சனி, 9 மே, 2015

காப்பி குடிப்பது எப்படி?

ஆன்மா-ஆத்மா விசாரத்தைக் கொஞ்ச நாள் தள்ளி வைக்கலாம். இப்போது பூலோக சோமபானம் என்று சொல்லக்கூடிய காப்பியை எப்படி தயாரித்துக் குடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

காப்பி என்றால் பிராமணாள் ஆத்துக் காப்பிதான் காப்பி. மற்றதெல்லாம் கழுதண்ணிதான். அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

நல்ல அரேபிகா காப்பிக்கொட்டைஒன்று அல்லது இரண்டு கிலோ வாங்கி ஆத்தில் ஸ்டாக் வைத்துக்கொள்ளவேண்டும். காலையில் எழுந்ததும் குமுட்டி அடுப்பைப் பற்றவைத்து அதில் வாணலியை வைத்து அன்றைக்குத் தேவைப்படும் அளவிற்கு காப்பிக்கொட்டைகளை எடுத்து அதில் போட்டு வறுக்கவேண்டும். காப்பிக்கொட்டை நன்றாக வறுபட்டவுடன் ஒரு வாசனை வரும். அப்போது அதை இறக்கி வைத்து விட்டு அடுப்பில் வெந்நீர் வைக்கவேண்டும்.

                                Image result for hand grinder coffee
இந்த மாதிரி காப்பிக் கொட்டையைக் கையால் அரைக்கும் ஒரு இயந்திரம் அன்று எல்லா பிராமணாள் வீட்டிலும் தவறாது இருக்கும். நான் முன்பு சொன்ன மாதிரி வறுத்த காப்பிக்கொட்டையை இந்த இயந்திரத்தில் போட்டு அரைத்து வரும் காப்பிப்பொடியை அப்படியே காப்பி பில்ட்டரில் போடவேண்டும்.

      Image result for coffee filterImage result for coffee filter

காப்பித்தூளை பில்ட்டரில் போட்ட பிறகு ரெடியாக இருக்கும் வெந்நீரை அதில் ஊற்றி மூடி வைத்து விடவேண்டும். இப்போது காப்பி டிகாக்ஷன் இறங்க ஆரம்பிக்கும். அது சொட்டு சொட்டாக விழும் சப்தம் கேட்கும். அப்படிக் கேட்காவிட்டால் பில்ட்டரை கரண்டியால் இரண்டு தட்டுத் தட்டவும்.

இப்போது பால்காரன் பால் சப்ளை செய்திருப்பான். கேன் பால் அல்ல. பசு மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்து நம் கண் முன்னால் பால் கறக்கும் பாத்திரத்தில் தண்ணீர் இல்லை என்று காட்டிப் பின்பு கறந்து கொடுக்கும் பால். இதை அடுப்பில் வைத்து காய்ச்சவேண்டும். பால் பொங்குவதற்கு சற்று முன்னால் அதை இறக்கி காப்பிப் பாத்திரத்தில் தேவையான அளவு ஊற்றி, அதில் இப்போது ரெடியாக இருக்கும் காப்பி டிகாக்ஷனை அளவாக ஊற்றி, அளவான சீனி சேர்த்து, இரண்டு தடவை ஆற்றிக் கலக்கி, டபரா செட்டில் ஊற்றிக் கொடுத்தால் வீடே காப்பி வாசனையில் கமகமக்கும்.

                                Image result for டபரா காப்பி

இந்தக் காப்பியைக் குடிப்பதே ஒரு கலை. டம்ளரை அலுங்காமல் வெளியில் எடுத்து அதில் இருக்கும் காப்பியை டபராவில் ஊற்றி, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக டம்ளரில் ஊற்றி சாப்பிடுவதே ஒரு பேரின்பம். சாப்பிடும்போது உஸ்ஸ்ஸென்று ஒரு சவுண்ட் கொடுக்கவேண்டும். இதுதான் காப்பி சாப்பிடும் முறை.

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நல்லா பாயின்ட்ல பிடிச்சிட்டீங்களே, அம்மா, இப்போ சீனி சேர்த்துட்டேன். சீனி இல்லாத காப்பி ஒரு காப்பியா?

      நீக்கு
  2. காஃபி தயாரிப்பது பற்றி மிகவும் அழகான விளக்கம். கூடவே அருமையான பொருத்தமான படங்கள். பாராட்டுகள் ஐயா. ருசியான மணமான சோமபானம் குடித்த திருப்தி ஏற்பட்டது.

    இப்போ வீட்டினில் வறுப்பது மிகவும் குறைந்து விட்டது.

    ஒரு வாரத்திற்கு வேண்டிய காஃபித்தூள் கடைகளில் வறுத்து வாங்கிக்கொள்கிறோம்.

    80 to 90% PURE COFFEE + 10 TO 20% சிக்கரி கலந்தது. இதில்தான் டேஸ்ட் அதிகம்.

    மாடு அதுவும் பசுமாட்டுப்பால் கறப்பதெல்லாம் ஒருசில கிராமங்களைத்தவிர சுத்தமாக எங்குமே இப்போது இல்லை. எல்லாமே ஆவின் போன்ற பாக்கெட் பால்கள், மட்டுமே.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆகா...! ஸ்ஸ்ஸ்...

    உங்கள் பாணியில் "ரசித்தேன்" ரொம்பவே...!

    பதிலளிநீக்கு
  4. ஃபில்டரில் கரண்டியால் ரெண்டுமுறை லொட்டு லொட்டென்று தட்டினால் பொடியோடு சேர்த்து இறங்க ஆரம்பித்து, கதை கந்தலாகி விடுமே...

    டபராவில் ஊற்றிக் கொடுத்தால்சூடு குறைந்து விடும் என்று டம்ளரிளிருந்தே அப்படியே குடிப்பதே நல்லது என்பது என் கருத்து. சர்க்கரைக் குறைவாக இருப்பதே காபியின் சிறப்பு என்பது என் கருத்து! காபி என்ற பெயரை மாற்றி பாயசம் என்று வேண்டியதுதான்!

    :))))))

    பதிலளிநீக்கு
  5. கமகமக்கும் அந்த காலத்து பிராமணாள் ஆத்து காபியை நினைவிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. பிராமண நண்பர்கள் வீட்டில் காபியை அண்ணாந்து குடிக்கும்போது, பலமுறை நாக்கில் சுட்டுக் கொண்டது நினைவுக்கு வருகிறது. அந்தக் கால பால்காரன், பால் செம்பு, வீட்டிலேயே மாட்டைக் கொண்டு வந்து பால் கறத்தல் போன்ற ‘வந்தேனே பால்காரன்’ சமாச்சாரங்களை சாவி, அகஸ்தியன் போன்றவர்களது நகைச்சுவை கதைகளில் காணலாம்.

    பதிலளிநீக்கு
  6. காப்பிக்கொட்டையை அரைக்கும் இயந்திரம் மாயவரம் கும்பகோணம் தஞ்சை போன்ற ஊர்களில் கிடைக்கும்.எங்கள் வீட்டில் சமீப காலம் வரை தினம் இதில் அரைத்துத்தான் காப்பி போடுவது வழக்கம். தினம் காப்பிக்கொட்டையை வறுத்து அரைத்து வடிசாறு (Decoction) எடுத்து பாலில் கலந்து தயாரிக்கும் காப்பியின் மணத்துக்கும் சுவைக்கும் ஈடு எதுவும் இல்லை என்பது உண்மைதான். காசினி கீரையின் வேர் (Chicory- Cichorium intybus) கலக்காத காப்பிதான் மிகவும் சுவையானது என்பது எனது கருத்து.

    பதிலளிநீக்கு
  7. ஆகா ஆகா
    தங்கள் வீட்டில் இப்படித்தான் தினமும்
    காபியோ
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  8. காபியை ருசித்துக் குடித்தேன். எனது சொந்த ஊரான கும்பகோணத்தில் காபிக்கு என்று ஒரு தனி மரியாதையைக் கண்டிருக்கிறேன். கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் குறிப்பிட்ட ஒரு ஓட்டலில் (தற்போது இல்லை) காபியை ருசித்து ரசித்து பலர் குடிப்பதை பள்ளி நாள்களில் கண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  9. காப்பிக்கொட்டையை வறுக்க குமட்டி அடுப்பு......? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்?காப்பியின் சுவையை எல்லோரும் ஒருபோல ருசிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  10. காபி குடித்த உணர்வைத் தந்தது பதிவு! சுவையோ சுவை! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. சுவையான காப்பி ஐயா ரசித்தேன்.

    பதிலளிநீக்கு