திங்கள், 28 செப்டம்பர், 2015

மாலைகளும் மரியாதையும்.

                                                  Image result for Flower Decorated Indian Deities
கடவுள் விக்கிரகங்களுக்கு மாலைகளால் அலங்காரம் பண்ணுவது காலம் காலமாய் வந்த பழக்கம். ஒவ்வொரு அர்ச்சகருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு. சிலர் செய்த அலங்காரத்தினால் அந்த விக்கிரகத்திற்கே அழகி கூடும். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றும். அநுத மாதிரி அலங்காரம் செய்யக்கூடியவர்கள் வெகு சிலரே.

எப்படி அலங்காரம் செய்திருந்தாலும் அது ஒரு நாள் மட்டுமே. அடுத்த நாள் அதை நீக்கித்தான் ஆகவேண்டும். அப்படி நீக்கப்பட்ட அலங்காரப் பூக்களை கோயில்களில் என்ன செய்கிறார்கள் என்று நான் பார்த்ததில்லை. அனேகமாக குப்பைகளோடுதான் சேர்த்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

கடவுள் விக்கிரகங்களுக்குப் போட்ட மாலை புனிதமானது என்று கருதுகிறோம். அதில் கடவுளின் அருள் இறங்கியிருக்கிறது என்றும் நம்புகிறோம். அதனால்தான் அர்ச்சகர் பெரிய பிரமுகர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுக்கு இந்த சாமியின் மேல் உள்ள மாலைகளில் ஒன்றை எடுத்து அவர் கழுத்தில் போடுவார்கள்.

மாலை யாரோ வழிபாட்டுக்காகக் கொடுத்தது. அடுத்த நாள் எப்படியும் குப்பைக்குத்தான் போகப்போகிறது. அதை இன்று ஒரு மனிதனுக்குப் போட்டால் தனக்கு ஏதோ ஒரு வகையில் ஆதாயம் கிடைக்கும் என்றுதான்  அந்த அர்ச்சகர் அந்த மாலையை அவருக்குப் போடுகிறார். இது வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

அந்த முக்கிய பிரமுகர் அந்த மாலை கழுத்தில் போட்ட பிறகு என்ன செய்கிறார் என்றால் அதைக் கழட்டி தன் உதவியாளரிடம் கொடுக்கிறார். அவர் அதை அந்த பிரமுகர் வந்திருக்கும் காருக்கு அணிவிக்கிறார். அடுத்த நாள் அந்த காரைத்துடைக்கும் ஆள் அதை எடுத்து குப்பையில் வீசுவார். எப்படியும் அந்த மாலை குப்பைக்குத்தான் போகப்போகிறது.

இந்த நிகழ்வில் உள்ள தாத்பரியம் ஒன்றே. அந்தப் பிரமுகர் கொஞ்சநேரம் தனக்கு ஏதோ பெரிய கௌரவம் வந்து விட்டதாக நினைக்கிளார்.  இது ஒரு பெரிய மாயை. நானும் சில சமயம் கோவில்களுக்குப் போகும்போது அந்த அர்ச்சகர் சாமியின் மேல் இருக்கும் மாலைகளில் ஒன்றைக் கழட்டி எனக்கு கொடுக்க முற்படுவார். நான் அதை மறுத்து விடுவேன்.

காரணம் அந்த மாலையை என் கழுத்தில் போடுவதால் அர்ச்கருக்கு கூட பத்து ரூபாய் காணிக்கை கிடைக்கும் என்பதைத்தவிர, எனக்கு கடவுளின் அருள் ஸ்பெஷலாக க் கிடைத்து விட்டது என்று நான் கருதுவதில்லை. தவிர முக்கியமான பிரச்சினை என்னவென்றால் என் கழுத்தில் போடப்பட்ட அந்த மாலையை அப்புறம் என்ன செய்வது என்பது பெரிய பிரச்சினை.

அதில் கடவுளின் அருள் ஒட்டிக்கொண்டிருப்பதால் அது புனிதமான ஒன்று ஆகி விடுகிறது. அப்படிக் கருதும்போது அதை குப்பையில் போட்டால் கடவுளுக்கு கோபம் வந்து அந்த அருளை திருப்பி எடுத்துக்கொண்டால் என்ன செய்வது என்ற பயம் வருகிறது. அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. என் அருளை நீ இவ்வாறு அவமதிக்கிறாயா என்று ஏதாவது தண்டனை கொடுத்தாலும் கொடுக்கலாம். இந்த வம்புகளெல்லாம் வேண்டாமென்று நான் இந்த மாலை மரியாதைகளைத் தவிர்த்து விடுவேன்.

இப்போது எங்கள் ஊரில் ஒரு புது கலாச்சாரம் சில கோவில்களில் பரவி வருகிறது. ஏதாவது விசேஷ தினங்கள் என்றால் அந்த சாமி விக்கிரகத்திற்கு ரூபாய் நோட்டுகளில் மாலை கட்டி சாத்துகிறார்கள். இந்த மாலைகளையும் பூ மாலைகளைப் போல் அடுத்த நாள் குப்பையில் போடுவார்களா என்பது தெரியவில்லை. அநேகமாக அப்படிச் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இதே போல் மனிதர்களைக் கௌரவிக்க மேடைகளில் மாலை போடுகிறார்கள். சில சமயங்களில் மாலைகள் போறாவிட்டால் ஒருவருக்குப் போட்டதையே இன்னொருவருக்கும் போடுவது உண்டு. இந்த மாலைகளின் ஆயுள் சில மணித்துளிகளே. அவை எவ்வளவு விலை உயர்ந்த மாலைகளாயிருந்தாலும் இதை கதிதான். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அந்த மாலைகளை உடனடியாகக் குப்பைக்குப் போய்விடும். சில சமயம் அவைகளுக்கு அந்தப் பெரிய மனிதர்களின் காரை அலங்கரிக்கும் பேறு கிடைக்கலாம்.

சில சமயம் பூ மாலைகளுக்குப் பதிலாக சந்தன் மாலை அல்லது வேறு செயற்கை மாலைகளை அணிவிக்கிறார்கள். இவை பூ மாலை போல் வாடாது. அதனால் அதை வீட்டிற்கு கொண்டு போய் வைத்துக்கொள்ளலாமே என்ற ஆசை பலருக்கும் வருவதுண்டு. அப்படி வீட்டிற்கு கொண்டு போகப்படும் மாலைகளை என்ன எய்வது, எத்தனை நாள் வைத்துக்கொள்வமு என்பது பிரச்சினைகளே.

எனக்கும் என் மனைவிக்கும்  சமீபத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த மாதிரி சந்தன மாலைகளை போட்டு விட்டார்கள். அவைகளின் விலை அநேகமாக ஜோடி 500 ரூபாய்க்குக் குறையாமலிருக்கும். அவைகளை வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு ஜன்னலில் மாட்டியிருக்கிறோம். நான் அல்ல, என் மனைவி மாட்டி வைத்திருக்கிறாள். எத்தனை நாளைக்கு அதை வைத்திருப்பாள் என்று தெரியவில்லை. எப்படியும் ஒரு நாள் அது குப்பைக்குப் போகவேண்டியதுதான்.


இந்த சந்தன மாலைகள் எவ்வளவு விலை உயர்ந்த தாக இருந்தாலும் அதை இன்னொரு தடவை உபயோகிக்க முடியமா? ஒருவருக்குப் போட்ட மாலையை இன்னொருவருக்கு போடக்கூடாது என்பது சம்பிரதாயம்.

இந்த மாலையை என்ன செய்யலாம் என்று உங்கள் கருத்துகளைக்கூறலாம்.

இதே போல் திருமண மாலைகைள ஆற்றிலோ குளத்திலோ அல்லது வேறு நீர் நிலைகளிலோதான் போடவேண்டும் என்று ஐதிகம் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். பிள்ளையார்கள்க் கரைத்தே நீர் நிலைகளை எல்லாம் மாசடைந்து கிடக்கின்றன. அதன்கூட இதுவும் சேர வேண்டுமா?

இந்த சிந்தனைகள் ஏன் உதித்தன என்றால், எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைப் பார்க்கப்போக வேண்டியிருக்கிறது. அவர் எனக்கு சந்தன மாலை வாங்கி வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதை வாங்கி பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து இப்போது தொங்கும் இரண்டு மாலைகளுக்குத் துணையாக அதையும் தொங்க விடலாமா அல்லது அவருக்கு நாசூக்காகச் சொல்லி இந்த விபரீத முடிவை ரத்து செய்யச்சொல்ல லாமா என்று தீவிர ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன்.

20 கருத்துகள்:

  1. வித்தியாசமான சிந்தனை. மாலைகளைப் பற்றி இதுவரை நான் யோசித்ததில்லை. நவராத்திரி உள்ளிட்ட விழாக் காலங்களில் பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்தோடு ரவிக்கை பிட் வைத்துத் தருவார்கள். நல்ல துணியிலும், போதுமான அளவிலும் (100 செ.மீ) இருந்தால் ஒருவேளை வாங்கிக் கொள்பவர் அவற்றை உபயோகித்துக் கொள்ளக் கூடும்.. பல சமயங்களில் அந்த ரவிக்கை பிட்டுகள் கை மாறிக் கொண்டே இருக்கும். வாங்கியவர் அதை வேறொரு பெண்ணுக்கு வைத்துக் கொடுக்க, அவர் அதை அடுத்தவருக்கு வைத்துக் கொடுக்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ ஸ்ரீ ராம் அதை ஏன் கேக்கறீங்க ரொம்ப கஷ்டம்பா...நான் பொதுவாக அணிவது புடவை அல்ல எனவே ரொமப்வே...எனவே ரொட்டேஷன் தான் ம்யூசிக்கல் சேர் போல...

      ரவிக்கைத் துணி மட்டுமில்லை, சாமி படங்கள் வேறு, சின்னச் சின்ன சாமி உருவங்கள் என்று கொடுத்துவிடுவதால் வீட்டில் அவர்களுக்கெல்லாம் இடம் தேட வேண்டியிருக்கிறது....

      நீக்கு
  2. இந்த சின்ன விஷயத்திற்கு முனைவர் ஐயா இவ்வளவு யோசிக்கனுமா?
    புதுக்கோட்டை விழாவிற்கு நீங்கள் செல்லும்போது இந்த சந்தன மாலையை அங்கு யாருக்காவது போட்டுவிடுங்கள். அப்புறம் அது அவர் பாடு! அவர் அந்த மாலையை வைத்து அல்லாடட்டும்! உங்கள் ப்ராப்ளம் ஓவர்! சரியா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் புதுக்கோட்டைக்கு வருகிறீர்கள் அல்லவா?

      நீக்கு
    2. நானும் வருகிறேன் எனக்கு போடப்பட இரண்டு சந்தனமாலைகளுடன்.

      நீக்கு
  3. இது போன்ற மலர் மாலைகளை குப்பையில் போடாமல் வீட்டில் உள்ள செடிகள் மேல் போட்டுவிட்டால் அவை காய்ந்து தானே உதிர்ந்து விடும். யார் காலிலும் படாது

    உங்கள் நண்பாரிடம் சந்தன மாலைக்குப் பதிலாக ஏதேனும் புத்தகங்களை தர சொல்லுங்களேன். (இனாமாக கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்தது போல் இருக்கிறதல்லவா? வேறு வழி தெரியவில்லை. அதனால் இந்த யோசனை! )

    பதிலளிநீக்கு



  4. "புதுக்கோட்டை விழாவிற்கு நீங்கள் செல்லும்போது" என்று எழுதியிருக்கிறார் ;ஆகவே அவர் வரப்போவதில்லை என்று
    தெரிகிறது ..!

    மாலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலி அண்ணா!
      அவர் புதுக்கோட்டை வருவார் அவருக்கு போடப்பட்ட இரண்டு சந்தனமாலைகள் மற்றும் பழைய ஐந்து பொன்னாடைகளுடன். அந்த விழாவில் அவருக்கு எவனாவது இளிச்சவாயன் மாட்ட மாட்டனா? அந்த ஐவருக்கும் அந்த பொன்னாடையும் போர்த்திவிடுவார். என்ன ஒரு இருபது வருஷம் பழசு. கொஞ்சம் பயங்கரமா நாறும்! மேடையில் ஏறுகிறவா இதை எல்லாம் பொருத்துக்க மாட்டாளா என்ன?

      நீக்கு
  5. திருமணத்தம்பதிகளுக்கு போடும் மாலையும் இதேதானே ஐயா...

    பதிலளிநீக்கு
  6. கோயிலில் சாமிகளுக்கு அணிவித்த மாலைகளை அர்ச்சகர்கள் சிலர் பிரமுகர்களுக்கு கழுத்தில் அணிவிக்கின்றனர். அது என்னை பொறுத்தவரையில் தவறு. விஷ்ணுவின் பிரசாதமான மாலையை தூர்வாசர் இந்திரனுக்கு அளிக்க அதை அவன் ஐராவதத்தின் மேல் வீச அது மிதித்து போட்டது. உடனே தூர்வாசர் சாபத்தால் இந்திரன் பதவி இழந்து துன்பப்பட்டான் என்பது ஓர் புராணம். மாலைகளை கழுத்தில் அணியாமல் கைகளில் பெற்று வந்து பூஜை அறையில் ஓர் நாள் வைத்திருந்து மறு தினம் மரம் செடி கொடிகளின் மீது போட்டுவிடலாம். தானாக உலர்ந்து உரமாகி விடும். வாகனங்களுக்கு அணிவித்தல் கூடாது. வீட்டு வாசற்படியில் கட்டலாம். ஆனால் மறுதினம் செடிகள் மீது கழட்டி போட்டுவிடலாம். சந்தன மாலைகள் என்று விற்கப்படுவது ஒரிஜினல் சந்தன மாலைகள் கிடையாது. அலங்காரத்திற்கு உபயோகப் படும் இதை மறு சுழற்சி செய்து யாருக்காவது தந்துவிடலாம். அல்லது வரவேற்பறையில் உள்ள உங்கள் மூதாதையர் படங்களுக்கு அணிவித்து மகிழலாம். என் சிற்றறிவுக்கு தோன்றியதை கூறியுள்ளேன்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  7. இதுவரை யாரும் எண்ணிடாத ஓர் செயலை
    சிந்தனைக்கு வைத்திருக்கிறீர்கள் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு

  8. உங்களுக்கு சந்தனமாலை பிரச்சனை எனக்கு சாமிபடம் போட்ட காலண்டர் பிரச்சனை. நீயூஜெர்ஸியில் உள்ள பாலாஜி கோயிலில் இருந்து வருட வருடம் அழகிய சாமிபட போட்ட காலண்டர் எங்கள் வீட்டிற்கு வந்துவிடும். அதை வருட முடிவில் என்ன செய்வது என்பது தெரியாமல் முழிப்பேன் காரணம் அது அழகிய கடவுள் படமாச்சே அதை குப்பையில் போட மனம் வருவதில்லை கடைசியில் ஒரு வழி கண்டுபிடித்துவிட்டேன். அப்படி வரும் காலண்டரை வருஷ முடிவில் கோயிலுக்கு போகும் போது யாரும் பார்க்காத போது அந்த கோயிலே ரகசியமாக வைத்துவிட்டு வந்துடுவேன் அதன் பின் அந்த சாமி பாடு...அந்த கோயில் குருக்கள் பாடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நம்ம கட்சி! இப்படித்தான் நாங்களும் செய்கின்றோம்....அதே போல இப்பல்லாம் நோட்டீஸ் கூட கடவுள் உருவங்கள் தாங்கி வருது....அதைக் குப்பையில் போடும் போது காலில் மிதிபடுவது....அப்புறம் சில பார்க்கும் போதெல்லாம் சாமி ஃபோட்டோக்களாகத் தருவது தாங்கலைப்பா...

      கீதா

      நீக்கு
  9. உங்க வீட்டுக்கு வோட்டு கேட்க வரும் அரசியல்வாதிகளுக்கு அந்த மாலைகளை போட்டுவிடுங்கள்

    பதிலளிநீக்கு
  10. மிகச் சிறப்பான சிந்தனை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. கோவிலில் போடும் மாலைகளை என்ன செய்வது என நானும் திண்டாடி இருக்கிறேன். செடிகளின் மேல் போட்டு விடுவது தான் எனக்கும் வழக்கம்....

    பதிலளிநீக்கு
  12. முனைவர் அய்யா!
    உண்மையை சொன்னால் சிலருக்கு பகீர் என்று இருக்கும். ஆனால், இது தான் உணமை.
    கோவிலிலோ அல்லது விழாவிலோ கொடுத்த மாலைகளை உடனே தி.நகர், லஸ் தன்னிதுரை மார்கெட் அங்கு second sales வித்து விடுவார்கள்.

    திருச்சியில் காவரி கரை ஓரம் மற்றும் சாலை ரோடில் second sales விற்பார்கள். ஏழை எளியவர்கள் கோவில் ஐயர்கள் சொல்படி இந்த மாலையை வாங்கி மறுபடியும் சாமிக்கு போடுவார்கள். இது அந்த ஐயருக்கும் தெரியும் (ஐயருக்கும் அந்த மாலை கடைக்காரருக்கும் உள்ள டீல்). மாலை பாதி விலை தான். இருந்தாலும்?

    பிறகு அதே மாலை கருகுமுன் அந்த ஐயரோ இல்லை பூஜை செய்தவனோ மறுபடியும் பக்கத்தில் உள்ள வேறு கடைக்கு அடி மாட்டு விலைக்கு விற்று விடுவார்கள்.


    பிறகு என்ன? செத்தவனுக்கு கிடைக்கும் மாலை மரியாதை இந்த பிச்சைக்கார மாலை தான். கடவுளுக்கு போட்ட மாலை தான்.

    சென்னையில் சீப்பாக பிணத்திற்கு போடும் மாலைகள் கிடைக்கும் இடம்.
    தி.நகர் பிணமாலை விக்கும் மார்கெட்.
    கன்னம்மாபேட்டை சுடுகாடு எதிரில்.

    பணம் படைத்தவர்கள் என்றால் பெசன்ட் நகர் மின்சார சுடுகாடு அருகே இருக்கும் (பஸ் ஸ்டான்ட்) எதிரில் கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
  13. ஐயா! இதே பிரச்சனை எங்களுக்கும் வருவதுண்டு. கோயிலில் தரப்படும் பூக்கள் முதல், மாலைகள் வரை. பெரும்பாலும் தவிர்த்துவிடுகின்றோம். அப்படியே பெறப்பாடாலும் வீட்டில் உள்ள செடிகள், இல்லை என்றால் ஏதேனும் தோட்டங்களில் போட்டுவிடுவதுண்டு. நீங்களும் உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால் அதில் போட்டுவிடலாம் ஐயா.

    சந்தனமாலை....இப்போது பெரும்பாலான குடும்ப/திருமண நிகழ்ச்சிகளில் குங்குமம் சந்தனம் வரவேற்க வைக்கப்படுகிறது இல்லையா? கரைக்கப்படும் சந்தனம் அப்படி ஒன்றும் விலை உயர்ந்த சந்தனம் கிடையாது. எனவே தங்கள் மாலைகளில் உள்ள சந்தன உருண்டைகளை/வில்லைகளைக் கரைத்து அப்படியும் பயன்படுத்தலாம் இல்லை என்றால் நண்பர்கல் வீட்டு நிகழ்வுகளுக்குக் கரைத்துக் கொடுத்துவிடலாம் ஐயா. நிறைய இருந்தால் பௌடராக்கி வைத்துக் கொடுக்கலாம் நிகழ்வுகளுக்கு....

    கீதா

    பதிலளிநீக்கு
  14. இதுவரை யாரும் யோசிக்காத பதிவிடாத ஒரு கருத்து ஐயா...நல்லதொரு பதிவு...

    பதிலளிநீக்கு