வெள்ளி, 11 ஜனவரி, 2013

மனிதனுக்கு ஓமெகா-3 சத்து தேவையா?


சரவணன் போட்டிருந்த பின்னூட்டம்.
மீன் எண்ணெய் இல்லாத தாவர ஒமேகா-3 வெஜிடபிள் ஆயில் பத்தி எழுதுங்களேன். அது நல்லதா?

அடுத்து எந்த சமையல் எண்ணெய்கள் நல்லது? இது பற்றி ஆங்கிலப் பத்திரிகைகள் மாற்றி மாற்றி எழுதுவதால் குழப்பமாக இருக்கிறது. இதையும் ஒரு பதிவிடுங்கள்!




ஓமெகா-3 சத்து - இதைப்பற்றிய விவரங்கள் கீழே கொடுத்துள்ள லிங்க்கில் இருக்கிறது.

http://en.wikipedia.org/wiki/Omega-3_fatty_acid

இது கொஞ்சம் டெக்னிகலா இருக்கும். எளிய முறையில் நான் கொடுக்கும் விளக்கம்  கீழே.

மனிதனின் உணவில் முக்கியமாகத் தேவையானவை மூன்று - அவை - மாவுச்சத்து, புரதம், எண்ணைச்சத்து.

எண்ணைகள்  (கொழுப்பு என்றும் சொல்வார்கள் - பதிவுகளில் சொல்லும் கொழுப்பு அல்ல) ஒரு வகையான வேதியல் கூட்டுப்பொருள். இதில் பல விதமான கொழுப்பு அமிலங்கள் சேர்ந்திருக்கின்றன. அவைகளில் சில நல்லவை, சில அவ்வளவாக நல்லவை அல்லாதவை.

இந்த நல்ல அமிலங்கள் உள்ள எண்ணை வகைகளை உபயோகிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சாதாரணமாக திரவ ரூபத்தில் இருக்கும் எண்ணை வகைகள் அனைத்திலும் இந்த நல்ல வகையைச் சேர்ந்த அமிலங்கள் இருக்கின்றன. சில எண்ணைகளில், சூரியகாந்தி, லின்சீடு, அரிசித்தவிட்டு எண்ணை ஆகியவைகளில் இந்த நல்ல வகை அமிலங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றன.

வெண்ணை, மாமிசங்களில் உள்ள கொழுப்புச்சத்துகளில் இந்த நல்ல வகை அமிலங்கள் குறைவு. ஆகவே அவைகளை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

இந்த நல்ல வகையைச் சேர்ந்த கொழுப்பு அமிலங்களை ஒமெகா-3 அமிலங்கள் என்றும் சொல்வார்கள். மனிதனில் உடல் வாகைப் பொருத்து சிலருக்கு இந்த அமிலங்கள் சேர்ந்த எண்ணை வகைகளைப் பயன்படுத்தினால் நல்லது என்று டாக்டர்கள் சொல்வார்கள். ஆனால் இந்த ஒமெகா-3 வகை அமிலங்களை சர்வ ரோக நிவாரணி என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அவை நல்லவை. அவ்வளவுதான்.

இந்த ஒமெகா-3 வகை அமிலங்கள் மீன் எண்ணையில் அதிகமாக இருக்கிறது. தாவர எண்ணைகளில் கொஞ்சம்தான் இருக்கிறது. ஆகவே மீன் எண்ணை டாக்டர்களால் பரிந்துரைக்கப் படுகிறது.

எரிகிற வீட்டில் பிடுங்கின வரையில் லாபம், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,   ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, என் கல்லா நிறைந்தால் போதும் என்று கொள்ளையடிக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கு இது இன்னொரு வரப்பிரசாதம்.

இதில் ஒமெகா-3 இருக்கிறது என்று சொன்னால் அதை, என்ன விலையானாலும் கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். பிறகு என்ன, காசை வாங்கி கல்லாவில் போட மருந்துக் கம்பெனிக்காரர்களுக்கு கசக்குமா, என்ன? இதுதான் இப்போது நடக்குது.

நாம் வழக்கமாக உபயோகப் படுத்தும் நல்லெண்ணையும் கடலை எண்ணையுமே மிகச்சிறந்தவை. அவைகளை அளவுடன் பயன்படுத்தினாலே போதும். வேறு எந்த எண்ணையையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ எண்ணை என்பது நல்ல அளவாகும்.

நம் ஊருக்கு தேங்காய் எண்ணையை, தலைக்கு தேய்க்க மட்டும் உபயோகிக்கலாம்.

உங்கள் குழந்தைகளை இந்த மாதிரி வளர்க்காதீர்கள்.


26 கருத்துகள்:


  1. நான் நல்லெண்ணையும் கடலை எண்ணெயும் அளவாகவே உபயோகிக்கிறேன்! நோ ஸ்பெஷல் ஒமேகா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் நம் பழங்காலத்திலிருந்து வரும் சிறந்த பாரம்பரிய முறை.

      நீக்கு
  2. மிகவும் உபயோகமான தகவல்... நன்றி

    பதிலளிநீக்கு
  3. //ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ எண்ணை என்பது நல்ல அளவாகும்.//
    கட்டுப்படி ஆகாது சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு வயசு 60 ஆகணும், முரளிதரன்.

      நீக்கு
    2. விலை அதிகம் என்று சொல்கிறீர்களா? அப்படியானால் இன்னும் குறைத்தால் நலமே.

      நீக்கு
  4. எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருப்பதற்கு நன்றி! தேங்காயெண்ணையை உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றிய தங்கள் கருத்து என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பற்றிய செய்திகள் முழுவதுமாக எனக்குத் தெரியவில்லை. பொதுவாக அதில் பூரித கொழுப்பு அமிலங்கள் (Saturated fatty acids) கூடுதலாக உள்ளன. அதனால்தான் அது குளிர்காலத்தில் உறைகிறது. இவ்வகை எண்ணைகள் ரத்தக் குழாய் அடைப்பிற்கு காரணமாக இருக்கிறது என்பது பொதுவான அபிப்பிராயம்.

      ஆனால் கேரளாவில் இந்த எண்ணையைத்தான் உபயோகிக்கிறார்கள். அங்கு இருதய நோய் அதிகமாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தந்த ஊர்களில் விளையும் பொருள்கள் அந்த ஊரில் வாழும் மக்களுக்கு ஒத்துக் கொள்ளும் என்பது ஒரு கருத்து. அந்த வகையில் அவர்களுக்கு இந்த எண்ணை ஒத்துக்கொள்கிறது போலும்.

      தமிழ் நாட்டு இருதய டாக்டர்கள் எல்லோரும் தேங்காயையும் தேங்காய் எண்ணையையும் தவிர்க்கவே சொல்லுகிறார்கள். எப்பொழுதாவது சேர்த்துக் கொள்வதில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று நான் நினைக்கவில்லை. தேங்காய் எண்ணையில் சுட்ட முறுக்கின் ருசியே தனிதான்.

      நீக்கு
  5. நம் பாரம்பரிய முறையே ஆரோக்கியமானது ....

    பதிலளிநீக்கு
  6. தகவலுக்கு நன்றி! எங்கள் வீட்டில் ஆலிவ்+கார்ன் ஆயில் கலவை, சூரியகாந்தி, அரிசித்தவிடு, சாஃபிளவர் ஆகியவற்றை பெரும்பான்மையாகவும், நல்லெண்ணையை சிறிய அளவிலும் பயன்படுத்துகிறோம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரிதான் போலும்!

    சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலிவ் ஆயில் உபயோகிக்கணும்னா கொஞ்சம் வசதி வேணும்.

      நீக்கு
    2. ஆமாம். தனிப்பட்ட ஆலிவ் எண்ணெய் 1 பாட்டில் ஆயிரம் ரூபாய் இருக்கும். ஃபோன் செய்தால் வீட்டுக்கு டோர் டெலிவரி கூட உண்டு என்றால் அதன் விலை எப்படி இருக்கும்?! ஆனால் கார்ன் + ஆலிவ் ப்ளென்ட் மலிவாகவே உள்ளது (காளீஸ்வரி!). இதில் ரகசியம், கலவை என்றுதான் சொல்கிறார்களே தவிர எது எத்தனை சதவீதம் என்று சொல்வதில்லை! (நான் லேபிளை அவ்வளவு உற்றுப் படித்ததில்லை என்பதையும் சொல்லவேண்டும்) சும்மா பேருக்கு 2 ஸ்பூன் ஆவிவ் இருக்குமோ என்னவோ!

      இப்ப இன்னொரு சந்தேகம்! ஆலிவில் வர்ஜின், எக்ஸ்ட்ரா வர்ஜின் என்றால் என்ன சார்?

      சரவணன்

      நீக்கு
  7. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நாம் பரம்பரையாக உண்ணும் உணவுகளை விடுத்து வேறு நாட்டினரின் உணவுகளை உட்கொள்வதுதான் இன்றைய ஆரோக்கிய கேட்டிற்கு காரணம். எப்போதும்
    பயன்படுத்தும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் இவையே சிறந்தவை.

    விளக்கமான தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //நம் ஊருக்கு தேங்காய் எண்ணையை, தலைக்கு தேய்க்க மட்டும் உபயோகிக்கலாம்.//

    இதை கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காயெண்ணையில் உள்ள எண்ணை அமிலங்கள் பூரித வகையை சேர்ந்தவை. அத்தகைய எண்ணைகள் இரத்தக் குழாய் அடைப்பிற்கு காரணமாகிறது. ஆனால் கேரளாவில் அநேகர் இந்த எண்ணையை பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் நேர்வதில்லை.

      பொதுவாக ஒன்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்தந்த ஊரில் விளைவதை உட்கொண்டால் தவறு இல்லை. நாம் அரிசி சாப்பிடுகிறோம். வட இந்தியாவில் கோதுமை சாப்பிடுகிறார்கள். அங்கு கடுகு எண்ணை உபயோகிக்கிறார்கள். நமக்கு அது மீன் நாற்றம் அடிக்கிறது.

      நீக்கு
  9. சிறப்பான தகவல்கள். எங்கள் வீட்டில் சூரியகாந்தி எண்ணெயும், நல்லெண்ணெயும் பயன்படுத்துகிறோம்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்.
    பதிவும் , தகவலும் ரொம்பவும் அருமை. தாஙள் குறிப்பிட்ட
    “ http://en.wikipedia.org/wiki/Omega-3_fatty_acid “ க்குள் சென்று பார்த்தேன். அப்பாடி! தலைசுற்றுகிறது.
    தாங்கள் குறிபிடும் “ எண்ணை “ என்பது ரிபைண்டு ஆயிலுக்கும் பொருந்துமா ?
    இந்த ரிபைண்டு ஆயிலில், சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் சத்துக்களை நீக்குவதுடன் , தேவையற்ற நச்சுக்களையும் சேர்த்து விடுவதாகச் சொல்லுகிறார்களே - உண்மையா ? தயவு செய்து விளக்கவும்.
    > > கே.எம்.அபுபக்கர்
    கல்லிடைக்குறிச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். கால மாற்றத்தால் பல நல்ல பழக்கங்கள் மறைந்து வருகின்றன. அந்தக் காலத்தில் எண்ணை ஆட்டுவதற்கு ஒவ்வொரு ஊரிலும் மரச்செக்குகள் இருந்தன. அங்கு எண்ணை ஆட்டும்போதே சென்று வாங்கி வந்து மக்கள் உபயோகப்படுத்தினார்கள். அந்த எண்ணை புதிதாகவும் இயற்கை மணத்துடனும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது.

      இன்று அந்த செக்குகள் மறைந்து போயின. எண்ணை எங்கோ ஆட்டி, பல கைகள் மாறி, உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. எண்ணையை ஆட்டின நாளுக்கும் உபயோகிக்கும் நாளுக்கும் உண்டான இடைவெளி அதிகமாகி விட்டது. அவ்வளவு நாள் அந்த எண்ணை கெட்டுப்போகாமல் இருக்க கண்டுபிடித்ததுதான் "ரிபைனிங்க்" என்ற வழி. இதில் பல அக்கிரமங்கள் நடக்கின்றன. நவீன உலகத்தின் சாபங்கள் அவை.

      இன்று நாம் சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை. குடிக்க சுத்தமான நீர் இல்லை. நாம் உண்ணும் ஒவ்வொரு பொருளும் ஏதாவது ஒரு வழியில் மாசடைந்தே இருக்கிறது. காலத்தைப் பின்னோக்கி மாற்ற முடியாது. வருவதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். முடியவில்லை என்றால் பரலோகம் போவதைத் தவிர வேறு வழி இல்லை.

      நீக்கு
  11. அந்தந்த பகுதி மக்களுக்கு அந்தந்த மண்ணில் விளைந்த விளை பொருட்கள் ஒன்றும் செய்வதில்லை...இயற்கைக்கு மாறாக, வேறு இடத்திலிருந்து இங்கு இறக்குமதியான பொருட்கள் தான் உபத்ரவம் செய்கின்றன..உதாரணமாக, நம் பக்கத்து மிளகு,எலுமிச்சை,வெல்லம் எல்லாம் நம்மை ஒன்றும் செய்வதில்லை..ஆனால் நாம் உபயோகிக்கும் மிளகாய்(சிலி,தெ.அமெரிக்கா) புளி (தெரியவில்லை), சர்க்கரை (பிரேஸில்)தான் நம்மை பாடாய் படுத்துகின்றன!

    பதிலளிநீக்கு
  12. அருமையான தகவல்கள் . இன்றைய உலகிற்கு மிக முக்கியமானவை.

    நான் நல்லெண்ணெய் வாங்க போனபோது கடை காரர் விளக்குக்கா இல்லை சமையலுக்கா என்று கேட்டார். விளக்குக்கு என்றால் ரேட் கம்மி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மீகத்தை எப்படி வியாபாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். அந்தக் காலத்தில் விளக்கு எரிக்க விளக்கெண்ணைதான் பயன்படுத்துவார்க்ள. அது நின்று எரியும்.

      இலுப்பை எண்ணை என்று ஒன்று மலிவானது. அதை விளக்கெரிக்க உபயோகப் படுத்தலாம். சில ஆன்மீகவாதிகள் இலுப்பை எண்ணையையும் நல்லெண்ணையையும் கலந்து விளக்கு வைத்தால் அது கடவுளுக்கு மிகப் ப்ரீத்தியானது என்று கதை கட்டி விட்டார்கள். கடவுளுக்கு எது ப்ரீத்தியானது என்று அவர்களுக்கு எப்படித் தெரிந்ததோ, எனக்குத் தெரியவில்லை.

      இப்படி சொன்னால் நமது குல விளக்குகளுக்க்குப் போதாதோ? உடனே இந்த எண்ணை எங்கே கிடைக்கும் என்று தேடினார்கள். நமது வியாபாரிகளுக்கு சொல்லவேண்டுமா? உடனே ஒரு சாமி பெயர் வைத்து ஒரு கலப்பட எண்ணை தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

      இதுதான் வியாபார உத்தி.

      நீக்கு
  13. அருமையான தகவல்கள். இன்றைய உலகிற்கு மிக முக்கியமானவை.

    நான் நல்லெண்ணெய் வாங்க போன போது கடை காரர் விளக்குக்கா இல்லை சமையலுக்கா என்று கேட்டார். விளக்குக்கு என்றால் ரேட் கம்மி.

    பதிலளிநீக்கு