வெள்ளி, 15 மே, 2015

கட்டுப்பாட்டை இழந்து...

                                   Image result for road accidents in india
"ஒரு நான்கு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருக்கும் புளிய மரத்தில் மோதி அந்த வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் மரணமடைந்தார்கள்" என்று வைத்துக்கொள்வோம். எனக்கு இப்படி வைத்துக்கொள்வதில் விருப்பமில்லைதான். ஆனாலும் செய்தித்தாள்களில் இந்த மாதிரி செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதைப் படிக்காமலும் இருக்க முடியவில்லை. அந்த வாகனத்தில் நான் பயணிக்காததால் எனக்கு ஒன்றும் நஷ்டமுமில்லை.

ஆனாலும் நானும் ஒரு நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பதால் இந்த செய்தியைப் பற்றிய கற்பனை என் மனதில் ஓடத்தான் செய்கிறது. இந்த செய்தியைப் பிரசுரிக்கும் செய்தித்தாள்கள் வழக்கமாக உபயோகிக்கும் சொற்றொடர் என்னவென்றால் "அந்த வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து etc.etc." என்பதாகும்.

உடனே என் மனது நினைப்பது என்னவென்றால், சில வீடுகளில் வயதுப் பையன்கள் பெற்றவர்கள் பேச்சைக் கேட்காமல் கட்டுப்பாட்டை இழந்து கெட்டுப்போகும் நிகழ்ச்சிகள்தான். இந்த மாதிரி பையன்கள் ஆறறிவு கொண்டவர்கள். உலகில் நல்லது கெட்டது எது என்பதைப் பகுத்தறியக்கூடியவர்கள். சகவாச தோஷத்தினாலோ அல்லது அவர்களின் மூளையில் எங்காவது ஒரு ஸ்குரூ கழண்டு போனதாலோ இவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வராமல் தறி கெட்டுப்போகிறார்கள் என்று நினைப்பேன்.

செய்தித்தாள்களில் இவ்வாறு "வாகனங்கள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து" என்ற செய்தி வரும்போதெல்லாம் எனக்கு இந்தப் பையன்களின் நினைவுதான் வரும். ஓஹோ, அந்த வாகனத்திற்கு மனது ஒன்று இருந்திருக்கிறது போலும், அது திடீரென்று இனிமேல் ஓட்டுனர் சொல்கிறதைக் கேட்கக்கூடாது என்று முடிவு செய்து ஓடிப்போய் புளிய
மரத்தில் மோதியது போலும் என்று என் கற்பனை ஓடும்.  

இப்படி ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் மனது இருந்து அவைகள் எல்லாம் தங்கள் தங்கள் மனது போல் ஓட ஆரம்பித்தால் எப்படியிருக்கும் என்றும் என் கற்பனை விரிவதுண்டு.

பிறகு ஆழமாக யோசித்த பிறகு என்ன நடந்திருக்கும் என்று ஒருவாறு யூகிக்க முடியும். இப்போது சந்தைக்கு வரும் வாகனங்களில் பல SUV என்று சொல்லப்படும் வாகனங்களாகும்.   An SUV, or sport utility vehicle, is an automotive that is defined by its capabilities. It is rugged; it combines passenger-carrying with cargo-hauling capability in a two-box design with an enclosed cargo/passenger compartment, as opposed to an open cargo compartment like a pickup truck.

இவை அதிக சக்தி கொண்ட இன்ஜின்களுடன் நூதன கட்டுப்பாட்டு சாதனங்களுடன் வருகின்றன. இவைகள் நன்றாகப் போடப்பட்டிருக்கும் ரோடுகளில் 150-160 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. இந்த வேகத்தில் ஒரு வாகனத்தை ஓட்டுபவர் மிக மிகத் திறமைசாலியாக இருக்கவேண்டும். ரோட்டிலும் வாகனப் போக்குவரத்தோ வேறு குறுக்கீடுகளோ இருக்கக்கூடாது.

ஆனால் நம் ஊரில் நேராகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி எந்த விதமான சைகைகளும் செய்யாமல் வலது பக்கம் திரும்புவான். ஆடு மாடுகள், நாய், பூனை ஆகிய நான்கு கால் பிராணிகளும் மற்றும் இரண்டு கால் பிராணிகளும் ரோடின் குறுக்கே திடீரென்று பாய்வார்கள். இப்படிப்பட்ட ரோடுகளில் 150 கிமீ வேகத்தில் செல்லாம் வாகனத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நல்ல அனுபவமுள்ள ஓட்டுனர்கள் ரோடில் எதிர்பாரமல் குறுக்கீடுகள் வரலாம், அப்படி வந்தால் என்ன செய்யவேண்டும், நாம் ஓட்டும் வாகனத்தை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்  என்று எப்பொழுதும் ஒரு ஜாக்கிரதை உணர்வுடன் வாகனம் ஓட்டுவார்கள். அப்படி அனுபவம் இல்லாத ஓட்டுனர்கள் இந்த மாதிரி சக்தி வாய்ந்த வாகனங்களை ஓட்டும்போது அவர்கள் தன்னிலை மறந்து விடுகிறார்கள்.

ஓட்டுனர்கள் ஒரு வாகனத்தில் அமர்ந்து ஓட்டும்போது அந்த வாகனத்தின் சக்தியில் ஒரு பங்கு அவர்களுக்குள் பாய்ந்து விடுகிறது. சாதாரண ஆற் கூட தன்னை ஒரு சூப்பர்மேன் ஆக உணறுகிறான். ஆக்சிலரேட்டரை அழுத்தினால் அந்த வாகனம் சீறிப்பாயும்போது அவனுக்குள் ஒரு போதை ஏற்படுகிறது. இன்னும் கொஞ்சம் வேகமாகப் போகலாமே என்று தன்னை அறியாமல் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. 

இந்த  SUV வாகனங்கள் அதிக சக்தி கொண்டவைகளாதலால் இவனுடைய உத்வேகத்திற்கு அது ஈடு கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் அது போகும் வேகத்தில் அந்த வாகனத்தைக் கட்டுப்படுத்த இவனால் முடிவதில்லை. வாகனம் புறிய மரத்தில் மோதுகிறது. அல்லது முன்னே மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும் வாகனத்தின் மேல் மோதுகிறது, அல்லது ரோட்டின் நடுவில் இருக்கும் தடுப்புச்சுவற்றைத் தாண்டிக்குதித்து அந்தப் பக்கம் எதிரே வரும் வாகனங்களுடன் மோதுகிறது.

இந்த சூழ்நிலைகளில் எல்லாம் தவறு வாகன ஓட்டியிடம்தான். ஆனால் செய்தித்தாள்கள் சொல்வது "வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து" என்றுதான். கல் தடுக்கு விட்டது என்று சொல்வது போல்தான். கல்லா உன் காலைத்தேடிவந்து தடுக்கியது? நீ கல்லைக் கவனிக்காமல் போய் அதன் மேல் இடித்து விட்டு கல்லைக் குறை சொல்வது போல்தான்.

ஆனால் உலக வழக்கம் இதுதான். தன் தப்பை மறைக்க அடுத்தவன் பேரில் பழியைப் போடுவது காலம் காலமாத நடந்து வருவதுதான். ஆனால் விபத்து நடந்து முடிந்து உயிர் போன பிறகு யார் பேரில் பழியைப்போட்டு ஆகப்போவதென்ன? போன உயிர் போனதுதானே?

17 கருத்துகள்:

  1. உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. கார் ஓட்டுபவர்களுக்கு ஒரு நல்ல எச்சரிக்கைப் பதிவு. கார் ஓட்டுபவர்களின் மனநிலையை நன்றாகவே சொன்னீர்கள்.

    டிரைவர் பற்றி ஒன்றும் சொல்லாமல் காரை குறை சொல்லும் செய்தித்தாள்கள். வழியில் கிடக்கும் கல்லில் நாமே காலில் இடித்துக் கொண்டு விட்டு, ”கல் காலில் இடித்து விட்டது; கட்டை விரலில் காயம்” என்று க்ல்லின் மீது நாம் குறை சொல்வதைப் போன்றதுதான் இது..

    பதிலளிநீக்கு
  3. கல் தடுக்கவில்லை என்பதே உண்மை. நம் வசதிக்காக மாற்றி கூறிக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. ‘நாமே விபத்துக்கு காரணமாக இருந்துவிட்டு இயந்திரத்தின் மேல் பழி போடுவது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. வேகம் வேண்டாம். விவேகம் தேவை.’ என்று சொன்னதே இது போன்று வாகனங்களை ஓட்டுபவர்களுக்குத்தான் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. உண்மையும் உங்கலால் அருமையாக்கக் கற்பனை செய்ய முடிகிறது!

    பதிலளிநீக்கு
  6. படிப்பதற்க்கு நகைச்சுவைபோல் இருந்தாலும் சமூகதக்திற்க்கு பயனுள்ள பதிவுதான்
    இதை அரசுதான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமையான எதார்த்தமான பகிர்வு. இதைப்படிக்கும் சிலருக்காவது ஓர் விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லது. பல வழிகளில் யோசிக்க வைக்கும் தங்களின் பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. கட்டுப்பாட்டை இழப்பவர்கள் நாம்தான் வண்டி அல்ல என்று சரியாக்ச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. Dear sir you have brought out the mentality of the drivers correctly as it is while driving high powered vehicle. Many of them feel that they are king of road while driving such cars

    பதிலளிநீக்கு
  10. வேகக் கட்டுப்பாட்டுக் கருவி என்று ஒன்று இருக்கிறதாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கிறது. அதை சில தனியார் பேருந்துகளில் மட்டும் வைத்திருக்கிறார்கள். தனியார் கார்களில் இதை யாரும் வைத்து நான் பார்த்தது இல்லை.

      நீக்கு
  11. ஐயா

    நான் வேகமாக செல்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்காதீர்கள். வெளிநாடுகளில் வேகமாகச் செல்லும் சாலைகளில் மெதுவாகச் செல்லும் ஊர்திகளை அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட வேகத்திற்கு கீழ் செல்வதும் குற்றம்.

    ஆனால் நம் நாட்டில் வேகமாக செல்லும் சாலைகளைப் போட்டு அதில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற வகையில் பழனி பாத யாத்திரை பக்தர்கள், இரு சக்கர வாகனங்கள் என்று எல்லாவற்றையும் அனுமதிக்கிறோம். மேலும் இவர்களுக்கு என்று தனியாக பாதை இருந்தாலும் அதை உபயோகிக்க மாட்டார்கள்.

    ஆக நமது மக்களுக்கு சாலைப் பொது அறிவு மிகவும் கம்மி. புத்திமதிகள் இவர்களை திருத்தாது. விபத்து ஏற்பட்டால் குற்றம் பெரிய வாகனத்தின் ஓட்டுனர் மேலேயே விழும். நாம் நிறுத்தியிருக்கும் கார் மீது சைக்கிள் காரன் வந்து இடித்தாலும் குற்றம் நம் மீது தான்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. ஐயா...

    "இவைகள் நன்றாகப் போடப்பட்டிருக்கும் ரோடுகளில் 150-160 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை" ..
    நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் நல்ல தரமான சாலைகளை உருவாக்குகிறோம். ஆனால் அந்த சாலை 4 அல்லது அதற்கு மேலே உள்ள சக்கர வாகனங்களுக்கு மட்டும் பயன் படுத்தப்படவில்லை. இரு சக்கர வாகனங்களும் சமயத்தில் மனிதர்களும், ஆடு, மாடு போன்றவைகளும் பயணம் செய்வதுண்டு. இதற்கு மேல் இந்த சாலையில் உச்ச வரம்பு இத்தனை கி.மீ வகம் என நிர்ணயம் செய்து (விக்கியின் படி தமிசகத்தின் உச்ச வேகம் 4 சக்கர வாகனங்களுக்கு 65 கி.மீ/மணி தான். ஆக இதைப்பற்றி யாருக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. அப்படி அதற்கு மேல் பயணித்தால் ராடார் மூலம் அபராதம் (அதிகமாக) விதித்தும் 2 ஆம் முறை செய்தால் ஓட்டுனர் உரிமத்தினை ரத்து செய்தும் ஒழுங்கி படுத்த பட வேண்டும். இதை எல்லாம் செய்தால் விபத்துக்களை குறைக்க வாய்ப்பு உண்டு. ஓட்டுனருக்கேன்று சுய ஒழுக்கம் வேண்டும்.

    அன்புடன்,
    சங்கர நாராயணன். தி

    பதிலளிநீக்கு
  13. மிகவும் சரிதான் ஐயா! அதுவும் இந்த வண்டிகளை ஓட்டுபவர்கள் சிறிய இடை வெளிகளிலும் நுழைவதற்கு முயற்சி செய்து ஹாங்க் அடித்துக் கொண்டே இருப்பார்கள். நானும் ஹைவே சாலைகளில் ஓட்டியிருப்பதால் தெரியும்...ஏதோ நாம் தான் தவறு செய்வது போல் நம்மளை பார்த்து முறைத்து சில சமயம் திட்டியும் விட்டுச் செல்வார்கள்..."என்னம்மா வண்டி ஓட்டத் தெரியாம வந்து ஓட்டுற" என்று...நாம் சரியாதத்தானே ஓட்டிச் சென்று கொண்டிருக்கின்றோம் என்று தோன்றும். சில சமயங்களில் நான் கண்டு கொண்டது இல்லை என்றாலும், சில சமயங்களில் நான் சிக்னலில் பக்கத்தில் வந்து நின்றுவிட்டால் நன்றாகத் திட்டி விடுவேன். அவர்கள் இண்டிகேட்டர் கூட போடாமல் ஹைவேயில் நம்மை வலப்புறம் அல்லது இடப்புறம் ஓவர் டேக் அதுவும் சிறிய இடைவெளியில் எடுக்க எத்தனிப்பார்கள்.....வேகமோ அசுர வேகமாக இருக்கும்....இஅவர்களுக்கு எல்லாம் யார் லைசன்ஸ் கொடுக்கிறார்கள் எல்லாம் லஞ்சம்தான்....ஊழல்தான் ஐயா....

    கீதா

    பதிலளிநீக்கு
  14. நல்ல விழிப்புணர்வு உள்ள பதிவு.
    தனி நபர் ஒழுக்கம் தவிர வேறு ஒன்றும் விபத்தை தடுக்காது

    பதிலளிநீக்கு