திங்கள், 21 செப்டம்பர், 2015

நானும்ம்ம்ம்ம்... புதுக்கோட்டை வருகிறேன்.

                                   

மதுரை பதிவர் விழாவிற்கு ரயில் பயணத்தில் ஏற்பட்ட ஒரு குளறுபடியால் போக முடியவில்லை. புதுக்கோட்டை பதிவர் திருவிழா அறிவிப்பு வெளியானவுடனேயே இரண்டு வேலைகளை உடனடியாகச் செய்தேன். ஒன்று நன்கொடை அனுப்பியது. இரண்டு ரயில் பயண டிக்கெட்டுகள் சரியானபடி திட்டமிட்டு வாங்கியது.

பழைய காலமாக இருந்தால் ஒருவருக்கு பணம் அனுப்பவேண்டுமென்றால் தபால் நிலையத்திற்குச் சென்று மணிஆர்டர் செய்யலாம். அல்லது பேங்கிற்குச் சென்று மெயில் டிரான்ஸ்பர் பண்ணலாம். அல்லது டிடி (திண்டுக்கல் தனபாலன் அல்ல) எடுத்து அனுப்பலாம். அதே போல ரயில் டிக்கட் வாங்க ரயில் நிலையத்திற்குச் சென்று வரிசையில் சில மணி நேரங்கள் நின்று டிக்கட் வாங்கவேண்டும். இந்த வேலைகள் எல்லாம் சள்ளை பிடித்த வேலைகள். நிறைய நேரமும் சிரமமும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இப்போதைய இணைய உலகில் இந்த இரண்டு வேலைகளையும் என் வீட்டில் என் வழக்கமான இருக்கையில் இருந்து கொண்டே அரை மணி நேரத்தில் முடித்துவிட்டேன். நவீன தொழில் நுட்பத்தின் ஆற்றல் என்னை மிகவும் அதிசயிக்க வைக்கிறது. ஆனால் இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு 81 வயது கிழவன் இந்த அளவு தொழில் நுட்பம் கற்று வைத்திருப்பதை நீங்கள் கவனிக்க மறந்து விடக்கூடாது.

11-10-2015 ஞாயிற்றுக்கிழமை பதிவர் சந்திப்பு வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. அறியாதது என்னவென்றால் எவ்வளவு பேர் திருவிழாவிற்கு வருவதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள்? அவர்கள் எல்லோரும் கண்டிப்பாக வருவார்களா மாட்டார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க்கவேண்டும்.

திரு தமிழ் இளங்கோ சொன்ன மாதிரி பதிவர்களுக்கு வெட்கம் மிக அதிகமாக இருப்பதாக அறிகிறேன். பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள பெரும்பாலானவர்கள் வெட்கப்படுகிறார்கள். பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் திரு. முத்து நிலவன் பதிவர் கையேடு வெளியிட்டே தீர்வது என்ற முடிவுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க, என்னைப் பல கவலைகள் இப்போது பீடித்து விட்டன. நான் முதல் நாள் சனிக்கிழமையே புறப்பட்டு திருச்சியில் பிரபல பதிவர் கோபுவிடம் சில வரவு செலவு விவகாரங்களை முடித்து விட்டு, அன்று மாலை, அதாவது சனிக்கிழமை மாலையே புதுக்கோட்டை சேர்ந்து விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இதில் ஒரே சிக்கல் என்னவென்றால் அன்று இரவு அங்கே விழா நடக்கும் கல்யாண மண்டபம் அல்லது ஏதாவது ஒரு திண்ணையில் துண்டை விரித்துப் படுத்துக் கொள்ளலாமா அல்லது ஏதாவது ஒரு நல்ல லாட்ஜில் தங்கிக்கொள்ளலாமா என்பதுதான். இந்தக் கவலையினால் நான் இப்போது இரவில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட முடிவதில்லை. புது பல் செட் வைத்துக்கொண்டு சாப்பிட முடியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கேட்பவர்கள் தேசத்துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதற்கு விழாக் குழுவினரின் அறிவுரைகளைக் கேட்க ஆவலாய் உள்ளேன். புதுக்கோட்டை சமஸ்தானம் விருந்தோம்பலுக்கு பெயர் போனது. அந்த வழி வந்தவர்கள் அந்தப் பண்புகளை இன்னும் காப்பாற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். மற்ற பதிவர்களும் தங்கள் தங்கள் அறிவுரைகளைக் கூறலாம்.

 நிற்க, வேறு பல கவலைகளும் சேர்ந்து விட்டன. ஒருக்கால் நம்மை மேடையில் ஏற்றி, பேசச்சொல்லி விடுவார்களோ என்ற கவலை பெருங்கவலையாய் என்னை அலைக் கழிக்கிறது. அப்படிச் செய்யமாட்டோம் என்று எழுத்து பூர்வமாக திரு முத்துநிலவன் உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுக்காவிட்டால் என் பயணத்தை ரத்து செய்யலாமா என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன். அநியாயமாக ஒரு மூத்த பதிவரை பதிவர் திருவிழாவிலிருந்து விலக்கி வைக்கும் பாவத்தை அவர் செய்யமாட்டார் என்று எதிர் பார்க்கிறேன்.

இது போக புதுக்கோட்டை கொசுக்களெல்லாம் இந்த பதிவர் திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். புது ரத்தம் அதிக ருசியாக இருக்கும் என்றும் அதை ருசிக்க அவை காத்துக்கொண்டிருப்பதாகவும் காற்று வாக்கில் செய்திகள் வந்து என் வீட்டுக் கொசுக்கள் பேசிக்கொண்டிருந்ததை நானே என் செவிட்டுக் காதால் கேட்டேன்.இதற்கும் ஏதாவது தடுப்பு உபாயம் விழாக் கமிட்டியார் கண்டிப்பாய் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தவிர ரயில் பயணத்திற்கான வழக்கமாக வரும் கவலைகளும் சேர்ந்து கொண்டன. பிரயாணத்தின்போது என் உடமைகளை யாராவது திருடி விட்டால் என்ன செய்வது என்பது வழக்கமாக வரும் கவலை. குறிப்பாக சமீபத்தில்தான் 999 ரூபாய் கொடுத்து ஒரு புது பேட்டா செருப்பு வாங்கினேன். அதை போட்டுக்கொண்டு வந்தால் யாராவது அதை தேட்டை போட்டு விட்டால் அப்புறம் பதிவர் மகாநாட்டு விருந்தை அனுபவித்து சாப்பிட முடியாதே என்ற கவலை. இதற்காக ஒரு விலை மலிவான செருப்பு ஒன்று வாங்கிக்கொள்ளலாமா என்றும் ஒரு யோசனை இருக்கிறது. இன்னும் நாள் இருக்கிறது. பார்ப்போம். பதிவர்களின் ஆலோசனை தேவை.

தவிர, ஒரு சில பதிவர்கள் செய்யும் துரோகத்தை என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. பதிவர் சந்திப்பு என்றால் அதற்கு சில வரை முறைகள், பாரம்பரியங்கள் இருக்கின்றன. இந்த பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது பதிவர்களாகிய நம் தலையாய கடமை. இதற்கு எதிராக கருத்துகள் கூறிய பதிவர்களை உடனே கழுவிலேற்ற ஆணை பிறப்பிக்கிறேன். அதாவது அசைவ உணவு வேண்டாம் என்று சிலர் கொடி பிடிக்கிறார்கள். இது மகா அநியாயம் என்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த சமயத்தில் இன்னும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விழாக் குழுவினர் இன்னும் விழா ஏற்பாடுகளைப் பற்றிய முழுத் தகவல்களையும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்க்ள. ஏன் என்று தெரியவில்லை. ஒருக்கால் பாகிஸ்தான் உளவுப் படைக்குத் தெரிந்து விட்டால் ஏதேனும் சதி செய்து விழாவை நடத்த விடாமல் பண்ணி விடுவார்களோ என்ற பயம் இருக்கலாம்.

விழா நடவடிக்கைகளில் எனக்குத் தெரிய வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்களை மட்டும் எனக்குத் தனியாகச் சொல்லி விட்டால் நான் அந்த ரகசியத்தை வெளியில் விடாமல் காப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

1. விழா அன்று  விழா மண்டபத்தில் காலை டிபன் உண்டா? ஏனெனில் வெளியில் காசு செலவழித்து டிபன் சாப்பிட்டு வந்த பிறகு, விழா மண்டபத்தில் இலவச டிபன் விநியோகம் நடந்து கொண்டிருந்தால் என் போன்றவர்களின் இளகிய மனது சுக்கு நூறாக உடைந்து விடும். தவிர காலை இலவச டிபனில் இட்லியும் கோழிக் குருமாவும் உண்டு என்பது தெரிந்தால் இரவு டிபன் சாப்பிடாமல் இருந்து விடலாம். அந்த செலவும் மிச்சமாகும்.

2. வெளியூரில் இருந்து வரும் பதிவர்களுக்கு அன்று இரவு வழியில் சாப்பிடுவதற்கு இட்லி, கெட்டிச் சட்னி கட்டிக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த விருந்தோம்பலை ஆயுளுக்கும் பதிவர்கள் மறக்க மாட்டார்கள். ஆளுக்கு எட்டு இட்லி போதும்.

3. மதியம் விருந்து கட்டாயம் பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னைப் போன்றவர்கள் மதிய உணவிற்குப் பிறகு சிறிது கட்டையைக் கிடத்துவது பழக்கம். அதற்கு ஏதாவது ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படி ஏற்பாடு செய்திருந்தால் மதிய ஓய்வு முடிந்து எழுந்தவுடன் நாலு வெங்காய பஜ்ஜியும் (தேங்காய் சட்னி அவசியம்), ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியும் மட்டும் கொடுத்தால் போதும்.

இன்னும் ஒன்று இருக்கிறது. அதை பப்ளிக்காக சொல்ல முடியாது. அது எல்லோருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம்தான். விழாக் குழுவினர் அதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே விழாக்குழுவினர் அனைத்துப் பதிவர்களின் அபிலாக்ஷைகளையும் செவ்வனே நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புதுக்கோட்டை வருகிறேன்.

17 கருத்துகள்:

  1. கோரிக்கைகள் ரெடி... உங்கள் ஆவல்கள் பூர்த்தியாகட்டும்!

    :)))))))

    பதிலளிநீக்கு
  2. புதுகையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு

  3. ஐயா! உங்களுடைய கோரிக்கைகளில் பாதிதான் இப்போது தந்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். மீதியை எப்போது தரப்போகிறீர்கள்? வழக்கம்போல் தங்களது பதிவில் குறும்பு கொப்பளிக்கிறது! பதிவை வழக்கம் போல் வாய் விட்டு சிரித்து இரசித்தேன்,

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கோரிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாக செவி வழிச் செய்தி! :) எஞ்சாய் மாடி!

    நான் புதுக்கோட்டைக்கு தற்போது வர இயலாது! பிறிதொரு சமயத்தில் சந்திப்போம்.....

    பதிலளிநீக்கு

  5. ஐயா

    பதிவில் இருந்து புரிந்து கொண்டது.

    5 பெண்டாட்டி இருந்தாலும் கிழவன் என்று உணர ஆரம்பித்துவிட்டீர்கள்.
    புதுக்கோட்டை போவது என்பதே திருச்சியில் கோபு சார் கொடுக்கும் பரிசை வாங்குவது என்பதற்கே.
    பல் பிடுங்கிய நிலையில் இருந்து பல் வைக்கப்பட்ட நிலைக்கு முன்னேற்றம்,அடைந்தது.
    வயசுக்கோளாறு ஆன காது மந்தம் பிடிபட தொடங்கி விட்டது.
    பேரன் 3600 ரூபாய்க்கு செருப்பு வாங்கினால் நான் 999 ரூபாய்க்கு செருப்பு வாங்குவேன் என்று வாங்கியது.
    முதியவர்க்களுக்கே உரிய முன்கூட்டி திட்டம் தீட்டுதல் என்பதை சாப்பாடு விசயத்திலும் (இட்லி) கடைபிடிப்பது.

    அமைப்பாளர்கள் முன்பே அறிவித்து விட்டார்கள்.

    அதாவது மண்டபத்தில் தங்குபவர்களுக்கு பாய் தலையணை தரப்படும். விடுதியில் தங்க விரும்புவர்களுக்கு அறை ஏற்பாடு (சொந்த செலவில்) செய்து தரப்படும்.

    இது வரை 130 பேர்கள் கலந்து கொள்ள விருப்பம் தந்து உள்ளனர்.

    சைவம் என்பது எல்லோரும் சாப்பிடுவது (அசைவ பதிவர் உள்பட) , ஆகவே சைவம் மட்டும்தான். மேலும் அசைவம் சாப்பிடுகிறேன் என்று எலும்பைக் கடித்து உங்கள் புது பல் செட் உடைந்துவிட்டால் என்ன ஆவது.

    கடைசியாக

    புதுகோட்டை கொசுக்கள் சிங்கங்களை (புதிய பல் வைக்கப்பட்ட சிங்கம்) கடிக்காது. கடிக்க முடியாது.

    பதிவர்களில் மூத்த பதிவர், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் மேடை ஏறி மாணவர்களைக் கலாய்த்தவர், ஆகிய தாங்களே மேடை ஏற பயப்படலாமா?

    தற்போதைக்கு இது போதும்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. முக்கியமான ஒன்றை மறந்து விடாதீர்கள்.

    புதுக்கோட்டைக்கு போகும் பொது uni enzyme
    10 எடுத்து செல்லவும்.
    --
    Jayakumar
    P.S

    முக்கியமான ஒன்றை மறந்து விடாதீர்கள்.

    புதுக்கோட்டைக்கு போகும் பொது uni enzyme
    10 எடுத்து செல்லவும்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயே கிடைக்கும் அல்லவா? தேவைப்பட்டால் வாங்கிக்கொண்டால் போச்சு.

      நீக்கு
  7. அய்யா…. நானும் …… புதுக்கோட்டை வருகிறேனே…. …

    // இந்த சமயத்தில் இன்னும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விழாக் குழுவினர் இன்னும் விழா ஏற்பாடுகளைப் பற்றிய முழுத் தகவல்களையும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்க்ள. ஏன் என்று தெரியவில்லை. //

    அய்யா நீங்கள் சொல்வது சரிதான். வலைப்பதிவர்களில் யார் யார் வருகிறார்கள்? எங்கு தங்குகிறார்கள்? முதல்நாள் வருபவர்களுக்கு தங்குவதற்கு எங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் யார் என்று தெரியவில்லை. ( தெரிந்தால் வரும் வலைப்பதிவாளர்களுடன், முன்னதாகவே வந்து அவர்களுடன் கலந்துரையாடல் செய்வதற்குத்தான். வேறொன்றுமில்லை)

    பதிலளிநீக்கு
  8. ஒரு வேளை நானும் புதுக்கோட்டை வந்தாலும் வருவேன் உங்கள் பதிவு ரசிக்க வைத்தது. உணவு விஷயத்ட்க்ஹில் அசைவத்ட்க்ஹுக்கு நான் எதிரி. ஆனால் நீங்களும் சைவம் சாப்பிடுபவர்தானே

    பதிலளிநீக்கு
  9. சென்னையில் தங்களை சந்தித்த நினைவு இன்னமும் இருக்கிறது! புதுகைக்கு வர ஆவலாய் இருந்தும் சூழல்கள் கட்டிப்போடுகின்றன!

    பதிலளிநீக்கு
  10. இதுதான் நான் கலந்துகொள்ளும் முதல் வலைப்பதிவர் சந்திப்பு. தங்களின் ஆலோசனைப்படி இந்த விழா நடந்தால் மூன்று நாள் சந்திப்பாக நீட்டிவிடலாம். அத்தனை அற்புதமாக இருக்கிறது. தங்களின் கோரிக்கை.

    பதிலளிநீக்கு
  11. என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது ஐயா.

    பதிலளிநீக்கு
  12. ரசித்தேன் பதிவை புதுக்கோட்டையில் சந்திப்(போம்)பீர்
    தமிழ் மணம் 100

    பதிலளிநீக்கு