பதிவுலகம் ஒரு
சக்தி வாய்ந்த ஊடகமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழில் எழுதுபவர்கள்
நிலையாக இல்லை. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற தொல்காப்பிய
விதிப்படி பதிவுலகம் இயங்குகிறது.
நீண்ட காலமாக எழுதி
வந்தவர்களும் கூட பல காரணங்களினால் காணாமல் போகிறார்கள். புதிதாக எழுத வருபவர்களும்
நிறைய வருகிறார்கள். பலதரப்பட்டபதிவுகள் எழுதப்படுகின்றன. பதிவுகளின் தன்மைகளைப்
பார்த்துக்கொண்டு இருந்ததில் எனக்குப் புலப்பட்ட சில கருத்துகளை இங்கே பதிகின்றேன்.
கதைகள், நகைச்சுவை,
தகவல்கள், செய்திகள், விமரிசனங்கள், விவாதங்கள், அரசியல், சமூகப் பிரச்சினைகள், தனிநபர்
பிரச்சினைகள் என்று பதிவு வகைகளின் பட்டியல் நீண்டதாக இருக்கிறது. எல்லாவற்றையும் பார்க்கும்போது
பொதுவான ஒரு நோக்கம் தெரிகிறது. முதலாவதாக, மக்கள் தங்கள் நினைவுகளை எழுத்தில் வடிக்க
ஆசைப்படுகிறார்கள். வேறு வகையில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நல்ல ஊடகங்கள் இல்லாமையினால்
இந்தப்பதிவு ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு ஆக்க பூர்வமான செயலே ஆகும்.
இரண்டாவது அப்படி
அவர்களது ஆக்கங்கள் பதிவில் வெளியாகும்போது அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென்றும்
விரும்புகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாக ஒரு அங்கீகாரம் தேவைப்படுகின்றது. பதிவுலகில் பின்னூட்டங்கள், வருகைகள், திரட்டிகளில் ஓட்டுகள் இப்படி அங்கீகாரங்கள் கிடைக்கின்றன. இதற்காக சில பல உத்திகளைக் கையாளுகிறார்கள். அப்படி அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்
பலர் தொடர்ந்து எழுதுகிறார்கள்.
மூன்றாவது காரணம்
அல்லது விளைவு முக்கியமானதாகும். பதிவுகள், படிப்பவர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
அந்த விழிப்புணர்வு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுகிறது.
உதாரணத்திற்கு, இன்கம்டாக்ஸ் ஆபீசில் இருந்து வருவது போன்ற கடிதங்களை நம்பி ஏடிஎம்
கார்டு நெம்பர்களைக் கொடுத்தால், உங்கள் கணக்கிலிருந்து பணம் எப்படித் திருடுகிறார்கள்
என்று ஒரு பதிவு வெளியாகியது. இதைப் படித்தவர்கள் தங்களுக்கு இப்படி கடிதம் வந்தால்
உஷாராகி விடுவார்கள் அல்லவா.
இப்படிப்பட்ட பதிவுகள்
அதிகரிக்கவேண்டும். இப்படிப்பட்ட பதிவுகள்தான் சமுதாயத்திற்கும் தனி மனிதனுக்கும் உதவும். இப்படிப்பட்ட
பதிவுகள் அவசியமானவை. ஆனால் அதனால் பெரிய சமுதாய மறுமலர்ச்சி நிகழ்ந்து விடும் என்று
எண்ணவேண்டாம். காரணம் தமிழ்ப்பதிவர்கள் மொத்தமே பத்தாயிரத்திற்குள்தான். தினம் சுமாராக
300200இருநூறு பதிவுகள் போடப்படுகின்றன. இவைகளை ஏறக்குறைய மொத்தமாக ஒரு லட்சம் பேர் படிக்கக்கூடும்.
இந்த வாசகர்கள், சமுதாயத்தில் பெரிய மாற்றம் விளைவிக்கப் போதுமானதில்லை. இருந்தாலும் தமிழ் மக்களில்
ஒரு சில பேராவது பயன் பெறுவார்கள் என்று நம்பித்தான் பதிவுகள் எழுதப்படுகின்றன. நானும் அந்த நம்பிக்கையில்தான் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன். நம்பிக்கைதான்
வாழ்க்கை. வாழ்க பதிவுலகம்.