திங்கள், 21 அக்டோபர், 2013

தமிழ்மணம் ரேங்க்கும் நானும்.


பள்ளியில் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் கல்வித்தரத்தை ரேங்க் மூலமாகக் கணிக்கிறார்கள் அல்லவா? ஒருவன் ஒன்றாவது ரேங்க் வாங்கியிருந்தால் அவன் அந்த வகுப்பில் முதல் மாணவன் என்று சொல்கிறோம். அவனே ஒரு பாடத்தில் ஒரு மார்க் வாங்கியிருந்தால் என்ன சொல்வோம்? அவன் படிப்பில் மிகவும் பின் தங்கியவன் என்று தயங்காமல் சொல்வோம்.

இந்த எண் "1" என்பது என்ன பாவம் பண்ணியது? ஒரு சமயம் அதைப்போற்றுகிறோம், இன்னொரு சமயம் அதைத் தூற்றுகிறோம். இது எனக்குச் சரியாகப் படவில்லை. எப்போதும் நாம் ஒரே மாதிரியான கொள்கையை வைத்திருக்கவேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். அதாவது எதுவாக இருந்தலும் எண்ணிக்கை கூடினால் அது நல்ல விஷயம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது என் கொள்கை.

ஒருவனிடம் இப்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கின்றன. அடுத்த வருடம் அவனிடம் 200 கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தால் என்ன சொல்வோம்? அவன் வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்று சொல்வோம் அல்லவா?

யாருக்காவது இந்த கொள்கையில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள். அடுத்த பதிவர் மகாநாட்டில் இதை ஒரு பட்டிமன்றமாக நடத்தி விடுவோம்.

நிற்க, இந்த டாபிக் எதனால் விவாதத்திற்கு வந்ததென்றால்,  தமிழ்மணம் திரட்டியில் என்னுடைய பதிவின் ரேங்க் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. ஒரு வருடத்திற்கு முன் 13 ஆக இருந்தது இன்று 35 ஐ எட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த அபரிமித வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என் சுகஜீவன வாழ்க்கை முறையே.

மிகவும் அத்தியாவசியமான காரியங்களை, அதாவது அந்தக் காரியத்தைச் செய்யாவிட்டால் உயிர் போய்விடும் அல்லது பார்யாள் பூரிக்கட்டையைக் கையிலெடுப்பாள் என்றால்தான் அந்தக் காரியத்தைச் செய்வேன். மற்ற நேரங்களில் இன்ன இன்ன காரியங்கள் செய்யவேண்டும் என்று பேப்பரில் லிஸ்ட் போட்டு டேபிளின் மேல் வைத்திருப்பேன்.

ஏதாவது ஒரு நாள் திடீரென்று வேகம் வரும். அப்போது அந்த லிஸ்டிலுள்ள வேலைகளை முடித்து விடுவேன். என்னுடைய இந்தக் கொள்கையின் பிரகாரம் ஒரு காலத்தில் பதிவுகள் நிறைய போட்டேன். அப்போது தமிழ்மணம் ரேங்க் 13 வரை சென்றது. இப்போது நான் என்னுடைய இயற்கைக் குணத்திற்கு வந்து விட்டபடியால் பதிவுகள் போடுவது வாரத்திற்கு ஒன்று என்றாகி விட்டது.

இப்போது தமிழ்மணம் ரேங்க் 34 ஆக இருக்கிறது. இது இன்னும் கூடுதல் ஆகலாம். ஆனால் இந்த ரேங்கினால் என்ன பயன் என்று யோசித்தால் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் என் சுகஜீவன வாழ்க்கைச் சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதில் சங்கடம் ஒன்றுமில்லை.

கடைசியாக ஒரு வார்த்தை. இந்த சுகஜீவனம் என்றால் என்ன என்று சொல்லவேண்டுமல்லவா. எங்கள் ஊரில் கடன் வாங்கும்போது ஒரு பிராமிசரி பத்திரம் எழுதுவார்கள். அதில் கடன் வாங்குபவர் பெயர், அவருடைய தகப்பனார் பெயர், செய்யும் வேலை, குடியிருக்கும் விலாசம் எல்லாம் எழுதுவார்கள். ஒரு வேலையும் இல்லாமல் இருப்பவர்களுக்கு "சுகஜீவனம்" என்று எழுதுவார்கள். அதற்கு அர்த்தம் கொச்சைத்தமிழில் "தண்டச்சோற்று தடிராமன்" என்பதாகும். ஆங்கிலத்தில் RKD = Rice Killing Department என்றும் சொல்வார்கள்.

54 கருத்துகள்:

  1. நல்லது. ஆண்களாக பிறந்தால் வாழ்க்கையின் எதாவதொரு கட்டத்தில் சுகஜீவனம் வாய்க்கிறது.

    ஆனால்.......... பெண்களுக்கோ?

    எப்போ எப்போ எப்போ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அம்மா! பெண்களுக்கு விடிவே கிடையாதா?
      அமெரிக்காவிலும் இந்த நிலைதானா?
      ஆனால் ஒன்று. சுக ஜீவனம் என்று நினைத்தால் சுக ஜீவனம்.
      பெண்கள் நாம் எத்தனை சுக ஜீவனங்களுக்கு வழி வகுக்கிறோம் என்ற நினைப்பே நமது மனதில் உண்மையான சுக ஜீவனவாசி நாம்தான் என்ற எண்ணத்தை உண்டாகிவிடுகிறதே
      ஒரு வேலை இந்த மாதிரி எண்ணங்களிலேயே நாம் சந்தோஷப்பட்டு விடுவதால்தான் நாம் இப்படியே இருக்கிறோமோ என்னவோ.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
    2. பெண்கள் நிலை மிகவும் வருத்தத்திற்கு உரியதுதான். ஆண்களாகிய நாங்கள் இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் என்று ஒரு பதிவில் கூறுங்களேன்.

      இரண்டாவது அப்படி நாங்கள் கரண்டி பிடிக்க ஆரம்பித்தால் உங்கள் சாம்ராஜ்யம் பறிபோன மாதிரி சீன் போடக்கூடாது.

      நீக்கு
  2. /// இந்த ரேங்கினால் என்ன பயன் என்று யோசித்தால் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது... /// இருந்தாலும் மனதில் உள்ள சுகஜீவன் சங்கடப்படுகிறது... விரைவில் முன்னேற வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகஜீவன் அதை conscience என்றும் சொல்லலாம். அதுதான் மிகவும் தொந்தரவு கொடுக்கிறது. அதை அழித்து விட்டால் அப்புறம் ஆனந்தம், ஆனந்தம், பேரானந்தந்தான்.
      மார்க் ட்வைன் இதைப்பற்றி எழுதிய கதை ஒன்று ரொம்ப நாளைக்கு முன்பு படித்த ஞாபகம்.

      நீக்கு
  3. தமிழ்மணம் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் ஐயா... சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... உடல்நலமே பிரதானம்... மற்றவை அப்புறமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் செய்வதை விரும்பி செய்தால் நாம் வேலை என்ற ஒன்றை செய்யவே வேண்டியதில்லை ஏனென்றால் நாம் செய்வது எல்லாமே நமது ஹாபி ஆகி விடும் (If you like what you do, you never have to work even a single day pf your life) அப்புறம் உடல் தொந்திரவாவது ஒன்றாவது. மனதுதானே பலவற்றுக்கும் காரணம். எங்கள் அய்யா 78 வயது முதியவர் அல்ல 78 வயது இளைஞர். துள்ளி குதித்து வாருங்கள் அய்யா.
      கிள்ளி கொடுக்காதீர்கள்
      தள்ளி போடாதீர்கள்
      அள்ளி கொடுங்கள் பதிவுகளை

      சேலம் காயத்ரி

      நீக்கு
  4. சுகஜீவனம் என்பதின் பொருள் அறிந்து வாய்விட்டு சிரித்தேன். புதிய சொல்லாடலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. ஒரு டஜன் என்பதை "பத்தோடு ஒன்று பதினொன்று அத்தோடு இன்னொன்று பன்னிடிரண்டு" என்று விரிவாக, மிக வி ...ரி....வா....க... சொல்லலாம். அது மாதிரி "தமிழ் மணம் ரேங்க் 13இல் இருந்து 34 ஆகிவிட்டது. காரணம் என்னுடைய பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதுதான்" என்று சொல்லாமல் இவ்வளவு சுவையாகவும் சொல்லாம் என்று காட்டிய அய்யா அவர்களுக்கு ஒரு அப்ளாஸ்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  6. சுக ஜீவனம் உங்களுக்கு ஆனால் உங்கள் பதிவுகளை படித்து ரசித்துகொண்டிருந்த எங்களுக்கு இப்போது பதிவுகள் குறைந்ததால் கஷ்ட ஜீவனம்தான். கூடிய சீக்கிரமே உங்கள் பார்யாள் பூரிக்கட்டை எடுக்ககடவது என்று வேண்டுகிறோம். அப்போது பதிவுகள் அதிகமாகுமல்லவா

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்யாள் பூரிகட்டையை எடுக்காவிட்டால் நாங்கள் எடுத்து விடுவோம் எனவே அய்யா அவர்களே தயவு செய்து பதிவுகளை அதிகபடுத்துங்கள். உங்கள் மண்டை எனும் சட்டியில் இல்லாததா என்ன?

      சேலம் காயத்ரி

      நீக்கு
  7. ரேங்க் 13இல் இருந்து 34 ஆகிவிட்டால் எங்களுக்கு அந்த காலத்தில் எல்லாம் அடி விழும் திட்டு விழும். அடுத்த தேர்வில் நன்கு படித்து ரேங்க் மீண்டும் 13 ஆக்குவோம். அது போல உங்களுக்கு அடி கிடைக்க வேண்டுமா? கூடிய சீக்கிரமே அடி கிடைப்பதற்குள் ரேங்க்கை பழைய மாதிரி 13க்கு (அல்லது அதை விட குறைவாக கொண்டு வந்தாலும் நல்லதே) கொண்டு வரவும்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலடியைப் பிள்ளை பெற்றுக் கொடு என்பது மாதிரி கேட்கிறீர்கள். நான் என்ன செய்ய? சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்? எனக்கு குழு சேரவில்லை. அவ்வளவுதான்.

      நீக்கு
    2. குழு சேர என்ன செய்யவேண்டும் என்று கூறுங்களேன்.
      செய்து விடுவோம். சில சமயங்களில் lobbying செய்தால்தான் வெற்றி பெறமுடியும் என்று நினைக்கிறேன்
      "குழு சேர " என்று ஒரு பதிவு போட்டுவிடுங்கள்

      சேலம் காயத்ரி

      நீக்கு
  8. கூடிய சீக்கிரமே உங்களுக்கு சரஸ்வதி கடாட்ஷம் கிடைத்து மீண்டும் ரேங்க் 13 பெற பிராப்தி ரஸ்து

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசைபடுவதுதான் படுகிறீர்கள் அய்யாவுக்கு முதல் ரேங்க் வர பிரார்த்தனை செய்யுங்களேன். Aim at the moon atleat you can reach your Grandma's nose என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது போல முதல் ரேங்க் இலக்கை நோக்கி நடை போட்டால் 13 கட்டாயம் சித்திக்கும்

      சேலம் காயத்ரி

      நீக்கு
  9. சுக ஜீவனம் என்றால் இப்படி ஒரு அர்த்தம் உண்டோ?
    நம் தமிழ் மொழியில் இப்படித்தான் "இடக்கரடக்கல்" என்ற முறையில் நல்ல முறையிலேயே அனைத்தையும் சொல்லி வந்திருக்கிறார்கள் - உதாரணம் - "கால் கழுவி வந்தேன்", விளக்கு மங்கலாக ஒளிர்வதை "கூடப்பற்றுகிறது" எனக்கூறல், விளக்கு அணைப்பதை "விளக்கை குளிர்வித்தான்" என்பது.
    வேலையத்த வெட்டி பயலுக்கும் இப்படி ஒரு அடை மொழியை கொடுத்து மனசு நோகாமல் வைத்துகொண்டிருக்கிறார்கள்.
    ஆங்கிலத்தில் இதை euphemism என்பர்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது அரசியல்வாதிகள் / சினிமா நடிக நடிகைகள் இந்த இடக்கரடக்கல் என்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ என்று தோன்றுகிறது. வேலையத்த வெட்டி பயலை சுக ஜீவனம் என்று அடைமொழி கொடுப்பது போல், தனக்கு தானே டாக்டர் பட்டம் (ஒருவருக்கே எத்தனை டாக்டர் பட்டங்கள்), தங்க தாரகை பட்டம், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், அல்டிமேட் ஸ்டார்... இப்படியே பொய் கடைசியில் பவர் ஸ்டார் என கொடுத்துக்கொண்டு தாங்க முடியவில்லை.

      பின்னூட்ட ஸ்டார் (எனக்கு நானே கொடுத்து கொண்ட பட்டம்)
      சேலம் குரு

      நீக்கு
    2. "பதிவுப்புலி" இந்தப் பட்டம் எனக்கு நல்லாயிருக்குமுங்களா?

      நீக்கு
    3. அந்த காலத்தில் நாங்கள் ஜோக்காக கணக்கில் பூஜ்யம் வாங்குபவனையும் கணக்குல புலி என்று சொல்வோம். ஏனென்றால் புலிக்கும் கணக்கு தெரியாது இவனுக்கும் கணக்கு தெரியாது . அந்த மாதிரி பதிவுப்புலி என்றால் எங்களுக்கு வேண்டாம்.
      சேலம் காயத்ரி

      நீக்கு
  10. //இப்போது தமிழ்மணம் ரேங்க் 34 ஆக இருக்கிறது. இது இன்னும் கூடுதல் ஆகலாம். ஆனால் இந்த ரேங்கினால் என்ன பயன் என்று யோசித்தால் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் என் சுகஜீவன வாழ்க்கைச் சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதில் சங்கடம் ஒன்றுமில்லை.//
    உங்களுக்கு வேண்டுமானால் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்
    அண்ணல் எங்களுக்கு? உங்கள் பரம ரசிகர்களாகிய எங்களுக்கு பெருத்த நஷ்டமாயிற்றே. எனவே உங்கள் சுக ஜீவன வாழ்க்கைச் சித்தாந்தத்தை கொஞ்சம் ஒதுக்கிவைத்து விட்டு எங்களை சந்தோஷபடுத்தும் நோக்கத்தில் பதிவுகளின் எண்ணிக்கையை அதிகபடுத்துங்களேன்

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  11. நான் இப்போது தான் தமிழ்மணத்தில் இணைந்திருக்கிறேன். நானூற்றுச் சொச்சம் கொடுத்திருக்கிறார்கள். பள்ளி நாட்களில் எனக்கு ஒன்றை விட அதிகமான ரேன்க் கொடுக்கவே மாட்டார்கள் என்பதில் மிகவும் வருந்தியிருக்கிறேன். இப்போது மனம் அமைதியடைந்துவிட்டது. (அது சரி, தமிழ்மணத்தில் ரேன்க் போடும் போர்முலா என்ன?) - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியில் முதல் ரேங்க் வாங்கும் ஆள் என்று நிரூபித்து விட்டீர்கள். ரேங்க் போடும் பார்முலா என்ன நெற்று கேட்க ஆரம்பித்து விட்டீர்களே. அதற்கு தகுந்த மாதிரி பதிவு போடலாம் என்கிற எண்ணமிருந்தால் தயவு செய்து விட்டு விடுங்கள். வாசகர்களாகிய நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்கள் மிக பெரிய வெற்றி. தமிழ் மணம் ரேங்க் எல்லாம் பின்னால்தான்.ஆமாம்
      உங்கள் பதிவு முகவரி என்ன என்று சொல்லவேயில்லையே

      சேலம் காயத்ரி

      நீக்கு
  12. ரேங்குகாக பதிவிடக்கூடாது! உங்கள் திருப்தியும் வாசகர்களின் வரவேற்பும் முக்கியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேங்க் என்பது மனிதர்களாக (பதிவர்களாக ?) உருவாகியது.
      ஆரம்பிக்கும் பொது ரேங்க்குக்காக பதிவிட ஆரம்பிக்க வில்லையே. உங்கள் மன சந்தோஷத்துக்காகவும் எங்களை போன்ற ரசிகர்களின் சந்தோஷத்துக்காகவும்தானே பதிவிட ஆரம்பித்தீர்கள். நாங்கள் கொடுக்கும் ரேங்க் இதோ numero uno இனி நீங்கள்தான்.
      மக்கள் குரலே மகேசன் குரல் அல்லவா. எனவே மனம் தளர விடாமல் பதிவிட்டுக்கொண்டே இருங்கள்.
      ஒரு சின்ன நிகழ்ச்சியையும் இவ்வளவு நகைசுவையுடன் யதார்த்தமாக சொல்லும் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

      திருச்சி தாரு

      நீக்கு
  13. நீங்க சொல்றது ரொம்ப கரெக்டு! நீங்கள் ரொம்ப உயரத்திற்குப் போகப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம், ஐயா!
    நான் உங்களை விட உயரத்தில் இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேங்க் குறைந்தது 100 ஆக வரவேண்டும். நூற்றுக்கு நூறு என்று சொல்லிக்கொள்ளலாம் பாருங்கள்.

      நீக்கு
  14. இது ஒன்றும் பெரிய விசயமே இல்லை ஐயா .உங்களைத் தொடர்வோர்
    பட்டியலில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டவர் தாங்கள் .சிறந்த
    எழுத்தாளரும் கூட அப்படி இருக்கையில் என்னைப் பொறுத்த வரையில்
    தமிழ் மணத்தில் தாங்கள் எப்போதும் முதலிடம் தான் .நண்பர்களைக்
    கூட்டுச் சேர்த்து விழுந்த ஓட்டுக்களால் கிட்டிய வெற்றி என்பது நற்
    கருத்துள்ள படைபிற்குத் தகுந்த சான்றிதழே இல்லை .என் தளத்தில்
    எந்தக் கருத்தும் போடாமல் "தமிழ் மணம் இரண்டு" என்று கருத்திட்டவரும் உண்டு :)))))
    நான் அன்று சிரித்த சிரிப்புக்குள் அடங்கிய நகைபிற்கு எல்லை அற்றுப் போக
    சூடன ஓர் ஆக்கம் அவர்களால் இலவசமாக என் மண்டையில் வந்து உதித்தது
    சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு நக்கீரர் மாதிரி பொங்கி எழுந்து போட்ட கவிதையோடு போனது
    எனக்குள் இருந்த தமிழ் மண ஓட்டு விவகாரம் புஸ்வானம் மாதிரி :)))))

    எழுதுங்கள் ஐயா தங்களின் சிறந்த படைப்புக்களைக் காணும் கண்கள்
    மகிழ்ந்திடவேனும் .மனதார வாழ்த்துகின்றேன் தங்களைப் போன்ற
    சிறந்த படைப்பாளிகள் மென்மேலும் தொடர்ந்து எழுத்துலகில் வலம்
    வர வேண்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  15. // ஒரு வேலையும் இல்லாமல் இருப்பவர்களுக்கு "சுகஜீவனம்" என்று எழுதுவார்கள். //

    எப்போதுமே உங்கள் நகைச்சுவை கட்டுரைகளை திரும்பத் திரும்ப படிப்பேன். இந்த பதிவும் அவ்வாறே. பல சொலவடைகள் தமிழில் உண்டு. உஙகள் மூலம் "சுகஜீவனம்" பற்றி தெரிந்து கொண்டேன்.
    ஒரு சின்ன சந்தேகம் பென்சன் வாங்குபவர்களையும் "சுகஜீவனம்" என்று சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் சந்தேகம் என்ன? நிச்சயம் அவர்கள்தான் சுகஜீவனம் தகுதி பெற்றவர்கள். எப்போதுமே பூர்வீக சொத்திலிருந்து தானாக வருமானம் வந்து அதில் ஜீவித்திருப்பவர்களைத்தான் "சுகஜீவனம்" என்று சொல்வார்கள். சும்மா ஊர் சுற்றிக்கொண்டு திரிபவர்களுக்கெல்லாம் எவன் புரோநாட்டில் கடன் கொடுப்பான்?

      நீக்கு
  16. அதையும் பாத்துக்கிட்டு இருக்கீங்களே? நா அந்த பக்கம் போனதே கிடையாது. ஏதோ எழுதுனோமா பப்ளிஷ் பண்ணோமான்னு இருந்துருவேன். கருத்துரை வந்தா பதில் போடுவேன். இல்லன்னா சரின்னு விட்றுவேன்.... ஒரு கருத்துரை கூட இல்லாம இருந்த பதிவுகள் ஏராளம், ஏராளம்.... இந்த லட்சணத்துல ரேங்க பத்தி எங்க கவலைப்படறது?

    சுகஜீவனம்னு கேள்விப்பட்டதில்லை..... எங்க பக்கத்துல தெண்டச் சோறும்பாங்க..... ஒழைக்காதவன் சாப்டக் கூடாதுலேன்னும் கேட்ருக்கேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ப நம்ம கவர்ன்மென்ட் இலவசமாக் கொடுக்கிறது எல்லாம் தப்புங்களா?

      நீக்கு
  17. சுக ஜீவன சுவாரஸ்ய விளக்கம்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. சுகஜீவனம் என்ற தலைப்பில் பாலகுமாரன் ஒரு நாவல் எழுதியிருந்த நினைவு. :))))

    தமிழ்மணம் கொஞ்ச நாட்கள் முன்பு நாங்கள் 20 மற்றும் 19 என்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தோம். அது மேலே ஏறவும் மறைத்து, மறந்து விட்டோம்!

    பதிலளிநீக்கு
  19. நாளுக்கு நாள் அதிக ரேங்க் பெறுவதில் தாங்கள் முன்னனியில் இருப்பதற்கு வாழ்த்துகள். ;)

    எனக்கு அந்தக்கவலையே இல்லை.

    தமிழ்மணம், இண்ட்லி போன்ற அனைத்துத்திரட்டிகளிலிருந்து என்னை விலக்கிக்கொண்டு இரண்டு வருடங்கள் ஆகி விட்டன.

    சுகஜீவனத்திற்கான விளக்கம் ரஸிக்கும்படியாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. பதிவெழுத வருபவர்களின் ஆரம்ப காலங்களில் தர வரிசை பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். 6 இல் இருதேன். இப்போது நீங்கள் சொன்னதும்தான் கவனித்தேன் 10 இருக்கிறேன்.
    எதையும் சுவையாக சொல்ல முடியும் என்பதற்கு உதாரணம் இந்தப் பதிவு

    பதிலளிநீக்கு
  21. சுக ஜீவனத்திற்கு விளக்கம் அருமை! நான் கூட முதலில் ரேங்க் அது இது என்று பார்த்துக் கொண்டிருந்தேன்! இப்போது கவலைப்படுவது இல்லை!

    பதிலளிநீக்கு
  22. ரேங்க் எல்லாம் நமக்குத் தேவையில்லை...
    உங்களது எழுத்துக்களைத் தொடருங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சுக ஜீவன வாசியாக இருப்பதால் இந்த மாதிரி வெட்டி வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். வேலையற்ற அம்பட்டன் கதை தெரியுமல்லவா?

      நீக்கு
  23. அப்பாடா, நானும் ஒரு 35 பின்னூட்டம் தேத்தி விட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  24. "'சம்சாரம், சம்சாரம், சகல தர்மசாரம்
    சுகஜீவன ஆதாரம் ''

    இந்த பாட்டுக்கு இப்பதான் அர்த்தம் புரிஞ்சுது.

    பதிலளிநீக்கு
  25. விரைவில் மார்க் ட்வைன் எழுதிய கதை, வேலையற்ற அம்பட்டன் கதை இரண்டையும் இரண்டு பதிவுகளாகப் போடுங்கள்.

    பதிலளிநீக்கு
  26. ஏங்க.... ஐயா.... இப்படி கூட பதிவு போட்டு தேத்தலாமா....?
    புரிஞ்சிக்கிட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நீங்கள் எதைபற்றி எல்லாம் பதிவு போடுவீர்கள்.
      அப்படியே போட்டாலும் இதை போன்று நகைசுவையாக போடமுடியுமா என்று சந்தேகம்தான்

      சேலம் காயத்ரி

      நீக்கு
    2. பள்ளியில் முதல் ரேங்க் வாங்கும் ஆள் என்று நிரூபித்து விட்டீர்கள். ரேங்க் போடும் பார்முலா என்ன நெற்று கேட்க ஆரம்பித்து விட்டீர்களே. அதற்கு தகுந்த மாதிரி பதிவு போடலாம் என்கிற எண்ணமிருந்தால் தயவு செய்து விட்டு விடுங்கள். வாசகர்களாகிய நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்கள் மிக பெரிய வெற்றி. தமிழ் மணம் ரேங்க் எல்லாம் பின்னால்தான்.ஆமாம்
      உங்கள் பதிவு முகவரி என்ன என்று சொல்லவேயில்லையே

      சேலம் காயத்ரி

      நீக்கு
  27. சுகஜீவன் விளக்கம் அருமை அய்யா. இப்படி ஒரு பதிவைத் தந்து அனைவரையும் மகிழச் செய்தமைக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  28. //ஆங்கிலத்தில் RKD = Rice Killing Department என்றும் சொல்வார்கள்.//
    ஒரே தமாசுதான் போங்க.
    rice சாப்பிடாத ஆங்கிலேயன் தடி தாண்டவராயன்களை rice killing department என்கிறான்.
    ஏன் கோதுமை கில்லிங் டிபார்ட்மெண்ட் , பிரெட் கில்லிங் டிபார்ட்மெண்ட் என்று சொல்லாமல் ரைஸ் கில்லிங் டிபார்ட்மெண்ட் என்று சொல்கிறான் என்று யோசித்துப்பார்த்தால் ஒருவேளை இப்படிப்பட்ட தடி தாண்டவராயன்களை இங்குதான் முதன் முதலாக பார்த்தானோ என்னவோ. அதனால்தான் நாம் சாப்பிடும் ரைசுக்கு கேடு என்று நினைத்து ரைஸ் கில்லிங் டிபார்ட்மெண்ட் என்று நாமகரணம் சூட்டிவிட்டான் என்று நினைக்கிறேன்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  29. சுக ஜீவனம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை தெளிவாக கோனார் தமிழ் உரை ரேஞ்சுக்கு விளக்கியதிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு