செவ்வாய், 28 டிசம்பர், 2010

தாய்ப்பாலில் விஷம் ?


ஈரோடு பதிவர் சந்திப்பு பற்றி கக்கு - மாணிக்கம் said...

அதுசரி.......ஈரோடு பதிவர் சந்திப்புக்கு போகாமல் இங்கே உட்கார்ந்து கொண்டு இன்னும் பதிவு எழுதுகிறீர்களே.
26 December 2010 14:13

***** மாணிக்கம் என் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை சுமத்திவிட்டார். *****

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு போய் வந்து விட்டேன், மாணிக்கம். ஒரு பதிவும் போட்டுவிட்டேன். நான் எடுத்த படங்கள் அனைத்தையும் வலையில் ஏற்றி அதற்கான சுட்டியையும் அதில் கொடுத்து விட்டேன். கொஞ்சம் போய் வந்த அலுப்பு தீர்வதற்காக தூங்கி எழுந்து பார்த்தால், நான் எழுதலாம் என்று யோசித்து வைத்திருந்தது அனைத்தையும் பலரும் எழுதித் தீர்த்து விட்டார்கள். குறிப்பாக கதிரும், “பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்”. அதற்கு மேல் எழுத என்னிடத்தில் விஷயம் ஒன்றுமில்லை.

விழாவை நன்கு திட்டமிட்டு நடத்திய கதிருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு குறைபாடு உண்டு. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமலேயே இது நாள் வரையிலும் சமாளித்து விட்டேன். ஆனால் அதை இப்போது சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என் மூளையின் ஒரு பகுதியில் களிமண் இருக்கிறது. அது எந்தப் பகுதி என்றால் - சந்திக்கும் மனிதர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் பகுதி. சம்பவங்கள் ஞாபகம் இருக்கும் அளவிற்கு பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. அதனால் நான் ஈரோடு பதிவர் சங்கமத்தில் பலரை சந்தித்தபோதும் ஒரு சிலரின் முகங்கள் மட்டுமே பெயருடன் ஞாபகம் இருக்கிறது. அதனால் என்னால் சரளமாக சங்கமத்தின் விவரங்களை பதிவு போட இயலவில்லை. அனைவரும் என் வயதை மனதில் கொண்டு இந்த குறையை மன்னிக்க வேண்டுகிறேன்.

நான் சந்தித்த பலரும் என்னை நினைவு கூர்ந்து பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

*********************************************************************************************************************

இனி நம் சப்ஜெக்ட்டுக்கு வருவோம். அதாவது இயற்கை வழி விவசாயம்.

போன பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்களைப் பார்ப்போம்.

கலாநேசன் said...

விவசாயத்திற்கு பூச்சிமருந்து பயன்படுத்தித்தான் இன்று தாய்ப்பாலிலும் விஷம் கலந்தோம் நாம். முற்றிலும் இயற்கையான விவசாயம் நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் முடிந்தவரை முயலலாமே...

26 December 2010 06:15

ஆரண்ய நிவாஸ்ஆர்.ராமமூர்த்தி said...

எல்லாம் நடக்கும்.. நாம் மனது வைத்தால்...

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

shammi's blog said...

very true sir , its easy to say but its hard to follow, even now organic foods are available in the market Only the persons could afford to, buy them, Just as ages passed, we could not go to neolithic era, but still we could try to minimize the use of certain seeds like Monsanto's hybrid brinjal, and so on. Yeah, what you said is true if its on the greener side its far better but as you ended just some are interested, not all...nice article sir ...thanks for sharing.

26 December 2010 18:50

வாசிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இங்கு நான் என் அனுபவத்தில் கற்றுக்கொண்டவைகளை உங்களுடன் பங்கிடுகிறேனே தவிர, இந்த இயற்கை விவசாயத்தில் நான் ஒரு சர்வதேச நிபுணன் இல்லை. என்னுடைய கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அவை சரியாகவும் இருக்கலாம். நான் விரும்புவது, இந்த சப்ஜெக்ட் அனைவருடைய கவனத்திற்கும் சென்றால் போதும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை வைத்துக் கொள்வோம். என்னுடைய கருத்துத்தான் சரி என்கிற உடும்புப் பிடிவாதம் தேவையில்லை. என்னுடைய கருத்துகளுக்கு எந்த விதமான பின்னூட்டங்களும் போடலாம். பதில் சொல்ல முடிந்தால், தெரிந்தால், சொல்லுகிறேன். முடியாவிட்டால் முடியவில்லை என்று சொல்லி விடுகிறேன். எல்லாவற்றையும் எல்லோராலும் தெரிந்து வைத்திருப்பது முடியாத காரியமல்லவா?

முதலில் கலாநேசன் கருத்தை எடுத்துக்கொள்வோம். பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதால் அந்த மருந்து, அந்தப் பயிரிலிருந்து விளையும் பொருள்களில் சேர்ந்து, அவைகளை தாய் சாப்பிடும்போது அவள் உடம்பில் சேர்ந்து. பிறகு அது தாய்ப்பால் மூலமாக குழந்தைக்குப் போய் சேருகிறது என்று சொல்கிறார். இந்த வாதம் சரியானதுதான். ஆனால் அவ்வாறு சேரும் பூச்சி கொல்லி மருந்தின் அளவு என்ன?, அதனால் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ ஏற்பட்ட தீங்குகள் என்ன? என்று ஏதாவது ஆராய்ச்சி செய்திருக்கிறாரக்ளா? அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் என்ன? இந்த விவரங்கள் தெரியாமல் அவசரமாக முடிவு செய்வது சரியில்லை. இந்த பூச்சி மருந்தை விஷம் என்று பொத்தாம் பொதுவாக சொல்வது மக்களுக்கு பயத்தை உண்டு பண்ணுவதற்காகத்தான் என்று நான் கருதுகிறேன். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதான். பாம்பின் விஷமும் குறைந்த அளவில் மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

நாம் பொதுவாக எந்தப் பிரச்சினையையும் அறிவு பூர்வமாக அணுகாமல், உணர்ச்சி பூர்வமாக அணுகுகிறோம். இதனால் பிரச்சினை தீர்வதில்லை. உதாரணத்திற்கு, ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும்போது அவளுக்கு பலவிதமான சத்து மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அவைகளை குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டால்தான் மருந்தாக வேலை செய்யும். அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும். அதற்காக அந்த மருந்துகளை சாப்பிடக்கூடாது என்று சொல்லலாமா? சாதாரணமாக சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளும் உப்பே அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் விஷம்தான்.

இன்னொன்றை சொல்ல விரும்புகிறேன். பெரிய நகரங்களில் இப்போது வாகனங்கள் வெளிவிடும் புகை சர்வதேச அனுமதிக்கப்பட்ட அளவை விட பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. அதைக்குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் அதை நாம் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இது போன்று பல விஷயங்கள் இருக்கின்றன. முடிந்த வரையில் அதன் தீமைகளைக் குறைக்க விஞ்ஞானிகளும் அரசுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுதான் இன்று இருக்கும் நடைமுறை உண்மை. மனது வைத்தால் மாற்ற முடியும் என்று ஆர்.ஆர்.ஆர். சொல்கிறார். நான் மறுக்கவில்லை. கமலஹாஸன் தசாவதாரத்தில் கடவுளைப்பற்றி சொல்கிற மாதிரி நான் சொல்ல வருவது என்னவென்றால் : இந்த தீங்குகளை அகற்றுவதற்கு நான் எதிரியில்லை. அகற்றினால் நன்றாக இருக்கும், ஆனால் அது சாத்தியமில்லை என்றுதான் சொல்கிறேன்.

இது ஒரு எதிர்மறை கருத்து என்று என் மீது குற்றம் சுமத்தலாம். வரலாற்று உண்மைகளை உணர்ந்து, எதை நடைமுறைக்கு கொண்டு வரமுடியும், எதைக் கொண்டு வர முடியாது என்று சிந்தித்து, பிறகு என் கருத்துகளைக் குறை கூறுங்கள்.

தொடரும்….

18 கருத்துகள்:

  1. சம்பவங்கள் ஞாபகம் இருக்கும் அளவிற்கு பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. அதனால் நான் ஈரோடு பதிவர் சங்கமத்தில் பலரை சந்தித்தபோதும் ஒரு சிலரின் முகங்கள் மட்டுமே பெயருடன் ஞாபகம் இருக்கிறது.
    //

    ஹி..ஹி
    என்ன சார் இப்படி சொல்லீட்டீங்க...
    சரி..விடுங்க.. அன்னைக்கு நான் கொடுத்த 2 லட்சத்தை, மறந்துடாதீங்க.!!!!

    ஹி.ஹி

    பதிலளிநீக்கு
  2. //நாம் பொதுவாக எந்தப் பிரச்சினையையும் அறிவு பூர்வமாக அணுகாமல், அணர்ச்சி பூர்வமாக அணுகுகிறோம். இதனால் பிரச்சினை தீர்வதில்லை. //
    சரியா சொன்னீங்க .

    பதிலளிநீக்கு
  3. ஐயா, உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நான் அந்த பின்னூட்டமிட முக்கிய காரணம் மக்களை பயமுறுத்துவது அல்ல..இயற்கை விவசாயத்திற்கு முயலவேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கவே..நிச்சயம் அதன் நிறைகுறைகள் விவசாயம் படித்த உங்கள் அளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனால் டெட்ராசைக்ளின் மற்றும் ஆக்சிடோசின் அளவுக்கு அதிகமாய் பயன்படுத்துவதால் வரும் தீங்குகள் பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன். இச்சிறுவனின் கருத்துக்கு மதிப்பளித்ததர்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பட்டாபட்டி.... said...

    சம்பவங்கள் ஞாபகம் இருக்கும் அளவிற்கு பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. அதனால் நான் ஈரோடு பதிவர் சங்கமத்தில் பலரை சந்தித்தபோதும் ஒரு சிலரின் முகங்கள் மட்டுமே பெயருடன் ஞாபகம் இருக்கிறது.
    //

    //ஹி..ஹி
    என்ன சார் இப்படி சொல்லீட்டீங்க...
    சரி..விடுங்க.. அன்னைக்கு நான் கொடுத்த 2 லட்சத்தை, மறந்துடாதீங்க.!!!!

    ஹி.ஹி//

    அதென்ன தம்பி, பண சமாச்சாரமெல்லாம் தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக் கூட கரெக்ட்டா சொல்லுவேனுங்க. நீங்க கொடுத்த 2 லட்சம் நல்லா ஞாபகம் இருக்குங்க. நான் கொடுத்த 10 லட்சத்துல 2 லட்சம் போக மீதி இன்னும் 8 லட்சம் வரோணும். மறந்துடாதீங்க.

    இது எப்படி இருக்கு !

    பதிலளிநீக்கு
  5. கலாநேசன் said...

    ஐயா, உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நான் அந்த பின்னூட்டமிட முக்கிய காரணம் மக்களை பயமுறுத்துவது அல்ல..இயற்கை விவசாயத்திற்கு முயலவேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கவே..நிச்சயம் அதன் நிறைகுறைகள் விவசாயம் படித்த உங்கள் அளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனால் டெட்ராசைக்ளின் மற்றும் ஆக்சிடோசின் அளவுக்கு அதிகமாய் பயன்படுத்துவதால் வரும் தீங்குகள் பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன். இச்சிறுவனின் கருத்துக்கு மதிப்பளித்ததர்க்கு நன்றி.

    எழுதுங்கள் தம்பி. புதிய கருத்துக்கள் வந்தால்தான் தெளிவு பிறக்கும். நீங்களும் விஞ்ஞான ஆராய்ச்சியில் இருப்பதால் எந்தப்பிரச்சினைக்கும் இதுதான் முடிவு என்று யாராலும் கூறமுடியாது என்ற தத்துவம் தெரியுமல்லவா?

    நான் சொன்ன புகைப்படத்தைப் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
  6. பெயர்கள் நினைவில்லை என்கிறீர்கள். நியாயம்தானே..ஒரு முறை சந்திப்பில் இத்தனை பேர்கள் குழப்பம் வரும்தான். நன்றி. திரு கதிர் அவர்களின் பதிவில் பெயர்களோடு புகைப்படங்கள் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. சார், இது குறித்து இன்னும் விளக்கமாக எழுதுங்களேன். இப்போ நீங்கள் எழுதியிருப்பது புரிகிறது. ஆனால், இயற்கை விவசாயம் செய்யவே முடியாது என்று நீங்கள் சொல்லவில்லை, இல்லையா?

    பூச்சி மருந்துகளை, மனிதர்களுக்கான மருந்துகளைப் போல அளவுடன் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால், மனிதர்களிலும் தொடர்ச்சியாக உட்கொள்ளும் சில மருந்துகள், அல்லது சில கொடும் நோய்களுக்கு எடுக்கப்படும் சிகிச்சைகளினால் பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன, இல்லையா?

    அதுபோல, குறிப்பிட்ட அளவு பயன்படுத்தியுமே அதன் தாக்கம் பயிர்களில் இருக்கத்தானே செய்கிறது? உதாரணத்திற்கு, கேரளாவில் எண்டோஸல்ஃபானின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, அதைத் தடை செய்துவிட்டார்கள். அந்த பாதிப்புகள் தேவைப்பட்ட அளவில் பயன்படுத்தியும் ஏற்பட்டவைதானே?

    நகரமயமாக்கலின் விளைவாக எத்தனையோ பாதிப்புகளுக்கு ஆளாகிறோம். அவற்றை எதிர்த்துப் போராட சக்தியைத் தரவேண்டிய உணவிலும் இம்மாதிரிப் பாதிப்புகள் வருகின்றன என்றால், அதைத் தவிர்க்கும் வழிகள் தேட முயலுவது நல்லதுதானே?

    இரண்டாவதாக, பெரிய அளவில் உள்ள நிலங்களுக்கு இயறகை விவசாயம் சாத்தியமில்லை என்றும் கேள்விப்பட்டேன். ஆனால், பசுமை விகடன் இதழ்களில், அவ்வாறாக இயற்கை விவசாயத்தைத் தமது ஏக்கர்கணக்கிலான நிலங்களில் வெற்றிகரமாகச் செய்து வருபவர்களின் பேட்டிகளையும் படித்திருக்கிறேன். அப்படியானால், அனைவரும் அதில் வெற்றிபெறத் தடையாக இருப்பது எது?

    இது குறித்தும் எழுதுங்களேன் சார்?

    பதிலளிநீக்கு
  8. உங்க ரெண்டு பேரு சண்டையில என்னோட 3 லட்சத்தை, மறந்துடாதீங்க.!!!!

    இதையும் படிச்சி பாருங்க

    குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்

    பதிலளிநீக்கு
  9. இன்னும் பல நூறு படங்கள் இருக்கின்றன. கைக்கு வந்து சேரவில்லைங்க ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  10. இன்னும் பல நூறு படங்கள் இருக்கின்றன. கைக்கு வந்து சேரவில்லைங்க ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  11. ஹுஸைனம்மா said...

    நல்ல கருத்து. இதைக்குறித்து ஒரு தனி பதிவு உடனே எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. சண்முககுமார் said...

    //உங்க ரெண்டு பேரு சண்டையில என்னோட 3 லட்சத்தை, மறந்துடாதீங்க.!!!!//

    வரவேண்டியதை மறப்பது என்பது என் சரித்திரத்திலேயே இல்லை. சரி, எப்ப அந்த 3 லட்சத்தை திருப்பிக் கொடுக்கப் போறீங்க?

    பதிலளிநீக்கு
  13. தாராபுரத்தான் said...

    //டாப் கீர்ரில் போகுதுங்க வண்டி//

    இல்லீன்னா ஆளு ஓஞ்சு போய்ட்டான்னு சொல்லிப்போடுவாங்க, இல்லீங்களா?

    பதிலளிநீக்கு
  14. ஐயா, படத்தைப் பார்க்க முடியவில்லை.
    //This blog is open to invited readers only//என்று வருகிறது.

    பதிலளிநீக்கு