திங்கள், 1 ஏப்ரல், 2013

கோந்து தயாரிப்பது எப்படி?


தற்காலத்திய சிறுவர்களிடம் கோந்து தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள், கோந்தா, அப்படீன்னா என்னங்க, என்று கேட்பார்கள். அது வந்து Gum  அப்படீன்னு நீங்க உபயோகிக்கிறீங்களே அதுதான் என்றால், மொதல்லயே ஒழுங்கா Gum  னு கேட்டிருந்தா சொல்லியிருப்போம்ல என்று பதில் வரும்.

நான் சின்னப் பையனா இருக்கறப்ப கோந்து வேணும்னா வேப்ப மரத்தைத் தேடிப்போவோம்.  அதில் ஏற்பட்டுள்ள சிறு காயங்களிலிருந்து வேப்பம் பிசின் வழிந்து காய்ந்து இருக்கும். அதை எடுத்து வந்து தொட்டாங்குச்சியில் (அதாங்க தேங்காய் தொட்டி அல்லது சிரட்டை) போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தால் மூன்று நாளில் கோந்து தயார்.

அந்தக் தொட்டாங்குச்சி சாய்ந்து விடாமல் பக்கத்தில் சிறு கற்களினால் அணைப்பு கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தொட்டாங்குச்சி சாய்ந்து கோந்து சிந்திப்போகும். இந்தக் கோந்தை எடுக்க ஒரு பென்சில் தடிமனான குச்சியை அதில் போட்டு வைக்கவேண்டும்.

இப்படித்தான் அந்தக்காலத்தில் நாங்கள் கோந்து தயாரித்து உபயோகப்படுத்தி வந்தோம். அந்தக் காலத்தில் கோந்தின் முக்கியமான உபயோகம் என்னவென்றால் பட்டம் விடுவதற்கான நூலுக்கு மாஞ்சா போடுவதுதான். நூலுக்கு மாஞ்சா போடுவது என்பது ஒரு கலை. அதைப்பற்றி பிறகு தனியாக ஒரு பதிவு போடுகிறேன். மாஞ்சா நூல் ஒரு கொலைக் கருவியாக தற்காலத்தில் மாறிவிட்டது காலத்தின் கோலம்.

தற்காலத்தில் கோந்து பல விதங்களில் வந்து விட்டன. செயற்கை கோந்துகள் ஏறக்குறைய இயற்கை கோந்துகளை மறக்கடிக்க வைத்துவிட்டன. ஆனாலும் என்னைப் போன்றவர்கள் இன்னும் அந்தக் காலத்து பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

இப்போது நகர வாழ்க்கையில் வேப்ப மரங்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நாட்டு மருந்துக் கடைகளில் இப்பொழுதும் கோந்து கிடைக்கிறது. 100 கிராம் 15 ரூபாய். அதை வாங்கிக்கொண்டு வந்து பழைய மருந்து பாட்டிலில் ஊறவைத்துப் பயன்படுத்திக்கொண்டு வந்தேன். இப்போது ஒரு பழைய காலி கேம்லின் கோந்து பாட்டில் என் பேரனின் தயவால் கிடைத்தது. அதை உபயோகப் படுத்துகிறேன். கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கோந்துகள் இதை விட விலை குறைவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கோந்தை உபயோகப்படுத்தும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி, ரெடிமேட் கோந்துகளினால் கிடைப்பதில்லை.

பழைய ஆட்களைத் திருத்துவது மகாக் கடினம்.

23 கருத்துகள்:

  1. ஹா...ஹா...... நாங்களும் வேப்பங்கோந்து செய்திருக்கிறோம். இந்தக் காலத்தில் ஃபெவிஸ்டிக்' வரை வந்து விட்டோம்!

    பதிலளிநீக்கு
  2. பழைய ஆட்களைத் திருத்துவது மகாக் கடினம்.

    உள்ளது உ:ள்ளபடி இருக்கட்டுமே ஐயா...

    பதிலளிநீக்கு
  3. நாங்கள் கருவேல மரத்தின் பிசினிலிருந்து கோந்து தயாரித்திருக்கிறோம். என்ன இருந்தாலும் Old is Gold தான்!

    பதிலளிநீக்கு
  4. பழையது மீண்டும் புதியதாகிக்கொண்டுதானே இருக்கிறது ஐயா! சொல்லித்தாருங்கள் கற்றுக்கொள்கிறோம்

    பதிலளிநீக்கு
  5. அந்த காலத்து பள்ளிப்பருவம் மறக்க முடியாதது
    கோந்து செய்ய கருவேல மரமோ, வேப்ப மரமோ மரம் மரமாக தேடி அலைவோம். ஒரு கூட்டு முயற்சி இருந்தது. கோந்து செய்வது முக்கியமில்லை. அதற்காக வேகாத வெயிலில் காலில் செருப்பு கூட இல்லாமல் நான்கைந்து பேர் பைத்தியம் பிடித்தது போல அலைவோமே. அந்த சந்தோசம் இன்று கடையில் பொய் ஒரு கம் பாட்டில் வங்கி கொண்டு வருவதில் இருக்காது என்பத்ன்னோவோ நிச்சயம். அந்த காலத்தில் நாம் போய் நமக்காக கோந்து சேகரித்து வந்தோம். இந்த காலத்தில் நம் குழந்தைகளுக்காக நாம் கடைக்கு போய் கம் வாங்கிகொண்டு வருகிறோம். அன்றும் நாம் தான் அலைந்தோம். இன்றும் நாம்தான் அலைகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதென்னவோ சரிதான்.
      அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் இருந்த சில வித்தியாசங்களில் முக்கியமான ஒன்று நேரம். இன்னொன்று குழந்தைகளின் எண்ணிக்கை. ஒரு வீட்டில் ஐந்தாறு குழந்தைகள் இதில் கூட்டு குடும்பம் வேறு. ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக நேரம் செலவழிக்க முடியாது. பிழைப்புக்கே வழி இன்றி ததிங்கினதோம் போட்ட காலம். பொருள் செல்வம் காமி மக்கள் செல்வம் அதிகம். இன்று அப்படியே உல்டா. ஒரு வீட்டுக்கு ஒன்றிரண்டு குழந்தைகள் ஆனால் அப்பா அம்மா ரெண்டு பேரும் சம்பாதிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு கைகளை உபயோகித்து நேரத்தை செலவழித்து செய்வதற்கு பதில் காசு கொடுத்து வாங்கி கொடுத்து விடுகிறோம். ஆனால் அந்த சந்தோசம் என்னவோ காணாமல் போய்விட்டது.

      திருச்சி அஞ்சு

      நீக்கு

  6. பழைய ஆட்களை ஏன் திருத்த வேண்டும். ? ஆமாம். ..இப்போது உங்களுக்கு கோந்து எதற்கு.?

    பதிலளிநீக்கு
  7. //அந்தக் தொட்டாங்குச்சி சாய்ந்து விடாமல் பக்கத்தில் சிறு கற்களினால் அணைப்பு கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தொட்டாங்குச்சி சாய்ந்து கோந்து சிந்திப்போகும். இந்தக் கோந்தை எடுக்க ஒரு பென்சில் தடிமனான குச்சியை அதில் போட்டு வைக்கவேண்டும்//

    நன்கு அனுபவித்து கோந்து செய்திருக்கிறீர்கள்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  8. கோந்து தயாரிப்பது எப்படி என்ற பதிவு போடும்போது உங்கள் கண் முன்னே கோந்து தயாரித்த போது கூட இருந்து மரத்தில் பிசினை எடுக்கும்போது கீழே விழுந்த கோபு, கொட்டங்கச்சியை நான் கொண்டுவருகிறேன் என்று சொல்லி கொண்டுவராமல் அசடு வழிந்த கோபாலன், வாய்த்த சிரட்டையை கல் சரியாக வைக்காமல் கீழே விழ வைத்த சுப்பு, மூன்று நாட்கள் ஆகுமுன்னரே முந்திரி கொட்டையாய் முதல் நாளே போய் எடுத்து பார்த்த பார்த்திபன், மூன்று நாட்கள் கழித்து வந்து என் பங்கு எங்கே என்று கேட்ட குப்பு எல்லோரும் ஞாபகம் வந்தார்களா? எனக்கு வந்தார்கள்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போச்சுடா பெரிசுகள் எல்லாம் சேர்ந்து கொண்டுவிட்டன.
      இனிமேல் பழைய கதைதான்.

      நீக்கு
    2. பேராண்டி நீ சொல்வதென்னவோ உண்மைதான்.
      நாங்கள் பழைய காலத்து ஆட்கள் சேர்ந்தால் பழைய கதைதான் பேசுவோம்.
      நீயும் ஒரு காலத்தில் எங்களை மாதிரி ஆகும்போது எங்களை நினத்துகொண்டால் போதும்.
      காலம் மாறி கொண்டேதான் இருக்கிறது. உங்கள் காலம் எங்க காலத்தை விட முன்னேறி விட்டது. உங்கள் குழந்தைகள் காலம் உங்க காலத்தை விட கண்டிப்பாக அதிகமாக முன்னேறி இருக்கும்தான். அப்போது நான் சொன்னதை நினைத்து கொண்டால் போதும்.

      சேலம் குரு

      நீக்கு
  9. //கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கோந்துகள் இதை விட விலை குறைவாக இருக்கலாம்//

    இன்றைக்கும் வேப்ப மரத்து கருவேல மரத்து பிசினை எடுத்து கோந்து தயாரியுங்கள் ஒரு பசிய செலவிருக்காது.
    இதையெல்லாம் எடுத்து பாதுகாத்து வைத்து வியாபாரம் செய்யும் போதுதான் கம் விலையை விட கோந்து விலை அதிகமாகி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய குழந்தைகளுக்கு அந்த கால ஆசாமியின் ஒரு கடிதம்.
    நாங்கள் நினைப்பதெல்லாம் 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

    1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF



    • தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

    • எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

    • கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

    • புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.

    • சைக்கிள் ஒட்டும் போது ஹெல்nkட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

    • பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

    • நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை

    • எங்களுக்கு நல்ல கதை சொல்ல அன்பான தாத்தா பாட்டி இருந்தார்கள். கலாச்சாரத்தை கெடுக்கும் மெகா சீரியல்கள் டஹ்ரும் டிவி பெட்டிகள் இல்லை

    • தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

    • ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

    • அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

    • காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

    • சிறு விளக்கு (குண்டு பல்புதான், மண்ணெண்ணெய் விளக்குதான்) வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

    • உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

    • எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம். ஆமாம் பேப்பர் காத்தாடிகள் தீப்பெட்டி ரயில்கள் பாண்டி விளையாட்டு கில்லி தாண்டல் போன்றன ஆனால் இன்றோ அனைத்தும் ப்ரொவிசனல் ஸ்டோர்களிலும் வீடியோ கேம்ஸ்களிலும். எனவே எங்கள் ஜிம்கள் எல்லாம் எங்கள் வீதிகளிலிலேயே இருந்தன (காசு பறிக்காமல்)
    • எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

    • அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

    • உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை .

    • எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

    • எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
    • வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

    • எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

    • உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

    • நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

    • இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

    • முக்கியமாக பெண்களை நம் தாயாக மற்றும் கூட பிறந்தவர்களாக நினைக்கும் நல்ல பழக்கம் இருந்ததால் டெல்லி நியூஸ் போன்றவற்றை படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது
    • இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

    குருச்சந்திரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. எங்கேயோ படித்த ஞாபகம் என்று என் நண்பன் எனக்கு அனுப்பிய ஒரு கடிதம்.
      குருச்சந்திரன் அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது.

      செல் போன் டவர்களால் தொலைந்து போன சிட்டு குருவிகளின் கீச் கீச் குரல்கள்
      நானும் வீரன்தான் என்று காட்ட, பயந்து பயந்து மாடு விரட்டிய நம் ஊர் மஞ்சு விரட்டு மைதானம்
      பெரிது பெரிதாக தொங்கிய விழுதுகளில் ஊஞ்சல் ஆடி மனம் களித்த நம் ஊர் பள்ளிகூடத்திலிருந்த ஓங்கி வளர்ந்த ஆலமரம்
      காத்திருக்கும் போது வராமல் பாதி தூரம் நடந்த பிறகு நம்மை கடந்து போகும், ஒரே ஒரு முறை நம் ஊருக்கு எட்டிப்பார்க்கும் பேருந்து
      யாயும் நீயும் யாராகியரோ என்று இருந்த நம்மை பின்னர் செம்புல பெய நீர் போல நண்பர்களாக்கிய நம்மூர் திருவிழாக்கள்
      தூக்கி போடு நீச்சல் தன்னாலே வந்துடும் என்று சொல்லி தள்ளி விட , நெஞ்சில் சிலீர் என்று நீர் தெளித்த ஆழ் கிணறுகள்
      அக்கம்பக்கத்து நண்பர், நண்பிகளுடன் சேர்ந்து விளையாடும்போது மரத்தடியில் நெருப்பு மூட்டி ஆக்கிய கூட்டாஞ்சோறு
      பாங்குல இருக்கோ இல்லையோ எப்போதும் காசு வைத்திருக்கும் எங்க வீட்டு ஆயாவின் இடுப்பிலிருக்கும் சுருக்குப்பை
      பாம் பாம் என்ற சத்ததுதுடன் வந்த காரை மார்க் 1,2,3 என்றுவகை பிரித்த பணக்கார வீட்டு பையன்
      மூன்று பைசாவுக்கு தெரு முனை கடைக்காரன் கை நிறைய அள்ளி கொடுக்கும் கொடுக்காபுளி
      முகத்தை மட்டும் விட்டுட்டு உடம்புலே எங்கே வேணுமானாலும் விளாசலாம், பையன் மட்டும் நல்லா படிக்கணும்னு வாத்தியாருக்கு அனுமதி தந்த அப்பா அம்மா

      இதெல்லாம் நான் உனக்கு எப்படி காட்டுவேன்?
      எல்லாமே என் கண் முன்னாலேயே காணாமல் போய் விட்டதே

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  11. //ஆனால் இந்தக் கோந்தை உபயோகப்படுத்தும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி, ரெடிமேட் கோந்துகளினால் கிடைப்பதில்லை//

    ஏனென்றால் அவை நாம் நம் கைகளால் நமது உழைப்பால் செய்தவை. அவை நமது குழந்தைகள் போன்றவை.
    பார்க்கும்போது அது கோந்தாக தோன்றாது அதை உருவாக்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் அதன் உருவில் தோன்றும். ஒரு எமோசனல் அட்டாச்மெண்ட் அதனோடு இருக்கும்.

    இதற்கு சரி சமமான இன்றைய காலத்து நிகழ்வு ஒன்று சொல்வதென்றால் இதை சொல்லலாம்
    இன்றைக்கும் கடையில் விற்கும் ஒரு வாழ்த்து அட்டையை விட கையால் செய்து கொடுக்கும் சிறிய வாழ்த்து அட்டைக்குதானே மதிப்பு.

    திருச்சு தாரு

    பதிலளிநீக்கு
  12. வேப்பங்கோந்து பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. என் இளவயதில் தயாரித்த அனுபவமெல்லாம் இல்லை. பதிவை விடவும் பின்னூட்டங்களில் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கிறது ஐயா!

    என் சென்ற ‘மேய்ச்சல் மைதான’ பதிவைப் படிக்க முடியவில்லையென்று நீங்கள் புகார் கூறியதன் பேரில் இப்போது புதிய கதையை திருத்தமாக வெளியிட்டிருக்கிறேன். இது ஓ.கே.யா என்று நீங்கள் பார்த்துச் சொன்னால் மிக மகிழ்வேன்; இதையே தொடர்வேன் ஐயா...

    http://horsethought.blogspot.com/2013/04/blog-post.html

    பதிலளிநீக்கு
  13. எல்லோருடைய பழைய நெனப்பும் நன்றாக இருக்கின்றன.
    பெயரில்லா என்று பல பேர்கள் பல பெயர்களுடன் எழுதி இருக்கிறார்களே!

    பதிலளிநீக்கு