வியாழன், 10 நவம்பர், 2011

எதற்கெடுத்தாலும் புலம்பாதீர்கள்


சிலர் எதற்கெடுத்தாலும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். “ நான் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அது தவறாகவே நடக்கிறது. எனக்கு ராசியில்லை”  என்பார்கள்.

சிலர், “அவனுக்கு அந்தக்காலத்தில் நான்தான் வேலை வாங்கிக்கொடுத்தேன். இப்போது பெரிய மேனேஜர் ஆயிட்டான். என்னைப் பார்ப்பதேயில்லை”, என்று புலம்புவார்கள்.

இந்தப் புலம்பல்கள் அவர்களின் மனோநிலையைக் காட்டுகிறது. மனதில் தெளிவும் உறுதியும் உள்ளவர்கள் இந்த மாதிரி புலம்பிக்கொண்டு இருக்க மாட்டார்கள். வாழ்க்கையின் நோக்கம் என்ன? நம்மால் என்ன சாதிக்க முடியும்? என்ற தெளிவுடன் அவர்கள் வாழ்க்கையில் முன்னே போய்க்கொண்டு இருப்பார்கள்.

இந்த உலகத்தில் பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி குண அமைப்புடன்தான் பிறக்கின்றன. உடம்பு அமைப்பில் அந்தந்த தேசத்திற்கு உண்டான மாறுதல்கள் இருக்கும். அது தவிர எல்லோருடைய மூளையும் எந்த விதமான எண்ணங்களோ, குணங்களோ இல்லாமல்தான் இருக்கும்.

அவர்கள் வளர வளர அவர்களின் குணபேதங்கள் வெளியில் தெரிய வருகின்றன. இந்த குணபேதங்களுக்கு பல காரணிகள் இருக்கலாம். அவர்களின் மரபணுக்கள், வளர்ந்த, வளர்க்கப்பட்ட சூழ்நிலை ஆகியவை முக்கிய பங்கு ஆற்றுகின்றன. ஆனால் அவைகளின் மேல் அந்த மனிதனுக்கு ஒரு காலகட்டம் வரையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. அவன் சுயமாக சிந்திக்கத் தொடங்கும்போதுதான் அவனுக்கென்று ஒரு சுய சூழ்நிலை உருவாகிறது.

அதற்குப் பிறகு அவன் தன்னை ஆராய்ந்து, தான் சென்று கொண்டிருக்கும் பாதை சரிதானா என்று முடிவு செய்யவேண்டும். இந்தக் காலகட்டத்தில்தான் ஒருவனுடைய குணம் நிலைபெறுகிறது.  இதன் அடிப்படையில்தான் ஒருவன் வளர்ச்சியோ அல்லது தாழ்ச்சியோ அடைகிறான். ஆகவே ஒருவன் தன்னுடைய நிலைக்கு தானே காரணம் என்ற அறிவைப் பெற்றால், பிறகு அவனுக்குப் புலம்புவதற்கு காரணம் கிடையாது.

புலம்புவதினால் ஒருவனுடைய நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இதை உணர்ந்தவனே அறிவாளி. மற்றவர்கள் என்ன என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

16 கருத்துகள்:

  1. ////வாழ்க்கையின் நோக்கம் என்ன? நம்மால் என்ன சாதிக்க முடியும்? என்ற தெளிவுடன் அவர்கள் வாழ்க்கையில் முன்னே போய்க்கொண்டு இருப்பார்கள்.////

    அற்புதமான வரிகள்

    பதிலளிநீக்கு
  2. என் தந்தை அடிக்கடி சொல்வார் காலில் செருப்பில்லாமல் நடக்கிறேனெ என்று கவலைப்படாமல் காலே இல்லாதவனைப் பார்த்து சந்தோஷப் பட்டுக்கொள் என்று. நீங்களும் அதைத் தான் சொல்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  3. "புலம்பல்கள்" னே ஒருவர் வலைப்பூ வைத்திருக்கிறார். ஒரு கதை போட்டியை வைத்து யார் வெற்றி பெறுவார்கள் என்று எல்லோரையும் புலம்ப வைத்து விட்டார். இன்று முடிவு

    பதிலளிநீக்கு
  4. எங்கள் யூகத்திற்கே விட்டுவிட்டது, தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  5. அருமையா தகவலைத் தந்தீர்கள் ஐயா .மனதில் வலிமை குன்றிப் போகும்போதுகூட இந்தப் புலம்பும் மனோபாவம் தானாக வர வாய்ப்புகள் அதிகம் இல்லையா?...எந்தக் குணாதிசையத்தையும் மனிதன் சீர்தூக்கிப்பார்த்து ஆராய்ந்து திருதிக்கொள்வதால் நல்லபடியாக வாழமுடியும் என்று உறுதியாகச் சொன்ன உங்கள் கருத்து அருமை!...மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .....

    பதிலளிநீக்கு
  6. //அம்பாளடியாள் said...
    அருமையா தகவலைத் தந்தீர்கள் ஐயா .மனதில் வலிமை குன்றிப் போகும்போதுகூட இந்தப் புலம்பும் மனோபாவம் தானாக வர வாய்ப்புகள் அதிகம் இல்லையா?...எந்தக் குணாதிசையத்தையும் மனிதன் சீர்தூக்கிப்பார்த்து ஆராய்ந்து திருதிக்கொள்வதால் நல்லபடியாக வாழமுடியும் என்று உறுதியாகச் சொன்ன உங்கள் கருத்து அருமை!...மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .....//

    "கீழே விழுவது திரும்பவும் எழுவதற்காகவே" என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கீழே விழுந்தவன் எழுந்திராமல் அப்படியே இருந்தானானால் என்ன நடக்கும்? அவன் அங்கேயே அப்படியே கிடக்கவேண்டியதுதான்.உலகம் அவனை மறந்துவிடும்.

    இதை அனைவரும் உணர்ந்து, தோல்வியே வெற்றிக்கு படிக்கல் என்று முன்னேறவேண்டும்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா,
    நலமா இருக்கிறீங்களா?

    புலம்பல்களால் எதனையும் சாதிக்க முடியாது எனும் உண்மையினையும் ஒரு மனோ நிலை அடிப்படையில் புலம்புவோரையும் பற்றிய அருமையான விளக்கப் பத்வினைத் தந்திருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  8. நல்ல கருத்துகள் பொதிந்த கட்டுரை. எனினும் புலம்புவதால் ஒன்றும் ஆகாது என புலம்புவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஐயா?

    பதிலளிநீக்கு
  9. //V.Radhakrishnan said...
    நல்ல கருத்துகள் பொதிந்த கட்டுரை. எனினும் புலம்புவதால் ஒன்றும் ஆகாது என புலம்புவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஐயா?//

    அது தற்பெருமை என்னும் குற்றத்தின் பாற்படும். அந்தக் குற்றத்தை நான் செய்ய மாட்டேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  10. //V.Radhakrishnan said...
    நல்ல கருத்துகள் பொதிந்த கட்டுரை. எனினும் புலம்புவதால் ஒன்றும் ஆகாது என புலம்புவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஐயா?//

    இதுதான் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் உத்தி. தீட்டிய மரத்திலேயே பதம் பார்ப்பது என்றும் சொல்லலாம், ராதாகிருஷ்ணன். உங்கள் வார்த்தை ஜாலம் சிலிர்க்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. //நிரூபன் said...
    வணக்கம் ஐயா,
    நலமா இருக்கிறீங்களா?

    புலம்பல்களால் எதனையும் சாதிக்க முடியாது எனும் உண்மையினையும் ஒரு மனோ நிலை அடிப்படையில் புலம்புவோரையும் பற்றிய அருமையான விளக்கப் பத்வினைத் தந்திருக்கிறீங்க.//

    வாங்க நிரூபன், நலமாக இருக்கிறேன்.

    குறிப்பாக வயதானவர்கள் புலம்புவது அதிகம். அதை எனக்கு நினைவூட்டவே இந்தப் பதிவு. வயதான காலத்தில் பல சங்கடங்கள் வரத்தான் செய்யும். அதை பொறுத்துக் கொள்வதே மன முதிர்ச்சி என்று நான் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. //இதுதான் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் உத்தி. தீட்டிய மரத்திலேயே பதம் பார்ப்பது என்றும் சொல்லலாம், ராதாகிருஷ்ணன். உங்கள் வார்த்தை ஜாலம் சிலிர்க்க வைக்கிறது.//

    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா. நான் எனக்குத் தெரிந்தவர்களிடம் எதுக்கு இப்படி கவலைப்படறீங்க, வருத்தப்படறீங்க வாழ்க்கையை அதன் அதன் போக்கில் வாழ பழகுங்கள் அப்படின்னு புலம்பிட்டே இருப்பேன்,அதனாலதான் அப்படி ஒரு கேள்வி வந்தது. :)

    பதிலளிநீக்கு
  13. V.Radhakrishnan said...
    //அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா. நான் எனக்குத் தெரிந்தவர்களிடம் எதுக்கு இப்படி கவலைப்படறீங்க, வருத்தப்படறீங்க வாழ்க்கையை அதன் அதன் போக்கில் வாழ பழகுங்கள் அப்படின்னு புலம்பிட்டே இருப்பேன்,அதனாலதான் அப்படி ஒரு கேள்வி வந்தது. :)//

    நன்றி, ராதாகிருஷ்ணன். என்னைத்தான் போட்டுத் தாக்கறீங்களோன்னு நெனச்சுட்டேன். இப்ப கிளியர் ஆயிடுச்சு. நாம ரெண்டு பேருமே அந்தக் கேஸுன்னு? எல்லோரும் பொலம்பராங்கன்னு பொலம்பரவங்களுக்கு, போர்னு பேருங்க.

    பதிலளிநீக்கு
  14. நல்ல கருத்து பதிவு ஐயா.
    //புலம்புவதினால் ஒருவனுடைய நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இதை உணர்ந்தவனே அறிவாளி///
    ஐயா நான் சிறுவயதில் இருந்து எப்போதும் புலம்பியதில்லை. அப்ப நான் ரொம்ப பெரிய அறிவாளிதானே ஐயா

    பதிலளிநீக்கு