வெள்ளி, 17 ஜூலை, 2015

ஆடிட்டர்களின் அதிகப் பிரசிங்கித்தனம்- பாகம் 2

       
                             Image result for barbed wire

நான் தஞ்சாவூரில் ஒரு ஆராய்ச்சிப் பண்ணையின் தலைவராக இருந்தபோது அந்தப் பண்ணைக்கு முள் கம்பி வேலி போடுவதற்கு முயன்றதை இதற்கு முன்பு கூறியிருந்தேன் அல்லவா? அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

இது மாதிரி முள் கம்பி வாங்குவதில் இதற்கு முன் ஒரு பண்ணையில் நடந்த கோல்மாலினால் முள் கம்பி வாங்குவதற்கான நடைமுறைகளில் புது சட்டதிட்டங்களை அமுல்படுத்தினார்கள். இந்த சட்ட திட்டங்களின்படி, ஒரு பொருள் வாங்குவதாக இருந்தால் அந்தப் பொருள் விற்கும் ஒரு நாலைந்து கடைகளுக்கு விலைப் பட்டியல் கேட்டு தபால் அனுப்பவேண்டும்.

அந்தக் கடிதங்களுக்கு அந்தக் கடைக்காரர்கள் தங்கள் விலையைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் தபால் மூலமாக அனுப்பவேண்டும். அந்தக்கடிதங்களை ஒரு நல்ல நாள் பார்த்து பிரித்து அதிலுள்ள விலைகளை ஒப்பிட்டு யார் விலை குறைவாகக் குறிப்பிட்டிருக்கிறார்களோ அவர்களிடம் இருந்து அந்தப் பொருளை வாங்க வேண்டும். இதுதான் சட்டப்படி அரசு அலுவலகங்களில் பொருட்கள் வாங்கும் நடைமுறை.

ஆனால் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்தால் காரியம் நடக்காது. ஆகவே நான் ஒரு முறையைக் கையாண்டேன். கடைக்காரர்களுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்கள் ஐந்து தயார் செய்து கொண்டேன். என் உடன் பணிபுரியும் ஒரு பொறியாளரையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்குப் போனோம். அங்குதான் முள்கம்பி விற்கும் பெரிய கடைகள் இருக்கின்றன. நான்கு கடைகளில் போய் விசாரித்தோம். விலை நிலவரம் தெரிந்தது. முள் கம்பிகளின் தரத்தையும் பார்த்துக் கொண்டோம்.

அவர்களிடம் விவரத்தைச் சொல்லி எங்களுக்கு இத்தனை டன் முள் கம்பி வேண்டும். அதற்கு ஒரு விலைப்பட்டியல் வேண்டும் என்றோம். அவர்களுக்கு நாங்கள் கொண்டு போயிருந்த கடிதத்தில் அந்தக்கடையின் பெயரை எழுதி அவர்களிடம் கொடுத்தோம். அவர்கள் "ஐயா, சர்க்கார் ஆபீஸ்களின் நடைமுறையில் எங்களுக்கு அனுபவம் நிறைய உண்டு. பொருட்களை வாங்கிக்கொண்டு போன பிறகு நாங்கள் பணம் வாங்குவதற்கு நாயாய் அலைய வேண்டியிருக்கும். அதனால் நாங்கள் அரசு அலுவலகங்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை" என்றார்கள்.

இந்த நடைமுறையை நானும் பார்த்திருக்கிறேன். சிவப்பு நாடா தர்பார் என்பது இதுதான். அரசு நிறுவனத்தில் பொருளை வாங்குபவர்கள் அந்த அலுவலகத்தின் நிர்வாக செயலர்கள். அவர்கள் வாங்கிய பொருளின் பட்டியலைப் பரிசீலித்து தொகை அனுப்புவர்கள் அலுவலகத்தில் பணி புரியும் உதவியாளர்கள். இந்த இரு சாராருக்கும் எப்போதும் ஆகாது. வேண்டுமென்றே ஒரு சொத்தையான காரணம் காட்டி, அந்த பட்டியலை தீர்வு செய்யமாட்டார்கள்.

பெரும்பாலும் அந்த அலுவலகத் தலைவருக்கு நிர்வாகத் திறமை இருக்காது. வெறும் சர்வீஸ் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று அந்த பதவிக்கு வந்திருப்பார். ஏறக்குறைய ஓரிரு வருடங்களில் பணி ஓய்வு ஆகவேண்டிய நிலையில் இருப்பார். அவர் கவனம் எல்லாம் நாம் வில்லங்கமில்லாமல் ஓய்வு பெறவேண்டும் என்பதிலேயேதான் இருக்கும். ஆகவே அவர் அலுவலக உதவியாளர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார். அவர்களுடைய பிரம்மாஸ்திரம் "சார் இதை ஆடிட்டர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்" என்பதே.

அலுவலக வேலைகள் நடந்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன என்ற பெரும்போக்கில் இருப்பார். நாம் சென்று இந்த மாதிரி அலுவலக உதவியாளர்கள் பட்டியல்களைத் தீர்வு செய்யவில்லை என்று சொன்னால், அதற்கு அவர் சொல்லும் பதில் "நான் ஒழுங்காக பணி ஓய்வு பெற வேண்டாமா? அனுசரித்துப் போங்கப்பா" என்பதாகும். இதை நன்கு உணர்ந்துள்ள நான் நம்பினது "உன் கை சுத்தமாக இருந்தால் ஒரு கெடுதலும் வராது" என்பதுதான். அதே மாதிரி நான் எந்த வில்லங்கமும் இல்லாமல் பணி ஓய்வு பெற்றேன்.

முள்கம்பி விவகாரத்திற்கு வருவோம். கடைக்காரர்கள் அரசு அலுவலகங்களுக்கு பொருள் கொடுத்தால் பணம் சரியாக வருவதில்லை என்று சொன்னார்கள் அல்லவா?அவர்களிடம் நான் சொன்னேன். நான் உங்களுக்கு பணம் கொடுத்துவிட்டுப் பொருளைப் பெற்றுக் கொள்கிறேன் என்றேன். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! அரசு அலுவலகத்தில் அது எப்படி முடியும் என்று கேட்டார்கள்?  அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம், விலைப் பட்டியலை மட்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டேன்.
கூடவே அவர்கள் கடை விலாசம் அச்சடித்த கவர் ஒன்றையும் வாங்கிக்கொண்டேன்.

இப்படியாக நான்கு கடைகளில் விலைப் பட்டியலும் கவர்களும் வாங்கியாயிற்று. எந்தக் கடைக்காரர் விலை குறைவாகக் கொடுத்திருக்கிறார் என்பது அங்கேயே தெரியும்தானே. அந்த முள்கம்பி நல்ல தரமுள்ளதுதானா என்று என்னுடன் வந்திருந்த பொறியாளரைக் கேட்டேன். அது நல்ல தரம்தான் என்று அவர் கூறினார். உடனே அந்தக் கடைக்குச் சென்று எங்களுக்கு இவ்வளவு டன் முள்கம்பி வேண்டும். மூன்று நாள் கழித்துத் தேதி போட்டு ஒரு பட்டியல் கொடுங்கள் என்று கேட்டேன்.

அவர்களும் அப்படியே கொடுத்தார்கள். அந்த நான்கு கடைகளில் வாங்கியிருந்த விலைப் பட்டியல்களையும் அந்தந்த கடை கவரில் போட்டு நாங்கள் தயாராக கொண்டு போயிருந்த தபால் தலைகளை ஒட்டி அங்கு அருகில் உள்ள தபால் பெட்டியில் போட்டு விட்டு தஞ்சாவூருக்குத் திரும்பினோம். அலுவலக தபால் அனுப்பும் ரிஜிஸ்டரில் நாங்கள் கடிதம் கொடுத்த கடைக்காரர்களின் பெயர்களை எழுதி அவைகளை இரண்டு நாள் முன்பாக  தபாலில் சேர்த்ததாக கணக்கு எழுதி, அதற்கான தபால் தலைகளைக் கணக்கில் குறைத்தோம்.

இது எல்லாம் தில்லுமுல்லு வேலை அல்லவா என்று நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது. இங்குதான் நீங்கள் திருவள்ளுவர் சொல்லிப் போனதை நினைவு கூறவேண்டும்.

குறள்: 292 (பொய்ம்மையும்)

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின் (02)

இந்த விவகாரத்தில் நாங்கள் எந்தக் கடைக்காரரையும் விலையை ஏற்றச் சொல்லியோ குறைக்கச் சொல்லியோ கேட்கவில்லை. எந்தக் கடையிலும் ஒரு காப்பி கூட வாங்கிக் குடிக்கவில்லை. இந்த வாய்மையினால்தான் நான் செய்த இந்த தில்லுமுல்லுகள் என்னை ஒன்றும் செய்யவில்லை. முள் கம்பி போடுவது மிகவும் அவசியம். அதற்காக நான் இப்படி செய்தேன்.

அடுத்த நாள் நாங்கள் தபாலில் போட்ட விலைப் பட்டியல்கள் வந்து சேர்ந்தன. அதை முறைப்படி சரிபார்த்து, எந்தக்கடை குறைவாக விலை சொல்லியிருந்தார்களோ அவர்களுக்கு சப்ளை ஆர்டர் போட்டோம். அதைத் தபாலில் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.

அடுத்த நாள் அவர்கள் கொடுத்த பட்டியலை எடுத்து முள் கம்பிகள் வந்து சேர்ந்ந்தாக கணக்கில் காட்டி அந்தத் தொகைக்கு ஒரு செக் போட்டு அந்தப் பொறியாளரிடம் கொடுத்து இதைக் கொண்டு போய் அந்தக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு முள் கம்பியை எடுத்து வாருங்கள் என்று ஒரு டிராக்டருடன் அனுப்பி வைத்தேன். முள் கம்பி வந்து விட்டது. அதே பொறியாளர் அவைகளை வைத்து வேலி போட்டு முடித்து விட்டார்.

என் மேலதிகாரி அடுத்த முறை வந்தபோது இந்த வேலியைப் பார்த்து விட்டு நன்றாகச் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்டிவிட்டுப் போனார். ஆறு மாதம் கழித்து ஆடிட் ஆட்கள் வந்து ஆடிட் செய்து முடித்தார்கள். கடைசியாக அவர்கள் எழுதிய குறிப்புகளை ஆராய்ந்தபோது இந்த சமாச்சாரத்தில் ஒரு தப்பும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஆகவே அவர்களாக கற்பனை செய்து ஒரு குற்றத்தை எழுதினார்கள். அந்தப் பொறியாளர் விலைப் பட்டியல் வாங்குவதற்காக டூர் போனது அவருடைய டெக்னிகல் வேலையல்ல. ஆதலால் அந்த டூர் போனதிற்கான பயணப்படியைத் திரும்பப் பெறவேண்டும் என்று எழுதியிருந்தார்கள்.

எனக்கு கோபமான கோபம் வந்தது. எது டெக்னிகல் வேலை, எது நான்-டெக்னிகல் வேலை என்பதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்கள் வேலை கணக்குகள் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது மட்டும்தான் அதை மட்டும் நீங்கள் ஒழுங்காகச் செய்யுங்கள். இப்படி எழுதுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சத்தம் போட்டு விட்டு, இதை இப்போதே நீங்கள் அடித்துவிடவேண்டும். அப்படி அடிக்காவிட்டால் நான் இப்பொழுதே உங்கள் மேலதிகாரிக்குப் போன் செய்து நீங்கள் எழுதியுள்ள அக்கிரமமான குறிப்பைப் பற்றி சொல்லுவேன். அது தவிர நான் இந்தக் குறிப்பைப் பார்த்தாகவும் கையெழுத்துப் போடமாட்டேன் என்று சொல்லிவிட்டு என் அறைக்குப் போய்விட்டேன்.

அந்த ஆடிட்டர்கள் என் கோபத்தைக் கண்டு பயந்து விட்டார்கள் மறு பேச்சுப் பேசாமல் அந்தக் குறிப்பை நீக்கினார்கள். ஆடுகிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும், பாடுகிற மாட்டைப் பாடிக்கறக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.

புதன், 15 ஜூலை, 2015

நான் திருப்பதி நாவிதன் ஆனேன்

                                            Image result for திருப்பதி மொட்டை
திருப்பதி நாவிதர்களைப் பற்றி ஒரு பேச்சு வழக்கு உண்டு. "திருப்பதி நாவிதன் வேலை செய்யாதே" என்று பெரியவர்கள் கூறுவார்கள். திருப்பதி நாவிதர்கள் என்ன செய்வார்கள் என்றால், அங்கு பிரார்த்தனைக்கு முடி காணிக்கை செலுத்த பல பக்தர்கள் வருவார்கள். இவர்களுக்கு மொட்டை போட திருப்பதி தேவஸ்தானமே நாவிதர்களை நியமித்திருக்கிறது. அவர்களுக்கு ஒருவருக்கு மொட்டை போட இவ்வளவு கட்டணம் என்றும் நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் எவ்வளவு பேருக்கு மொட்டை போடுகிறார்களோ அவ்வளவு ஊதியம் அவர்களுக்குக் கிடைக்கும். அதனால் ஒவ்வொரு நாவிதரும் எவ்வளவு பேருக்கு அதிகமாக மொட்டை போட முடியுமோ அவ்வளவு பேர்களுக்கு மொட்டை போடவே முயற்சிப்பார்கள். மொட்டை போடுவதில் அவர்களுக்குள். ஒரு எழுதப்படாத சட்டம் உண்டு. அதாவது ஒரு நாவிதர் ஒரு பக்தருக்கு மொட்டை போட கத்தியை அவர் தலையில் வைத்து ஒரு இழுப்பு இழுத்து விட்டால் வேறு யாரும் அந்த பக்தருக்கு மொட்டை போட முடியாது.

பக்தர்க்ள கூட்டம் அதிகமாக இருக்கும்போது இந்த நாவிதர்கள் என்ன பண்ணுவார்கள் என்றால் ஒரு பக்தரை இழுத்து வைத்து அவர் தலையில் கத்தியால் ஒரு இழுப்பு இழுத்து விட்டு, இருங்கள் இப்போ வருகிறேன் என்று சொல்லி விட்டு இன்னோரு பக்தரைப் பிடித்து அவருக்கும் இந்த மாதிரி ஒரு இழுப்பு இழுத்து விட்டு அடுத்த பக்தரைத் தேடிப்போய்விடுவார்கள்.

இப்படியாக ஒரு ஏழெட்டு பக்தர்களுக்கு ஒவ்வொரு இழுப்பு மட்டும் இழுத்து விட்டுப் பிறகு சாவகாசமாக ஒவ்வொருவருக்காக முழு மொட்டையும் அடித்து முடிப்பார்கள். இப்படி ஒரு இழுப்பு இழுக்கப்பட்ட பக்தர்களுக்கு வேறு யாரும் மொட்டை அடிக்க வரமாட்டார்கள். இவர்கள் அந்தக் குறிப்பிட்ட நாவிதர் வரும் வரையில் பேசாமல் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

இப்படி ஒரு வேலையைத் தொடங்கிவிட்டு அதை முடிக்காமல் அடுத்த வேலைக்குத் தாவுகிறவர்களைத்தான் திருப்பதி நாவிதன் வேலை மாதிரி செய்யாதே என்பார்கள்.

இப்ப இந்தக் கதையை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நானும் பல பதிவுகளுக்கு முன்னுரை மட்டும் கொடுத்து விட்டு பதிவு வருகிறது, பதிவு வருகிறது, என்று "புலி வருகிறது" என்ற கதை மாதிரி பாவ்லா காட்டிக்கொண்டு இருக்கிறேன். எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது. இன்று முதல் மும்முரமாக ஒவ்வொன்றாய் முடித்து விடுகிறேன். அன்பர்கள் பொறுத்தருள வேண்டும்.

திங்கள், 13 ஜூலை, 2015

கடா வெட்டு விருந்து - பாகம் 1

நேற்று கடாவெட்டு விருந்து வெற்றிகரமாக நடந்து முடிந்தது. விருந்து இன்னும் ஜீரணமாகவில்லை. விவரங்கள் அடுத்த பதிவுகளில். அதற்குள் சில போட்டோக்களைப் பாருங்கள்.



வெள்ளி, 10 ஜூலை, 2015

ஒரு சிறு பயணம்.

கடந்த 5, 6 7 தேதிகளில் பெங்களூருக்கு ஆம்னி பஸ்சில் போய்வந்தேன். பல விஷயங்களைச் சொல்ல மனம் விழைகின்றது. ஆனால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ஆகவே இப்போதைக்கு சில படங்கள் மட்டுமே. வழக்கமான பதிவுகள் அடுத்த வாரம் முதல் வரும்.



லால்பாக்கின் வரைபடம்.


என் பேரன் ட்யூட்டி பார்க்கும் வாணி விலாஸ் ஆஸ்பத்திரி


நானும் ஜிஎம்பி யும்


என் பேரனுடன் அவன் விடுதி அறையில்.

செவ்வாய், 7 ஜூலை, 2015

ஆடிட்டர்களின் அதிகப் பிரசிங்கித்தனம்- பாகம் 1

                               Image result for barbed wire fence

நான் தஞ்சாவூரில் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக 1985ல் இருந்த காலம். அந்த ஆராய்ச்சிப் பண்ணைக்கு வேலி இல்லை. சுற்றிலும் உள்ள விளை நிலங்கள் தரிசாக இருந்த போதும் எங்கள் பண்ணையில் ஆராய்ச்சிக்காக கொஞ்சம் பயிர் செய்திருப்போம். பக்கத்திலுள்ள தரிசு நிலங்களில் மாடுகள் மேய்ப்பார்கள். மாடு மேய்ப்பவர்கள் கொஞ்சம் அசந்தபோது அந்த மாடுகள் பச்சையாகத் தெரியும் எங்கள் பண்ணைக்குள் புகுந்து விடும். ஆராய்ச்சிக்காக போட்டிருக்கும் பயிர்களைத் தின்று விடும்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பண்ணையைச் சுற்றி முள்கம்பி வேலி போடுவதுதான். நான் மேலதிகாரிகளுக்கு இந்தப் பிரச்சினையைப் பற்றி விவரமாக எழுதி, முள்கம்பி வேலி போடவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன். முள்கம்பி வேலி போட்டுக்கொள்ளச் சொல்லி அனுமதி வழங்கி விட்டார்கள்

சர்க்கார் மற்றும் பொது நிறுவனங்களில் இந்த மாதிரி வேலைகளை இரண்டு வகைகளில் செய்யலாம். ஒன்று டெண்டர் விடுதல் என்ற முறை. இதுதான் பொதுவாகக் கடைப் பிடிக்கப்படும் முறை. இதில் பல சௌகரியங்கள் உண்டு. அனுபவப்பட்டவர்களுக்கு இந்த சௌகரியங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அப்படித் தெரியாதவர்கள் அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவது "டிபார்ட்மென்ட் முறை". இந்த முறையில் அந்தந்த ஆபீசில் இருப்பவர்களே எல்லாக் கட்டுமானப் பொருட்களையும் வாங்கி, அதற்குண்டான ஆள் வைத்து வேலையைச் செய்து முடிப்பது. அதில் வேலையின் தரத்தை நாம் நன்றாக கண்காணிக்க முடியும். சிமென்ட் குறைவாகப் போடுதல், சரியானபடி க்யூரிங்க் செய்யாமை போன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். சிறிய வேலைகளை இவ்வாறு செய்வதுதான் வழக்கம். ஆனால் அந்த ஆபீசில் ஒரு இஞ்சினீயர் இருப்பது அவசியம்.

இந்த முள்வேலி போடும் வேலை ஒரு சிறிய வேலை. இதற்கு டெண்டர் விட்டால் டெண்டர் விட்டால் டெண்டர் எடுப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். தவிர எங்கள் ஆபீசில் இத்தகைய வேலைகள் எப்போதாவதுதான் நடக்குமாதலால் எங்கள் ஆபீசுக்கென்று டெண்டர் எடுக்க யாரும் இல்லை.
ஆகையால் இந்த வேலையை டிபார்ட்மென்ட் முறையில் செய்து விடலாம் என்று முடிவு செய்து அதற்கான பிளானை மேலதிகாரிகளுக்கு அனுப்பி பர்மிஷன் வாங்கினேன்.

இதற்கு ஒரு வருடம் முன்பு எங்கள் யூனிவர்சிடியில் உள்ள வேறொரு பண்ணையில் இந்த மாதிரி கம்பிவேலி போடுவதற்காக முள்கம்பி வாங்கினதில் ஒரு முறைகேடு நடந்து விட்டது. அதனால் முள்கம்பி வேலி போட பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். அதில் முக்கியமானது முள்கம்பி வாங்குவது. இதை பல கம்பெனிகளிடமிருந்து கொட்டேஷன் வாங்கி அதில் விலை குறைவாகவும் தரம் நன்றாகவும் இருக்கும் கம்பியை வாங்கவேண்டும்.

இப்படி கொட்டேஷன்களை நீங்கள் நேரில் போய் வாங்கக் கூடாது. அந்த மாதிரி முள்கம்பி விற்கும் கடைகளின் விலாசத்திற்கு உங்கள் ஆபீசிலிருந்து தபாலில் கொட்டேஷன் கேட்டு ஒரு கடிதம் போகவேண்டும். அதற்கு அந்த கம்பெனிக்காரர்கள் தங்கள் கொட்டேஷன்களைத் தபாலில் அனுப்பவேண்டும். அந்தக் கொட்டேஷன்களை எல்லாம் ஒரே சமயத்தில் பிரித்துப் பார்த்து எந்தக் கம்பெனி விலை குறைவாக கொட்டேஷன் கொடுத்திருக்கிறதோ, அந்தக் கம்பெனியில்தான் முள்கம்பி வாங்கவேண்டும்.

இந்த நடைமுறை ஏட்டில் படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது" என்றபடி இது நடைமுறையில் சாத்தியமில்லை. ஏனென்றால் கடைக்காரர்களுக்கு ஆயிரம் வேலை. கொட்டேஷன் அனுப்புவது வெட்டி வேலை என்று அவர்கள் கருதுகிறார்கள். ஒரு வகையில் அவர்கள் நினைப்பதுவும் நியாயமே. கொட்டேஷன் அனுப்பினால் ஆர்டர் வரும் என்று சொல்ல முடியாது.

எனக்கு அர்ஜென்டாக வேலி போட்டு ஆகவேண்டும். ஆபீஸ் நடைமுறையைப் பின்பற்றினால் வேலை முடிய மாதக் கணக்கில், ஏன், வருடக்கணக்கில் கூட ஆகலாம். என் மூளை எப்போதும் குறுக்காகத்தானே வேலை செய்யும்? நான் என்ன செய்தேன் என்று அடுத்த பதிவில்......

ஞாயிறு, 5 ஜூலை, 2015

விளம்பரங்களும் உண்மையும்

     Image result for சிட்டுக்குருவி லேகியம்                Image result for சிட்டுக்குருவி லேகியம் 

சிட்டுக்குருவி லேகியம் பற்றிய விளம்பரங்களை அநேகமாக எல்லோரும் பார்த்திருப்பார்கள். வாலிப, வயோதிக நண்பர்களே என்று ஆரம்பிக்கும். அதில் பனங்கருப்பட்டியும் ஏலக்காய், சுக்கு, கிராம்பு போட்டு ஒரு லேகியம் தயாரித்திருப்பார்கள். அதை சாப்பிட்டால் அப்படியாகும் இப்படியாகும் என்று சொல்லியிருப்பார்கள். இந்த விளம்பரத்தை நம்பி பலர் ஏமாறுவார்கள்.

இன்று தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் இந்த ரகமே. உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று ஒரு விளம்பரம். பற்களை நெல் உமிக்கரியும் உப்பும் கலந்த கலவைத்தூளில் விளக்குவது தமிழ்நாட்டில் பல காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம். உப்பு பற்களுக்கு நல்லது என்று நம் மக்களுக்குப் பலகாலமாகத் தெரியும். பற்பசைக்காரர்கள் இந்த விஷயத்தை இப்போதுதான் அவர்கள் கண்டுபிடித்த மாதிரியும் அது பற்களுக்கு நல்லது என்பது மாதிரியும் விளம்பரம் செய்கிறார்கள். இதற்கு மயங்குபவர்கள் நிறைய உண்டு.

நியூட்ரமுல் என்று ஒரு பொருள். வெறும் கொழுப்பு நீக்கிய பால் பவுடர்தான். கொஞ்சூண்டு வைடமின்களை, பிபிஎம் அளவில் சேர்த்திருப்பார்கள். ஆஹா, எங்கள் பொருளைச் சாப்பிட்டால் உங்கள் குழந்தைக்கு உங்கத்தில் இல்லதா போஷாக்கு கிடைக்கும் என்று விளம்பரப்படுத்துவார்கள். அதில் மயங்கி பல தாய்மார்கள் அதை வாங்கித் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். அது மட்டுமா. நாங்கள் எங்கள் குழந்தைக்கு நியூட்ரமுல் கொடுக்கிறோமாக்கும் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் பெருமை பாராட்டிக்கொள்வார்கள்.

ஃபோர்ட்டிபைடு (Fortified) என்று ஒரு இங்கலீஷ் வார்த்தை இருக்கிறது. வலிமைப் படுத்துதல் என்று அர்த்தம். எங்கள் டானிக் ஃபோர்ட்டிபைடு செய்யப்பட்டது என்று விளம்பரம் வரும். என்ன ஐயா செய்தீர்கள் என்றால் கூடக் கொஞ்சம் பி வைட்டமின் அல்லது பெர்ரஸ் சிட்ரேட் சேர்த்திருப்பார்கள். இது வலிமை கூட்டப்பட்டது என்று விளம்பரம் செய்வார்கள். அவர்கள் சேர்த்துள்ள இத்தணூண்டு விஷயத்துக்காக ஏகப்பட்ட விலையைக் கூட்டியிருப்பார்கள். இது மக்களை ஏமாற்றும் சதிச் செயல்.

மக்களின் மத்தியில் சில வியாதிகள் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும். இத்தகைய வியாதிகளுக்கு எந்த வைத்தியமும் பலனளிக்காது. மூட்டு வலி, வெண்குஷ்டம், காது கேளாமை, சோரியாசிஸ் இவை போன்றவை. இத்தகைய வியாதியினால் துன்பப்படுபவர்கள் பல வகையான வைத்தியங்கள் செய்து பார்த்து தங்கள் நோயைக் குடப்படுத்த முடியாமல் வருந்துகிறவர்கள். கடலில் விழுந்தவன் ஒரு துரும்பு கிடைத்தால் கூட அதைப் பற்றிக்கொண்டு தப்பிக்க முடியுமா என்று மெயற்சிப்பானாம். அது போல இவர்களும் எவனாவது இந்த சீக்குகளை கடப்படுத்துகிறேன் என்று சொன்னால் போதும். உடனே அவனிடம் ஓடிப்போய் காசைத் தொலைப்பார்கள்.

சோற்றுக் கத்தாழை என்று ஒரு செடி. கிராமங்களில் வேலியோரமாக வளர்ந்திருக்கும். முன்பு ரயில்வே லைன் ஓரத்தில் நட்டிருப்பார்கள். இது மண் அரிப்பைத் தடுக்கும் ஒரு தாவரம். இதில் அநேக மருத்துவ குணங்க்ள ஒளிந்திருக்கின்றன என்று யாரோ ஒருவன் கதை கட்டி விட்டு விட்டான். அவ்வளவுதான். சோப்பு கம்பெனிக்காரர்கள், முகத்திற்குப் போடும் கிரீம் கம்பெனிக்காரர்கள் எல்லாம் எங்கள் பொருளில் சோற்றுக் கத்தாழை கலந்திருக்கிறோம் என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். சில விவசாயிகள் சோற்றுக் கத்தாழையை ஒரு பயிர் மாதிரி பயிரிட ஆரம்பித்து விட்டார்கள்.

அனைத்து தாவரங்களிலும் மனித உடம்பிற்கான ஏதோவொரு மருந்துக் குணம் இருக்கிறது. அந்த குணம் அந்த தாவரத்தை நாள்பட உபயோகித்தால்தான் பயன் தரும். அரச மரத்தை சுற்றி வந்து அடி வயிற்றைத் தடவிப் பார்த்த கதையாக, ஒன்றைச்சாப்பிட் உடனே குணம் தரக்கூடிய தாவர மருந்துகள் எவையும் இல்லை. இதை உணராமல் விளம்பரங்களைக் கண்டு மயங்குபவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

ஆகவே விளம்பரங்களை மட்டும் நம்பி அதனால் ஏமாந்து போகாதீர்கள்.

வெள்ளி, 3 ஜூலை, 2015

இவரைத் தெரிகிறதா?


இது ஒரு மடத்தனமான கேள்வி என்று சின்னப்பிள்ளை கூடச் சொல்லும். இன்றைய தேதியில் இவரைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவரை சந்தித்து அளவளாவி என் வீட்டிற்குக் கூட்டி வந்து, பிறகு ஒரு கோவிலுக்குப் போய் வந்தேன் என்றால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.

ஒரு மாதத்திற்கு முன் என் ஒரு பதிவில் இவர் இட்ட பின்னூட்டத்தில், தான் ஜூன் மாத இறுதியில் கோவைக்கு வரவிருப்பதாக ஒரு குறிப்பு காட்டியிருந்தார். நான் அப்படி நீங்கள் கோவை வரும்போது எனக்கு தவறாமல் தகவல் கொடுக்கவேண்டும். நாம் இருவரும் சந்திக்கலாம் என்று கூறியிருந்தேன்.

அதன்படி அவருடைய அண்ணன் மகள் கல்யாணம் 26-6-2015ல் கோவையில் ஒரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. அதற்கு அவசியம் வாருங்கள் என்று செய்தி அனுப்பியிருந்தார். அதன்படியே அந்த மண்டபத்தில் சென்று சந்தித்தேன்.

ஒரிரு நாளில் உங்களை, உங்கள் சௌகரியத்தை அனுசரித்து மருதமலை அழைத்துச் செல்கிறேன், முதலில் ஊட்டி போய்வரலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அங்கு இப்போது மழைக் காலமாதலால் அங்கு போய் அந்த ஊரை ரசிக்க முடியாது. ஆதலால் மருதமலைக்குப் போக முடிவு செய்தேன். அப்படியே 30-6-2015 அன்று அவரை, அவருடைய அண்ணார் வீட்டில் போய் அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்து ஒரு காப்பி குடித்து விட்டு மருதமலை போய் வந்தோம்.


பின்பு அன்னபூர்ணாவில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அவரை அவருடைய அண்ணார் வீட்டில் விட்டு விட்டு வந்தேன். அவருடைய மகளும் மகனும் கோவையில் அவருடைய அண்ணார் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கில்லர்ஜி கோவைக்காரர்தான்.

செவ்வாய், 30 ஜூன், 2015

80 வயது முடிந்தால் என்ன செய்ய வேண்டும்?

               

இது ஒரு கேள்வியா? பேசாமல் படைத்தவனைப் பார்க்கப் போக வேண்டியதுதான். அப்படிப் போகாட்டியும் பரவாயில்லை? பதிவு எழுதறேன்னுட்டு எங்களை வேற உயிரை எடுக்கறீங்க? இதை விட அக்கிரமம் உலகத்தில உண்டா? (DD to note)

நண்பர் ஜெயக்குமார் போட்டுள்ள பின்னூட்டத்தைப் பாருங்க.

ஐயா

தங்களுடைய 80 ஆவது பிறந்த நாள் (15ஜூன்)மற்றும் சென்றுவிட்ட 50ஆவது கல்யாண நாள் வீட்டின் 50 வயது முதிர்வு எல்லாவற்றையும் இந்த மாதம் ஒன்றாகக் கொண்டாட இருந்தீர்களே. கொண்டாட்டம் முடிந்து விட்டதா? அல்லது தள்ளிப் போடப்பட்டதா? அல்லது பேரன் மார்க் விவகாரத்தில் வேண்டாம் என்று கை விடப்பட்டதா?

எப்படியாயினும் இது பற்றி ஒரு பதிவு போடுங்கள்.


Jayakumar

இதைப்பற்றி ஒரு பதிவு போட்டா பத்தாதுங்க. இருந்தாலும் நண்பர்கள் வேண்டுகோளைத் தட்ட முடியுமா? அதனால சுருக்கமா ஒரு பதிவில சொல்லிப்புடறனுங்க.

என் வாழ்க்கையில் பல முடிச்சுகள் விழுந்திருக்கின்றன. அதற்குக் காரணம் நான் பிறந்த நேரம் என்று பல ஜோசியர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதில் ஒரு விநோதம் பாருங்க, நான் எப்ப பிறந்தேன் அப்படீங்கறதுதான் முதல் முடிச்சு.

நான் வேலைக்குப் போன முதல் நாள் (16-8-1956), கல்யாணம் பண்ணின நாள்
(9-9-1964), பணி ஓய்வு பெற்ற நாள் (30-6-1994) இதெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்குது.  ஆனால் நான் என்றைக்குப் பிறந்தேன் என்பது மட்டும் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது.

என்னுடைய  SSLC சர்டிபிகேட்டில் என் பிறந்த நாள் 15-6-1934 என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ரொம்ப நாள் நான் இதுதான் என் பிறந்த நாள் என்று நம்பிக்கொண்டு இருந்தேன். ஒரு நாள் அந்த நம்பிக்கையில் மண் விழுந்தது.
எங்கிருந்தோ ஒரு பழுப்பு சீட்டு திடீரென்று முளைத்தது. அதில் ஒரு தேதி -இங்கிலீசிலியும் தமிழ் மாதத்திலும் எழுதி நட்சத்திரம் எழுதி கிழமை எழுதி நேரம் எழுதி இந்த நேரத்தில் பழனியப்ப கவுண்டர்-பூவாத்தாள் தம்பதியினருக்கு  குமாரர் சுப ஜனனம் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த அரிய கண்டு பிடிப்பு நான்  SSLC படிக்கும்போது நடந்தது. இந்த சீட்டைக் கொண்டு போய் எனக்குத் தெரிந்த வாத்தியாரிடம் காட்டி இதற்கு என்ன பண்ணலாம் என்று கேட்டேன். அவர் உன்னுடைய  SSLC சர்ட்டிபிகேட் புத்தகத்தில் பழைய தேதியை எழுதியாய் விட்டது. தவிர இது ஒரு துண்டுக் காகிதம். ஒழுங்காக எழுதப்பட்ட ஜாதகம் என்றாலாவது ஏதாவது செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் நீ இந்த வருடம்  SSLC பரீட்சை எழுதவேண்டிய வயது இருக்காது. அடுத்த வருடம்தான்  SSLC பரீட்சை எழுத முடியும் என்றார்.

அப்போ எல்லாம்  SSLC பரீட்சை எழுத ஒரு குறிப்பிட்ட வயது முடிந்திருக்கவேண்டியது அவசியம். இது என்னடா கிணறு வெட்ட பூதம் வந்த கதையாகப் போயிற்றே என்று நான் அந்த விஷயத்தை விட்டு விட்டேன். இருந்தாலும் இந்த தேதி விவகாரம் எப்படி நடந்தது என்று ஆராய்ச்சி செய்து கொண்டேயிருந்தேன். அப்பவே என் மூளை எப்படி என்னை ஒரு ஆராய்ச்சியாளனாக ஆவேன் என்று அடையாளம் காட்டி இருக்கிறது பாருங்கள்.

அப்படி ஆராய்ச்சி செய்ததில் என் பாட்டி சொன்னதாவது. நான் சிறுவனாக இருந்தபோது என்னைவிட இரண்டு வயது மூத்தவனான என் அத்தை மகன் எங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் போய்க்கொண்டு இருந்திருக்கிறான். என் அத்தையைக் கட்டிக் கொடுத்தது ஒரு வரப்பட்டிக்காடு. அங்கு பள்ளிக்கூடம் இல்லை. அதனால் டவுனில் நாங்கள் குடியிருந்ததினால் எங்கள் வீட்டில் இருந்து படித்திருக்கிறான்.

அவன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்த நான் அவனுடன் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று அழுது ரகளை பண்ணியிருக்கிறேன். என் ரகளை பொறுக்க மாட்டாமல் என் பாட்டி என்னை ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு கூட்டிப்போய் என்னையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் பாட்டியிடம் இவன் வயதென்ன என்று கேட்டதற்கு என் பாட்டி அது எல்லாம் எனக்குத் தெரியாது, எப்படியோ நீங்கள் இவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தே ஆகவேண்டும். வீட்டில் இவன் ரகளை பொறுக்க முடிவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும். அதை கணக்கில் வைத்து அந்த ஆசிரியர் என் வயதை 15-6-1934 என்று குறித்துக் கொண்டார். அப்போதெல்லாம் பிறப்பு சான்றிதழ் வழக்கமெல்லாம் ஏற்படவில்லை. ஒருவருடைய ஜாதகம்தான் அவருடைய பிறப்பு சான்றிதழாக இருந்தது.

எனக்கு ஜாதகம் எழுதாததினால் குத்து மதிப்பாக இந்த பிறந்த தேதி நிர்ணயிக்கப்பட்டு விட்டது. வெகு காலம் கழித்து என் உண்மையான பிறந்த தேதி எழுதிய துண்டுக்காகிதம் கிடைத்தது என்று முன்பே கூறினேன் அல்லவா? நான் வேலைக்குச் சேர்ந்த பிறகு ஒரு பஞ்சாங்க ஐயர் எனக்குப் பழக்கமானார். அவர் என்னுடைய ஜாதகம் எங்கே என்று கேட்டார். எனக்கு ஜாதகம் எழுதவில்லை என்று சொன்னேன். பிறந்த தேதியும் நேரமும் தெரியுமா என்று கேட்டார். நான் இந்த துண்டு காகித த்தை எடுத்துக் காண்பித்தேன்.

அவர் அந்தக் காகிதத்தை வாங்கிக்கொண்டு போய்  சில நாட்கள் கழித்து என் ஜாதகத்தை ஒரு புது நோட்டில் எழுதிக்கொண்டு வந்து கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு இருந்தேன். சர்க்கார் ஆவணங்களிலெல்லாம் என் பிறந்த நாள்  SSLC சர்டிபிகேட் புத்தகத்தில் இருப்பது போன்று பதிவாகிவிட்டது. ஆனால் ஜாதகப்படி என் பிறந்த நாள் ஒரு வருடம் ஒரு மாதம் கழித்துத்தான் வருகிறது. இதைச் சரி செய்ய முடியுமா என்று விசாரித்தேன்.

அது கோர்ட்டுக்குப் போய் தீர்மானமாக வேண்டிய சமாச்சாரம். அங்கு போனால் என்னுடைய ஜாதகத்தைத்தான் ஆதாரமாக காட்ட வேண்டி இருக்கும். ஆனால் என் ஜாதகம் புதிதாக எழுதப் பட்டதாகையால் கோர்ட்டில் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லிவிட்டார்கள். சரி நானும் இந்த கோர்ட் வேலையெல்லாம் நமக்கு உதவாது என்று விட்டு விட்டேன்.

 SSLC தேதி பிரகாரம் ரிடைர்டு ஆகி விட்டேன். சஷ்டியப்த பூர்த்தி என்று ஒரு விசேஷம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அது எங்கள் சமூகத்தில் யாராலும் கொண்டாடப் பட்டதில்லை. நானும் அது பற்றி அதிகமாக நினைக்கவில்லை.அது மட்டுமல்ல, பிறந்த நாள், கல்யாண வலையில் விழுந்த நாள் என்று எல்லாம் கொண்டாடும் வழக்கம் கிடையாது. இறந்த நாளை மட்டும் இறந்தவரின் சந்ததியினர் "திவசம்" என்று அனுஷ்டிப்பார்கள். அவ்வளவுதான்.

இந்த சமயத்தில் என் நெருங்கிய நண்பன் ஒருவன் திருக்கடையூர் சென்று சஷ்டியப்தபூர்த்தி சடங்குகள் செய்து வந்தான். அதைப் பார்த்த எனக்கும் மனதிற்குள் ஒரு ஆசை தோன்றியது. நானும் இந்த வைபவத்தைக் கொண்டாடினால் என்ன? என்று யோசித்து அதை நிறைவேற்றினேன். இதை ஜாதகத்தில் இருக்கும் தேதி பிரகாரம்தான் கொண்டாடவேண்டும், அதுவும் ஒருவன் பிறந்த மாதத்தில் அவன் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில்தான் கொண்டாடவேண்டும் என்றும் சொன்னார்கள்.

அப்படியே திருக்கடையூர் சென்று சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடிவிட்டு வந்தேன். போட்டோக்கள் எடுத்துக்கொண்டேன். மனைவிக்கு இரண்டாம் முறை தாலி கட்டினேன். அதனால்தான் இதை அறுபதாம் கல்யாணம் என்றும் சொல்கிறார்கள். நான் என் மனைவி, எனது இரு மகள்கள், எனது சகோதரி, ஆகிய ஐந்து பேர் மட்டுமே போயிருந்தோம். அங்கு இந்த மாதிரி வைபவம் செய்ய வந்திருந்தவர்கள் ஒரு பெரிய கல்யாணக் கூட்டத்துடன் வந்திருந்ததைப் பார்த்து மலைத்தேன்.

ஆச்சு, அந்த வைபவம் முடிந்து 20 வருடங்கள் ஆயிற்று. நாங்கள் இருவரும் (இரத்த அழுத்தம், சர்க்கரை இவைகளுடன்) நலமாக இருக்கிறோம். ஆகவே 80 ஆம் கல்யாண வைபவத்தையும் ஏன் கொண்டாடக்கூடாது என்று தோன்றியது. ஆனால் திருக்கடையூர் சென்று வருவதற்கான சூழ்நிலை இல்லை. ஆகவே இங்கு பக்கத்தில் 15 கி.மீ. தூரத்தில் கால காலேஸ்வரர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்குதான் திருக்கடையூரில் சாபம் பெற்ற யமன் சாப விமோசனம் பெற்றதாக ஐதீகம். அங்கும் இந்த மாதிரி சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்களை நடத்தி வைக்கிறார்கள் என்று கேள்விப் பட்டோம்.

ஆகவே இங்கேயே என்னுடை சதாபிஷேகத்தையும் நடத்தி விடலாம் என்று முடிவு செய்தேன். நானாக கூகுளில் பஞ்சாங்கம் பார்த்து 1-7-2015 ல் என்னுடைய ஜன்ம நட்சத்திரம் வருவதைக் கண்டு பிடித்து அன்று சதாபிஷேகம் செய்வதாய் முடிவு செய்தேன். சரி, எதற்கும் அந்தக் கோவிலுக்கே சென்று இதன் நடைமுறைகளை அறிந்து வருவோம் என்று ஒரு மாதம் முன்பு நானும் என் மனைவியும் சென்றிருந்தோம்.

அங்குருந்த கோவில் குருக்கள் என் பிறந்த தேதி வருடம் ஆகியவைகளைக் கேட்ட பிறகு, இந்த சதாபிஷேகம் 80 வயது முடிந்து குறைந்தது மூன்று மாதம் கழித்துத்தான் செய்யவேண்டும் என்றார். நான் என்னுடைய கணக்குப் பிரகாரம் 1-7-2015 ல் சதாபிஷேகம் செய்ய துணி மணிகள், புதுத் தாலி ஆகியவை ஏற்பாடு செய்து விட்டேன். குருக்கள் ஆனந்தபோதினி பஞ்சாங்கத்தைப் பார்த்து நவம்பர் 15 ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை சரியாக இருக்கிறது, அன்று உங்கள் விசேஷத்தை வைத்துக் கொள்ளலாம் என்றார்.

எந்த நேரம் இந்த வைபவத்தை நடத்தலாம் என்று கேட்டேன். அவர் காலை 5 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்தால் 8 மணிக்குள் எல்லா விசேஷங்களையும் முடித்து விடலாம் என்று கூறினார். எனக்கும் அது சரியாகப் பட்டதினால் அதற்கு ஒப்புக்கொண்டு கோவிலுக்குச் செலுத்த வேண்டிய ரூபாய் 3000 ஐக் கொடுத்து ரசீது வாங்கிக்கொண்டேன்.

கல்யாணம் முடிந்த 50 வது வருடம் 9-9-2014ல் பூர்த்தியானது. அதற்கு ஏதோ ஒரு கோவிலுக்குப் போய் வந்ததோடு சரி. ஆகவே இந்த சதாபிஷேகத்துடன் அந்த வைபவத்தையும் நடத்துவதாக எண்ணிக் கொண்டால் போகிறது என்று முடிவு செய்தேன்.

பல சமூகங்களில் இந்த வைபவத்தை ஏறக்குறைய கல்யாணம் போலவே செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் அப்படி ஏற்பாடு செய்தால் என் உறவினர்கள் எல்லாம் இவனுக்கு வந்த வாழ்வைப் பார் என்பார்கள். அதனால் என் குடும்பம் மட்டுமே இதில் கலந்து கொள்வதாக ஏற்பாடு. என் பங்காளிகளுக்கு மட்டும் எங்கள் குலதெய்வக் கோவிலில் ஒரு கடாவெட்டு விருந்து. இவ்வளவுதான் சதாபிஷேக ஏற்பாடுகள்.

ஆனால் பதிவுலக நண்பர்கள் விரும்பினால் என் சதாபிஷேக வைபவத்தில் தாராளமாகக் கலந்து கொள்ளலாம், வைபவம் கோவை-சத்தி ரோட்டில் கோவையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் கோவில்பாளையம் என்ற ஊரில் உள்ள கால காலேஸ்வரர் கோவிலில் காலை 5 மணி முதல் 8 மணி வரை நடக்கும். கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் கணபதி பாரதி நகரில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் காலை டிபனும் சாய்பாபா காலனியில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் மதிய சாப்பாடும் உண்டு. இரவு சாப்பாட்டை அவரவர்களுக்குப் பிடித்த ஹோட்டலில் அவரவர்கள் செலவில் சாப்பிட்டுக் கொள்ளலாம். இரண்டு நாட்கள் (சொந்த சிலவில்) தங்கி ஊட்டி பார்த்து விட்டு ஊருக்குத் திரும்பலாம்.

                                      Image result for அன்னபூர்ணா, கோவை

அப்படிக் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக நிறைய போட்டோக்கள் எடுத்து ஒரு ஸ்பெஷல் பதிவு போடப்படும் அதைக் கண்டு களிக்கலாம். நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு கொடுக்கிறேன். நான்கு நாட்கள் முன்னதாகவே சுற்றம் சூழ வந்திருந்து வைபவத்தில் கலந்து கொண்டு எங்களைக் கௌரவிக்கலாம். 

வியாழன், 25 ஜூன், 2015

நான் ஆடிட்டரை ஏமாற்றிய கதை

                                   Image result for ஜீப்

ஆடிட்டர்களுடைய தலையாய குணம் என்னவென்றால் நாம் எதை எப்படி ரூல்படிச் செய்திருந்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதுதான். இது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த யூகத்தின் அடிப்படையில் நான் ஒரு முறை ஆடிட்டர்களை வகையாக ஏமாற்றினேன். அது எப்படி என்று பாருங்கள்.

அரசு அலுவலகங்களில் உள்ள வாகனங்கள் அந்த அலுவலக உயர் அதிகாரி அலுவலக வேலைகளுக்குப் பயன்படுத்துவதற்காக மட்டுமே வாங்கப்பட்டவை ஆகும். ஆனால் இதை சொந்த வேலைகளுக்காகப் பயன்படுத்துபவர்கள் அதிகம். பெண்டாட்டி ஷாப்பிங்க் போவதற்கும் குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்கும் உபயோகப்படுத்துபவர்கள் உண்டு.

இதனால் வாகனங்கள் இருக்கும் அலுவலகங்களில் இந்த ஆடிட்டர்கள் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு வெகு கவனமாகப் பார்ப்பார்கள். எனக்கு இது நன்றாகத் தெரியும். நான் தஞ்சாவூரில் ஆபீசராக இருந்த போது எனக்கு இந்த மாதிரி ஒரு வாகனம் கொடுத்திருந்தார்கள். நான் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு போகாததினால் தனியாக இருந்தேன். சொந்த உபயோகம் என்று ஏதும் வந்ததில்லை.

ஒரு சமயம் என் குடும்பத்தினருக்கு தஞ்சாவூரிலும் பக்கத்து ஊர்களிலும் உள்ள கோவில்களைக் காட்டலாமே என்று நினைத்து அவர்களை வரவழைத்தேன். ஆபீஸ் வாகனத்திலேயே கூட்டிக்கொண்டு போகலாம் என்று முடிவு செய்தேன். இம்மாதிரி சொந்த உபயோகத்திற்கு ஆபீஸ் வாகனத்தை மேலதிகாரியின் முன் அனுமதியுடன் உபயோகித்துக் கொள்ளலாம். அப்படி உபயோகித்த அளவிற்குண்டான பணத்தைக் கட்டவேண்டும். இப்படி ஒரு விதி உண்டு.

நான் முன்னேற்பாடாக என் மேலதிகாரிக்கு விண்ணப்பம் எழுதி அனுப்பிவிட்டேன். குடும்பத்தினர் வந்தார்கள். ஆபீஸ் வாகனத்தில் ஏறி  எல்லா ஊரையும் பார்த்தார்கள். திரும்பிப் போய்விட்டார்கள். சில நாட்கள் கழித்து நான் அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று ஆர்டர் வந்தது. நானோ வாகனத்தை உபயோகித்தாகி விட்டது. வாகனத்தின் லாக் புஸ்தகத்திலும் சொந்த உபயோகம் என்று எழுதியாகி விட்டது. இனி அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

என் மேலதிகாரி எனக்கு நன்றாகப் பழக்கப்பட்டவர். என்பேரில் தனி அபிமானம் கொண்டவர். அதனால் நான் இந்த ஆர்டரைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை. அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது இந்த சமாச்சாரத்தை மெதுவாகச் சொன்னேன். அவர் உன் சொந்த வேலையென்றால் உபயோகித்துக் கொள்ளவேண்டியதுதானே, அதை எதற்கு கணக்கில் காட்டுகிறார் என்று என்னைக் கோபித்துக்கொண்டார்.

நான் சொன்னேன், அப்படி நான் என் சொந்த உபயோகத்திற்காக ஆபீஸ் கணக்கில் அந்த வாகனத்தை உபயோகித்தால் ஆபீசில் வேலை செய்யும் எல்லோருக்கும் அது தெரிந்து விடும், பிறகு எனக்கு அங்கு மரியாதை கிடைக்காது. ஆகவே நான் ஏற்கனவே உபயோகித்து விட்டேன். அதை என் சொந்த உபயோகம் என்றும் லாக் புக்கில் எழுதிவிட்டேன். இனி மாற்ற முடியாதே, என்று சொன்னேன். அவர், சரி, நீ ஒரு கிறுக்கன், சொன்னால் கேட்கமாட்டாய், திரும்பவும் அந்த விண்ணப்பத்தை அனுப்பு, நான் சேங்க்ஷன் செய்து விடுகிறேன் என்றார்.

அப்டியே அந்த விண்ணப்பத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் அனுப்பினேன். மேலதிகாரியின் ஒப்புதல் ஆர்டர் வந்து விட்டது. அதை நான் வாங்கி தனியாக என்னுடைய அலமாரியில் வைத்து விட்டேன். ஆபீசில் உள்ளவர்களுக்கு இந்த ஒப்புதல் ஆர்டர் வந்த விவரம் தெரியாது.

அந்த வருட ஆடிட் பார்ட்டி வந்தது. ஆபீஸ் வாகனத்தின் லாக் புக்கை ஆடிட் செய்தபோது நான் சொந்த வேலைக்காக உபயோகித்த விவரம் அவர்கள் கண்ணுக்குப் பட்டது. இதற்கு மேலதிகாரியின் ஒப்புதல் வாங்கியிருக்கிறதா என்று ஆபீசில் உள்ளவர்களைக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் விண்ணப்பம் போட்டு அது சேங்க்ஷன் ஆகாமல் திரும்பி வந்தது வரைக்கும்தான் தெரியும். மறுபடி நான் அதை திரும்பவும் அனுப்பி சேங்க்ஷன் வாங்கிய விவரம் அவர்களுக்குத் தெரியாது. நான்தான் அந்த ஆர்டரை என் அலமாரியில் வைத்திருக்கிறேனே?

அவர்கள் நடந்ததைச் சொல்லியிருக்கிறார்கள். ஆபீசர் விண்ணப்பம் அனுப்பினார், ஆனால் அது அப்ரூவல் ஆகவில்லை என்று சொல்லவிட்டார்கள். ஆடிட்டர்களுக்கு கன சந்தோஷம். அது வரையில் பெரிதாக எந்த தவறுகளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆஹா, இந்த ஆபீசர் வசமாக மாட்டிக்கொண்டார் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு விலாவாரியாக இந்த சமாச்சாரத்திற்கு கை கால், வாய், மூக்கு, கண் எல்லாம் வைத்து, இந்த ஆபீசர் விதிகளுக்குப் புறம்பாக இந்த மாதிரியான குற்றம் செய்து அரசுக்கு இவ்வளவு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கிறார், இவரை உடனடியாக கழுவில் ஏற்றவேண்டும் என்று இரண்டு பக்கத்திற்கு நோட்ஸ் எழுதி வைத்துக் கொண்டார்கள். (உண்மையில் இப்படி நடந்திருந்தால் நான் கழுவில் ஏறித்தானாக வேண்டும்.)

ஆடிட் எல்லாம் முடிந்தது. ஆடிட் வழக்கம் என்னவென்றால் அவர்கள் எழுதியுள்ள ஆடிட் நோட்ஸை என்னிடம் காட்டி என் கையெழுத்து வாங்கவேண்டும். அப்போதுதான் அது செல்லுபடியாகும். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து நோட்ஸைப் பார்த்துக்கொண்டே வந்தோம். அப்படிப் பார்க்கும்போது என்னைக் கழுவில் ஏற்றச் சொல்லி எழுதியிருக்கும் குறிப்பு வந்தது. அப்போது நான் ஒரு டிராமா போட்டேன்.

ஆபீஸ் சூப்பிரன்ட்டைப் பார்த்து "நாம் இதற்கு மேலதிகாரியின் அனுமதி வாங்கவில்லையா?" என்று கோபமாகக் கேட்டேன். அவர் பவ்யமாக, அப்ளை செய்தோம் சார், ஆனால் அதை ரிஜெக்ட் பண்ணி விட்டார்கள் என்றார். அப்புறம் மறு பரிசீலனைக்கு எழுதவில்லையா என்றேன். எழுதினோம் சார், ஆனால் இதுவரை பதில் வரவில்லை, சார் என்றார். என்ன ஆபீஸ் நடத்துறீங்க, பதில் வரலைன்னா ரிமைண்டர் போட்டிருக்கணும், இல்லைன்னா எங்கிட்டயாவது சொல்லியிருக்கணும், இப்ப ஆடிட்டுக்கு என்ன பதில் சொல்றது என்று கேட்டு விட்டு, தலையைச் சொறிகிற மாதிரி பாவனை செய்து, ஆங். இப்ப ஞாபகம் வருது, ஆர்டர் வந்துதே  ஐயா, அதை உங்க கிட்ட கொடுக்கலியா என்று ஒரு புருடா விட்டேன். சார் எங்க கிட்டே வரலியே சார் என்று பரிதாபமாக முனகினார்கள்.

நான் திரும்பவும் தலையைச் சொறிந்து கொண்டு, ஆமாம் அது பத்திரமாக இருக்கட்டும் என்று என் அலமாரியில் வைத்தேன், இருங்கள் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு அலமாரியைத் திறந்து தேடுகிற மாதிரி பாவனை செய்து விட்டு அந்த ஆர்டர் இருக்கும் பைலை எடுத்துக் கொடுத்தேன். அதைப் பார்த்த ஆடிட்டர்களுக்கு முகம் தொங்கிப் போயிற்று. அந்த ஆர்டரைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்கள். ஒரு குற்றமும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்புறம், சார் இதற்கு பணம் கட்டவில்லையே என்றார்கள்.

நான் உடனே சூப்பிரன்ட்டிடம் இதற்கு எவ்வளவு கட்டவேண்டும் என்றேன். அவர் கிலோ மீட்டருக்கு மூன்று ரூபாய் சார் என்றார். எத்தனை கிலோ ஓடியிருக்கிறது என்றேன். நூற்றி இருபது கிலோ ஓடியிருக்கிறது என்றார். அப்படியா, இதோ 360 ரூபாய், இப்பவே ரசீது போட்டுக்கொண்டு வந்து ஆடிட்டர் சாரிடம் காட்டு என்றேன். சார் பட்டம் கொடுத்தவுடனே ஆடிட்டருக்கு உச்சி குளிர்ந்து போனது. ஐந்து நிமிடத்தில் ரசீது வந்து விட்டது. அதைப் பார்த்து விட்டு எழுதி வைத்திருந்த கழுவேற்று நோட்ஸை அடித்து விட்டார்.

நான் இப்படிச் செய்யாமல் முதலிலேயே அந்த ஆர்டரையும் பணம் கட்டின ரசீதையும் ஆடிட்டர்களுக்குக் கொடுத்திருந்தால் வேறு ஏதாவது வகையில் ஒரு குறை கண்டுபிடித்து எழுதியிருப்பார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கடினமாக இருந்திருக்கும். நான் போட்ட டிராமாவினால் மேட்டர் சிம்பிளாக முடிந்து விட்டது.

வேறு ஒரு சமயம் அப்படி ஒரு குறையும் கிடைக்காமல் போனபோது அவர்கள் அநியாயமாக வேண்டுமென்றே எழுதிய ஒரு ஆடிட் குறிப்பைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

திங்கள், 22 ஜூன், 2015

என் ஆடிட் அனுபவங்கள்

                                 Image result for audit party

பொதுவாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலகங்களிலும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று - ஆபீஸ் டெக்னிகல் இன்ஸ்பெக்ஷன், இரண்டு - ஆடிட்.

ஒரு அலுவலகம் அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா, அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த அலுவலக விதிமுறைகளின்படிதான் நடக்கிறதா என்பதை இந்த இரண்டு நடவடிக்கைகளாலும்தான் மேலதிகாரிகள் கணிக்கிறார்கள். ஒரு அலுவலகத்தின் முன்னேற்றத்திற்கு இந்த இரண்டும் அவசியம்.

இதில் ஆபீஸ் டெக்னிகல் இன்ஸ்பெக்ஷன் தொழில் நுணுக்க வல்லுநர்களால் நடத்தப்படும். அந்த அலுவலகத்தின் நோக்கம் என்ன? அதை எவ்வாறு நிறைவேற்றியிருக்கிறார்கள், அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் என்ன, அவைகளை எவ்வாறு களையவேண்டும் என்பதைப் பற்றி ஆக்க பூர்வமான ஆலோசனைகள் வழங்கவே ஏற்பட்டது இந்த டெக்னிகல் இன்ஸ்பெக்ஷன்.

ஆடிட்டின் நோக்கமே வேறு. அந்த அலுவலகத்திற்குக் கொடுக்கப்பட்ட பணத்தை ஒழுங்காக, விதிமுறைகளின்படி செலவழித்திருக்கிறார்களா என்று சோதிப்பதுதான் ஆடிட்டர்களின் வேலை. இது பரஸ்பர அவநம்பிக்கையில் உருவான ஒரு நடைமுறை. மனிதர்கள் இடம் கொடுத்தால் கண்டிப்பாக ஏமாற்றுவார்கள் என்ற அடிப்படையில் உருவான ஒரு பழக்கம்.

அதனால் ஆடிட் என்றாலே பல அலுவலர்கள் அலறுவார்கள். காரணம் அவர்கள் அந்த அலுவலகத்தின் சட்ட திட்டங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததே. அப்படிப் புரிந்திருந்தாலும் அவர்கள் ஏதாவது தில்லு முல்லு செய்திருப்பார்கள்.

எனக்கு இந்த ஆடிட் மிகவும் பிடித்தமான ஒரு சமாச்சாரம். ஆபீசில் ஒரே மாதிரியான வேலைகளை இயந்திரத்தனமாக  தினம் தினம் செய்து போரடிக்கும்போது இந்த ஆடிட்காரர்கள் வந்தால் மூளைக்கு கொஞ்சம் வேலை கிடைக்கும். நான் இவர்களை ரொம்பவே விரும்புவேன். காரணம் இவர்கள் எல்லோருமே குறுக்குப் புத்தி உள்ளவர்கள். எங்கு தப்பு கண்டுபிடிக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

நான் இவர்களுக்கு மேல் குறுக்குப் புத்தி கொண்டவன். கொஞ்சம் கிறுக்கனும் கூட. அதாவது ஓவர் இன்டெலிஜென்ட். இன்டெலிஜென்ட் ஆட்கள் எல்லாம் எப்போதும் அரைக் கிறுக்கர்களாகத்தான் இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.. நான் ஓவர் இன்டெலிஜென்ட். அதனால் நான் முழுக் கிறுக்கனாக இருந்தேன்.(அப்பவும் இப்படித்தானா என்று சில பதிவர்கள் கேட்பது காதில் விழுகிறது. எப்பவுமே நான் அப்படித்தான். என் அந்தக் காலத்து மாணவர்களைக் கேளுங்கள். கதை கதையாகச் சொல்லுவார்கள்.) தவிர அலுவல சட்டதிட்டங்களை நன்கு புரிந்து வைத்திருப்பேன். மேலும் எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருப்பேன். தில்லு முல்லு எதுவும் செய்ய மாட்டேன். என் வேலைகளில் எப்போதும் ஒழுங்காக இருப்பேன். என் வேலையில் ஒருவர் குற்றம் கண்டு பிடிக்கும்படி விடமாட்டேன். ஆகவே ஆடிட்டர்களைக் கண்டு பயப்பட எனக்கு ஒன்றுமில்லை.

அப்போது நான் வேதியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருந்தேன். மாணவர்களுக்கு வேதியல் செயல்முறை வகுப்புகள் எடுப்பது என் வேலை. இந்த வகுப்புகளில் மாணவர்களுக்குப் பல கண்ணாடி உபகரணங்கள் தேவைப்படும். வருட ஆரம்பத்தில் அவைகளை அவர்களுக்கு கடனாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கொடுப்போம். மாணவர்கள் அவைகளை வாங்கி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கப்போர்டில் பூட்டி வைத்துக்கொள்வார்கள். வருடக் கடைசியில் அவைகளை திரும்ப வாங்கிக்கொள்வோம்.

மாணவர்கள் இந்த உபகரணங்களை உபயோகிக்கும்போது எப்படியும் சில உடைந்து விடும். அப்படி உடைந்தவைகளுக்கு அதன் விலையில் கால் பங்கு மட்டும் மாணவர்களிடமிருந்து வசூலிப்போம். இது ஒரு மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் மாணவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வரவேண்டும் என்பதற்கான ஒரு நடைமுறை.  இது காலம் காலமாக அரசுக் கல்லூரிகளில் வேதியல் சோதனைச்சாலைகளில் அனுசரிக்கப்பட்டு வரும் ஒரு முறை. தனியார் கல்லூரிகளில் முழு விலையையும் வசூலிப்பார்கள்.

இந்த பணத்தை மாணவர்கள் கல்லூரி அலுவலகத்தில் கட்டி விட்டு, ரசீதை எங்களிடம் காட்டினால் அந்த விவரங்களைக் குறித்துக் கொண்டு, நாங்கள் நோஅப்ஷெக்ஷன் சர்டிபிகேட் கொடுப்போம். அதைக் காட்டினால்தான் அவர்களுக்கு பரீட்சை எழுத ஹால் டிக்கட் கிடைக்கும். இந்த ரசீதுகளின் அடிப்படையில் இந்த உபகரணங்களின் எண்ணிக்கையை ஸ்டாக் புக்கிலிருந்து குறைப்போம்.

இந்த நடைமுறை தவறில்லாமல் செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று ஆடிட்காரர்கள் சரி பார்ப்பார்கள். அதற்கு அவர்கள் இந்தப் பணம் வசூல் செய்யப்பட்ட பில் புஸ்தகங்களை கல்லூரி ஆபீசிலிருந்து வாங்கி, எங்கள் ஸ்டாக் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பில்லாகப் பார்த்து டிக் அடிக்கவேண்டும். 400 மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று ஐட்டங்களையாவது உடைத்திருப்பார்கள். மொத்தம் 1200 ஐட்டங்கள். இவைகளை ஒவ்வொன்றாக சரி பார்ப்பது என்பது மிகவும் சள்ளை பிடித்த வேலை.

 ஆனால் என்ன செய்ய முடியும்? ஆடிட்டர்களின் வேலை அதுதானே. ஒரு வருடம் ஒரு ஆடிட்டருக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ஆடிட்டர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது எங்கள் கடமை. ஆகையால் அவர்கள் கூப்பிட்டால் போகாமலிருக்க முடியாது. நான் போனேன்.

அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால், சார்,  இந்த மாணவர்கள் உடைத்த உபகரணங்களின் கணக்கைப் பார்க்கவேண்டும். நீங்கள் ஆபீசில் போய் அந்த பில் புத்தகங்களை வாங்கி வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து ஒவ்வொரு பில்லாகக் காட்டினால் நான் ஸ்டாக் புக்கில் டிக் அடித்து விடுவேன், என்றார். அதாவது அவர் வேலையில் பாதியை என்னை வைத்து செய்து விடலாம் என்று நினைத்திருக்கிறார்.

நானும் கொஞ்சம் கோணல் புத்திக்காரன்தானே? அவருடைய தந்திரம் புரிந்தது. நான் சொன்னேன். நான் வாத்தியார். மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவேண்டும். அந்த வேலையை விட்டு விட்டு இந்த வேலையைச் செய்ய என்னால் வரமுடியாது என்றேன். நீங்கள் வராவிட்டால் பரவாயில்லை, உங்களுக்கு கீழ் இருக்கும் அட்டெண்டர் யாரையாவது அனுப்பினாலும் போதும் என்றார். நான் விடுவேனா? நான் வகுப்பு எடுக்கும்போது என் உதவிக்கு அவர்களும் என்னுடன் இருக்கவேண்டும். ஆகையால் அவர்களையும் அனுப்ப முடியாது என்றேன்.

இப்படி சொன்னால் எப்படி? என்றார். பிறகு வேறு எப்படி சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? ஆடிட் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. செய்ய முடிந்தால் செய்யுங்கள். முடியாவிட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி விட்டுப் போங்கள். நீங்கள் என்ன எழுதினாலும் அதற்குப் பதில் எழுத என்னால் முடியும். சர்க்கார் கொடுக்கும் பேப்பரும் பேனாவும் உங்களிடமும் இருக்கிறது. என்னிடமும் இருக்கிறது. நீங்கள் எழுதும் குறிப்புகள் பத்து வருடம் இழுவையில் இருக்கும். அதற்குள் நீங்கள் எங்கேயோ, நான் எங்கேயோ என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இந்த ஆடிட்டர்கள் எழுதும் குறிப்புகளை ஆடிட் முடிந்த பிறகு அவர்களின் மேல் அதிகாரி ஒருவருடன் நாங்களும் உட்கார்ந்து ஒரு ஜாயின்ட் சிட்டிங்க் வைப்போம். அப்போது இந்த மேட்டர் பார்வைக்கு வந்தது. மேல் அதிகாரி என்ன விவரம் என்று என்னைக் கேட்டார். நான் சொன்னேன். சார் இந்த ஆடிட்டர்கள் என்னை பில் புக்கைக் கொண்டு வந்து ஒவ்வொரு பில்லாகத் திறந்து காட்டச் சொல்லுகிறார்கள். நான் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவா அல்லது இந்த வேலையைச் செய்யவா? என்று கேட்டேன். அவர் ஆடிட்டர்களைப் பார்த்து இந்த வேலையை நீங்களே செய்யுங்கள், ஆசிரியர்களை ஏன் தொந்திரவு செய்கிறீர்கள் என்று சொல்லி விட்டார். ஆடிட்டர்களின் முகம் தொங்கிப் போயிற்று.

பிறகு என்ன நடந்ததோ எனக்குத் தெரியாது. சில நாட்களில் நான் வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டு இந்த மேட்டரை முற்றிலும் மறந்து போனேன்.

வெள்ளி, 19 ஜூன், 2015

பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா?

19-6-2015  மணி மாலை 7.30

தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் இன்றைய பதிவைப் பார்த்தீர்களா?

http://www.tamilvaasi.com/2015/06/blog-post.html

படிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவும்.

ஜாடை போடுவது பற்றிய என்னுடைய பதிவையும் படிக்கவும்.

http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_19.html


என்னுடைய தலைப்பில் இருக்கும் கேள்விக்கு வருவோம்.

பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா?

இல்லையே. என் கண்களுக்கு எதுவும் படவில்லையே. அப்படி நடந்தால் பதிவுலகம் பொங்கி எழாதா? பதிவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?

நுண் கனிமங்களை பகுப்பாய்வு செய்வது எப்படி?

                                         Image result for chemistry lab equipment

இந்தப் பரந்து விரிந்த உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் கனிமங்களாலும் (Elements) அவற்றின் தனிமங்களாலும் (Atoms) உருவாக்கப்பட்டவை என்பதை உங்கள் வேதியல் பாடத்தில் படித்திருப்பீர்கள். இவைகளைப் பகுப்பாய்வு செய்வது வேதியலின் ஒரு முக்கியமான செயல்முறைப் பயிற்சி.

பிற்காலத்தில் நீங்கள் ஒரு விஞ்ஞானியாக ஒரு ஆய்வகத்தில் பணி புரிய நேர்ந்தால் இந்த செயல்முறைப் பயிற்சி அதிகம் பயன்படும். ஆனாலும் படிக்கும்போது கற்றுக்கொள்ளும் பகுப்பாய்வு முறைகளுக்கும்  ஆய்வகத்தில் நடைமுறையில் உள்ள செயல் முறைகளுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கும்.

ஒரு நவீன ஆய்வகத்தில் பல நவீன உபகரணங்கள் இருக்கும். அவை பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ளவைகளாக இருக்கும். அவை அடிப்படையில் பகுப்பாய்வுக் கருவிகள்தான் என்றாலும் மிக நுண்ணிய அளவில் இருக்கும் தனிமங்களைக் கூட அளக்கும் சக்தி பெற்றவை. இப்போது செய்தித்தாள்களில் பரவலாகப் பேசப்படும் "மேகி" விவகாரத்தில் சொல்லப்படும் கனிமங்களின் அளவு இத்தகைய கருவிகளின் மூலமாகத்தான் பகுப்பாய்வு செய்யப் பட்டிருக்கும்.

சுருக்கமாக இந்த பகுப்பாய்வுக் கருவிகளின் தத்துவத்தைச் சொல்கிறேன். கனிமங்களின் அணுக்களுக்கு ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு. சில அலைநீளம் கொண்ட ஒளியை இவை உள் வாங்கிக்கொள்ளும். இந்த உள்வாங்கிக்கொள்ளும் அலை நீளம் ஒவ்வொரு கனிமத்திற்கும் வேறுபடும்.

இந்த வேறுபாட்டை வைத்துத்தான் ஒவ்வொரு கனிமத்தின் அளவையும் பரிசோதித்து கண்டுபிடிக்கிறார்கள். இந்த வேறுபாட்டை துல்லியமாக அளக்க பல்வேறு விலை உயர்ந்த சாதனங்கள் உள்ளன. இத்தகைய சாதனங்கள் இருக்கும் பரிசோதனைச் சாலையில்தான் இந்த கனிம அளவுகளைக் கண்டுபிடக்க முடியும்.

இப்படி கனிமங்களின் நுண்ணிய அளவைக் கண்டுபிடிக்க உதவும் இந்தக் கருவிகளின் செயல்பாடு எவ்வளவு நம்பகத்தன்மையுடன் இருக்கும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. சட்டென்று பதில் சொல்ல முடியாது.

கருவிகளின் தரம், அவைகளைப் பராமரிக்கும் செயல்கள், அதை உபயோகிக்கப் பயிற்சி எடுத்த நபர்கள், அவர்களின் அர்ப்பணிப்பு, சோதனை திரவங்களின் தரம் ஆகியவை இந்தக் கருவியின் பகுத்தாய்வுத் திறனை நிர்ணயிக்கும். முக்கியமாக ஒவ்வொரு தரம் இந்தக் கருவியை உபயோகிக்கும்போதும் அதன் செயல் திறனை பரிசோதிக்கவேண்டும்.

இப்படி கருவிகள் பராமரிக்கப்படும் பரிசோதனைச் சாலையில் கண்டு பிடிக்கப்படும் முடிவுகளை மட்டுமே நம்பலாம். ஆகவே இத்தகைய பரிசோதனைகளை ஒன்றுக்கு மேற்பட்ட பரிசோதனைச்சலைகளில் பரீட்சித்து அந்த முடிவுகள் ஒத்துப் போகின்றனவா என்று பார்த்து பிறகுதான் ஒரு முடிவிற்கு வருவார்கள்.

"மேகி" விவகாரத்தில் இந்த பரிசோதனைகளை எப்படி செய்தார்கள் என்பதைப் பொருத்தே அதன் எதிர்காலம் இருக்கும்.

புதன், 17 ஜூன், 2015

வெளிநாட்டு(க்கு) உதவி என்றால் என்ன?

                                        Image result for ஏரோப்ளேன்

நமது மாண்புமிகு பிரதம மந்திரி அவர்கள் பதவி ஏற்ற பிறகு பல வெளிநாட்டுகளுக்குப் போய் வருவது அனைவரும் அறிந்ததே.

இவ்வாறு நம் நாட்டிற்கும் வெளி நாட்டு முதல் மந்திரிகள் அல்லது பிரசிடெண்ட்டுகள் வருகிறார்கள். போகிறார்கள். இவர்களின் இந்த பயணங்களின் நோக்கம் என்னவென்று யாராவது யோசிக்கிறார்களா?

இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த வெளிநாட்டுப் பயணங்களின் முக்கிய நோக்கம் என்று சொல்லுகிறார்கள். இது சரியே. ஆனால் எப்படி இந்த இரு நாட்டு உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன?

எனக்கு இப்போது ஒரு வேலை வெட்டியும் இல்லாததால் இதைப் பற்றி கொஞ்சம் யோசித்தேன். நமது மாண்பு மிகு பிரதம மந்திரிதான் இந்த யோசனையைத் தூண்டிவிட்டார்.

இந்திய நாடு காலம் காலமாக அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பது உலகப் பிரசித்தம். அவ்வப்போது நம் செய்தித்தாள்களில் ஒரு மூலையில் இந்த விவகாரம், அதாவது நமது பிச்சைக்காரத்தனம் பற்றி ஏதாவது ஒரு அறிக்கை வெளியாகும்.. இந்தியாவின் அயல் நாட்டுக் கடன் இவ்வளவு ஆயிரம் அல்லது லட்சம் கோடி இருக்கிறது என்று செய்தி வெளியாகும்.

நமக்கு கோடிக்கு எத்தனை சைபர் என்பதே சந்தேகம். அப்புறம் எங்கே லட்சம் கோடி என்றால் என்ன என்று புரிந்து கொள்வது? ஏதோ வெளிநாட்டில் இந்தியாவிற்கு நிறைய சொத்து இருக்கிறது போல. அது நமக்கெதற்கு? அதையெல்லாம் மத்திய சர்க்கார் பார்த்துக்கொள்வார்கள்.  நமக்கு பஞ்சப்படி அதிகப்படுத்தியிருக்கிறார்களா? அதைப் பார் என்று அடுத்த பக்கத்திற்குப் போய் விடுவோம்.

நாமே அயல் நாட்டவரிடம் பிச்சையெடுத்துப் பிழைக்கிறோம். ஆனால் நமது பிரதம மந்திரி, தான் போகும் நாட்டில் எல்லாம் 10000 கோடி கொடுக்கிறேன், 20000 கோடி கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டு வருகிறாரே,  அது எப்படி என்று எனக்கு ஒரே குழப்பம்?

இதைப் பற்றி சில நண்பர்களிடம் விவாதித்தேன். அவர்கள்  இப்படியும் ஒரு அடிமுட்டாள் இருப்பானா என்கிற மாதிரி ஒரு லுக் விட்டு விட்டு, என்னைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு டீக்கடை வாசலில் உட்கார்த்தி வைத்து டீ வாங்கிக்கொடுத்து (செலவு என்னுடையது) எனக்கு ட்யூஷன் எடுத்தார்கள். டீக்கடை வாசல் எதற்காகவென்றால் அங்கிருந்துதான் ஒரு நாட்டின் பிரதம மந்திரிகள் உற்பத்தியாகிறார்களாம்.

அவர்கள் சொன்னதாவது. அட, மடப்பயலே, இப்போ நீ ஒரு டீக்கடை ஆரம்பிக்கறேன்னு வச்சுக்கோ. இன்னும் ஒரு இருபது முப்பது வருஷத்தில நீ இந்த நாட்டிற்குப் பிரதம மந்தி(ரி)யாய் ஆகி விடுவாய். அப்புறம் நாங்க எல்லாம் எங்கே போறது? உங்கூடத்தான் இருப்போம். அப்புறம் எங்களுக்கெல்லாம் ஒரு வழி காட்டவேண்டியது உன் பொறுப்பாகி விட்டதல்லவா?

அப்போ நீ என்ன பண்ணறே? வெளிநாட்டுக்கு டூர் போற. அப்படிப்போறப்ப எங்களையும் கூட்டீட்டுப் போற. அங்க போய் உங்களுக்கு என்னவேணும்னு கேக்கற. அவனுங்க எங்கூர்ல கரண்ட் பத்தல, கரன்ட் வேணும்கறாங்கன்னு வச்சுக்குவோம். உடனே நீ என்ன பண்ற, ஆஹா, இதோ இருக்காங்களே இவங்கதான் எங்க ஊர்ல கரன்ட் ஸ்பெஷலிஸ்ட்டுக, உங்க ஊருக்கு இவிங்க கரன்ட் மிசின் வச்சுக்கொடுப்பாங்க, சரியான்னு கேட்டுட்டு, அவங்க மண்டைய மண்டைய ஆட்டுன ஒடனே ஒரு ஒப்பந்தம் போடுவியாம்.

அந்த ஒப்பந்தத்தில நீ (அதாவது, பிரதம மந்திரியான நீ) உங்க நாட்டிற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுக்கிறேன். அந்தப் பணத்தில உங்களுக்கு வேண்டிய கரன்ட் மிசினையெல்லாம் வாங்கிக்கோங்க. அந்த மிசினை இவிய சப்ளை பண்ணுவாங்க. அவங்களே அதை எப்படி ஓட்டறதுன்னும் சொல்லிக்கொடுப்பாங்க. நீங்க கரன்ட்ல ஏசி மாட்டிட்டு அனுபவிச்சிட்டு இருக்கவேண்டியதுதான் அப்படீன்னு பேசி முடிச்சுடு. அவ்வளவுதான் மிச்சத்த நாங்க பாத்துக்குறோம். வர்ற லாபத்தை ஈக்வலா பகுந்துக்குவோம்.

இப்படியாக வருங்கால பிரதம மந்திரியாகிய எனக்கு என் தோஸ்த்துகள் யோசனை கூறினார்கள். எனக்கும் புரிபடாமல் இருந்த பல சந்தேகங்களுக்கு விடை தெரிந்தது.