சேனை

                                           
                                       Image result for street dogs

எங்கள் ஊரில் பைரவர் சேனை மிகவும் கட்டுப்பாடாக செயல்பட்டு வருகிறது. (வாழ்க மனேகா காந்தி - அவர்கள்தானே பைரவர்களைக் காப்பாற்ற உச்ச நீதி மன்றத்தில் ஆணை வாங்கினார்கள்).

நான் தினமும் நடைப் பயிற்சிக்காக செல்லும்போது இவர்கள் தங்களுடைய பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பணி என்னவென்றால் தங்கள் தங்கள் பிரதேசத்தை பிறருடைய ஆக்கிரமிப்பில் இருந்து காப்பது.  இவர்களுடைய கட்டுக்கோப்பு அமைப்பு மிகவும் பாராட்டத் தகுந்ததாக இருக்கிறது.

இந்த சேனை பல குழுக்களாகப் பிரிந்து செயல்படுகிறது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பகுதியை எல்லையாக அமைத்திருக்கிறார்கள். பொதுவாக இது ஒரு வீதியாகும். ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அல்லது ஆறு பேர் இருப்பார்கள். ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் இடையில் பொதுப் பகுதி ஒன்று இருக்கும். அதில் எந்தக் குழுவும் உரிமை கொண்டாடக்கூடாது.

ஒரு குழுவிலிருந்து ஒருவர் அடுத்த குழுவின் எல்லையில் பிரவேசித்து விட்டால் போர் மூண்டு விடும். ஆஹா போர் என்றால் இதுதான் போர். இந்தப் போர் நடக்கும்போது அனல் பறக்கும். அதைத் தூரத்திலிருந்தே பார்த்து கவனித்து நீங்கள் இந்தப் பகுதியை விட்டு அடுத்த பகுதியில் உங்கள் நடைப் பயிற்சியைத் தொடர வேண்டும்.

இல்லையென்றால் நீங்கள் அடுத்த பத்து நிமிடத்தில் உங்கள் ஊரின் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பீர்கள். இந்தப் போரில் ஒரு விசேடம் என்னவென்றால் பைரவர்களில் ஒருவருக்கும் எந்த விதமான ஊறும் விளையாது. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்று கொண்டுதான் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கும்.

இப்படி ஒரு அரை மணி நேரம் நடந்த பிறகு ஏதாவது ஒரு குழுவிற்கு சோர்வு வந்து  விடும். அதன்பிறகு நடப்பதுதான் போரின் உச்சகட்டம். ஒரு குழு சோர்வடைந்து விட்டது என்பதை அடுத்த குழு எப்படியோ உணர்ந்து கொள்ளும். பிறகு அந்தக் குழு எதிர்க்குழுவைத் தாக்குவது போல் ஓடும். எதிர்க்குழு உறுப்பினர்கள் தங்கள் தங்கள் வாலைக் கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டு புறமுதுகிட்டு ஓடுவார்கள்.

பைரவர் வாலைத் தன் பின்னங்கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டார் என்றால் அது பயமும் தோல்வியும் அடைந்ததற்கு அடையாளம்.  தோல்வியுற்று பின்வாங்கும் கொழுவை தங்கள் எல்லையிலிருந்து வெகு தூரம் விரட்டி விட்டு அங்கே நின்று கொசுறுக்கு கொஞ்ச நேரம் வசை பாடிவிட்டு தங்கள் எல்லைக்குத் திரும்புவார்கள்.

இந்த நுணுக்கங்களை எல்லாம் அறிந்து இருந்தால் ஒழிய நீங்கள் தடைப் பயிற்சிக்குச் செல்லக்கூடாது. இந்தப் பயத்தானால் ஒவ்வொருவர் தாங்கள் வளர்க்கும் செல்லப் பைரவர்களைத் தங்கள் கூட நடைப் பயிற்சிக்கு அழைத்து வருவார்கள். இந்தச் செல்லப் பைரவர்களை காவல் பைரவர் குழு நடத்துவதே ஒரு பெரிய நாடகம் போல் இருக்கும்.

தூரமாக நின்று கொண்டு இந்தக் குழு அந்த வீட்டுப் பைரவருக்கு சவால் விடும். இதைக் கண்ட வீட்டுப் பைரவர் ஆக்ரோஷத்துடன் அந்தக் குழுவின் மேல் பாயத்துடிக்கும். இதைத் தடுக்க அந்த வீட்டுப் பைரவரின் வளர்ப்பாளர் படும் பாடு இருக்கிறதே, அது ஒரு காணக்கிடைக்காத காட்சி.

தப்பித்தவறி அவர் தன்னுடைய பிடியை விட்டு விட்டால் அப்புறம் நடப்பது ஒரு அரிய போராகும். இதில் பெரும்பாலும் வீட்டுப் பைரவர் தோற்றுப்போவார். அப்புறம் அவரை மருத்துவ மனையில் சேர்த்து வைத்தியம் பார்ப்பார்கள்.

நான் இந்த நுணுங்கங்களை நன்கு அறிந்திருப்பதால் இது வரை மருத்துவ மனைக்குப் போகாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். நடைப் பயிற்சி மேற்கொள்ளும் பதிவுலக நண்பர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: பைரவர் என்றால் யார் என்று நண்பர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அவர்களை "நாய்" என்று யாராவது சொன்னால் அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

சனி, 14 பிப்ரவரி, 2015

அதிசயம் ஆனால் உண்மை

                                                        Tamil Blogs Traffic Ranking

பதிவுகள் இல்லாமலேயே நீங்கள் தமிழ்மணம் தரவரிசை எண் ஒன்றைப் பிடிக்கவேண்டுமா? இதோ பாருங்கள் அந்தத் தளத்தை.


வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

பூக்களை விட ... அந்தப்பூக்காரி ... நல்ல அழகு !

                       

வைகோபாலகிருஷ்ணனின் சிறுகதைகளை சில நாட்களாக மறந்து விட்டேன். அவருடைய சிறுகதைப் போட்டியின் 16 வது கதை இது. இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


கதையைப் படிக்கு முன் என் விமர்சனத்தைப் படித்து விட்டுச் செல்லவும்.  ஒரு வேண்டுகோள். கதையைப் படிக்குமுன் உங்கள் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும்.

விமர்சனம்

VGK 16 - ஜா தி ப் பூ 

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html

ஒரு சிறு சம்பவம் எப்படி ஒரு சிறுகதை ஆகிறது என்பதை இக்கதையில் காண்கிறோம். பாட்டியும் பேத்தியும் வியாபாரத்தில் போட்டி போடப் போக அது எவ்வாறு திருமணத்தில் முடிகிறது என்பதுதான் கதை.


கோதுமை அல்வா சாப்பிட்டால் அது எப்படி தொண்டையில் வழுக்கிக்கொண்டு ஓடுமோ அந்த மாதிரி கதை எவ்வித பிசிறும் இல்லாமல் பயணிக்கிறது. இம்மாதிரி கதைகளைப் படிக்கும் போது ஏற்படும் மனத்திருப்தி பெரிய திருப்பங்களுடன் எழுதப்படும் கதைகளைப் படிக்கும்போது ஏற்படுவதில்லை.

கதாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

 பழனி.கந்தசாமி

புதன், 11 பிப்ரவரி, 2015

மாமியாரும் மருமகளும்

                                         

ஒரு ஊர்ல ஒரு வீட்டில ஒரு மாமியாரும் மருமகளும் இருந்தார்கள். அப்பனையும் மகனையும் விட்டு விடுவோம். அவர்கள் சும்மா ஒப்புக்குச் சப்பாணிதானே.

அந்த வீட்ல மாமியார் வச்சதுதான் சட்டம். எதுவானாலும் அந்தம்மாவைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும்.

அந்த வீதியில் தினமும் ஒரு பிச்சைக்காரன் பிச்சையெடுக்க வருவான். இந்த வீட்டு வாசலிலும் நின்று "அம்மா பிச்சை" என்று கூவுவான். தினமும் அந்த மாமியாரும் "பிச்சை இல்லை போ" என்று சொல்லி விடுவாள். பிச்சைக்காரன் போய்விடுவான்.

ஒரு நாள் இந்த மாமியார் கோவிலுக்குப் போய்விட்டாள். அப்போது பார்த்து இந்தப் பிச்சைக்காரன் வந்து வழக்கம்போல் "அம்மா பிச்சை" என்று சத்தம் கொடுத்தான். மருமகள் இந்தச் சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்தாள். தினமும் மாமியார் அவனுக்கு பிச்சை இல்லை என்றுதானே சொல்கிறாள், நாமும் அதையே சொல்லிவிடுவோம் என்று நினைத்து "பிச்சை இல்லை போ" என்று சொல்லிவிட்டாள். பிச்சைக்காரனும் அடுத்த வீட்டுக்குப் பிச்சை கேட்கப் போய்விட்டான்.

இந்தச் சமயம் பார்த்து மாமியார் கோவிலிலிருந்து திரும்பி வந்து விட்டாள். அவளுக்கு  மருமகள் ஏதாவது பிச்சை போட்டு விட்டாளோ என்று சந்தேகம்.
நாலு வீடு தள்ளிப்போயிருந்த பிச்சைக்காரனை கை தட்டி கூப்பிட்டாள். பிச்சைக்காரன் ஓஹோ இன்னைக்கு இந்த அம்மா ஏதோ பிச்சை போடப்போகிறது போலிருக்கிறது என்று ஆவலுடன் வந்தான்.

அவனிடம் என் மருமகள் ஏதாவது பிச்சை போட்டாளா என்று கேட்டாள். அதற்கு அவன் அந்த அம்மாவும் பிச்சை இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்றான். அதற்கு அந்த மாமியார் மருகளுக்கு அவ்வளவு பவிசு ஆகி விட்டதா. இந்த வீட்டில் யார் பண்ணாட்டு நடக்கிறதென்று உனக்குத் தெரியாதா, அவள் என்ன உனக்குப் பிச்சை இல்லையென்று சொல்வதற்கு? இனிமேல் நீ என்னிடம்தான் பிச்சை கேட்கவேண்டும், நான்தான் பதில் சொல்வேன், அவள் என்ன பதில் சொல்வது, இப்போது சொல்கிறேன் கேள், பிச்சை இல்லை, நீ போகலாம் என்றாள்.

பிச்சைக்காரன் மனது மிகவும் நொந்து போய் அடுத்த வீட்டிற்குப் போனான்.

இந்தக் கதையை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். திடீரென்று இந்தக் கிழவன் இந்தக் கதையை எதற்குச் சொல்கிறான் என்று விழிக்கவேண்டாம். காரணம் சொல்கிறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்பு அல்லது வருடங்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். நமது கருணை மிகுந்த அரசு இயந்திர வாகனங்களின் அடையாள எண் பட்டையில் சில மாறுதல்களைச் செய்ய முடிவு செய்தது. அதாவது வாகனங்களைப் பலர் வாகன எண்களை மாற்றி வைத்துவிட்டு அந்த வாகனங்களைப் பல கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்திவிட்டு திரும்பவும் வாகன எண்ணை பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்.

ஆகவே குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே நாங்கள் அதாவது அரசு ஒரு புது விதமான எண் பட்டை கொண்டு வரப்போகிறோம். எல்லோரும் அந்தப் பட்டையைத்தான் பயன்படுத்த வேண்டும். அதில் அந்த வாகனத்தின் முழு ஜாதகமும் ஒரு சிறிய வில்லையில் பதிவு செய்திருப்போம். ஒரு கருவியின் மூலமாக அந்த வாகனத்தின் முழு விவரங்களையும் போக்குவரத்துத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு நொடியில் கண்டு பிடிக்கலாம். இதனால் வாகனங்களை குற்றங்களுக்காகப் பயன்படுத்துவது அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும் என்றார்கள்

இந்த எண் பட்டையின் மாதிரிகள் எல்லாம் பிரசுரமாகின. என் போன்ற மடையன்களும்  ஆஹா, அரசு மக்களின் பாதுகாப்பிற்காக என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளுகிறது, அரசென்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும் என்று நம்பிக்கொண்டு இருந்தோம்.

வருடங்கள் ஓடினவே தவிர இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவது தாமதாகிக்கொண்டே போனது. நம் இந்திய மக்கள் என்ன சாமானியமானவர்களா என்ன? பார்த்தார்கள். ஆஹா, சீக்கிரம் காசு பார்க்க நல்ல வழி என்று அரசு வெளியிட்ட மாதிரிப் பட்டைகளைப் போலவே தாங்களாகவே செய்து வாகன உரிமையாளர்களின் தலையில் மிளகாய் அரைத்தார்கள்.

இது ஏறக்குறைய ஓரிரு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. திடீரென்று அரசிற்கு ஞானோதயம் உதித்தது. மாமியாரான நாம் அல்லவா இந்த எண் பட்டைகளைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக ஒப்பந்தங்கள் சிலபல பேருக்கு கொடுக்கலாம் என்றிருந்தோமே, இப்படி மருமகள்கள் நம்மை மீறி எப்படி இந்த எண் பட்டைகளைத் தயார் செய்யலாம்? கூப்பிடு காவல் துறையை, இப்படி எண் பட்டை அணிந்திருக்கும் வாகனங்களை எல்லாம் பிடியுங்கள், அபராதம் போடுங்கள், வருமானத்தைப் பெருக்குங்கள் (யாருடைய வருமானம் என்பது வேறு விஷயம்) என்று அதிரடியாக ஆணைகள் பிறப்பித்தார்கள்.

பட்டைகளை வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனமே தயார் செய்து அவர்கள் விற்கும் வாகனங்களுக்கு மாட்டி நல்ல காசு பார்த்தார்கள். அவர்களைக் காவல்துறை கண்டு கொள்ளவில்லை. விவரம் தெரியாமல் வாகனம் வாங்கியவர்கள்தான் மாட்டினார்கள். குறைந்தது 100 ரூபாய் அபராதம்.

அதற்குள் சில மகானுபாவர்கள் நீதி மன்றத்தில் முறையிட்டார்கள். மகாகனம் பொருந்திய நீதிபதிகள் காவல் துறையை இத்தனை நாளும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இதை ஏன் கண்டு கொள்ளவில்லை? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள் என்ற செய்தி தினப் பத்திரிக்கைகளில் வெளி வந்தது.

நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி என்று நான் இன்று போய் என் புது மகிழ்வுந்தின் எண் பட்டையை மாற்றி என் மகிழ்வு மாறாமலிருக்க வழி செய்தேன்.

ஆகவே இந்த நவீன கணினி யுகத்திலும் மாமியாரின் நாட்டாண்மைதான் செல்லுபடியாகும் என்பது நிரூபணமாகிறது. 

திங்கள், 9 பிப்ரவரி, 2015

பழனியில் பழனி.கந்தசாமி செய்த மடத்தனம்

                               

நான் ஒரு தானியங்கி பல்சக்கர மாற்றி (அதாங்க Auto Gear Change - நான் இனி பதிவில் முடிந்தவரை தமிழில் எழுதலாம் என்று சபதம் மேற்கொண்டுள்ளேன்.) கொண்ட சொகுசு உந்து (car) வாங்கிய விபரம் ஏற்கெனவே நண்பர்களுக்குத் தெரியும். அந்த சொகுசு உந்தில் பழனிக்குப் போய்வரலாம் என்று என் மனைவி வேண்டுகோள் விடுத்தாள்.

நான் அந்த வேண்டுகோளை பல காரணங்களுக்காக ஏற்றுக்கொண்டேன். முதல் காரணம் -அந்த சொகுசு உந்து வாங்கி ஒரு மாதத்தில் ஒரு இலவச பராமரிப்பு செய்யவேண்டும். அந்த காலக் கெடுவிற்குள் கொஞ்சமாவது அந்த சொகுசு உந்தை ஓட்டியிருந்தால்தானே அதில் ஏதாவது சில்லறைக் கோளாறுகள் இருப்பது தெரியும். அப்போதுதானே அதை முதல் பராமரிப்பில் இலவசமாக சரி செய்து கொள்ளலாம். பழனி போய் வருவது இதற்குத் தோதாக அமையும் என்று நினைத்தேன். (இந்த யோசனைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக என் மூளையில் உதிக்கும். இதற்கெல்லாம் விடுதி அறை -  Hotel Room போட்டு யோசிக்கவேண்டியதில்லை)

இரண்டாவது காரணம் எங்கள் சொந்த ஊரில் இருந்து எங்கள் உறவினர்கள் தைப்பூசத்திற்காக பழனிக்கு காவடி எடுப்பது வழக்கம். இதற்காக ஒரு அமைப்பைத் தோற்றுவித்து கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நானும் சேர்ந்திருக்கிறேன். அந்த அமைப்பின் சார்பில் இரண்டு நாள் பழனியில் பூசை நடக்கும். ஒரு கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து ஆட்கள் வைத்து சமையல் செய்து தடபுடலாக சிற்றுண்டி, பேருண்டி முதலானவை தரப்படும்.

அவ்வப்போது நாங்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்வோம். அந்த வழக்கப்படி இந்த வருடம் கலந்து கொள்ளலாமே என்றபடியால் பழனி போகும் என் மனையாளின் வேண்டுகோளுக்கு இணங்கினேன்.

மூன்றாவது காரணம் இந்த புது சொகுசு உந்தின் குணநலன்களை நன்கு புரிந்து கொண்டால்தானே அதனுடன் வாழ்க்கை நடத்த முடியும். இவ்வாறாக பல காரணங்களை உத்தேசித்து பழனி போவதென்று முடிவு செய்தேன்.

இரண்டு நாள் தங்குவதற்கான மூட்டை முடிச்சுகள் எல்லாம் கட்டிக்கொண்டு ஒரு நல்ல நேரம் பார்த்து பழனிக்குக் கிளம்பினோம். வழியில் ஏதும் பிரச்சினை இல்லாமல் பழனி போய்ச் சேர்ந்து ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். பழனியில் தைப்பூசத்திற்காக ஏறக்குறைய தமிழ் நாட்டின் பாதி மக்கள் - ஸ்ரீரங்கம் தொகுதி நீங்கலாக - வந்திருந்தார்கள். வீதியில் மக்கள் மேல் மோதாமல் நடக்கமுடியாது.

இதைப் பார்த்த நாங்கள் இரண்டு நாள் தங்கும் யோசனையைக் கைவிட்டோம். மறுநாள் காலையில் முருகனைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு புறப்பட்டு விடலாம் என்று முடிவு செய்தோம். அதன்படியே மறுநாள் காலையில் சென்று கயிற்றுந்தில் - Rope Car - மேலே சென்று 200 ரூபாய் சீட்டு வாங்கி சிறப்பு வழியில் சென்றோம். நாங்கள் முன்கூட்டியே முருகனிடம் சந்திக்கும் நேரம் பற்றி முன்பதிவு செய்யாததினால் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாய்ப் போயிற்று.

நேரில் பார்த்தபோது என்னப்பா இப்படிப் பண்ணி விட்டாய் என்று கேட்டதற்கு ஆமாம் இன்று எத்தனை ஆயிரம் பேர் என்னைப் பார்க்க வரப்போகிறார்கள் தெரியுமா, அதற்குத் தகுந்தாற்போல் நான் அலங்காரம் செய்து கொள்ளவேண்டாமா என்றான். இது நியாயமாகப் பட்டதால் நான் அவனைக் கோபித்துக்கொள்ள முடியவில்லை.

பேட்டியை முடித்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு வந்து ஓய்வெடுத்தோம். பிறகு கல்யாண மண்டபத்திற்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டோம். அப்போது அங்கு வந்திருந்த என் பெரியம்மா பையன் தானும் எங்களுடன் கோவை வருகிறேன் என்றான். சொகுசு உந்தில்தான் இடம் இருக்கிறதே என்று நான் சரி என்று ஒத்துக்கொண்டேன். அவன் பின்னால் திருவாளர் சனி பகவான் ஒளிந்து கொண்டு இருந்ததை நான் கவனிக்கவில்லை.

அவன் தன்னுடைய உடமைகளைக் கையோடு எடுத்து வந்திருந்தான். நான், என் மனைவி, அவன் ஆகிய மூவரும் நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். என் சொகுசு உந்தின் சாவி என் கையில் இருந்தது. சொகுசு உந்தின் பின்புறம் சாமான்கள் வைக்கும் பகுதியைத் திறந்தேன். அந்த இடத்திற்கு மேல் ஒரு தட்டு இருக்கிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். என் பெரியம்மா பையனின் பையை இரண்டு கைகளாலும் வாங்கவேண்டி இருந்ததால் சாவியை அந்தத் தட்டில் வைத்து விட்டு பையை வாங்கி உள்ளே வைத்தேன்.

சாமான் வைக்கும் பகுதிக் கதவைச் சாத்தினேன். அது பூட்டிக்கொண்டு விட்டது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த திரு. சனி பகவான் சிரிக்கும் சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்ததில் சாவியை நான் எடுக்காமல் கதவைச் சாத்திப் பூட்டி விட்ட மடத்தனம் மூளையில் பட்டது.

ஆகா, முருகன் நம்மைச் சோதிக்கிறான் என்று புரிந்தது. அங்கு சுற்றியிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். சொகுசு உந்தின் கதவில் இருக்கும் ரப்பர் பட்டையை எடுத்துவிட்டு ஒரு அடிக்கோலால் உள்ளே தள்ளினால் கதவு திறந்து விடும் என்றார்கள். அப்படி செய்து பார்த்ததில் அடிக்கோல் உடைந்ததே தவிர பலன் ஒன்றுமில்லை.

வாழ்க்கையில் சோதனைகள் வருவது இயற்கை. ஆனால் எந்த சோதனைக்கும் முருகன் ஒரு தீர்வை வைத்திருப்பான் என்று நம்பினேன். அப்படியே முருகன் ஒரு வழி காட்டினான். விறுவிறுவென்று விடுதியை வெளியில் வந்தேன். வரிசையாக முச்சக்கர வாடகை உந்துகள் நின்றிருந்தன. அதில் ஒன்றின் ஓட்டுனரைக் கூப்பிட்டு என் பிரச்சினையை ச் சுருக்கமாகச் சொல்லி, இதைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல ஆள் வேண்டுமே என்றேன்.

உந்தில் ஏறுங்கள் என்று சொல்லி அங்குமிங்கும் அலைந்து ஒரு ஆளைப் பிடித்தோம். அந்த ஆள் எங்கள் பின்னாலேயே வந்தார். என் சொகுசு உந்தைப் பார்த்தார். ஐயா, நீங்கள்தான் இந்த வண்டியின் சொந்தக்காரரா என்று கேட்டார். ஆமாம் தம்பி, இப்பத்தான் சுளையாக நாலேமுக்கால் லட்சம் போட்டு வாங்கினேன் என்று சொன்னேன். சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டேன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

அப்படியா என்று கேட்டு விட்டு கதவு சந்தில் நான் கொண்டு வந்திருந்த இரும்பு அடிக்கோலை விட்டு ஏதோ செய்தார். மந்திரம் போட்டது போல் கதவு திறந்து கொண்டது. இரண்டே நிமிடம்தான் ஆயிற்று. ஆடற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது. சரி, தம்பி, எவ்வளவு வேண்டும் என்றேன். அவர் தன்னுடைய முதலாளிக்குப் போன் போட்டுப் பேசினார் பிறகு 200 ரூபாய் கேட்டார்.

அப்போதுதான் நான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட விசயம் உறைத்தது. இனி என்ன செய்ய முடியும்? பேசாமல் அவர் கேட்ட ரூபாயைக் கொடுத்தேன். முச்சக்கர உந்தின் ஓட்டுனரிடம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டேன். அவர் சளைத்தவரா என்ன? 100 ரூபாய் வேண்டும் என்றார். பேசாமல் அதையும் கொடுத்தேன். எல்லாவற்றையும் திரு. சனி பகவான் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவுதான். மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன். மறுநாள் இலவச பராமரிப்புக்காக பணிமனையில் விட்டேன். அங்கு வழக்கமான என் வண்டியைப் பராமரிக்கும் பணியாளர் பிரிந்து கிடக்கும் ரப்பர் பட்டைகளைப் பார்த்து விட்டு என்ன நடந்தது என்று கேட்டார்.

நான் நடந்தவைகளைச் சொன்னேன். சரீங்க, இனி மேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ( என் வயது காரணமாக என்ன மடத்தனம் செய்திருக்கிறீர்கள் என்று கேட்கவில்லை) என்று சொல்லி விட்டு எல்லா பராமரிப்பு வேலைகளையும் முடித்துக் கொடுத்தார். ரப்பர் பட்டைகளை மாற்ற ஆயிரம் ரூபாய் ஆயிற்று. எல்லாம் முருகனின் அருள் என்று எடுத்துக்கொண்டேன்.

இதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், மடத்தனம் செய்வதில் தவறில்லை, ஆனால் ஒரு மடத்தனம் செய்தவுடன் அதை உணர்ந்து உடனே சரியான ஆளிடம் சென்று விடவேண்டும் என்பதுதான்.
சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பதில்தான் உங்கள் திறமை வெளிப்படும். அந்த வகையில் நான் கெட்டிக்காரன்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

பதிவுகளில் ஒரு தொழில் நுட்பம்

                                                 

ஒரு தூக்குத் தண்டனை பெற்ற கைதியைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அவன் மறுநாள் தூக்கிலிடப் படுவான். அவனுடைய கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்கள். அவன் ஒரு தொழில் நுட்பப் புத்தகத்தின் பெயரைச்சொல்லி அந்தப் புத்தகம் வேண்டுமென்று கேட்பான்.

அந்தச் சிறைக்காவலர்கள் நாளைக்கு நீ இறக்கப்போகிறாய், இன்று அந்தப் புத்தகத்தைப் படித்து உனக்கு ஆகப் போவது என்ன என்று கேட்பார்கள். அதற்கு அவன் பதில் சொன்னான். "நான் இறக்கும்போது இன்னும் ஒரு தொழில் நுட்பத்தைக் கற்றேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்படும் அல்லவா, அது போதும் எனக்கு" என்று பதில் சொன்னதாக அந்தக் கதையில் வரும்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒரு புது கருத்தைத் தெரிந்து கொள்ள வயதோ அல்லது முதுமையோ ஓரு தடை அல்ல என்பதுதான்.

அப்படி நான் இன்று ஒரு தொழில் நுட்பம் கற்றுக்கொண்டேன். அதாவது கூகுள் பதிவுகளில் ஏதாவது மாற்றம் வேண்டுமென்றால் அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள settings ஐ மாற்றவேண்டும். இதில் உள்ள ஒரு நுணுக்கம் என்னவென்றால் அந்த மாற்றங்கள் ஏற்கெனவே நீங்கள் பிரசுரித்த பதிவுகளில் ஏற்படுவதில்லை. அடுத்து நீங்கள் புதிதாகப் பிரசுரிக்கும் பதிவுகளில்தான் அந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.

இந்த நுணுக்கத்தை நான் நேற்று கற்றுக்கொண்டேன். கூடவே இன்னும் ஒன்று கற்றுக்கொண்டேன். அதாவது பதிவுலகில் ஏதாவது ஒரு பிரச்சினை என்று அறிவித்தால் கைகொடுக்க நண்பர்கள் பலர் உண்டு என்கிற விவரமும் நேற்று கற்றுக்கொண்டேன்.

ஆகவே யாரும் நமக்கு வயதாகிவிட்டது, இனி இந்த உலகில் நமக்கு என்ன இருக்கிறது என்று சலிப்படைய வேண்டியதில்லை. கடைசி மூச்சு உள்ள வரைக்கும் கற்றுக்கொள்ள பல்லாயிரம் செய்திகள் இவ்வுலகில் இருக்கின்றன. கண்ணையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டால் போதும். அவ்வளவுதான்.

அவசர உதவிக்கு கைகொடுத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே மாதிரி நான் நேற்று பழனிக்குப் போயிருந்தேன். அதென்ன பழனி.கந்தசாமி பழனியில்தானே இருக்கிறார், ஏதோ புதிதாகப் பழனிக்குப் போனதாகச் சொல்லுகிறார் என்ற குழப்பம் வேண்டாம். என் பெயரில் நான் சேர்த்துக்கொண்ட பழனி என்பது என் தந்தையின் பெயரான பழனியப்பன் என்பதின் சுருக்கமே.

அங்கு நான் ஒரு மடத்தனம் செய்தேன். இதில் என்ன புதுமை? வழக்கமாகச் செய்வதுதானே என்று கேட்காதீர்கள். இது ஒரு புதுமையான மடத்தனம். அதலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடத்தை அடுத்த பதிவில் பார்க்கலாமா? 

சனி, 7 பிப்ரவரி, 2015

ஒரு அவசர உதவி

என் தளத்தில் ஏதோ ஒரு வேகத்தில் பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டேன். ஆனால் நண்பர்கள் வேண்டுகோளுக்காக அதைத் திறக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் உபயோகித்து விட்டேன். ஆனால் பின்னூட்டப் பெட்டியைத் திறக்க முடியவில்லை. டெம்ப்பிளேட்டை மாற்றிப் பார்த்து விட்டேன். பலனில்லை.

யாராவது உதவிக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பின் குறிப்பு; இந்த வேடிக்கையைப் பாருங்க. உதவி வேணும்னு நான் பதிவு போட்டவுடனே கூகுள்காரன் பயந்து போயி பின்னூட்டப்பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்துட்டான். நண்பர் ஸ்ரீராம் அவர்களும் ஏதோ மந்திரம் போட்டிருக்கார். முதலில் அவருக்கு நன்றி. அப்புறம் கூகுளுக்கும் நன்றி.

புதன், 4 பிப்ரவரி, 2015

பதிவுகளின் வகைகள்

பதிவுகள் எழுதுவது ஒரு கலை. அதை நல்ல முறையில் வெளியிடுவது அதை விடப் பெரிய கலை. இந்தப் பதிவில் மூன்று தளங்களின் திரை அச்சுப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.

1.  கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்கள்.



இதில் ஏற்படும் கண்வலியைப் பற்றி இதைப் படிப்பவர்களுக்குத் தெரியும். 

2. அடுத்தது, கொஞ்சம் பராவாயில்லை.



இதில் வரிகளுக்கு இடையே போதிய இடைவெளி இல்லை.

3. நம்ம தளம். எப்படி ஜொலிக்குது பாருங்கள்.



தளங்களை அமைத்துக் கொள்வது அவரவர்கள் விருப்பம்.

சாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன?

                                      

நாளுக்கு நாள் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சாலைகளை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டிருந்தாலும், அவை அதிகரிக்கும் வாகனங்களுக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை. வாகன ஓட்டிகள் இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்?

சூழ்நிலைக்கு ஏற்ப வாகனங்களை நிதானமாகவும் பொறுப்பாகவும் ஓட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு எய்கிறார்களா என்று பார்த்தால் நூற்றுக்கு தொண்ணூறு சத வாகன ஓட்டிகள் அவ்வாறு செய்வதில்லை. அதனால் என்ன ஏற்படுகிறது என்றால் தினமும் செய்தித்தாள்களில் விபத்து பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இவ்வாறு ஏற்படும் விபத்துகளில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதைப் படிக்கும் மற்ற வாகன ஓட்டிகள் தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

ஒரு வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் ஏறி உட்கார்ந்தவுடன், அந்த வாகனத்தின் பலம் முழுவதும் தனக்கு வந்து விட்டதாக ஒவ்வொருவனும் நினைக்கிறான். சாலையில் செல்லும் மற்றவர்களை தூசிக்கு சமானமாக நினைக்கிறான். தான் தவறே செய்யமாட்டோம் என்று முழு மனதுடன் நம்புகிறான். இந்த மன நிலையே விபத்துக்களின் காரணம்.

நான் ஒரு நாள் முழுவதும் சலிப்பில்லாமல் வாகனம் ஓட்டுவேன். எனக்கு சோர்வு வராது. தூக்கம் வராது. பசி வராது. எப்போதும் வாகனத்தின் மீதே கவனம் வைத்திருப்பேன்.  நான் இதுவரை எந்த விபத்திலும் சிக்கியதில்லை. இப்போதும் அவ்வாறே இந்த வாகனத்தை ஓட்டுவேன். இப்படித்தான் ஒவ்வொரு வாகன ஓட்டியும் தற்பெருமை பேசுவான். ஆனாலும் அப்படிப்பட்ட வாகன ஓட்டிகள்தான் விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்.

விபத்து ஏற்பட முக்கிய காரணங்கள் சிலவற்றை இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

முதல் காரணம் - ஓய்வு இல்லாமல் வாகனம் ஓட்டுவது. மனித உடம்பிற்கு சில வரையறைகள் இருக்கின்றன. எப்படிப்பட்ட மனிதனானாலும் அவனுக்கும் சில வரையறைகள் உண்டு. தூக்கமில்லாமல் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கூட இருக்கலாம். ஆனால் அவனால் முழு கவனத்துடன் வேலை செய்ய இயலாது. விழித்திருப்பது போல்தான் தோன்றும். ஆனால் அவன் மூளை அவ்வப்போது அவனை அறியாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்.

இவ்வாறான நிலையில் இருக்கும் ஒருவன் வாகனம் ஓட்டும்போது பல தவறுகள் செய்வான். நின்றிருக்கும் வாகனத்தை அவனால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அதன் மீது தான் ஓட்டும் வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்துவான். அல்லது கட்டுப்பாடான வேகத்தில் செல்லாமல் அதிக வேகத்தில் சென்று, ஒரு நிலையில் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாலைத் தடுப்பில் மோதுவான் அல்லது சாலை ஓர மரத்தில் மோதுவான்.

இந்த மாதிரி விபத்துகளுக்கு ஓட்டுனர் மட்டும் காரணமல்ல. அந்த வாகனத்தில் பயணிப்பவர்களும் காரணமே. அவ்வாறு சரியான ஓய்வு எடுக்காத ஓட்டுனரை வாகனம் ஓட்டப் பணிப்பது தவறென்று அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் பெரும்பாலானோர் இந்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் தவறு செய்து அதற்கான விலையாகத் தங்கள் உயிரைக் கொடுக்கிறார்கள்.

அடுத்த தவறு -  வாகனம் ஓட்டுவதில் தாங்கள் மிகவும் வல்லவர்கள் என்ற ஆணவம் காரணமாக சாலை விதிகளைப் புறக்கணித்து வாகனத்தை ஓட்டுவார்கள். இந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு மூன்று மணி நேரத்தில் வாகனத்தை ஓட்டுவேன் என்று பெருமை பேசுவார்கள். இவர்கள் எதிரே வரும் வாகனங்களைக் கவனிக்காமல் மற்ற வாகனங்களை முந்துவார்கள். சாலை நிலையைக் கண்டுகொள்ளாமல் அதி வேகத்தில் செல்வார்கள். இவர்கள் கட்டாயம் விபத்துகளை ஏற்படுத்துவார்கள்.

இன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு பொறுமை குறைந்து கொண்டே வருகிறது. எதிலும் அவசரம். எங்கும் அவசரம். இவ்வாறு பொறுமை இல்லாமல் இருந்து யமபுரம் போவதற்கும் அவசரப்பட்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதுதான் பரிதாபம். 

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தமிழ் ஈழம்.

நான் சில காலத்துக்கு முன் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பதிவு ஒன்று போட்டு வாங்கிக்கட்டிக் கொண்ட கதை அநேகமாக எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். அப்போது நான் என்ன நினைத்துக்கொண்டிருந்தேன் என்றால் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் என்பவர்கள் பிரிட்டிஷ்காரன் இந்தியாவிலிருந்து இலங்கைத் தேயிலைத்தோட்டங்களுக்கு வேலைக்காக கூப்பிட்டுக்கொண்டு போனவர்கள்  என்பதுதான்.

அந்த எண்ணம் தவறு என்றும் இலங்கைத் தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருபவர்கள் என்றும் பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அப்படித் தெரிந்து கொண்டதின் பின்னர் சில சந்தேகங்கள் என் மனதில் உண்டாயின.

முதல் சந்தேகம் - அப்படி பல காலம் வாழ்ந்தவர்கள் ஏன் சிங்களவர்களுக்குத் தாழ்ந்து போனார்கள் என்பதுதான்?

இரண்டாவது சந்தேகம் - அப்படி ஆயிரம் ஆண்டு கால பரம்பரையான இஙல்கைத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் அப்படி என்ன இனத்தொடர்பு?

மூன்றாவது சந்தேகம் - தமிழீழம் தமிழீழம் என்று பேசிக்கொண்டிருந்தார்களே, அது கிடைத்து விட்டதா?

நான் பின்னூட்டப் பெட்டியை மூடி விட்டதால் எனக்கு நேரடியாக இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்காது என்பதை அறிவேன். எவ்வளவோ சந்தேகங்களுக்கு விடை தெரியாகல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதில் இவையெம் சேர்ந்து கொள்ளட்டுமே. என்ன குடி முழுகிப் போய் விடப் போகிறது? 

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015




தமிழரின் பெருமை தெரியவேண்டும் என்றால்.தமிழகத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும்  ...மேலும் வாசிக்க


இந்தத் தளத்தில் நுழைந்தவுடன் கீழ்க்கண்ட படம் தோன்றுகிறது. என்ன செய்தாலும் மறைய மாட்டேன் என்கிறது. தளத்தின் ஆசிரியர் கவனிக்கவும்.