திங்கள், 21 ஜனவரி, 2013

நவீன குளியல் அறையில் குளிப்பது எப்படி?


தங்கள் சொந்த வீட்டில் குளிப்பதானாலும் சரி, விருந்தாளியாகப் போய் மற்றவர்கள் வீட்டில் குளிப்பதானாலும் சரி, சில அடிப்படை நாகரிகங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்.

நான் ஒரு ஆண். அதனால் ஆண்கள் குளிப்பதைப் பற்றித்தான் என்னால் சொல்ல முடியும்.

குளிப்பது என்பது நான்கு நிலையில் நடக்கும் ஒரு வேலை.

1. பல் விளக்குவது

2. ஷேவிங்க் செய்வது

3. குளித்தல்

4. ஆடை அணிதல்

(இந்த வேலைகளில் 1 மற்றும் 2 இவைகளை தனியாக பாத்ரூமுக்கு வெளியில் செய்ய வேண்டி வரலாம். அதை இப்போதைக்கு விட்டு விடுவோம்)

பல் விளக்குவதுவும் ஷேவிங்க் செய்வதும் வாஷ் பேசினுக்கு முன் செய்ய வேண்டிய வேலைகள்.

இதுதான் வாஷ் பேசின்


முதலில் பல் விளக்குவதைப் பார்ப்போம். பிரஷ், பேஸ்ட் உபயோகப்படுத்தினாலும் சரி, பல் பொடி உபயோகித்தாலும் சரி, உங்கள் வாயிலிருந்து வருபவை அனைத்தும் பேசினுக்குள்தான் விழ வேண்டும். பல் தேய்த்து முடித்த பின் வாய் கொப்பளித்து உமிழும் திரவங்கள் அனைத்தும் பேசினுக்குள் விழவேண்டும். இதுதான் முறை. இது முடியாதவர்கள் ஆற்றங்கரைக்குப் போய்விடுவது உத்தமம்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். வாயை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று, கையை வாய்க்குள் விட்டு ஊர் முழுவதும் சத்தம் கேட்கிற மாதிரி வாந்தி பண்ணக்கூடாது. நீங்கள் பாத்ரூமுக்குள் இருக்கும்போது, தண்ணீர் விழும் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் வெளியில் கேட்கக்கூடாது.

இப்போது வாஷ் பேசினை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து விட வேண்டும். நீங்கள் வரும்போது எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதே சுத்தம் நீங்கள் வாஷ் பேசினை விட்டுப் போகும்போதும் இருக்கவேண்டும்.

பிறகு ஷேவிங்க் செய்த பிறகும் வாஷ்பேசினை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும். முடிகளை பேசினில் எக்காரணத்தைக் கொண்டும்  விட்டுவிடக்கூடாது. (ஷேவிங்க் செய்வது எப்படி என்று ஒரு தனி பதிவு தயாராகிக்கொண்டு இருக்கிறது)

பின்பு குளித்தல் எப்படி என்று பார்ப்போம். குளிப்பதை பல நிலைகளில் செய்யலாம். நின்றுகொண்டு, உட்கார்ந்து கொண்டு, பக்கெட்டிலிருந்து மக்கில் மோண்டு ஊற்றி, ஷவரின் அடியில் நின்று கொண்டு, ஹேண்ட் ஷவரை உபயோகித்து, இப்படி எப்படி வேண்டுமானாலும் குளிக்கலாம். உடம்பில் ஒட்டியிருக்கும் வியர்வை மற்ற அழுக்குகள் நீங்க வேண்டும், அவ்வளவுதான். சோப்பு அல்லது பயத்தம் மாவை உடலின் மேல் பூசிக் குளிக்கலாம்.

முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, தண்ணீரை அதிகம் உபயோகிக்காமல் அளவுடன் உபயோகிக்கவேண்டும். இன்று தண்ணீர் அரிதாகிக்கொண்டு வருகிறது. அதுவும் நகரங்களில் மிகவும் கஷ்டம். 

குளித்து முடித்தவுடன் புது உள்ளாடைகளையும் மேல் ஆடைகளையும் உடுத்திக்கொண்டு, பழைய ஆடைகளை அதற்குண்டான பக்கெட்டிலோ, குண்டானிலோ போட்டுவிடவேண்டும். பாத்ரூம் தரையில் எந்தவிதமான அழுக்குகளும் இல்லாமல் கழுவி விட்டு வெளியில் போட்டிருக்கும் கால்மிதியில் கால்களை ஈரம் போகத்துடைத்துவிட்டு வரவேண்டும்.

அநேகமாக இப்போது எல்லோர் வீட்டிலும் பாத்ரூமில் எக்ஸ்சாஸ்ட் பேன் வைத்திருப்பார்கள். பாத்ரூமை விட்டு வெளியில் வந்தவுடன், கதவை மூடிவிட்டு, இந்த பேனைப் போட்டுவிட்டால் பாத்ரூம் தரை சீக்கிரம் உலர்ந்துவிடும். இதற்கு பாத்ரூம் எலெக்ட்ரிக் ஸ்விட்ச்சுகள் அனைத்தும் வெளியில் இருக்கவேண்டும். பாத்ரூம் தரை உலர்ந்து இருப்பது அவசியம். ஏனென்றால் ஈரத்தரையில் நோய்க்கிருமிகள் வளர்வது மிக அதிகம்.

உங்கள் சொந்த வீடானாலும் உறவு முறைக்குப் போய்த் தங்கின வீடாக இருந்தாலும் இந்த முறையில் பாத்ரூமை உபயோகப்படுத்தினால் அனவருக்கும் சந்தோஷமாக இருக்கும். யாரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள். குறிப்பாக கிராமத்தில் இருந்து வரும் விருந்தினர்கள் கவனமாக இருப்பது அவசியம்


                                    .

இது பாத்டப் எனப்படுவது. நம் கிராமத்து குட்டைகளில் எருமை மாடுகள் முங்கிக் கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது அதுவேதான். என்ன வித்தியாசம் என்றால் இதில் வெந்நீரும் வரும். டப்பை நிரப்பிவிட்டு அதில் மணிக்கணக்காக ஊறிக்கொண்டு இருப்பது ஒரு தனி சுகம் என்கிறார்கள். நான் அனுபவித்ததில்லை.


இது கேபின் என்று சொல்லப்படும் குளியல் அறை. இதில் தண்ணீர், வெந்நீர் இரண்டும் உங்களுக்கு வேண்டிய சூட்டில் இதமாக உங்கள் மீது பீய்ச்சி அடிக்கும். ஏறக்குறைய அருவியில் குளிக்கும் அனுபவம் கிடைக்கும். இந்த இரண்டு முறைகளும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வருந்தும் ஏழைகளுக்கானது. நமக்கு அந்த வருத்தம் இல்லாததால் இவைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

கிணற்றடியில், பம்பு செட்டிற்கு கீழ் குளித்தவர்களுக்கு இந்த மாதிரி பாத்ரூமில் குளிப்பது காக்கைக் குளியலுக்கு சமம்தான். என்ன செய்யமுடியும்? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.


20 கருத்துகள்:

  1. very useful article... we are daily doing all these.. but these points are useful..

    பதிலளிநீக்கு
  2. // கிணற்றடியில், பம்பு செட்டிற்கு கீழ் குளித்தவர்களுக்கு இந்த மாதிரி பாத்ரூமில் குளிப்பது காக்கைக் குளியலுக்கு சமம்தான். என்ன செய்யமுடியும்? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.//

    சரியாகச் சொன்னீர்கள் !

    பதிவுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  3. நவீன குளியறையில் எப்படி என்று இடையிடையே இழைந்தோடும் நகைச்சுவையோடு விலாவாரியாக விளக்கியிருக்கிறீர்கள். அதுவும் அந்த குளியல் தொட்டியில் குளிப்பதை, எருமை மாடுகள் குட்டையில் முங்கியிருப்பதொடு ஒப்பிட்டுருப்பதைப் படித்தபோது வாய்விட்டு சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. என்ன சார் இப்படி இறங்கிட்டீங்க? எந்த மேட்டராக இருந்தாலும் அதில் நீங்கள் காட்டும் டேடிகேஷன் மற்றும் எளிமையான விளக்கங்களே வியக்க வைக்கின்றன...

    பதிலளிநீக்கு
  5. அருமையான கருத்துக்கள்.தண்ணீர் விழும் சத்தம் தவிர மற்றெல்லா சத்ததமும் வரும் சிலபேர்கள் குளிக்கப் போனால்.
    பாத்டப்பில் குளிப்பதை பெருமையாக நினைப்பவர்கள் உங்கள் பதிவைப் பார்த்தால்.........! ஹா....ஹா....

    பதிலளிநீக்கு
  6. சரியாச் சொல்லியிருக்கீங்க ஐயா. தண்ணீர் சத்தம் தவிர வேறு எந்த சத்தமும் வரக்கூடாது. ரொம்ப சரி.

    பாத்டப் - எருமைகடா கிடப்பது. சிரிச்சு சிரிச்சு முடியலை.

    பதிலளிநீக்கு

  7. பாத் டப்பில் குளிக்க எக்கச்சக்க நீர் செலவாகும். ஒரு பெரிய ஓட்டலில் நிறைய பணம் கொடுத்து தங்கியபோது பாத் டப்பில் குளித்த அனுபவம் இப்போதும் இதழ்களில் புன் சிரிப்பை வரவழைக்கும். இருந்தாலும் எருமை மாடுகள் முங்கிக் கிடப்பதுபோல் என்று சொல்வது நகைச்சுவையானாலும் கொஞ்சம் ஓவராகத் தோன்றுகிறது.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள GMB,

      நகைச்சுவையை விட்டுவிடுங்கள். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை?

      எருமையும் சுகத்திற்காகத்தான் குட்டையில் மூழ்கிக்கிடக்கிறது.
      மனிதனும் அதே சுகத்திற்காகத்தான் பாத் டப்பில் மூழ்கிக்கிடக்கிறான்.

      எனக்கென்னமோ இரண்டும் ஒன்றாகத்தான் தெரிகிறது.

      நீக்கு
    2. நம்மை எருமைன்னு சொல்றத உள்ள இருக்கிற ஈகோ தடுக்குதுன்னு நினைக்கிறேன்..

      நீக்கு
  8. ஐயா,நான் குளிப்பதையே விட்டுவிடலாம் என்று இருக்கிறேன்,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டாங்க, தீவிளிக்கு தீவிளி குளிக்கலாங்க. நான் அப்படித்தான் பண்றனுங்க. எவ்வளவு நேரம், தண்ணி, சோப்பு மிச்சமாகுது தெரியுங்களா?

      நீக்கு
  9. ம்... என் வீட்டுக் குளியலறையில், நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக் குளியலறையில், பம்பு செட்டில் எல்லா இடத்திலும் குளித்திருக்கிறேன். போங்க நீங்க, 'மக்' கை கையில் எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை நீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டுப் போச்சுங்களா? அதுக்கு ஒரு பதிவு போட்டுடலாங்க.

      நீக்கு