திங்கள், 21 செப்டம்பர், 2015

நானும்ம்ம்ம்ம்... புதுக்கோட்டை வருகிறேன்.

                                   

மதுரை பதிவர் விழாவிற்கு ரயில் பயணத்தில் ஏற்பட்ட ஒரு குளறுபடியால் போக முடியவில்லை. புதுக்கோட்டை பதிவர் திருவிழா அறிவிப்பு வெளியானவுடனேயே இரண்டு வேலைகளை உடனடியாகச் செய்தேன். ஒன்று நன்கொடை அனுப்பியது. இரண்டு ரயில் பயண டிக்கெட்டுகள் சரியானபடி திட்டமிட்டு வாங்கியது.

பழைய காலமாக இருந்தால் ஒருவருக்கு பணம் அனுப்பவேண்டுமென்றால் தபால் நிலையத்திற்குச் சென்று மணிஆர்டர் செய்யலாம். அல்லது பேங்கிற்குச் சென்று மெயில் டிரான்ஸ்பர் பண்ணலாம். அல்லது டிடி (திண்டுக்கல் தனபாலன் அல்ல) எடுத்து அனுப்பலாம். அதே போல ரயில் டிக்கட் வாங்க ரயில் நிலையத்திற்குச் சென்று வரிசையில் சில மணி நேரங்கள் நின்று டிக்கட் வாங்கவேண்டும். இந்த வேலைகள் எல்லாம் சள்ளை பிடித்த வேலைகள். நிறைய நேரமும் சிரமமும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இப்போதைய இணைய உலகில் இந்த இரண்டு வேலைகளையும் என் வீட்டில் என் வழக்கமான இருக்கையில் இருந்து கொண்டே அரை மணி நேரத்தில் முடித்துவிட்டேன். நவீன தொழில் நுட்பத்தின் ஆற்றல் என்னை மிகவும் அதிசயிக்க வைக்கிறது. ஆனால் இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு 81 வயது கிழவன் இந்த அளவு தொழில் நுட்பம் கற்று வைத்திருப்பதை நீங்கள் கவனிக்க மறந்து விடக்கூடாது.

11-10-2015 ஞாயிற்றுக்கிழமை பதிவர் சந்திப்பு வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. அறியாதது என்னவென்றால் எவ்வளவு பேர் திருவிழாவிற்கு வருவதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள்? அவர்கள் எல்லோரும் கண்டிப்பாக வருவார்களா மாட்டார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க்கவேண்டும்.

திரு தமிழ் இளங்கோ சொன்ன மாதிரி பதிவர்களுக்கு வெட்கம் மிக அதிகமாக இருப்பதாக அறிகிறேன். பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள பெரும்பாலானவர்கள் வெட்கப்படுகிறார்கள். பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் திரு. முத்து நிலவன் பதிவர் கையேடு வெளியிட்டே தீர்வது என்ற முடிவுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க, என்னைப் பல கவலைகள் இப்போது பீடித்து விட்டன. நான் முதல் நாள் சனிக்கிழமையே புறப்பட்டு திருச்சியில் பிரபல பதிவர் கோபுவிடம் சில வரவு செலவு விவகாரங்களை முடித்து விட்டு, அன்று மாலை, அதாவது சனிக்கிழமை மாலையே புதுக்கோட்டை சேர்ந்து விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இதில் ஒரே சிக்கல் என்னவென்றால் அன்று இரவு அங்கே விழா நடக்கும் கல்யாண மண்டபம் அல்லது ஏதாவது ஒரு திண்ணையில் துண்டை விரித்துப் படுத்துக் கொள்ளலாமா அல்லது ஏதாவது ஒரு நல்ல லாட்ஜில் தங்கிக்கொள்ளலாமா என்பதுதான். இந்தக் கவலையினால் நான் இப்போது இரவில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட முடிவதில்லை. புது பல் செட் வைத்துக்கொண்டு சாப்பிட முடியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கேட்பவர்கள் தேசத்துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதற்கு விழாக் குழுவினரின் அறிவுரைகளைக் கேட்க ஆவலாய் உள்ளேன். புதுக்கோட்டை சமஸ்தானம் விருந்தோம்பலுக்கு பெயர் போனது. அந்த வழி வந்தவர்கள் அந்தப் பண்புகளை இன்னும் காப்பாற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். மற்ற பதிவர்களும் தங்கள் தங்கள் அறிவுரைகளைக் கூறலாம்.

 நிற்க, வேறு பல கவலைகளும் சேர்ந்து விட்டன. ஒருக்கால் நம்மை மேடையில் ஏற்றி, பேசச்சொல்லி விடுவார்களோ என்ற கவலை பெருங்கவலையாய் என்னை அலைக் கழிக்கிறது. அப்படிச் செய்யமாட்டோம் என்று எழுத்து பூர்வமாக திரு முத்துநிலவன் உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுக்காவிட்டால் என் பயணத்தை ரத்து செய்யலாமா என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன். அநியாயமாக ஒரு மூத்த பதிவரை பதிவர் திருவிழாவிலிருந்து விலக்கி வைக்கும் பாவத்தை அவர் செய்யமாட்டார் என்று எதிர் பார்க்கிறேன்.

இது போக புதுக்கோட்டை கொசுக்களெல்லாம் இந்த பதிவர் திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். புது ரத்தம் அதிக ருசியாக இருக்கும் என்றும் அதை ருசிக்க அவை காத்துக்கொண்டிருப்பதாகவும் காற்று வாக்கில் செய்திகள் வந்து என் வீட்டுக் கொசுக்கள் பேசிக்கொண்டிருந்ததை நானே என் செவிட்டுக் காதால் கேட்டேன்.இதற்கும் ஏதாவது தடுப்பு உபாயம் விழாக் கமிட்டியார் கண்டிப்பாய் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தவிர ரயில் பயணத்திற்கான வழக்கமாக வரும் கவலைகளும் சேர்ந்து கொண்டன. பிரயாணத்தின்போது என் உடமைகளை யாராவது திருடி விட்டால் என்ன செய்வது என்பது வழக்கமாக வரும் கவலை. குறிப்பாக சமீபத்தில்தான் 999 ரூபாய் கொடுத்து ஒரு புது பேட்டா செருப்பு வாங்கினேன். அதை போட்டுக்கொண்டு வந்தால் யாராவது அதை தேட்டை போட்டு விட்டால் அப்புறம் பதிவர் மகாநாட்டு விருந்தை அனுபவித்து சாப்பிட முடியாதே என்ற கவலை. இதற்காக ஒரு விலை மலிவான செருப்பு ஒன்று வாங்கிக்கொள்ளலாமா என்றும் ஒரு யோசனை இருக்கிறது. இன்னும் நாள் இருக்கிறது. பார்ப்போம். பதிவர்களின் ஆலோசனை தேவை.

தவிர, ஒரு சில பதிவர்கள் செய்யும் துரோகத்தை என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. பதிவர் சந்திப்பு என்றால் அதற்கு சில வரை முறைகள், பாரம்பரியங்கள் இருக்கின்றன. இந்த பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது பதிவர்களாகிய நம் தலையாய கடமை. இதற்கு எதிராக கருத்துகள் கூறிய பதிவர்களை உடனே கழுவிலேற்ற ஆணை பிறப்பிக்கிறேன். அதாவது அசைவ உணவு வேண்டாம் என்று சிலர் கொடி பிடிக்கிறார்கள். இது மகா அநியாயம் என்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த சமயத்தில் இன்னும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விழாக் குழுவினர் இன்னும் விழா ஏற்பாடுகளைப் பற்றிய முழுத் தகவல்களையும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்க்ள. ஏன் என்று தெரியவில்லை. ஒருக்கால் பாகிஸ்தான் உளவுப் படைக்குத் தெரிந்து விட்டால் ஏதேனும் சதி செய்து விழாவை நடத்த விடாமல் பண்ணி விடுவார்களோ என்ற பயம் இருக்கலாம்.

விழா நடவடிக்கைகளில் எனக்குத் தெரிய வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்களை மட்டும் எனக்குத் தனியாகச் சொல்லி விட்டால் நான் அந்த ரகசியத்தை வெளியில் விடாமல் காப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

1. விழா அன்று  விழா மண்டபத்தில் காலை டிபன் உண்டா? ஏனெனில் வெளியில் காசு செலவழித்து டிபன் சாப்பிட்டு வந்த பிறகு, விழா மண்டபத்தில் இலவச டிபன் விநியோகம் நடந்து கொண்டிருந்தால் என் போன்றவர்களின் இளகிய மனது சுக்கு நூறாக உடைந்து விடும். தவிர காலை இலவச டிபனில் இட்லியும் கோழிக் குருமாவும் உண்டு என்பது தெரிந்தால் இரவு டிபன் சாப்பிடாமல் இருந்து விடலாம். அந்த செலவும் மிச்சமாகும்.

2. வெளியூரில் இருந்து வரும் பதிவர்களுக்கு அன்று இரவு வழியில் சாப்பிடுவதற்கு இட்லி, கெட்டிச் சட்னி கட்டிக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த விருந்தோம்பலை ஆயுளுக்கும் பதிவர்கள் மறக்க மாட்டார்கள். ஆளுக்கு எட்டு இட்லி போதும்.

3. மதியம் விருந்து கட்டாயம் பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னைப் போன்றவர்கள் மதிய உணவிற்குப் பிறகு சிறிது கட்டையைக் கிடத்துவது பழக்கம். அதற்கு ஏதாவது ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படி ஏற்பாடு செய்திருந்தால் மதிய ஓய்வு முடிந்து எழுந்தவுடன் நாலு வெங்காய பஜ்ஜியும் (தேங்காய் சட்னி அவசியம்), ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியும் மட்டும் கொடுத்தால் போதும்.

இன்னும் ஒன்று இருக்கிறது. அதை பப்ளிக்காக சொல்ல முடியாது. அது எல்லோருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம்தான். விழாக் குழுவினர் அதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே விழாக்குழுவினர் அனைத்துப் பதிவர்களின் அபிலாக்ஷைகளையும் செவ்வனே நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புதுக்கோட்டை வருகிறேன்.

திங்கள், 14 செப்டம்பர், 2015

பட்டறிவு இல்லையே, ஏன்?

                                           Image result for knowledge symbol

அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று உயிரினங்களுக்கு இயற்கையாக இருக்கும் அறிவு. இன்னொன்று அனுபவத்தின் மூலமாகப் பெறப்படும் அறிவு. மனிதனும் உயிரினங்களில் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே. குழந்தை கொஞ்சம் பெரிதானதும் நடக்க ஆரம்பிக்கிறது. அப்படி நடக்க ஆரம்பிக்கும்போது அது நிலை தடுமாறி பல தடவை கீழே விழும். பிறகுதான் கீழே விழாமல் நடக்கப் பழகி விடுகிறது.

இதுதான் பட்டறிவு. தானே பட்டு அதாவது அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளும் அறிவு. ஒவ்வொரு அனுபவத்தையும் தானே அனுபவித்துத் தெரிந்து கொள்வது என்பது ஒரு முட்டாளின் செயல். மற்றவர்களின் அனுபவத்திலுருந்தும் பாடம் கற்றுக்கொள்பவனே புத்திசாலி. இந்த ஞானம் இயற்கையாகவே இருக்கவேண்டும்.

தன்னுடைய அனுபவத்திலிருந்தே பாடம் கற்றுக் கொள்ளாதவர்களை எதில் சேர்த்துவது? மிகவும் கஷ்டமான காரியம்தான்.

சரி, இந்த பீடிகை எல்லாம் எதற்காக என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. காது கொஞ்சம் தகறாருதான். இருந்தாலும் இதெல்லாம் துல்லியமாகக் கேட்டுவிடும்.

தினமும் செய்தித்தாள்களில் சாலை விபத்துச் செய்திகளைப்பற்றிப் படித்து   சலித்து விட்டது. வாகனம் ஓட்டும் அனைவரும் இச்செய்திகளைப் படிக்கிறார்கள். ஆனாலும் விபத்துகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொருவரும் இச்செய்திகளைப் படிக்கும்போது, தான் மிகவும் தேர்ச்சி பெற்றவன், நான் இப்படிப்பட்ட விபத்துகளை ஏற்படுத்த மாட்டேன் என்று நினைத்துக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான் பல நண்பர்களுக்கு இரு சக்கர, நாற்சக்கர வாகனங்கள் ஓட்டக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். கற்றல் முடிந்த பிறகு அவர்களுக்கு நான் கடைசியாகச் சொல்லும் அறிவுரை என்னவென்றால்-

நீங்கள் ஓட்டுவது ஒரு சக்தி வாய்ந்த இயந்திரம். அதை கவனமாக ஓட்டினால் அதற்கு நீங்கள் எஜமானர். கொஞ்சம் கவனம் தப்பினால் கூட அது உங்களுக்கு எஜமானனாகி விடும். அது எஜமானனாகும்போது என்ன செய்யும் என்று சொல்ல முடியாது. உங்கள் உயிருக்கே கூட ஆபத்து விளையலாம். ஆகவே வாகனம் ஓட்டும்போது முழுக் கவனமும் வாகனம் ஓட்டுவதில்தான் இருக்கவேண்டும்.

இதுதான் என் முடிவான அறிவுரையாக அமையும்.

ஆனால் இப்போது செய்தித்தாள்களில் வெளிவரும் பெரும்பான்மையான விபத்துகள் ஓட்டுனரின் கவனக்குறைவினாலேயே ஏற்படுவதுதான் வேதனைக்குரிய விஷயம்.

சென்னையில் இருக்கும் ஒரு வியாபாரி திருநெல்வேலியில் இருக்கும் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்குப்போகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த உறவினர் இவர் மாதிரி வியாபாரத்தில் இருக்கும் எல்லோருடைய சௌகரியத்திற்காகவும் அந்த விசேஷத்தை ஞாயிற்றுக்கிழமை வைத்திருக்கிறார்.

சென்னை வியாபாரி என்ன திட்டம் போடுகிறார் என்றால், சனிக்கிழமை வியாபாரத்தை மாலை 10 மணிக்கு முடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு கிளம்பினால் காலை 7 அல்லது 8 மணிக்கு திருநெல்வேலி போய்விடலாம். அன்று பகல் முழுவதும் விசேஷ வீட்டில் இருந்து விட்டு மாலை சாப்பிட்டுவிட்டு 8 மணிக்கு கிளம்பினால் திங்கட்கிழமை விடிவதற்குள் சென்னை வந்து விடலாம். திங்கள் காலை 10 மணிக்கி வியாபாரத்தைக் கவனிக்க சென்று விடலாம்.

அவருடைய கார் ஓட்டுனர் இந்த திட்டத்தை ஆமோதிப்பார். எனக்கு இரவு நேரங்களில் கார் ஓட்டும் அனுபவம் நன்றாக இருக்கிறது. இது ஒன்றும் கஷ்டமேயில்லை. மாலையில் திருநெல்வேலி போனதும் நான் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். நிங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள். அன்று இரவு புறப்படுவதற்குள் நான் முழு ஓய்வு எடுத்துவிடுவேன். அதனால் திரும்பும்போது நான் புத்துணர்ச்சியுடன் இருப்பேன் என்று தைரியம் சொல்லி விடுவார்.

கார் முப்பது லட்சம் போட்டு வாங்கினது. ஆக்சலரேட்டரில் கால் வைத்தால் வண்டி 100 கிமீ வேகத்தில்தான் புறப்படும். நெடுஞ்சாலையில் சர்வ சாதாரணமாக 150 கிமீ வேகத்தில் போகும்.  ஓட்டுனர் நியாயமாக சனிக்கிழமை பகல் முழுவதும் ஓய்வு எடுத்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்திருக்கமாட்டார். பகலில் முதலாளி கொடுக்கும் சல்லரை வேலைகளைக் கவனித்திருப்பார். இரவு 11 மணிக்குப் புறப்பட்டுப் போகும்போது காலை 5 மணிக்கு அவரை அறியமால் கண் சொருகி வரும். அப்போது கொஞ்ச நேரம் நிறுத்தி ஓய்வு எடுப்பாரா? மாட்டார். அப்படி ஓய்வு எடுத்தால் அந்த ஓட்டனரின் தன்மானம் என்ன ஆவது?

ஆகவே அப்படியே சமாளித்துக்கொண்டு ஓட்டுவார். ரோடு எங்கே போகிறது, வண்டியின் வேகம் என்ன என்ற உணர்வுகள் அற்ற மோன நிலையில் அவர் அப்போது இருப்பார். வண்டியில் சவாரி செய்யும் முதலாளியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். ஓட்டுனரின் நிலைமையைப் புரிந்து கொள்ள யாரும் விழித்திருக்கமாட்டார்கள்.

ஓட்டுனர் ஒரு நொடி கண்ணயர்ந்து விட்டால் 150 கிமீ வேகத்தில் போகும் வாகனம் சுமார்  40 மீட்டர் ஓட்டுனரின் கவனமில்லாமல் சென்று விடும். அந்த தூரத்திற்குள் ஏதாவது லாரி நின்று கொண்டிருக்கலாம். அல்லது ரோடு வளைவு இருக்கலாம். இதனால் விபத்து ஏற்படலாம். 150 கிமீ வேகத்தில் போகும் ஒரு வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் அதில் பயணம் செய்யும் எவ்வளவு பேர் மிஞ்சுவார்கள் என்று யோசியுங்கள்?

ஏன் இவ்வளவு ஆபத்தை ஒவ்வொருவரும் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பது எனக்குப் புரியாத ஒன்று. விபத்துகள் என்பது அடுத்தவர்களுக்கு ஏற்படுவது. நமக்கு விபத்து என்றும் ஏற்படாது என்று ஒவ்வொருவரும் நினைப்பதுதான் இதற்குக் காரணம்.

வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் எந்த நொடியும் விபத்து ஏற்படலாம் என்ற ஜாக்கிரதை உணர்வுடன் வாகனத்தை ஓட்ட வேண்டும், எப்போது அவர் எனக்கு விபத்து ஏற்படாது என்று நினைக்கிறாரோ அடுத்த நொடி அவர் வாகனத்திற்கு விபத்து ஏற்படும்.

திங்கள், 7 செப்டம்பர், 2015

சினிமா நடிகர்கள் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம்

                                          Image result for cine actor cutout worship
நான் சிறுவனாக இருந்தபோது சினிமா நடிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ரசிகர்களும் இருந்தார்கள். அந்தந்த ரசிகர்களுக்குப் பிடித்த நடிகர்கள் நடித்த படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். இப்போது போல் தொழில் நுட்பக் கருவிகள் கண்டு பிடிக்கப்படாத காலம்.

தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் நடித்த படத்தை பல முறை, சிலர் தினமுமே பார்த்த காலம் அது. படங்கள் நல்ல முறையில் நல்ல கம்பெனிகள் தயாரித்தன. இன்று போல் கோடிக்கணக்கில் செலவு செய்தவர்கள் யாரும் இல்லை. சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும் தாங்கள் போடும் முதலீட்டுக்கும் உழைப்பிற்கும் தகுந்த லாபம் பெற்று வந்தார்கள். ஏதோ ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் தங்கள் முதலை இழந்து ஓட்டாண்டிகளானார்கள்.

குறிப்பாக சில சினிமா நடிகர்கள், தாங்கள் நடித்த படங்கள் நல்ல வசூலைத் தருவது கண்டு பேராசைப்பட்டு சினிமா எடுக்கத் துணிந்து சினிமா எடுத்தார்கள். அப்படி சினிமா எடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணத்தை இழந்ததுமல்லாமல் தங்கள் மார்க்கெட்டையும் இழந்தார்கள்.

பிற்காலத்தில் நடிக்கவந்தவர்களில் குறிப்பாக சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றவர்கள் இந்தத் தவறை செய்யாமல் தாங்கள் சம்பாதித்ததை நல்ல முதலீடுகளில் போட்டார்கள். அவர்களும் பிற்காலத்தில் சினிமா எடுக்கத் துணிந்தார்கள். சில படங்கள் வெற்றியளித்தன. ஆனாலும் அவர்கள் நல்ல முதலீடுகளில் பணம் போட்டிருந்ததால் சில தோல்விகள் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படியும் சிலர் தங்கள் கடைசி காலத்தில் வறுமைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இந்தக் காலகட்டம் வரையில் சினிமா நடிகர்களுக்கென்று யாரும் ரசிகர் மன்றம் வைக்கவில்லை. ரஜனிகாந்த், கமலஹாசன் ஆகியோர் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தபோது அவர்கள் பழைய நடிகர்களை போட்டியில் வென்றாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோதுதான் இந்த ரசிகர் மன்றம் அமைப்பதைப் பற்றி யாரோ ஒருவரின் மூளையில் உதித்திருக்கிறது.

இவர்கள் ஆரம்பித்து வைத்த ரசிகர் மன்ற கலாச்சாரம் இன்று அருகுபோல் வேறூன்றி ஆல்போல் தழைத்து நிற்கிறது. இந்த நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் தினத்தன்று அந்தந்த தியேட்டர்களின் முதல் காட்சியின் மொத்த டிக்கெட்டுகளும் இந்த ரசிகர் மன்றங்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இந்த ரசிகர் மன்றங்கள்தான் அந்தப் படத்திற்கு தாரை தப்பட்டைகளுடன் விளம்பரம் செய்கிறார்கள். தியேட்டரில் வைத்திருக்கும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

இந்த முதல் காட்சியின்போது இவர்கள் தியேட்டருக்குள் செய்யும் அக்கிரமங்களை எழுத்தில் சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த ரசிகர் மன்றங்கள் அந்தந்த நடிகர்களின் அனுமதியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. வாழ்க ரசிகர் மன்றம். வாழ்க நடிகர்கள்.

புதன், 2 செப்டம்பர், 2015

நானும் ஒரு பரிசு பெற்றேன்.

                                     

பதிவுலக ஜாம்பவான், சிறுகதை மன்னன், பின்னூட்டத்திலகம், பதிவுலகில் முதல் முறையாக சிறுகதை விமரிசனப்போட்டி வைத்து பரிசுகளை வாரி வழங்கிய வள்ளல், இரண்டாம் முறையாக பின்னூட்டப்போட்டி வைத்து பரிசுகளை வாரி வழங்கப்போகும் வள்ளல், பழம்பெரும் பதிவர் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைத் தெரியாத யாரும் பதிவுலகில் இருக்கமாட்டார்கள். அடியேனும் அப்படி ஒரு பிரபலமானவன்தான் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தால் என் மனச்சாட்சி ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது. அதனால் அவருடன் எடுத்துக்கொண்ட படத்தைப் போடுவதுடன் திருப்தி அடைகின்றேன்.

                                         Image result for திரு வை. கோபாலகிருஷ்ணன், பதிவர்

அப்படிப்பட்ட பதிவர் அறிவித்த பின்னூட்டப்போட்டியில் அவருடைய 750 பதிவுகளுக்கும் வெற்றிகரமாகப் பின்னூட்டம் போட்டு முடித்து விட்டேன்.
அதற்கு அங்கீகாரமாக திரு வைகோ அவர்களிடமிருந்து அத்தாட்சிக் கடிதம் வந்து விட்டது. கீழ்க்கண்ட மின்னஞ்சலைப் பார்க்கவும். தவிர அவருடைய பதிவையும் பார்க்கவும்.

இந்த செய்தியை இங்கு நான் பதிவிடக் காரணம்,  இதுவரை இந்தப் போட்டிக்கு முயற்சிக்காதவர்களும், முயற்சி செய்து பாதியில் நிற்பவர்களும் உடனடியாக ஊக்கத்துடன் முயற்சித்து இந்தப் பரிசை பெறவேண்டும் என்ற ஆசையே. போட்டியின் முடிவு நாள் 31-12-2015. இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. இப்போது ஆரம்பித்தாலும் போட்டியில் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கின்றன.

திரு வைகோ அவர்கள் எனக்கு இந்த வெற்றியைத் தந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on the post "ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி - 12/...": 

முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

அன்புடையீர்,

வணக்கம்.

வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

HEARTIEST CONGRATULATIONS & BEST WISHES FOR WINNING IN MY NEW CONTEST ! 

VERY GREAT ACHIEVEMENT !! :)

என் வலைத்தளத்தினில் இந்தப் பதிவினில் 31.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வெற்றிகரமாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 

இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 மார்ச் வரையிலான 51 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 750) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. 

தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு முதலியன என்னை மிகவும் நெகிழ வைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. 


தங்களின் இந்த சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் முன்னணியில் வந்துள்ள தங்களுக்கான அதிகபட்ச இரட்டிப்புப் பரிசுத்தொகையான (Rs. 500*2 = Rs. 1000) ரூபாய் ஆயிரம் வெகு விரைவில், (On or before 10.10.2015) தங்களை நேரில் சந்தித்து என்னால் அளிக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

என்றும் அன்புடன் VGK 


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-



ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கல்லூரிகளும் உயர் கல்வியும்

                                         Image result for பட்டமளிப்பு விழா
உயர்கல்வி எனப்படுவது இளங்கலைப் பட்டப்படிப்பு முடிந்த பிறகு மேற்கொள்ளும் கல்வி ஆகும். முதுகலைப் பட்டப்படிப்பு, முனைவர் பட்டப்படிப்பு ஆகிய இரண்டும் இதில் அடங்கும். இளங்கலைப் பட்டப்படிப்புக்கு மேல் 6 மாதம், மூன்று மாதம் ஆகிய குறுகிய காலங்களில் சில படிப்புகள் நடத்தப்பட்டு, அதற்கான பட்டயம் கொடுக்கப்படும். இது ஆங்கிலத்தில் சர்டிபிகேட் கோர்ஸ்கள் என்று அறியப்படும்.

இந்த உயர்கல்விப் படிப்புகளில் முக்கியமானது ஏதாவது ஒரு ஆராய்ச்சியை திட்டமிட்டு நடத்தி அதற்கான கட்டுரையை சமர்ப்பிக்கவேண்டும். வெறும் புத்தகப்படிப்பு மட்டும் அந்தத் துறையின் முழு அறிவையும் கொடுக்காது, தானே ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை வகுத்து அதை நடத்தி அனுபவம் பெற்றால்தான் அந்தத் துறையில் பல நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன் வளரும் என்ற நோக்கில் ஏற்பட்ட ஒரு முறை.

குமுதம் என்ற வாரப் பத்திரிகையில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நகைச்சுவைத் துணுக்கு போட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பவன் இளங்கலைப் பட்டதாரி. கொஞ்சம் விஷயங்களைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருப்பவன் முதுகலைப் பட்டதாரி. ஒன்றுமில்லாததைப்பற்றி எல்லாம் தெரிந்து வத்திருப்பவன் முனைவர் பட்டதாரி. இவ்வாறு ஒரு நகைச்சுவைத் துணுக்கு போட்டிருந்தார்கள்.

இந்த நகைச்சுவை ஒரு புறமிருக்க, முனைவர் பட்டம் வாங்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் மாணவனாகச் சேரவேண்டும். இப்படி சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை வரையரைக்குட்பட்டது. அங்கு அனுபவப்பட்ட முனைவர் பட்டத்திற்கான வழிகாட்டுதலுக்கு எவ்வளவு ஆசிரியர்கள் இருக்கிறார்களோ, அதற்குத் தகுந்த மாதிரிதான் மாணவர்களைச் சேர்க்க முடியும்.

மாணவர்களைச் சேர்த்த பிறகு அந்த மாணவர் ஒரு ஆசிரியரின் கீழ் தன் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியைத் துவங்குவார். முனைவர் பட்டத்திற்கு ஒரு நல்ல ஆரய்ச்சிப் பொருள் தேவைப்படும். இதை அந்த மாணவர் ஆசிரியர் வழிகாட்டுதலின்படி தேர்ந்தெடுப்பார். பிறகு அந்தப்பொருள் பற்றி என்னென்ன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று ஒரு திட்டம் வகுப்பார்கள். அந்த திட்டத்தின்படி ஆராய்ச்சிகள் செய்து அதனுடைய முடிவுகளை பல விதத்தில் ஆராய்ந்து ஒரு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். இதை "தீசிஸ்" என்பார்கள்.

இந்த ஆய்வு அறிக்கை இரண்டு அல்லது மூன்று வல்லுநர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகளை வாங்குவார்கள். இந்த அறிக்கை முனைவர் பட்டம் வழங்குவதற்கு ஏற்றதுதானா என்று அந்த வல்லுநர்கள் சொல்லவேண்டும். பிறகு அந்த மாணவனை ஒரு வல்லுநர் முன்பு நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தப்படுவான். அதிலும் அவன் தகுதியானவனாக மதிப்பிடப்பட்டால் அவனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும்.

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் உண்மையானதாக இருக்கவேண்டும். தன் கற்பனையில் உதிக்கும் முடிவுகளை ஒருவன் முனைவர் பட்டத்திற்கு சமர்ப்பிக்க முடியாது. இப்படித்தான் நான் முனைவர் பட்டம் வாங்கினேன். என் முனைவர் பட்டத்திற்கான "தீசிஸ்" அமெரிக்காவிலுள்ள மூன்று நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு அங்கீகாரம் பெற்றது. நான் வழிகாட்டிய சில மாணவர்களும் இவ்வாறுதான் முனைவர் பட்டம் வாங்கினார்கள்.

ஆகவே ஒருவர் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார் என்றால் கல்வி வட்டாரத்தில் அவருக்கு ஒரு நல்ல மதிப்பு உண்டு.

ஆனால் இன்று நடக்கும் நடைமுறைகளைப் பார்த்தால் கண்ணில் நீர் வரும். ஒவ்வொரு ஊரிலும் கல்லூரிகளுக்குப் பக்கத்தில் இங்கு "தீசிஸ்" தயார் செய்து கொடுக்கப்படும் என்று பல போர்டுகளைப் பார்க்கலாம். அந்தந்த கல்லூரிகளுக்குப் பொருத்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இங்கு தயார் செய்து கொடுக்கிறார்கள். மாணவர்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை.

மாணவர்கள் பணம் மட்டும் கொடுத்தால் போதும். இந்த கடைக்காரர்களே ஒரு பொருத்தமான பொருளில் ஆராய்ச்சிக் கட்டுரையை முழுமையான வடிவில் கொடுத்து விடுவார்கள். அந்த மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களும் இதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். இந்த முறை மாணவர்களுக்கும் வசதி, ஆசிரியர்களுக்கும் வசதி. புதிதாக ஆரம்பிக்கும் பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஒன்றும் இருக்காது. அங்கு எப்படி ஆராய்ச்சி செய்து ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிக்க முடியும்?

புதுக்கல்லூரிகளில் ஆரம்பித்த இந்த நோய் பழைய கல்லூரிகளையும் பிடித்துவிட்டது. இதில் சில பல்கலைக் கழகங்களில் வருமானத்தைப் பெருக்குவதற்காக மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். யாரை வேண்டுமானாலும் வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம் என்று விதிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

யாராவது முனைவர் பட்டம் வைத்திருப்பவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கினால் போதுமானது. சில வருடங்கள் முன்பு என் நண்பர் சிபாரிசின் பேரில் ஒரு மாணவர் இந்த மாதிரி கையெழுத்து வேண்டும் என்று வந்திருந்தார். என்ன ஆராய்ச்சி செய்திருக்கிறாய் என்று கேட்டால் ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஒரு சிடியைக் கொண்டு வந்திருந்தார். இதில் எல்லாம் இருக்கறது என்றார்.

அந்த சிடியை வாங்கி கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தேன். அது வேறு மாகாணத்திலுள்ள ஏதோ  ஒரு கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரை. இதை அப்படியே என் பெயர் போட்டு என் ட்யூட்டோரியல் இன்ஸ்டிட்யூட்டில் டைப் அடித்துக் கொடுத்து விடுவார்கள். அந்த சர்டிபிகேட்டில் நீங்கள் ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும் என்றார். நான் தம்பி. அது எனக்கு சரிப்படாது, நீ வேறு யாரையாவது பார்த்துக்கொள் என்று அனுப்பி விட்டேன்.

வட இந்தியாவில் பல இடங்களில் பல்கலைக் கழக பட்டங்களை விற்கிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். அது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம் நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

அப்துல் கலாமுக்கு தர்ப்பணம்.

                                     Image result for அப்துல் கலாம் quotes

சில நாட்களுக்கு முன் தினத்தாள்களில் ஒரு செய்தி படித்தேன். சிலர் அப்துல் கலாமைப் புதைத்த பகுதியிலிருந்து கொஞ்சம் மண் எடுத்து சட்டியில் போட்டு அதை அவருடைய அஸ்தியாகப் பாவித்து அதை காவிரியில் கரைத்து அய்யரை வைத்து அப்துல் கலாமுக்கு தர்ப்பணம் கொடுத்தார்களாம்.

அப்துல் கலாம் மனித நேயம் மிக்க ஒரு நல்ல மனிதர். யாரும் இதை மறுக்கமாட்டார்கள். ஆனாலும் அவர் பேரில் ஏதோ தங்களுக்கு மட்டும்தான் தனியாக பக்தி இருப்பது மாதிரியும், அவருக்காக தாங்கள் உயிரையே வேண்டுமானாலும் அர்ப்பணிப்போம் என்கிற மாதிரி சிலர் விளம்பரத்திள்காக பண்ணும் முறைகேடான காரியங்கள் பயித்தக்காரனின் காரியத்தை ஒத்திருக்கின்றன.

மேலும் அப்துல் கலாம் கடைப்பிடித்த மதத்தில் இந்த செயலை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இதே மாதிரி தாங்கள் கொண்டாடும் ஒரு அரசியல்வாதிக்கு ஏதாவது சங்கடம் என்றால் அந்த சங்கடம் நீங்க கோவில்களில் தனியாக பூஜைகள், யாகங்கள் இவைகளை நடத்துகிறார்கள். இது முற்றிலும் விளம்பரே. கடவிள் யார்யாருக்கு எந்தெந்த சமயத்தில் என்ன நடக்கவேண்டும் என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறார். இவர்கள் யாகம் நடத்துவதால் கடவுளின் கணக்கு மாறப் போகிறதா என்ன?

இதைப் போலவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று செல் போன் டவர்களின் மேல் ஏறிக்கொண்டு சிலர் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். இது எல்லாம் மட்ட ரகமான விளம்பரம் தவிர வேறு ஒன்று மில்லை.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தகைய செயல்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இதுதான் இந்திய மக்களின் மடத்தனம். இது என்று மாறுமோ அன்றுதான் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா பலிதமாகும்.

புதன், 19 ஆகஸ்ட், 2015

நானும் மாணவர்களின் கட்டுப்பாடும்.

                                       Image result for அக்ரி காலேஜ் கோவை

மாணவர்களின் கடமை படிப்பது மட்டும்தான். என்னென்ன படிக்கவேண்டும்? பாடம் மட்டுமல்ல. கட்டுப்பாடு, ஒழுங்கு, நேரம் தவறாமை, மற்றவர்களிடம் அனுசரித்துப் போதல், ஆசிரியரிடம் மரியாதை இவை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும். இதுவே என் தாரக மந்திரம்.

விவசாயக் கல்லூரியில் பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பார்கள். ஆகவே அவர்கள் ஏறக்குறைய 24 மணி நேர மாணவர்கள். இந்த வாழ்வு முறையில் அவர்கள் வாழ்க்கையின் நுணுக்கங்களை முழுவதுமாகக் கற்றுக் கொள்கிறார்கள். விவசாயக் கல்லூரியில் படித்த மாணவர்கள் விவசாயம் மட்டும் அல்லாது பல்வேறு துறைகளிலும் (IAS, IPS, IRS, Banking, Social Work)ஈடுபட்டு பிரகாசிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முதல் காரணம் ஆசிரியர்களின் ஈடுபாடே. ஏதோ வந்தோம், வகுப்பு எடுத்தோம், சென்றோம் என்று இல்லாமல் மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். இதில் நான் கடைப்பிடித்த சில கொள்கைகள் இன்றைய நாளில் செல்லுபடியாகாது. ஆனால் அன்று இருந்த சூழ்நிலையில் என் கொள்கைகள் வெற்றிகரமாக நடந்தன.

அப்போது விவசாயக் கல்லூரி பல்கலைக் கழகமாக உருவாகவில்லை. சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆண்டு தேர்வுகளெல்லாம் பல்கலைக்கழகமே நடத்தும். கல்லூரியில் இருக்கும் விரிவுரையாளர்கள் உள் தேர்வு அதிகாரிகளாகவும், வெளி மாநிலத்து வேளாண்கல்லூரிகளிலிருந்து விரிவுரையாளர்களை வெளித் தேர்வு அதிகாரிகளாகவும் நியமிப்பார்கள். செயல் முறைத்தேர்வை இருவரும் சேர்ந்து நடத்துவார்கள்.  எழுத்துத்தேர்வின் விடைத்தாள்கள் வெளித்தேர்வு அதிகாரிகளால் திருத்தப்படும்.

இந்த மதிப்பெண்கள் எல்லாம் சென்னை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்படும். அங்கு இந்த வெளித் தேர்வு அதிகாரிகள் மட்டும் ஒரு நாள் சந்தித்து இந்த முடிவுகளை ஆராய்ந்து முடிவு செய்வார்கள், தேவைப்படுபவர்களுக்கு ஓரிரு மதிப்பெண்கள் தேவையானால் இங்கே அதைச் சேர்ப்பதுண்டு. குறிப்பாக மொத்தம் உள்ள ஆறு பாடங்களில் ஐந்து பாடங்களில் ஒரு மாணவன் தேர்வு பெற்றிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பாடத்தில் மட்டும் ஒரு மதிப்பெண் குறைகிறது. அதைச்சேர்த்தால் அவன் முழுத்தேர்வு பெற்ற விடுவான். அந்த சூழ்நிலையில் அந்த ஒரு மதிப்பெண்ணைச் சேர்க்க அந்தக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

ஒரு கட்டத்தில் ஒரு வெளி தேர்வு அதிகாரி கடைசி கட்டத்தில் தன்னால் வரமுடியவில்லை என்று பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதி விட்டார். போதிய கால அவகாசம் இல்லாததினால் பல்கலைக் கழகம் உள்தேர்வு அதிகாரியாக இருந்த என்னை வெளித்தேர்வு அதிகாரியாக நியமனம் செய்தது. அதில் இங்குள்ள பலருக்கு, (மேல் அதிகாரிகள் உட்பட) என் மேல் பொறாமை. ஏனெனில் கல்லூரியிலேயே பாடம் நடத்தும் ஒருவரை வெளித்தேர்வு அதிகாரியாக நியமனம் செய்வது அதுதான் முதல் தடவை. இது ஒரு பெரிய கௌரவம். மாணவர்கள் மத்தியில் என்க்கு ஒரு பெரும் மரியாதை கலந்த மதிப்பு கூடியது.

பல்கலைக் கழகம் நடத்தும் தேர்வுகளில் விவசாயக் கல்லூரியின் அதிகாரிகளின் தலையீடு எதுவும் இருக்காது. அதனால் தேர்வு அதிகாரிகள் சதந்திரமாக செயல்புரிய முடிந்தது. ஆனால் யாரும் மனச்சாட்சிக்கு விரோதமாக மதிப்பெண் போடுவதோ, குறைப்பதோ செய்யமாட்டார்கள். அதிகமாகப்போனால் ஒருவனுக்கு சலுகை காட்டமாட்டார்கள். அவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் வருட ஆரம்பத்தில் நான் என் வகுப்புகளை ஆரம்பிக்கு முன் மாணவர்களுக்கு சில குறிப்புகள் கொடுப்பேன்.

1. என் வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வரவேண்டும். 50 சதத்திற்கு குறைவாக வரும் மாணவர்கள் தேர்வு பெறமாட்டார்கள்.

2. 95 சதம் வருகை புரிந்த மாணவர்கள் தேர்வுக்கு வந்தால் போதும், அவர்கள் பேப்பரில் என்ன எழுதிக் கொடுத்திருந்தாலும் தேர்வு பெறுவார்கள்.

3. என் வகுப்புகளிலோ அல்லது மாணவர் விடுதியிலோ அல்லது கல்லூரி வளாகத்தினுள் எங்கேயாவதோ ஏதாவது கலாட்டா அல்லது சண்டையில் கலந்து கொண்டிருந்தால் அவர்கள் தேர்வில் கட்டாயம் வெற்றி பெற மாட்டார்கள்.

4. இந்த விதிகளுக்கு உற்பட்டு நல்ல மதிப்பெண்கள் வேண்டுபவர்கள் அவர்களாக முயற்சி செய்து வாங்கிக் கொள்ளவேண்டியது.

இந்த விதிகளைச் சொல்லிவிட்டுத்தான் பாடங்களை ஆரம்பிப்பேன். வருடத்திற்கு ஒன்றிரண்டு மாணவர்கள் அவர்களாகவே தேர்வில் வெற்றி பெறாவிட்டலும் நான்தான் அவர்களை வேண்டுமென்றே தோல்வி பெறச்செய்தேன் என்று வதந்தி பரப்புவதுண்டு. அதனால் என் பேரில் எல்லா மாணவர்களுக்கும் ஒரு பயம் உண்டு. நான் அவைகளைக் கண்டுகொள்ளமாட்டேன்.

இவ்வாறாக மாணவர்களை பல வகையில் வளர்வதற்கு ஆசிரியர்கள் பங்களித்தார்கள். நானும் என் பங்களிப்பை அர்ப்பணித்தேன்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

நான் ஒரு சர்வாதிகாரி - பாகம் 2

                               

இப்படி நான் கொடுங் கோலோச்சிக் கொண்டிருக்கையில் எனக்கு பதவி உயர்வு வந்தது. என்னை ஆசிரியர் பிரிவிலிருந்து மாற்றி ஆராய்ச்சிப் பிரிவில்
கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாக நியமனம் செய்தார்கள். அந்தக் காலத்தில் கெஜட்டட் ஆபீசர் என்றால் மதிப்பு வாய்ந்த பதவி. இன்று ஆபீஸ் அட்டெண்டர் தவிர மற்றவர்கள் எல்லோரும் கெஜட்டட் ஆபீசர்கள்தான்.  ஒரு வருடம் கழித்து நானாக கேட்டுக்கொண்டதின் பேரில் மீண்டும் ஆசிரியப் பிரிவிற்கு மாற்றல் வந்தது.

இப்போது நான் விரிவுரையாளர் என்ற பதவியில் இருந்தேன். பாட வகுப்புகள் எடுப்பது, செயல்முறை வகுப்புகளை மேற்பார்வை செய்வது ஆகியவை என் பணிகள். அந்தக் காலத்தில் விவசாயக் கல்லூரிகளுக்கென்று தனியாக அச்சிட்ட பாட புத்தகங்கள் இல்லை. லைப்ரரி புத்தகங்களைப் பார்த்து விரவுரையாளர்கள் குறிப்புகள் எடுத்துக் கொண்டு மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும். மாணவர்கள் தாங்கள் கொண்டு வரும் நோட்டுப் புத்தகங்களில் அந்தக் குறிப்புகளை எழுதிக் கொள்வார்கள்.

ஆகவே யாரும் கவனக்குறைவாக வகுப்புகளில் இருக்க முடியாது. நான் எடுத்த பாடம் மண்ணியல் பாடம்.

முதல் வகுப்பில் மாணவர்களுக்கு சில பொதுவான விஷயங்கள் சொல்வேன்.

முதலில் மாணவர்கள் மிகப் பழைய காலத்திலேயே எப்படி வகைப்படுத்தப்பட்டார்கள் என்று சொல்வேன். அதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட நன்னூல் சூத்திரத்தைச் சொல்வேன்.




அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர்


அன்னப்பறவை பாலையும் நீரையும் கலந்து குடிக்கக் கொடுத்தாலும் நீரை விட்டு விட்டு பாலை மட்டும் குடிக்கும் திறன் வாய்ந்தது. அதே போல் பசுமாடு (ஆ) தின்பதற்கு கொடுக்கும் வைக்கோலையும் தவிட்டையும் நாம் உண்ணக்கூடிய பாலாக மாற்றித் தருகின்றது. அது போல் மாணவர்கள் ஆசிரியர் கூறும் சொற்களிலிருந்து சாரத்தை மட்டும் பிரித்து மனதில் பதிக்கவேண்டும். அவன்தான் முதல் மாணாக்கனாவான்.

மண்ணையும் கிளியையும் அவைகளின் குணங்களைத் தெரிந்து இங்கு உவமானமாக நன்னூலில் அந்தக் காலத்திலேயே சொல்லியிருப்பதை காணும்போது அந்தக்காலத்து தமிழர்களின் நுண்ணிய அறிவை நாம் பாராட்டவேண்டும். மண்ணில் நாம் என்ன போடுகிறோமோ அதுதான் விளையும். இதில் நாம் போடும் உரங்களும் அடக்கம். அது போல் கிளி நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தான் திருப்பிச்சொல்லும்.

அது போல் சில மாணாக்கர்கள் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகளை மட்டுமே நினைவில் கொள்வார்கள். அதன் உட்பொருளை மனதில் கொள்ளமாட்டார்கள். அவர்களை இடை மாணாக்கர்கள் என்பார்கள். மண்ணியல் என்பது எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்பேன்.

இல்லிக்குடம் = ஓட்டைக்குடம் இதில் எதுவும் நிற்காது.

நெய்யரி = பன்னாடை. தென்னை மரத்தில் மட்டைகளை மரத்தோடு இணைத்துப் பிடித்திருக்கும் ஒரு நார் வலை. இதை அந்தக் காலத்தில் நெய்யை வடிகட்ட ஒரு சல்லடை போன்று உபயோகித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. சல்லடை என்ன செய்யும்? சாரத்தை எல்லாம் கீழே விட்டு விட்டு கசடுகளை மட்டும் தன் மேல் நிறுத்திக்கொள்ளும்.

ஆடு கண்டதை எல்லாம் தின்னும். எருமைக்கு மந்த புத்தி. எப்போதும் சோம்பித் திரியும்.

இந்தக் குணங்களைக் கொண்டவர்களை கடை மாணாக்கர்கள் என்று அந்தக் காலத்திலேயே வர்ணித்திருக்கிறார்கள்.

இவைகளை விளக்கி விட்டு நீங்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று முடிப்பேன்.

தொடரும்.

சனி, 15 ஆகஸ்ட், 2015

நான் ஒரு சர்வாதிகாரி - பாகம் 1

                                       Image result for chemistry lab
நான் மண்ணியல் துறையில் முதுகலைப் படிப்பு (1959-61) படித்து முடித்தவுடன் இரண்டு வருடங்கள் பரம்பிக்குளம் - ஆளியார் பாசனப் பகுதியில் மண் ஆய்வுத்திட்டத்தில் பணி புரிந்தேன். அந்த ஆய்வுத்திட்டம் முடியும் வரை அதில் இருந்து அதன் இறுதி அறிக்கையையும் தயார் செய்தேன். அந்த அறிக்கை பலராலும் பாராட்டப்பெற்று, உலக வங்கிக்காரர்கள்  அந்த அறிக்கையின் பல பிரதிகளை வாங்கிப்போனார்கள். பரம்பிக்குளம் - ஆளியார் பாசனத் திட்டம் உலக வங்கியின் உதவியுடன்தான் செயல்படுத்தப் பட்டது.

பிறகு என்னை ஆசிரியப் பகுதிக்கு மாற்றினார்கள். முதலில் ஆய்வகத்தில் செயல்முறைப் பயிற்சி கொடுக்கும் உதவிப் பேராசிரியராக பணியாற்றினேன்.
விஞ்ஞானப் படிப்புகளில் இந்த வேதியல் செயல்முறைப் பயிற்சிகள்தான் கடினமானவை மற்றும் ஆபத்து நிறைந்தவை. குறிப்பாக கந்தக அமிலம் பல சோதனைகளுக்கு உபயோகப்படுத்த வேண்டி வரும்.

அந்த கந்தக அமிலத்தை சோதனைக் குழாயில் அரை சிசி எடுத்து ஒரு சோதனை செய்யவேண்டும். அதற்குள் நாங்கள் கொடுக்கும் ஒரு ரசாயனத்தை ஒரு சிட்டிகை அளவு போட்டு அந்த சோதனைக்குழாயை "புன்சன்பர்னரில்" காய்ச்ச வேண்டும். காய்ச்சின பிறகு அதை வெளியில் எடுத்து முகர்ந்து பார்க்கவேண்டும். அதில் வரும் வாசனையை வைத்து அந்த ரசாயனம் என்னவாக இருக்கலாம் என்று யூகிக்கலாம்.  நிச்சயமாக அது என்ன ரசாயனம் என்று உறுதி செய்ய வேறு பல சோதனைகள் செய்யவேண்டும்.
                         
                                                          Image result for test tube

இப்படி செய்யும்போது பல மாணவர்கள் அரை சிசி கந்தக அமிலம் எடுப்பதற்குப் பதிலாக 2 அல்லது 3 சிசி எடுத்து விடுவார்கள். அதைக் காய்ச்சி முகரும்போது அந்த அமிலம் கொதித்து வெளியே சீறி அடிக்கும். அது நேராக அந்த முகரும் மாணவனின் கண்ணுக்குள் போகும்.

கந்தக அமிலத்தின் குணங்கள் தெரியாதவர்களுக்காக ஒரு வார்த்தை. அமிலங்களிலேயே வீரியம் மிகுந்ததுவும் மனித உடலுக்கு மிகவும் கேடு விளவிக்கக் கூடியதுவும் கந்தக அமிலமே ஆகும். உங்கள் உள்ளங்கையில் மூன்று சொட்டு கந்தக அமிலத்தை விட்டுவிட்டு அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு இரண்டு நிமிடம் நின்றீர்களேயானால், உங்கள் உள்ளங்கையை ஓட்டை போட்டுவிடும்.

இதே கந்தக அமிலம் ஒரு பங்கு, நைட்ரிக் அமிலம் மூன்று பங்கு சேர்த்து கலக்கினால் வரும் திரவத்திற்கு "ராஜ அமிலம்" (Aqua regia)  என்று பெயர். இதைத்தான் தெருவில் தங்க நகை பாலீஷ் போடுகிறவர்கள் கொண்டு வருவார்கள். உங்கள் மனைவியின் 10 பவுன் நகையை இதில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்தால் அந்த நகை அப்படியே பளபளக்கும். கூடவே அந்த நகை இரண்டு பவுன் எடை குறைந்திருக்கும். அந்த ஐந்து நிமிடங்களில் இரண்டு பவுன் தங்கத்தைக் கரைத்துவிடக்கூடிய ஆற்றல் அந்த அமிலத்திற்கு உண்டு.
                                      Image result for gold chain design images

இப்படிப்பட்ட கந்தக அமிலம் கண்ணில் பட்டால் கண் என்ன ஆகும்? அந்த மாதிரி யாராவது மாணவனுக்கு கண் பாதிக்கப்பட்டால் அந்த விளைவிற்கு யார் பொறுப்பு? அந்த வகுப்பில் இருக்கும் ஆசிரியர்தான் பொறுப்பாவார். கந்தக அமிலத்தை எச்சரிக்கையாக கையாள்வதற்கு மாணவனுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வரும்.
இதனால் நான் என்ன செய்வேனென்றால் அப்படி யாராவது அரை சிசிக்கு மேல் கந்தக அமிலத்தை சோதனைக்குழாயில் எடுத்திருந்தால் உடனே அவனை அழைத்து உன் பெயர் என்ன என்று கேட்டு வருகைப் பதிவேட்டில் அவனுக்கு ஆப்சென்ட் போட்டு அவனை சோதனைச்சாலையிலிருந்து வெளியே அனுப்பி விடுவேன். இதை மற்ற மாணவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்தத் தவற்றை எப்போதும் செய்ய மாட்டார்கள். வெளியில் அனுப்பிய மாணவனும் ஆயுளுக்கும் இதை மறக்க மாட்டான்.

வெளியில் அனுப்பிய மாணவன் சோதனைச்சாலைக்கு வெளியில்தான் நான்று கொண்டிருப்பான். ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அவனை உள்ளே கூப்பிட்டு சோதனைகளைத் தொடரும்படி கூறுவேன். ஆனால் ஆப்சென்ட் போட்டது போட்டதுதான்.


மாணவர்களுக்கு ஒவ்வொரு செயல்முறை வகுப்பிலும் நான் சொல்வது. இங்கு நான் சொல்வது போல்தான் செய்யவேண்டும் மாற்றிச்செய்தால் உங்களை வகுப்புக்கு வெளியில் அனுப்பி விடுவேன் என்பதுதான்.

அந்தக் காலத்தில் நானும் என்னுடன் பணிபுரிந்த மற்ற ஆசிரியர்களும்
இவ்வாறு சர்வாதிகாரம் செலுத்திக் கொண்டு இருந்தோம். மாணவர்களும் எங்கள் கண்டிப்பின் பின் உள்ள மாணவர்களின் நலனை உணர்ந்திருந்தார்கள்.   பல ஆண்டுகள் கழித்துப் பார்க்க நேரும் மாணவர்கள் "சார், நீங்கள் அன்று அவ்வளவு கண்டிப்புடன் இருந்ததால்தான் நாங்கள் ஒழுங்காகப் படித்தோம், நீங்கள் சொல்லிக் கொடுத்தவைகள் இன்றும் மறக்காமல் இருக்கிறது" என்பார்கள். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன விருது வேண்டும்?

மாணவர்களின் குணங்கள் பற்றி நன்னூலில் சொல்லியிருப்பது.



கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவ னன்னவார் வத்த னாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போத லென்மனார் புலவர்.

இந்த நன்னூல் சூத்திரத்தை வருட ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சொல்லி இதன் பொருளையும் கூறுவேன். இதுதான் மாணவர்களுன் இலக்கணம். அப்புறம் நாங்கள் நடந்து கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் என் வகுப்புகளில் நான் சொல்வதுபோல்தான் நடக்கவேண்டும் என்று சொல்லி விடுவேன்.

பயிற்சி வகுப்புகளுக்கு காக்கி அரை டிராயரும் காக்கி அரைச் சட்டையும்தான் யூனிபார்ம். வேறு சட்டை, பேன்ட் போடுடக்கொண்டு வந்தால் அனுமதி இல்லை. சட்டையின் அனைத்து பட்டன்களையும் போட்டிருக்கவேண்டும். மேல் பட்டன்களைப் போடாமல் திறந்த மார்புடன் வருகிறவர்களை வெளியே அனுப்பப்படும்.. வருகைப் பதிவேட்டில் பெயர்கள் வாசித்து முடித்தவுடன் பரிசாதனைச்சாலையின் கதவு மூடப்பட்டு விடும். அதற்குப் பின் வருபவர்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் அது அந்தக் காலம். இன்று அப்படியெல்லாம்  செய்தால் அடுத்த நொடியில் மாணவர்கள் அனைவரும் கூட்டாக வெளியில் போய் வாத்தியார் ஒழிக என்று கோஷம் போடுவார்கள். அதிகாரிகளும் மாணவர்களுக்குச் சாதகமாகவே பேசுவார்கள்.

தொடரும்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

என் அப்பா எனக்குக் கொடுத்த தண்டனை


                                                           Image result for நன்னூல்
நான் சிறுவனாக இருந்தபோது தவறுகள் செய்தால் என் அப்பா எனக்கு கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா? எங்களை வீட்டில் தேவாரம் திருவாசகம் முதலான புத்தகங்கள் இருந்தன. அவற்றில் நன்னூல் என்று ஒரு பத்தகமும் உண்டு. அது என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்ற விவரங்கள் எல்லாம் அறியாத காலம் அது. அதை எடுத்து ஆரம்பத்திலிருந்து 25 வரிகள் படித்து ஒப்புவிக்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்.

அந்த வரிகள் வருமாறு.

சிறப்புப் பாயிரம்

மலர் தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவை உம் விளக்கும்
பரிதி இன் ஒரு தான் ஆகி முதல் ஈறு
ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த
அற்புத மூர்த்தி தன் அலர்தரு தன்மையின்
(5)
மன இருள் இரிய மாண் பொருள் முழுவது உம்
முனிவு அற அருளிய மூ அறு மொழி உள் உம்
குண கடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ் கடல் உள்
அரும் பொருள் ஐந்து ஐ உம் யாவர் உம் உணர
(10)
தொகை வகை விரியின் தருக என துன்னார்
இகல் அற நூறி இரு நிலம் முழுவது உம்
தனது என கோலி தன் மத வாரணம்
திசை தொறு உம் நிறுவிய திறல் உறு தொல் சீர்
கரும் கழல் வெண் குடை கார் நிகர் வண் கை
(15)
திருந்திய செங்கோல் சீயகங்கன்
அரும் கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின்
வழி ஏ நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன் மதில் சனகை சன்மதி முனி அருள்
(20)
பன்ன அரும் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத்து இரும் தவத்தோன் ஏ 

இதில் கொஞ்சம் சந்தி பிரித்து எழுதியிருக்கிறது. நான் படித்த புத்தகத்தில் இவ்வாறு சந்தி பிரிக்கப்படவில்லை. அந்தத் தமிழைப் படிப்பதே கடினம். பிறகு எவ்வாறு அதை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது? வீட்டின் ஒரு மூலையில் சப்பணம் இட்டு உட்கார்ந்து கொண்டு இந்த நன்னூலைப் படிக்கவேண்டும். இவ்வாறு அடிக்கடி சப்பணமிட்டு உட்கார்ந்து பழகியதால் இன்றும் கூட நான் சப்பணமிட்டு ஒரு மணி நேரம் வரை உட்காருவேன்.

இப்படி ஒரு மணி நேரம் கழிந்த பிறகு என் அப்பா இதைப்பற்றி அப்புறம் கேட்க மாட்டார். நானும் எழுந்திருந்து மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவேன். இவ்வாறு நன்னூல் எனக்கு அறிமுகமாயிற்று. பிற்காலத்தில் நான் கல்லூரி சென்ற பிறகு இந்த நூலை எப்போதாவது புரட்டுவேன்.

அதில் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும், மாணவன் எப்படி இருக்கவேண்டும், பாடம் கேட்பது எப்படி என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. கல்லூரிப்படிப்பு முடிந்து நான ஆசிரியனான பிறகு இதையெல்லாம் மீண்டும் படித்து வகுப்பில் மாணவர்களுக்கும் சொல்லுவேன்.

இந்த நூல்கள் எப்படி என் வீட்டில் இருந்தன என்பதை பிற்காலத்தில் என் பாட்டியிடமிருந்து தெரிந்து கொண்டேன். அந்தக் கதைகளில் என்னைப் பற்றிய ஒரு முக்கியமான குறிப்பு இருக்கிறது. அதை கடைசியில் சொல்லுகிறேன்.

என் தகப்பனாருடன் பிறந்த ஒரு மூத்த சகோதரர் இருந்திருக்கிறார். அவருக்கு தமிழ் ஆர்வம் மிகுதி. ஒரு தமிழ்ப்புலவரிடம் பாடம் கற்றிருக்கிறார். அப்போது வாங்கிய புத்தகங்கள்தாம் அவை. அந்தப் புத்தகங்கள் எல்லாம் திருநெல்வேலி சைவ சிந்தாந்த சபையினரால் பிரசுரிக்கப்படவை. அவைகளின் விலை ரூ.1-2-0 அல்லதி ரூ. 1-7-6 என்று போட்டிருக்கும். இந்த விலைகளின் அர்த்தம் இந்தக்கால இளைஞர்களுக்கு விளங்காது. ரூபாய், அணா, பைசா இருந்த காலம் அது. நான் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்குப் போகும் வரை இந்த நாணயமுறைதான் அமுலில் இருந்தது.

அந்தப் பெரியப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாததால், தான் கல்யாணம் செய்து கொள்ளாமல், தன் தம்பிக்கு (அதாவது என் அப்பாவிற்கு) கல்யாணம் செய்து வைத்தார். நான் பிறந்து ஓராண்டு வரைக்கும் உயிருடன் இருந்தார். அவர் என் பிறந்த தேதி, நட்சத்திரம், அங்க லட்சணங்கள் இவற்றைப் பார்த்து இவன் நன்றாகப் படித்து நல்ல உத்தியாகம் பார்த்து நன்றாக இருப்பான் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய ஆரூடப்படி நான் இப்போது நன்றாக இருக்கிறேன்.

நன்னூலை நான் எவ்வாறு என் வகுப்புகளில் பயன் படுத்தினேன் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.