திங்கள், 28 ஏப்ரல், 2014

பேனாக்களும் நானும்


பேனாக்கள் வளர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. பழங்காலத்தில் தமிழ் நாட்டில் பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள் என்று கேட்டிருக்கிறோம். நான் அப்படி எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பார்த்திருக்கிறேனே தவிர அப்படி எழுதுபவர்களைப் பார்த்ததில்லை. இந்தப் பழக்கம் தமிழ் நாட்டில் மட்டும்தான் இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்குதான் பனை மரங்கள் உண்டு. மற்ற தேசங்களில் எப்படி எழுதினார்க்ள என்பதற்கு ஒரு ஆராய்ச்சிதான் செய்யவேண்டும். அந்த ஆசை எனக்கு இப்போது இல்லை.


நான் ஒரு முறை காரைக்குடிக்குப் போயிருந்தபோது அங்கு செட்டிநாட்டு பழம் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்குப் போயிருந்தேன். பல கலைநயம் பொருந்திய பழங்காலத்து பொருட்கள் அங்கு இருந்தன. அவை செட்டிநாட்டு நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் பொருட்கள். அதில் ஒரு எழுத்தாணியையும் பார்த்தேன். நான் அதற்கு முன் எழுத்தாணியைப் பார்த்தது இல்லை. அது ஒரு பக்கம் கத்தியும் மற்றொரு பக்கம் ஒரு கூரான ஊசியும் கொண்டு ஒரு பேனாக் கத்தியைப் போல் இருந்தது. இது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டதற்கு அவர் இதுதான் எழுத்தாணி என்று சொன்னார்.


உடனே அதன் விலையைக் கேட்டு அதை வாங்கிக்கொண்டேன். நான் ஒரு கம்பனாக மாறிவிட்டதாக ஒரு கற்பனை தோன்றியது. பழங்காலத்து நாகரிகத்தை பேணிக்காக்கும் ஒரு பெருமிதம் மனதில் உண்டானது. இப்போதும் அதை என் வீட்டு ஷோகேசில் வைத்திருக்கிறேன். பல முறை அதை என் சகதர்மிணி தூக்கிப் போடப் பார்த்தும் என் கவனத்தினால் அது காப்பாற்றப்பட்டு இன்று வரை தமிழனின் நாகரிகச் சின்னமாக, நானும் ஒரு தமிழன் என்று பறை சாற்றிக்கொண்டு இருக்கிறது.

தொடரும்...

25 கருத்துகள்:

  1. என் பதிவைப் படிக்கும் அன்பான நேயர்களுக்கு,
    காலம் என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சோர்வும் அதில் ஒன்று. பதிவுலகத்தை விட்டு விடக்கூடாதென்ற நோக்கத்தில் பதிவுகள் இடுகின்றேன். அவை தரத்தில், அளவில், குறைகள் உள்ளனவாக இருப்பதை நானே உணர்கிறேன். ஆனால் என்னால் முடிந்ததை செய்து கொண்டு வருவேன்.

    மற்றவர்கள் தளத்தில் என்னால் அதிகமாக பின்னூட்டம் இட முடியாததிற்கு வருந்துகிறேன். நேயர்கள் பொருத்தருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அவசரத்துக்குக் காது குடைய, முதுகு சொரிய உதவும்! :))))

    //ஏனென்றால் இங்குதான் பனை மரங்கள் உண்டு.//

    அப்படியா? செய்தி.

    பதிலளிநீக்கு
  3. எழுத்தாணி பாதுகாக்கப்பட வேண்டிய பொருள்தான் ஐயா

    பதிலளிநீக்கு
  4. அட! எழுத்தாணியைக் கண்ணில் காமிச்சதுக்கு நன்றி:-)

    பதிலளிநீக்கு
  5. சித்ரா பௌர்ணமி அன்று வெள்ளியில் ஏடும் எழுத்தாணியும் வைத்து படைப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எழுதக்கூடிய எழுத்தாணியை இப்போதுதான் பார்க்கிறேன் உங்கள் பதிவின் மூலம். பகிர்ந்தமைக்கு நன்றி.

    //அவை தரத்தில், அளவில், குறைகள் உள்ளனவாக இருப்பதை நானே உணர்கிறேன்.//

    உங்கள் பதிவு அளவில் குறைந்திருக்கலாம். ஆனால் தரத்தில் அல்ல. பதிவிடுவதை தொடருங்கள். தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. விடுவேனா, பனை ஓலைகள் கொண்டு வந்து அதை நறுக்கி, காயவைத்து இந்த எழுத்தாணியால் எழுத முயன்றேன். பனை ஓலைகள் கிழிந்து போயின. வீடு முழுவதும் பனை ஓலைக் குப்பைகள் நிறைந்தன. வீட்டுக்கார அம்மாவிடம் வாங்கிக்கட்டிக் கொண்டேன். எழுத்தாணியால் எழுத தனி பயிற்சி வேண்டுமென்று உணர்ந்தேன்.

      நீக்கு
  7. நீங்கள் தொடர்ந்து பகிருங்கள் ஐயா... எங்களின் ஆதரவு என்றும் உண்டு...

    பதிலளிநீக்கு
  8. //மற்றவர்கள் தளத்தில் என்னால் அதிகமாக பின்னூட்டம் இட முடியாததிற்கு வருந்துகிறேன்.//

    ஆமாம் ... ‘ரசித்தேன்’ மட்டும் தான் சொல்கிறீர்கள். எதை, ஏன் என்றெல்லாம் சொல்லி விடுவதில்லை !!! ஆனாலும் ரசித்தேனை ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. எழுத்தாணியை கணினியில் காட்சிப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  10. எழுத்தாணி.... நான் இதுவரை பார்த்ததில்லை....

    தொடர்ந்து பதிவிடுங்கள்..... தரத்தில் குறைவொன்றுமில்லை ஐயா.

    பதிலளிநீக்கு
  11. அய்யா அவர்களே
    உங்கள் பதிவுகள் எங்களுக்கு ஒரு டானிக் மாதிரி.
    அளவிலோ எண்ணிக்கையிலோ வேண்டுமானால் அவை குறைந்திருக்கலாம். ஆனால் தரத்திலோ புதுமையிலோ உங்கள் பதிவுகள் என்றும் குறைந்ததில்லை. ஆகவே உங்கள் பணி தொடரட்டும். உங்கள் சோர்வு குறைய நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் நாங்கள் செய்கிறோம். உடலளவில் தளர்வு வந்தாலும் மனதளவில் சோர்வு வர விட்டு விடாதீர்கள்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  12. //இந்தப் பழக்கம் தமிழ் நாட்டில் மட்டும்தான் இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்குதான் பனை மரங்கள் உண்டு. //

    மற்ற இடங்களிலும் பனை மரங்கள் இருக்கின்றன. ஆனால் பனை ஓலைகள் எழுத பயன்பட்டனவா என்று தெரியவில்லை. தமிழ் விக்கிபீடியாவில் பார்த்தால் " ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன." என்ற செய்தி கிடைக்கிறது.
    நாம் பனை ஓலைகளில் எழுதி பழக்கப்பட்டதனாலோ என்னவோ காகிதத்தை நாம் கண்டு பிடிக்கவில்லை. சீனாக்காரந்தன் கண்டுபிடித்தான். எளிதாக இருக்கவே காகிதம் பனை ஓலையை பின் தள்ளி விட்டது.

    பனை ஓலை தவிர கல்லில் எழுத்துக்களை செதுக்கி வைப்பது மற்றொரு வகை. இடு எல்லா நாடுகளிலும் இருந்த பழக்கம் போலிருக்கிறது. ஒரு ஆங்கில படத்தில் மோசஸ் ஆண்டவனின் பத்து கட்டளைகளை செதுக்கிய கல்லை தவறி கீழே போட்டு உடைத்து விட்டதால் பத்து கட்டளைகள் ஆகிவிட்டது. இல்லையென்றால் - கல் உடையாமல் இருந்திருந்தது என்றால் அவை இன்னும் அதிகமான் கட்டளைகளாக இருந்திருக்கும் என்று நகைச்சுவையாக கூறப்பட்டது.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  13. //பழங்காலத்தில் தமிழ் நாட்டில் பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள் என்று கேட்டிருக்கிறோம்//

    நாம் சிறு குழந்தைகளாக இருந்த போது பவுண்டன் பேனா பெரிய கௌரவ சின்னமாக கருதப்பட்டது. அதற்கு இங்க் ஊற்ற மூன்று பைசா. பேனாவின் விலையே இரண்டு அல்லது மூன்று ரூபாய்தான் இருக்கும். அதற்கு நிப் உடைந்து விட்டது என்று அப்பாவிடம் ஐந்து பைசாவும் நிப்பை உடைத்ததிற்கு நாலு அடியும் வாங்கியது ஞாபகம் வருகிறது. பிறகு பால் பாயிண்ட் பேனா வந்தது. அதிக காலம் ரீபில் வந்தாலும் ஒரு ரீபில் அப்போது 35 காசு. எனவே சிக்கனம் கருதி இங்க் பேனாதான். ஒரு காலத்தில் தேர்வுகள் எல்லாம் பால் பாயிண்ட் பேனாவால் எழுதக்கூடாது என்று சொல்லப்பட்டது.
    இப்போது யூஸ் அண்ட் த்ரோ பள்ள பாயிண்ட் பேனாக்கள் வந்து விட்டன. ரீபில்ல்களின் தரமும் உயர்ந்து விட்டது. பேப்பரை கிழிக்கும் அந்த காலத்து ரீபில், வழுக்கிக்கொண்டு பேப்பரில் ஓடும் இந்த காலத்து ரீபிலாக மறு பிறவி எடுத்தவுடன் இங்க் பேனாக்கள் சற்றே பின்தங்கி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இன்று நிப் உடைந்து விட்டால் உடனே புது பேனாதான்.

    எழுத்தாணிகள் பற்றி நினைத்துப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருப்பார்கள். இதில் தொல்காப்பியம், பதினென் கீழ் கணக்கு, பதினென் மேல் கணக்கு, சிலப்பதிகாரம். சீவக் சிந்தாமணி, திருக்குறள் அப்பப்பா நம் மூதாதையரை மெச்சத்தான் வேண்டும். சீத்தலை சாத்தனார் இன்று இருந்திருந்தால் அன்று எழுத்தாணியால் தலையை குத்திகொண்டிருந்தது மாதிரி இன்று பேனாவால் குத்திகொண்டிருந்தால் நிப்புதான் திரும்ப திரும்ப வாங்கியிருந்திருக்க வேண்டியதாக இருந்திருக்கும் அவர் தலை தப்பித்திருக்கும். சீத்தலை சாத்தனார் என்பதற்கு பதில் நிப்பு வாங்கிய கோமகனார் என்ற பெயர்தான் இருந்திருக்கும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  14. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது போல உங்கள் பதிவுகள் சின்னதாக இருந்தாலும் காரசாரமாகவே இருக்கின்றன.
    நானுன் உங்கள் இந்தப் பதிவு மூலம்தான் எழுத்தாணியைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு

  15. உங்கள் பதிவில் எழுத்துக்களும் வரிகளும் ஸ்க்ரோல் செய்யும் போது ஒன்றின்பின் ஒன்று மறைந்து படிப்பது கஷ்டமாய் இருக்கிறது/ இந்தப் பிரச்சனை எனக்கு மட்டும்தானா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிக்கடி உங்கள் கணினியில் இவ்வாறு தோன்றுவதாகக் கூறி உள்ளீர்கள். என்ன பிரச்சினை என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. நான் நேரில் வரும்போது அதைக் காட்டவும்.

      நீக்கு
    2. IE - ல் இந்த பிரச்னை எனக்கும் ஏற்ப்பட்டது. எழுத்துக்களை பெரிது பண்ணிப் படிக்கும்போது இது மாதிரி வருகிறது. சில சமயங்களில் chrome லும் இதே கதை தான். இப்போது safari க்கு மாறி விட்டேன். இது அதிகபிரசங்கித்தனம் செய்யாமல் ஒழுங்காக எழுத்துக்களை பெரிது பண்ணி காமிக்கிறது. firefox -ல் இந்த பிரச்னை இல்லை என்று நினைக்கிறேன். எதற்கும் browser ஐ update செய்து பாருங்களேன்!

      நீக்கு
  16. தங்களிடம் எள்ளல்களுக்குப் பஞ்சமில்லை. முடியும் பொழுது எழுதுங்கள். தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  17. எழுத்தாணி உபயோகிக்கிறேன் என்று சீத்தலை சாத்தனார் ஆகி விடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    பதிலளிநீக்கு
  19. ஐந்து வீரல் கொண்டு எழுதிய எழுத்துக்கள் பனை ஓலையில்
    பத்து வீரல் கொண்டு எழுதிகிற எழுத்துக்கள் கணணி திரையில்
    மனத்திரையில் இருக்கும் தமிழ் vallum yendru yendrum

    பதிலளிநீக்கு